in ,

மன்னிப்பாயா பெண்ணே (சிறுகதை) – Susri, Chennai

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + இலவசமாய் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

தப்பு செய்றவங்க மன்னிப்பு கேக்கணும் அதுல ஒரு சந்தேகமும் இல்லை. ஆனா, நான் தப்பு செய்யவே மாட்டேனே, அதனால மன்னிப்பு கேக்கற வாய்ப்பே கிடைக்கலை இதுவரை.

இன்னொண்ணு தப்பு செய்யற எல்லாருமே தான் செஞ்சது, செய்யறது தப்புனு கடைசி வரை ஒத்துக்கறதே இல்லை. சரி மேலே படிங்க.

காலேஜ்ல என்ஜினியரிங் டிகிரி 3வது வருஷம் படிச்சிட்டிருக்கறப்ப ஒரு சனிக்கிழமை அம்மா சொன்னா, ”டேய் நாளைக்கு என் அண்ணா பொண்ணு கோயமுத்தூர்ல இருந்து தனியா வரா, நீ போய் கூட்டிண்டு வந்துரு சென்ட்ரல்ல இருந்து”னு சொன்னா.

“போம்மா எனக்கு வேற வேலை இருக்கு அப்பாவை அனுப்பு”

“அப்பாக்கு நைட்ல இருந்து லேசா ஃபீவர், சொன்னா கேளு வெஸ்ட் கோஸ்ட்லதான் வரா டயத்துக்குப் போய் கூட்டிண்டு வந்துடு.”

சொன்னேனே தவிர எனக்கும் உள்ளூர ஒரு ஆர்வம், நான் அந்த பொண்ணை பாத்ததில்லை. அம்மாவோட தூரத்து சொந்தம் அண்ணன் சிங்கப்பூர்ல பல வருடமா இருக்காங்க. கோயமுத்தூர்ல இருக்கற புராதன வீட்டுக்கு 15 வருஷத்துக்கு அப்பறம் வந்திருக்கிறார்களாம். பொண்ணு மட்டும் சென்னை மியூசியம், மெரினா பீச் பாக்கணும்னு வராளாம்.

மறுநாள் ஞாயித்துக்கிழமை, காலைல இருந்தே டென்ஷன். சங்கர் வந்தான் கிரிக்கெட்மேச் விளையாட கூப்பிட. ஏதோ காரணம் சொல்லி அனுப்பிட்டேன்.

அம்மா கூட , ”என்னடா ஆச்சு சாயந்தரம் தானே சென்ட்ரல் போகணும், காத்தாலை விளையாட வேணாப் போ”

“இல்லைம்மா, டிரெயின் வந்துடும், சீக்கிரம் கிளம்பணும், விளையாடப் போனா லேட் ஆயிடும். அது சரி அந்தப் பொண்ணை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கறது”

“போட்டோல பாக்கலையா, வேணா உஷானு போர்ட் எழுதிண்டு நில்லு ஏ.சி. கோச் B-1 முன்னால.”

“சரிம்மா நான் பாத்துக்கறேன்”

“பைக் வேண்டாம், ஆட்டோ இல்லை பஸ் பிடிச்சு வந்துடுங்கோ”

சீக்கிரமே கிளம்பிட்டேன், திருவான்மியூர்ல இருந்து நிறைய பஸ் இருக்கு சென்ட்ரலுக்குனு இப்பதான் தெரிஞ்சது. டயத்துக்கு அரைமணி நேரம் முன்னாலயே சென்ட்ரல் வந்துட்டேன்.

அவசரமா பிளாட்பாரம் டிக்கட் வாங்கிண்டு உள்ளே போனா, வெஸ்ட்கோஸ்ட் இன்னிக்கு ஒரு மணி நேரம் லேட்னு அனவுன்ஸ் பண்றான். என்ன பண்றது ஹிக்கின்பாதம்ஸ்ல குமுதம், விகடன் வாங்கிண்டு, பக்கத்து ஸ்டால்ல ஒரு பெரிய லிம்கா பாட்டில் வாங்கிண்டு வரிசையா போட்டிருந்த ஸ்டீல் சேர்ல கூட்டத்தோட கூட்டமா உக்காந்தேன்.

எதுத்தாப்பல பெரிய டி.வீல லெஜண்ட் சரவணா ஸ்டோர் அருள் கோட் சூட்டோட அப்பப்ப வந்து 4 அழகான பெண்களுடன் ஆடிட்டு போனார்.

கண் ஆபரேஷன் பண்ணிண்டு ஊர் திரும்பற பெங்காலி பெரியவர், அவரோட குடும்பம். 5 குழந்தைகளுடன் போராடும் முக்காடு போட்ட வடநாட்டு பெண். இடது கையில் புகையிலை, சுண்ணாம்புனு எதையோ போட்டு, வலது கை கட்டை விரலால உயிர் போக கசக்கி , அந்தகலவையை ஒரு மாதிரியாக வலது உள்ளங்கையில் லாவகமாக மாற்றி கீழ் உதட்டுக்கும் கரியபற்களுக்கும் இடையில் செலுத்தி விட்டு, ஏதோ ஒரு சாதனை செய்த திருப்தியுடன் மனைவியின் தோளில் சாயும் வடநாட்டு இளைஞன்.

‘விஜயவாடா எல்டானிகி பதி கெண்ட சேபு அவ்ததி’னு புது மனைவியை ஒட்டிக்கொண்டு சொல்லும் ஆந்திர இளைஞன். ரெயில்வே ஸ்டேஷன் எப்பவுமே ஒரு சுவாரஸ்யமான இடம்தான்.

நேரம் போனது தெரியலை, மங்களூரிலிருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரலுக்கு வரும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரெஸ் ஐந்தாவது பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது என தமிழ், ஆங்கிலம், ஹிந்தில அனவ்ன்சி’னார்கள். அவசரமாய் 5ல போய் B-1 வர ஸ்பாட்ல நின்னேன். அப்பாடானு , பெருமூச்சுடன் வந்து புஸ்னு ஒரு சத்தத்துடன் நின்றது டிரெய்ன்.

இப்ப ஒரு பயம் எப்படி அந்த உஷாவை அடையாளம் கண்டு பிடிப்பதுனு. ஆனா அந்த பிரச்சனை வரலை, அந்த கோச்ல இருந்து சின்ன சூட்கேசோட இறங்கின அந்த இளம் பெண் அவள் தன் சூட்கேஸை, ஒரு புன்னகை ததும்பிய ‘ஹை’யுடன் நீட்டினாள்.

“எப்படிடா இருக்கே அத்தை, மாமா நல்லா இருக்காங்களா? உன்னை எப்பவோ ஒரு கல்யாணத்துல அரை நிக்கர்ல பாத்த ஞாபகம். இப்ப மடமடனு உசரமா கொஞ்சம் ஹேண்ட்சமா கூட வளந்துட்டே.” பிளாட்பார்ம் தாண்டறதுக்குள்ளே கேப் விடாம பேசிண்டே வந்தா.

பிளாட்பார்ம் முனைல இருந்த மெட்ராஸ் காபி ஸ்டாலை பாத்தவுடன், ”ஏய் வெங்கிட்டு, மெட்ராஸ் காபி சாப்பிடலாமா?”

நான் என் பின்னால் திரும்பிப் பாத்தேன் யாரையும் காணோம். “வெங்கிட்டுவா, யார் அது?”

“நீ வெங்கிட்டு இல்லையா?” கேட்டுண்டே என் கைல இருந்த அவ சூட்கேசை பிடுங்கினாள்.

“நீ உஷா இல்லையா” கேட்டுண்டே நான் திரும்ப 5ம் நம்பர் பிளாட்பார்ம் நோக்கி ஓடினேன்.

வாசகர்கள் எல்லாரும் ‘மன்னிக்கணும்’ தலைப்புக்கு ஏத்த சப்ஜெக்ட் கிடைக்கலை, அதான் ஹி…ஹி…

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உலகளாவிய சிறுகதை / குறுநாவல் / நாவல் போட்டி 2023-24 (பரிசுத்தொகை ரூபாய் 10,000 + இலவசமாக புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு)

    கல்லும் கடவுளும் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை