in ,

காக்கா ஃபார்முலா 2024 (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

      அதிக சூடும் இல்லாமல், அதிக ஜில்லிப்பும் இல்லாமல், இடைப்பட்ட வெதுவெதுப்பில் இருந்த  இதமான நீரை மொண்டு, நிதானமாய் ஊற்றி;க் கொள்ளும் போது ஏற்படும் ஒரு இன்ப சிலிர்ப்பு அற்புதம். கண்களை மூடிக் கொண்டு அந்தச் சுகானுபவத்தை சுகித்துக் கொண்டிருந்த நான் பாத்ரூம் கதவு தட்டப்பட,

      ‘யாரூ” எரிச்சலுடன் கேட்டேன்.

     ‘நான்தானப்பா ரஞ்சனி…” என் ஏழு வயது மகள்.

      ‘எ…ன்…ன…ம்…மா….?”

      ‘அப்பா.. நம்ம வீட்டு மொட்டை மாடில நெறைய காக்காய்ங்க வந்து உட்கார்ந்து கத்துதுங்கப்பா”

      அப்போதுதான் கவனித்தேன்.  ‘கா…கா….கா…கா…” என்ற பேரிரைச்சல் காதை அடைத்தது. இடையே ‘கா….கா…கா…கா…” என்று சில அண்டங்காக்கைகளின் அலறல் வேறு.

      ‘என்ன கருமம் இது?… ஏய் ரஞ்சனி… அம்மாவ மொட்டை மாடிக்குப் போய்ப் பார்த்திட்டு வரச் சொல்லு… ஏதாச்சும் செத்துக் கித்துக் கெடக்கும்”

      ‘பார்த்தாச்சுப்பா…. ஒரு காக்காய்க் குஞ்சு நம்ம ஓவர் டேங்க் தொட்டிக்குள்ளார விழுந்து கெடக்காம்”

      ‘அய்யய்ய… செத்துக் கிடக்கா?”

      என்னுடைய இந்தக் கேள்விக்கு என் மனைவியிடமிருந்து பதில் வந்தது. ‘இல்லைங்க… சாகலை…. பறக்கத் தெரியாத குஞ்சு போலிருக்கு… எப்படியோ வந்து தொட்டிக்குள்ளார விழுந்து கெடக்கு… நானும்  சொல்லிட்டேதானிருக்கேன்”  “ஓவர் டேங்க் தொட்டிக்கு மூடி போடுங்க… மூடி போடுங்க”ன்னு நீங்க கேட்கவேயில்லை!… இப்பப் பாருங்க எப்படியொரு பிரச்சினைன்னு….”

      ‘என்னடி பெரிய பிரச்சினை?.. எடுத்து வெளிய போட வேண்டியதுதானே?” துண்டால் உடம்பைத் துடைத்துக் கொண்டே சொன்னேன்.

      ‘அது சரி… அம்பது… அறுவது காக்காய்ங்க தொட்டியைச் சுற்றியும் பறந்திட்டிருக்குதுக… நான் போய் அந்தக் குஞ்சைத் தொட்டேன்னு வெச்சுக்கங்க… எல்லா சேர்ந்து கொத்தியே என் தலையை ஓட்டை போட்டிடும்ங்க”

      கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவன் அவளை எரித்து விடுவது போல் பார்த்து விட்டு ‘ஒரு காக்காய்க் குஞ்சை வெளிய எடுத்துப் போடத் துப்பில்ல…”

      “நீங்க ஆம்பளை சிங்கம்தானே?… போங்க…..போய் வெளிய எடுத்துப் போட்டுட்டு வாங்க…” என்றாள் கௌசிகா.

      என் தன்மான உணர்ச்சி தூண்டி விடப் பட்டதும் ‘விடு…விடு” வென்று படிகளில் ஏறி மொட்டை மாடியை அடைந்தேன். போன வேகத்தில் பின் வாங்கினேன். கிட்டத்தட்ட நூறு காக்கைகளுக்கும் மேலிருக்கும். மூர்க்கத்தனமாய் என் தலைக்கு மேல் ‘விர்…விர்” ரென்று பறந்து என் தலையைக் கொத்தப் பார்த்தன.

      அலறியடித்துக் கொண்டு கீழே ஓடினேன்.

      ‘என்ன… போன வேகத்துல வந்துட்டீங்க…” கௌசிகா என்னைப் பார்த்துக் கிண்டலடிக்க,

      அவமானமும் ஆத்திரமும் சேர்ந்து என்னை ஆட்டி வைக்க ‘வாயை மூடிட்டுப் போங்கடி… காலங்காத்தால வேற வேல இல்ல பாரு எனக்கு?… அவனவனுக்கு ஆபீஸூக்கு லேட்டாச்சு!..” கத்தலாய்ச் சொல்லி விட்டு வீட்டிற்குள் புகுந்தேன்.

