இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“பார்க்கலாம். அதற்கு முன் அந்த காவ்யா அக்கா சம்பந்தமான கொஞ்சம் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. அதற்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் போக வேண்டும். அவள் கணவர் கீழே சதீஷ் வீட்டில் இருக்கிறார். அவரையும் அழைத்துக் கொண்டு போகவேண்டும். இன்று மாலையே திரும்பி விடுவோம், உத்தரவு கிடைக்குமா டார்லிங்?” என்றான் கொஞ்சலாக.
“ரிஷி, நீ ரொம்ப நல்லவன் என்று நினைத்தேன். ஆனால் நீ கூட எப்போது நடிக்கிறாய், எப்போது இயல்பாக இருக்கிறாய் என்று தெரியவில்லை”
“சத்தியமாக நான் ரொம்ப நல்லவன். வரட்டுமா?” என்றான் அவள் கைகளிலிருந்து விடுவிக்க மனமில்லாமல் விடுவித்துக் கொண்டு.
“ரேஷ்மா, இதென்ன இவ்வளவு புத்தகங்கள் இந்த வலை பீரோ மீது அடுக்கி வைத்திருக்கிறாய்? இப்போதெல்லாம் சினிமா வசனங்கள் புத்தகமாகவே அச்சடித்துக் கொடுத்து விடுகிறார்களா?” என்றான் கிண்டலாக.
“ரொம்ப கிண்டல் பண்ணாதீர்கள் ரிஷி. நானோ உங்கள் வீட்டு மருமகள் ஆகிவிட்டேன். உங்கம்மாவிற்கோ சினிமா நடிகை மருமகளாக வரக்கூடாதென்ற எண்ணம் இருக்கிறது அதனால் ஏதாவது படித்து லைனையே மாற்றிக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்”
“ஜாலியாக டேன்ஸ், நடிப்பு, உலகம் முழுவதும் ஊர் சுற்றல் என்று இருந்து விட்டு இப்போது போய் படிப்பது என்றால் மிகவும் கஷ்டமாக இருக்குமே”
“முதலில் ஒரே இடத்தில் உட்கார்ந்து படிப்பது என்பது மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது, ஆனால் இப்போதெல்லாம் டின்னர் முடித்து விட்டுத்தான் படிக்கவே உட்காருகிறேன். உங்களை நினைத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பதற்கு பதில் இந்தப் புத்தகங்களைப் படித்தால் சீக்கிரம் தூக்கம் வந்து விடுகின்றது” என்றவள் கலகலவென்று சிரித்தாள்.
“அட இங்க பார்ரா, நாங்களெல்லாம் அறிவை வளர்த்துக் கொள்ளப் படிப்போம். நீங்களோ தூக்கத்தை வளர்த்துக் கொள்ளப் படிக்கிறீர்கள்” என்றான் கிண்டலாக.
“ஆம், யார் யாருக்கு எது எது தேவையோ அதற்காகத் தானே படிக்க வேண்டும்” என்றாள் குறும்பாக.
“போடி போக்கிரிக் கழுதை” என்றவன் அவள் கன்னத்தில் லேசாகத் தட்டி விட்டு வெளியே சென்றான்.
சதீஷ் வீட்டில் காத்திருந்த அப்துல்லாவை அழைத்துக் கொண்டு ரிஷி ரேஷ்மாவை வளர்த்த அந்த ஹோமிற்குச் சென்றான். ஆனால் அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் வெளியிட முதலில் மறுத்து விட்டார்கள். ரிஷி அவனுடைய மனைவி தான் ரேஷ்மா என்று கூறி அவர்களின் திருமணச் சான்றிதழைக் காட்டினான்.
அப்துல்லா, தன் குழந்தையை கங்கையாற்றின் கரையில் தொலைத்ததை கண்ணீர் மல்க கூறினான். குழந்தை காணாமல் போனதை கல்கத்தா போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ததையும் தகுந்த ஆதாரங்களுடன் காட்டினான். அவன் மனைவி குழந்தைக்காக ஏங்கி உடல் நலம் குன்றி இருப்பதையும் கூறினான்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அந்த ஸிஸ்டர் இருபது வருட ரெகார்டுகளைத் தேடி எடுக்க வேண்டும் என்றும், மேலும் மதர் சுபீரியர் அனுமதி பெற வேண்டும் என்றும், அதற்கு ஒரு வாரம் டைம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சதீஷ் அப்துல்லாவைக் கொண்டு போய் சுவாமிமலையில் விடுவதாகச் சொன்னான். ஆனால் அப்துல்லாவோ டாக்ஸி பிடித்துக் கொண்டு போவதாக கூறிவிட்டு, “சதீஷும் எத்தனை நாள் நம்மோடு அலைவான், சாருவும் பாவமல்லவா?” என்றான்.
அப்துல்லாவை ரேஷ்மாவிடமும் அழைத்துச் சென்றான். ஏற்கெனவே அப்துல்லாவையும், மும்தாஜையும் லண்டனில் உள்ள லிட்டில் வெனிஸில் சந்தித்திருப்பதால், மும்தாஜ் தான் ரிஷியின் அக்கா என்று அறிந்து ஆச்சர்யம் அடைந்தாள்.
