in ,

ஒட்டாத காசு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ம்மா, இன்னிக்காவது மறந்துடாம மீட்டிங்குக்கு வந்துடும்மா…’ என்று நினைவுபடுத்திவிட்டுப் போயிருந்தாள் பொன்னி. அது  உடனே நினைவுக்கு வர, இன்றைக்கு தவறாமல் மீட்டிங்கிற்கு போய்விடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு, அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்பி விட்டாள்.

பத்து மணிக்கு வசந்தியக்கா வீட்டில் வேலை செய்யவேண்டும். அது முடித்து தேவியக்கா வீட்டிற்குப் போகவேண்டும். அப்புறம்தான் ஸ்கூல் மீட்டிங்கிற்கு போகவேண்டும். பிறகு மதியம் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுவிட்டு  சுமதியக்கா வீட்டுப் போகவேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் மூவாயிரம் சம்பளம் தருகிறார்கள். தேவியக்கா வீட்டில் மட்டும் மூவாயிரம் கூடுதல் சம்பளம். காரணம் பக்கவாதம் வந்து நடமாட முடியாத அவரது அம்மாவுக்கு தினந்தோறும் துடைத்துவிட்டு, பவுடர் போட்டு, ஸ்ப்ரே அடித்து துணியையும் மாற்றிவிட வேண்டும். அதற்குதான் அந்த கூடுதல் சம்பளம்.

கணக்குப் போட்டாள். முதல் இரண்டு வீடுகளிலும் வேலை செய்து முடிக்கவே பன்னிரண்டு மணி ஆகிவிடும். அப்புறம் எப்படி பன்னிரண்டு மணிக்கு நடக்கும் ஸ்கூல் மீட்டிங்குக்கு போய்ச் சேருவது. போகாவிட்டால் மறுபடியும் அவளை வெளியே அல்லவா நிறுத்தி விடுவார்கள் என்ற கவலையும் வந்து ஒட்டிக்கொண்டது அவளுடன்..

போனதடவையே மீட்டிங்கிற்கு போகாததால் அழுதபடி வந்தவள்,  ‘ நீ வராமல் போனதற்கு எனக்கு தண்டனையாம்மா ‘  என்று மகள் கேட்டபோது மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது அஞ்சலைக்கு.  அதனால், இன்றைக்கு போயே ஆகவேண்டும் என்று முடிவு செய்துகொண்டிருந்தாள்.

வசந்தியக்கா வீட்டில் துணிமணிகளை துவைத்து, வீட்டைப் பெருக்கி, மாப்பு போட்டுத் துடைத்து, பாத்திரங்களைக் கழுவிவைத்துவிட்டு,  துணிகளை மொட்டை மாடியில் காயப் போட்டுவிட்டு வெளியே களைப்புடன் வந்தவள் அப்படியே அதே வேகத்துடன் தேவியக்கா வீட்டிற்கு ஓடினாள்.

அப்போதே மணி பதினொன்றரை தாண்டிவிட்டது. யோசித்தாள். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கிளம்பினாலும் மீட்டிங்கிற்கு போய்ச் சேரமுடியாது.  அவ்வளவு தூரம் நடக்கவேண்டுமே. புலம்பியபடியே கூடையில் கிடந்த துணிமணிகளை வாஷிங் மெஷினில் போட்டு ஓடவிட்டுவிட்டு வீட்டைப் பெருக்க ஆரம்பித்தாள். பாத்திரங்களை கழுவிப் போட்டாள். அதற்குள் பெரியம்மா முனகினாள். ஓடிப்பார்த்தபோது, தண்ணீர் வேண்டும் என்பது போல அவர்கள் சைகை செய்ய ஒரு டம்பளரில் தண்ணீர் ஊற்றி குடிக்கக் கொடுத்தாள்.

திரும்பி வந்து தரைக்கு மாப்பு போட்டுத் துடைத்துவிட்டு, ஆங்காங்கே கிடந்த பாத்திரங்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு போய் சிங்க்கில் போட்டு, கழுவி வைத்துவிட்டு, பிறகு பெரியம்மாவைத் துடைத்துவிடலாம் என்று நெருங்கினாள்.

மணியைப் பார்த்தாள். பனிரெண்டு தாண்டிவிட்டது. ‘கடவுளே மீட்டிங் போயே ஆகவேண்டுமே என்ன செய்வது… ‘ என்று நெற்றியைப் பிடித்தபடி யோசித்தாள். தினமும்தான் பெரியம்மாவை மாங்கு மாங்கென்று துடைத்து விடுகிறோம். நேரமோ தாண்டிவிட்டது. இன்று ஒருநாள் மட்டும் துடைத்து விடாமல் வெறுமனே ஸ்ப்ரேயை மட்டும் அடித்து துணியை மாற்றிவிட்டு ஓடிவிட்டால்…? தேவியக்கா வந்து பார்க்கும்போதும்  சந்தேகமும் வராதல்லவா. அப்படியே செய்து முடித்துவிட்டு ஸ்கூலுக்கு கிளம்பிவிட்டாள்.

XXXXXXXX

மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. சத்தம் போடாமல் மெல்ல போய் கிடைத்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டாள். ஒரு அம்மாள் யூனிபார்மில் வந்து விவரங்களைக் குறித்துவிட்டு கையெழுத்தும் கேட்டு வாங்கிக்கொண்டு போனாள். அது ஆயாவாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனாலும் பெரியம்மாவின் நினைப்பு அவ்வப்போது வந்து அவளது கவனத்தை சிதறடித்துக் கொண்டிருந்தது. மீட்டிங்கில் அவர்கள் பேசுவது இவளது மண்டைக்குள் ஏறவே இல்லை. தேமேயென்று கவனித்துக்கொண்டிருந்துவிட்டு ஜனகனமன பாடி முடித்தார்களோ இல்லையோ மெல்ல நகர்ந்து வெளியே ஓடியே வந்துவிட்டாள்.

வீட்டுக்கு வந்த பிறகும் பெரியம்மா பற்றிய நினைவு மாறவேயில்லை. அவசர அவசரமாய் சோற்றை அள்ளிப்போட்டு சாப்பிட்டு முடிக்கும்போது, கிறக்கம் கண்ணை அழுத்தியது. உடம்பெல்லாம் அசதியாய் வேறு உணர்ந்தாள். பாயை விரித்துப் போட்டு அப்படியே படுத்தாள். உடனே பெரியம்மா கண்களுக்குள் வந்து நின்றார்கள்.

‘ இன்னிக்கு என்னைய குளிப்பாட்டி விடாமலேயே போயிட்டியே அஞ்சலை ‘ என்று பெரியம்மா ஏக்கத்துடன் கேட்பது போலவே இருந்தது.  தூக்கம் பிடிபடவேயில்லை. குற்ற உணர்வு மனதைப் பிசைந்தது அஞ்சலைக்கு. திரும்பித் திரும்பி படுத்தாள்.

‘ ச்சே… தப்பு பண்ணிட்டோமே… படுத்தே கிடக்கறதால வியர்வை படிஞ்சு நாறிப் போயிருக்கும். ஈரத்துணி போட்டு நல்லா துடைச்சு விட்டு உடம்பு முழுக்க பவுடர் போட்டு ஸ்ப்ரேயும் அடிச்சு துணியையும் மாத்துவோம்.  இன்னிக்கு அவசரத்துல ஒண்ணும் செய்யாம பேருக்கு துடைச்சுவிட்டுட்டு வந்துட்டோமே… ‘  என்று நினைத்தபோது மனதுக்குள் அது நெருடியது.  நெஞ்சு கனத்தது.

அப்படியே யோசித்துக்கொண்டிருந்தவள் சட்டென தூங்கிப் போனாள். திடீரென்று முழிப்புத் தட்டியபோது சட்டென எழுந்து உட்கார்ந்தாள். மணியைப் பார்த்தாள். சுமதியக்கா வீட்டுக்குப் போகவேண்டுமே என்று பதறிக்கொண்டு எழுந்து பாயைச் சுற்றிப் போட்டுவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

திடீரென்று போன் அடித்தது. தேவியக்காவின் நம்பர்.  சொரேல் என்றது அஞ்சலிக்கு. இன்றைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிட்டார்களோ நாம் துடைக்காமல் வந்துவிட்டதைக் கண்டுபிடித்துவிட்டார்களோ என்று அஞ்சியபடியே, ‘ அக்கா சொல்லுங்கக்கா… ‘ என்றாள்.

‘அஞ்சலை… நான் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன். எனக்கு சம்பளம் போட்டுட்டாங்க… வந்து உன் சம்பளத்தை வாங்கிட்டு போ…. நான் ப்ராஜக்ட் சம்பந்தமா வெளியூர் கிளம்பப்போறேன்… போயிட்டு வந்தால் சம்பளம் தர லேட்டாகிடும்… ’ என்றாள்.

பத்து நிமிடத்தில் அங்கே இருந்தாள் அஞ்சலை. புது இருநூறு ரூபாய் நோட்டுகளாக முப்பது நோட்டுகளை கொடுத்தாள் அவள். எண்ணிப் பார்த்த அஞ்சலை, ‘அக்கா ஒரு நோட்டு எக்ஸ்ட்ரா இருக்கேக்கா…‘ என்றபடி அதை திருப்பிக் கொடுத்தாள்.

திகைப்புடன் ‘ ஓ ‘ என்றபடி அதை வாங்கிக்கொண்டாள் தேவி.

மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள் அஞ்சலை.. பெரியம்மா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒன்றும் பேசாமல் கிளம்பிவிட்டாள். சுமதியக்கா வீட்டுக்குப் போகவேண்டுமே. திரும்பவும் வீட்டுக்குப் போகாமல் அங்கிருந்தபடியே கிளம்பிப் போய்விடலாம் என்று நினைத்தபடி நடந்தாள்.

ஒரு நோட்டை திருப்பிக் கொடுத்ததை நினைத்துக் கொண்டபோது மெல்ல சிரிப்பு வந்தது அவளுக்கு. தேவி ஆறாயிரத்துக்கு சரியாக முப்பது நோட்டுகள்தான் கொடுத்திருந்தாள். இவள்தான் வேண்டுமென்றே எக்ஸ்ட்ராக இருக்கிறது என்று சொல்லி ஒரு நோட்டைத் திருப்பிக்கொடுத்தாள்.

‘இன்றைக்கு பெரியம்மாவை துடைத்துவிடாமல் வந்துவிட்டோமே, அந்தப் பணம் நமக்கெதற்கு… ? உழைக்காத காசு உடம்பில் ஒட்டுமா… ‘ என்று நினைத்துக் கொண்டதும் மனது லேசாகிப் போக, நிம்மதியுடன் சுமதியக்கா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அவள்.

                                   

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

அன்பென்றாலே அம்மா (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 17) – தி.வள்ளி, திருநெல்வேலி