      என் முதுகுக்குப் பின்னால் அவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர்..

      மணி எட்டரை.  ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யப் போகும் முன் மேலே அண்ணாந்து பார்த்தேன்.  இன்னமும் அந்தக் காக்காய்க் கூட்டம் மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவற்றின் மேல் அமர்ந்திருக்க  வண்டியை ஸ்டார்ட் செய்து பறந்தேன்.

      போகும் வழியில் சிந்தனை முழுக்க தொட்டியில் விழுந்து கிடக்கும் அந்தக் காக்கைக் குஞ்சையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.  ‘எப்படி அதை எடுத்து வெளியே போடுறது?…. ராத்திரி நேரத்துல மத்த காக்கைகளெல்லாம் இருக்காதே… அந்த நேரத்துல போய் எடுத்துப் போட்டுட்டா?.. அய்யய்ய… ராத்திரி வரைக்கும் அது தாங்குமா?…செத்துக் கித்துப் போயிடுச்சுன்னா மொத்தத் தண்ணியும் நாறிடுமே…. அப்புறம் தொட்டியைக் க்ளீன் பண்ணணும்!”

      ஆபீஸி;ல் எனக்கு வேலையே ஓடவில்லை.   ஒரு சமயம் எனக்கே என் மீது கோபம் வந்தது. அவனவன் எதையெதையோ சாதிக்கறான்… ஒரு காக்கைக் குஞ்சுப் பிரச்சினைக்கு இப்படி நொந்து நூலாகறியே?….” 

            ஈவினிங் ஆக ஆக இனம் புரியாதவொரு அச்சம் மனதில் படர வீட்டிற்குப் போகவே தயக்கமாயிருந்தது. ‘அது என்னவாகியிருக்கும்?.. ஒருவேளை அதுவே எந்திரிச்சுப் பறந்து போயிருக்குமா?”

      வீட்டையடைந்தது ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டதும் என்னையுமறியாமல் என் கண்கள் மேலே பார்த்தன. ஒரு காக்கையைக் கூடக் காணோம். ‘அதுவா எந்திரிச்சு பறந்து போயிடுச்சு போலிருக்கு”

      வீட்டிற்குள் நுழைந்து ஷோபாவில் அமர்ந்த போது ரஞ்சனி ஓடி வந்து ‘டாடி…ரஃப் நோட்டு;; வாங்கிட்டு வரச் சொன்னேன் அல்ல?.. எங்கே?” கேட்டாள்.

      காலையிலிருந்து அந்தக் காக்காய்க் குஞ்சையே நினைத்துக் கொண்டிருந்த நான் ரஞ்சனியையும் ரஃப் நோட்டையும் சுத்தமாகவே மறந்து போயிருந்தேன்.

      ‘அது… வந்து… இப்ப வெளிய போவேன்… வாங்கியாரேன்… என்ன?” சமாளித்தேன்.

      என் மனம் அவள் அந்தக் காக்கைக் குஞ்சைப் பற்றி ஏதாச்சும் சொல்வாள் என எதிர்பார்த்தது.  அவளோ அந்தப் பேச்சையே எடுக்க வி;ல்லை. நானாக வலியக் கேட்க எனக்கும் மனம் ஒப்பவில்லை.

      காபி கொண்டு வந்து கொடுத்த கௌசிகா ‘ஏங்க… அவளும் ரஃப் நோட்டு வேணும்னு நாலு நாளா கேட்டுட்டிருக்கா…. காதுல வாங்கிக்க மாட்டேங்கறீங்களே…. பாவம்… இன்னிக்கும் மிஸ்கிட்ட அடி வாங்கியிருக்கா, சொல்லேண்டி உங்கப்பன்கிட்ட…” என்றாள் திரும்பி ரஞ்சனியைப் பார்த்து,

      ‘ஆமாம்பா.. இன்னிக்கும் மிஸ் அடிச்சாங்க!”

      ‘சரி…சரி… இன்னி;க்கே வாங்கிடலாம்” என்றவன் ஒரு வாய் காபியை உறிஞ்சி விட்டு அதைப் பற்றிக் கேட்க கௌசிகாவை நோக்கித் திரும்பி வாயெடுத்தேன்.  பிறகு அப்படியே நிறுத்திக் கொண்டேன்.   ‘காலையிலே என் முதுகுக்குப் பின்னாடி நமுட்டுச் சிரி;ப்புச் சிரிச்சவ…இவகிட்டக் கேட்கக் கூடாது!”

      இரவு சாப்பாட்டின் போது,

      ‘இன்னி;க்கு என்ன விசேஷம்… பாயஸமெல்லாம்?”

      ‘சும்மாத்தாங்க… இவ கேட்டா.. சரி…ன்னு பண்ணிட்டேன்… பாருங்க டம்ளர்ல ஊத்திக் குடிக்கறதை” என்றாள் ரஞ்சனியைப் பார்த்து சிரித்தபடி,

      தலையைத் தூக்கிப் பார்த்தேன்.; லோட்டா போன்ற பெரிய சைஸ் டம்ளரில் பாயஸத்தை ஊற்றி ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.

     

இவங்க ரெண்டு பேரில் யாராவது ஒருத்தருக்காவது அந்தக் காக்கா ஞாபகம் வந்து அதைப் பத்தி சொல்ல மாட்டாங்களா? என் மனம் ஆர்வமாய் எதிர் பார்த்தது.

      அந்தப் பெரிய சைஸ் டம்ளரினுள் விரலை விட்டுக் குடைந்து கொண்டிருந்த ரஞ்சனியை அதட்டினாள் கௌசிகா. ‘ஏய்…ஏய்…என்னடி இப்படி அசிங்கம் பண்ணிட்டிருக்கே…குடிச்சு முடிச்சாச்சுன்னா டம்ளரைக் கீழே வைடி!”

      ‘இல்லம்மா… டம்ளருக்கு அடில… ஒரு முந்திரிப் பருப்பு ஒட்டிக்கிட்டிருக்கம்மா… விரலுக்கு எட்ட மாட்டேங்குதும்மா…”

      ‘அவ்வளவுதானே?… பேசாம காக்கா ஃபார்முலாவையே இதுக்கும் யூஸ் பண்ணுடி” என்றாள் கௌசிகா.

      ‘காக்காய்” என்ற வார்த்தை காதில் விழுந்ததும் சடாரெனத் தலையைத் தூக்கிப் பார்த்தேன் நான்.

      ரஞ்சனி செம்பிலிருந்த தண்ணீரை அந்த டம்ளருக்குள் ஊற்றி உள்ளேயிருந்த முந்திரி மிதந்து மேலே வந்தது.  எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சிரி;த்தாள் ரஞ்சனி.

      அந்த நேரத்திலும் என் மனம் காக்காய்க் குஞ்சையே நினைத்துக் கொண்டிருந்தது. ‘என்னவாகியிருக்கும்?… இவளும் எதுவும் சொல்ல மாட்டேங்குறா”

      பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு கடைசியில் நானே கேட்டு விட்டேன் ‘ஆமாம்… அந்தக் காக்காய்க் குஞ்சு என்னதான் ஆச்சு?”

      ‘அதுக்கும் இதே ஃபார்முலாதான்” என்றாள்.

      ‘புரியலையே”

      ‘கால் தொட்டி தண்ணி இருந்தி;ச்சு… இது அதுல விழுந்து மேலெழும்பிப் பறக்கவும் முடியாம… நடந்து போகவும் முடியாம…’பட…பட”ன்னு இறக்கையடிச்சுட்டே கெடந்திச்சு… பார்த்தேன்… மோட்டார் போட்டு விட்டேன்… தொட்டில தண்ணி ஏற…ஏற… அது இறக்கையடிச்சுட்டே மேல வந்துச்சு…. தண்ணி நிரம்பி வடிஞ்ச போது இதுவும் தொட்டிக்கு வெளிய வடிஞ்சு வந்து விழுந்திடுச்சு… அப்புறம் கொஞ்ச நேரம் தரைல தத்தித் தத்தி நடந்துட்டு…அ ரை மணி நேரத்துல ‘ஜிவ்”ன்னு பறந்து போயிடுச்சு”

      எனக்கு அவமானமாயிருந்தது.

      ‘ச்சே… எவ்வளவு சுலபமா பிரச்சினையைத் தீர்த்துட்டு இன்னிக்குப் பூராவும்  ஜாலியா இருந்திருக்கா இவ…. நான் என்னடான்னா காலைலயிருந்து இதையே நெனச்சுக்கிட்டு ஆபீஸ் வேலை கூடச் சரியாப் பார்க்காம பைத்தியக்காரனாட்டம்  இருந்திருக்கேன்”

      ‘என்னங்க…. உங்களுக்கும் பாயஸத்தை டம்ளரிலேயே ஊத்தித் தந்திடவா?”

      இயந்திரத்தனமாய்த் தலையாட்டினேன்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உண்மையில் உயர்ந்தவர் (சிறுகதை) – முகில் தினகரன்

    உறவுக்கு நிறம் ஏது (சிறுகதை) – முகில் தினகரன்