சுவாமி மலைக்குச் சென்ற அப்துல்லா, ரேஷ்மா சிறு வயது முதல் வளர்ந்து வந்த ஆஸ்ரமத்திற்கு சென்று வந்ததையும், அவர்கள் ஒரு வாரம் கழித்து வந்தால்தான் முக்கியமான விவரங்கள் சேகரித்துத் தர முடியும் என்று கூறியதையும் எல்லோரும் ஒன்றாக்க் கூடியிருக்கும் போது கூறினான்.
காவ்யா பிடிவாதம் பிடித்து அவனுடன் சென்றாள். அவள் போகும் போது அவர்கள் திருமணச் சான்றிதழும், குழந்தையின் பிறந்த நாள் சான்றிதழும், சில போட்டோக்களும் கையோடு எடுத்துச் சென்றாள்.
அப்துல்லா, ரிஷியிடம் விவரம் தெரிவித்து விட்டு காவ்யாவையும் அழைத்துக் கொண்டு நேராக அந்த இல்லத்திற்கே சென்றான். இவர்களுக்கு முன்பே ரிஷி அங்கே தன் காரில் சதீஷுடன் காத்திருந்தான். எல்லோரும் ஒன்றாக அந்த சிஸ்டரை சந்தித்தார்கள். சிஸ்டர், மதர் சுபீரியரிடம் அழைத்துச் சென்று இவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவித்தார்.
காவ்யா, அவள் எடுத்து வந்த அவர்கள் திருமணச் சான்றிதழ், குழந்தையின் பிறந்த நாள் சான்று, குழந்தையின் போட்டோ, குழந்தையோடு கங்கைக் கரையில் இவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோ எல்லாவற்றையும் காட்டினாள்.
முதலில் இறுக்கமாக இருந்த மதர் சுபீரியர் முகம், பேப்பர்கள், போட்டோக்கள ஆகியவற்றைப் பார்த்தவுடன் மலர்ந்தது. அவர் இன்டர்காம் மூலமாக யாரையோ அழைத்து வரச் சொன்னார்.
சிறிது நேரத்தில் ,சற்றே வயதான பிராமணர் ஒருவர் உள்ளே வந்து மதருக்கு வணக்கம் செய்தார். எல்லோருக்கும் லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அந்தப் பெரியவர் பேசத் தொடங்கினார்.
“சுமார் இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்பு, என் தாயாரின் ஆசைப்படி அவள் அஸ்தியை கங்கையில் கரைக்க நான் கல்கத்தா சென்றிருந்தேன். எல்லாப் பணிகளையும் முடித்து விட்டு நான் வந்த டாக்ஸியில் ஏறப் போகும்போது தான் அந்தக் குழந்தை அழுதுக் கொண்டு நின்றிருந்தது. பேர் மட்டும் கதீஜா என்று சொன்னது. வேறெந்த விவரமும் சொல்லத் தெரியவில்லை.
‘வாப்பா’ என்று சொல்லிக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தது. அதன் பெயரும், ‘வாப்பா’ என்று அழுததும் அது ஒரு முஸ்லிம் குழந்தை என்று தெரிந்து கொண்டேன். குழந்தையின் விவரங்களை கல்கத்தாவில் உள்ள போலீசில் பதிவு செய்து விட்டு என் விலாசத்தையும் கொடுத்து விட்டு வந்தேன். அந்தக் குழந்தை என் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டு பிடிவாதம் பிடித்து அழுததாலும், நானும் அப்போது பணியிலிருந்த முக்கியமான சென்னையில் உள்ள ஒரு முக்கியமான இலாக்காவில் கெஸட்டட் ஆபீசர் என்றதாலும் குழந்தையை என்னோடு அனுப்பினார்கள்.
அது ஒரு முஸ்லிம் குழந்தை என்றதால், பிற்காலத்தில் ஏதும் தகராறு வரக்கூடாதென்று, இந்த ஆஸ்ரமத்தில் ,இந்த மதர் சுபீரியரிடம் முழு விவரங்களையும் எடுத்துக் கூறி அந்தக் குழந்தையை இங்கு சேர்த்தேன்” என்று விவரித்தார்.
காவ்யா எடுத்துச் சென்ற குழந்தையின் போட்டோக்களையும் மற்ற சான்றிதழ்களையும் மதர் அந்தப் பெரியவரிடம் காட்டினார். சின்ன வயது குழந்தையைப் பார்த்தவுடன் அந்தப் பெரியவருக்கு உணர்ச்சி வேகத்தில் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. அப்போது அவர் தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு சங்கிலியை எடுத்து மதர் சுப்பீரியரிடம் கொடுத்தார். இரண்டு பவுன் இருக்கும். அந்த சங்கிலியில் ஒரு டாலர், பிறை நிலவில் நட்சத்திரம்; அவர்கள் மதக்குறியீட்டுடன் இருந்தது.
“இந்தச் சங்கிலி எங்கள் குழந்தையின் சங்கிலிதான்” என்றனர் ஒரே குரலில் அப்துல்லாவும் காவ்யாவும்.
“அப்படியானால் ரேஷ்மா என் அக்கா மகள், என் முறைப் பெண்” என்றான் ரிஷி சந்தோஷத்துடன்.
காவ்யா மனம் கொள்ளா சந்தோஷத்துடன் விஷயத்தைத் தன் பெற்றோருக்குத் தெரியப்படுத்தினாள். ரேஷ்மாவிடம் எல்லா விவரங்களையும் விரிவாகக் கூறினான் ரிஷி. அவள் சிறு வயதில் போட்டுக் கொண்டிருந்ததாகக் கொடுத்த சங்கிலியையும், இவளுடைய சிறு வயது போட்டோக்களையும் காட்டினான். ஆனாலும் ரேஷ்மா தெளிவாகவில்லை. அவள் வாழ்ந்த ஆஸ்ரமத்தில் போய் விவரங்கள் கேட்டறிந்தாள் . அப்படியும் திருப்தியடையவில்லை.
“ரிஷி, டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்துப் பார்க்க வேண்டும். அது தான் நம்பிக்கையானது” என்றாள் ரேஷ்மா. ரிஷி அதற்கும் ஏற்பாடு செய்தான்.
“நாங்கள் தான் இவ்வளவு ஆதாரபூர்வமாக சொல்கிறோமே கண்ணம்மா. எங்கள் வார்த்தையில் உனக்கு நம்பிக்கை இல்லையா ரேஷ்மா” என காவ்யா கேட்க
“ரிஷியைச் சந்தித்த நாள் முதல், சுற்றி நடப்பது எல்லாமே கனவு போல் தான் இருக்கிறது. எதையும் நம்ப முடியவில்லை” என்றாள் விரக்தியான குரலில்.
டி.என்.ஏ. டெஸ்ட் ரிசல்ட்டும் வந்தது. ரேஷ்மாவின் பெற்றோர்கள் காவ்யா, அப்துல்லா என உறுதி செய்யப்பட்டனர். அதன் பிறகே ரேஷ்மாவின் முகத்தில் சந்தோஷமும் தெளிவும் வந்தது.
ரிஷியின் அம்மாவும் அப்பாவும் தங்கள் பேத்தியைக் காண சென்னை வந்தார்கள். சௌம்யாவும் அவள் கணவரும் கூடவே வந்தனர். காமாட்சி ஆசையாக வந்து தன் பேத்தியின் கன்னங்களைத் தடவி முத்தமிட்டாள், ஆனால் ரேஷ்மா அவள் கைகளை விலக்கி விட்டாள்.
அவள் முத்தம் கொடுத்த கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். “அம்மா, தனியாகவா வந்தீர்கள்? ஏன் சுமதியை அழைத்துக் கொண்டு வரவில்லையா?” என்றாள் எரிச்சலுடன். காமாட்சி வருத்தத்துடன் தலை குனிந்தாள்.
“அம்மா இல்லையடி ராசாத்தி, பாட்டி என்று கூப்பிடு. என்னை மன்னித்து விடு ரேஷ்மா, நீ என் பேத்தி என்று எனக்குத் தெரியாது. எங்கே முன்னே பின்னே தெரியாத ஒரு சினிமா நடிகை எங்கள் மருமகளாக வந்து விடுவாளோ என்று தான் பயந்தேன். அந்த நேரத்தில் இந்த சுமதி வேறு வந்து ஏதேதோ சொல்லி என்னைக் குழப்பி விடவும் நான் அவளோடு இங்கே வந்தேன். சாரிடா தங்கம். என்னை மன்னிப்பாயா?” என்று கண்கள் கலங்க கேட்டாள்.
“நீங்கள் பெரியவர்கள் பாட்டி, மன்னிப்பெல்லாம் கேட்காதீர்கள். ஆனாலும் இந்த சுமதி பேசிய பேச்செல்லாம் என்னால் மறக்க முடியாது பாட்டி. மறுபடியும் அவளை என் கண்ணெதிரே கொண்டு வந்து விடாதீர்கள்” என்றாள் வெறுப்புடன்.
“நான் ஏன் இன்னும் அவளை நினைக்கப் போகிறேன். எல்லோரும் நம் ஊருக்குப் போய், உற்றார் உறவினரை அழைத்து, என் மகன் ரிஷிக்கும் பேத்தி ரேஷ்மாவிற்கும் திருமணம் செய்ய வேண்டியது தான் எங்கள் வேலை” என்றாள் காமாட்சி.
ரேஷ்மா ரிஷியைப் பார்த்து ‘சொல்லவா’ என்று கண்ணாலேயே கேட்டாள்.
உடனே காவ்யா, “அதென்ன இத்தனை பேர் இருக்கும் போது கண்ணால் பேசுவது?” என்றாள் மகளிடம்.
ரேஷ்மா அப்போதுதான் தன் கழுத்தில் தொங்கிய தாலியுடன் கூடிய தங்கச் சங்கிலியைக் காட்டினாள்.
“ஏய் ரிஷி, என்னடா இது?” என்று காமாட்சி அதிர்ச்சியில் கத்தினாள்.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings