in ,

இரண்டாம் குலோத்துங்க சோழன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

           ஆஸ்பத்திரி வராண்டாவில் திரும்பிய திசையெல்லாம் கரை வேட்டி மனிதர்கள் குவிந்திருந்தனர்.  சாத்தப்பட்டிருந்த மெயின் கேட்டிற்கு வெளியே கட்சித் தொண்டர்கள் ஆவேசத்துடன் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.

விஷயம் வேறொன்றுமில்லை, கல்லூரியில் படிக்கும் தொகுதி எம்.எல்.ஏ. “குலோத்துங்க சோழன்” அவர்களின் மகன் பைக் விபத்தில் ஏகமாய் அடிபட்டு, எமர்ஜென்ஸியில் உயிருக்குப் போராடியபடி கிடக்கிறான். அவனது அரிய வகை ரத்தம் தேடிக் கட்சித் தொண்டர்கள் நாலாத்திசையிலும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

         “த பாருங்கப்பா… எம்.எல்.ஏ.குலோத்துங்க சோழன் வர்றதுக்கு எப்படியும் மதியம் ஆய்டும்… அதுக்குள்ளார எப்படியாவது ரத்தம் ஏற்பாடு பண்ணியாகணும்!” சற்று சீனியரான ஒரு கரை வேட்டி சொல்ல,

           “ப்ச்… பசங்க காலையிலிருந்து நாய் அலை… பேய் அலை அலைஞ்சிட்டிருக்காங்க… கெடைக்கவே மாட்டேங்குது… அதென்னவோ ஏ.ஒன்.பி.நெகடிவ் குரூப்பாம்!… ரொம்ப ரேர் குரூப்பாம்”

            “ஹூம்… கேட்டுக்கு வெளிய இத்தனை கட்சித் தொண்டர்கள் கூடியிருக்கானுக… அதுல ஒருத்தனுக்குக் கூடவா அந்த குரூப் ரத்தம் இல்லை?”

        அப்போது, எங்கிருந்தோ வந்த ஒருவன், கேட்டுக்கு வெளியே குவிந்திருந்த கட்சித் தொண்டர்கள் மத்தியில் நின்று, “எல்லோரும் கொஞ்சம் வழியை விடுங்கப்பா… நான் உள்ளார போகணும்” என்றான்.

         பைத்தியக்காரன் கோலத்திலிருந்த அவனை கடுப்பாய்ப் பார்த்த கட்சித் தொண்டர்கள், “எலேய்… கட்சிக்காரனுக நாங்களே உள்ளார போக முடியாம இங்கெ நின்னுட்டிருக்கோம்!… நீ என்னலே?” எகிற,

         “அடேய் முட்டாள்களா… நான் உங்க தலைவரோட பையனுக்கு ரத்த குடுக்க வந்திருக்கேன்!… போய்ச் சொல்லு… என்னை ராஜ மரியாதையோட கூட்டிட்டுப் போவாங்க” என்றான் அந்தப் பைத்தியக்காரன்.

        அவன் சொன்னது போலவே தகவல் உள்ளே போனதும் ஆஸ்பத்திரி ஆட்கள் வேக வேகமாய் வந்து அவனை அழைத்துச் சென்றனர்.

       போகும் போது எல்லோரையும் திரும்பிப் பார்த்து புருவத்தை உயர்த்தினான் அவன்,

       மருத்துவ மனை ரிசப்ஷன் பகுதியில், “அண்ணே… அதே குரூப் ரத்தத்தோட ஒரு ஆள் வந்திருக்கான்… தம்பிக்கு ரத்தம் தரச் சம்மதம்னு சொல்லுறான்!… ஆனா…” என்று இழுத்தான் அவன்.

          “என்னடா ஆனா… ஆவன்னா…ன்னு இழுக்கறே?… வந்தவன் பணம் கிணம் நெறைய எதிர்பார்க்கறானா?” கோபத்துடன் கேட்டான் சீனியர் கரை வேட்டி.

          “அதில்லைண்ணே… அவனைப் பார்த்தா பரதேசி மாதிரி… தெருவோரப் பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்… அவன் எப்படி நம்ம தலைவர் பையனுக்கு?” பின் மண்டையைச் சொறிந்தபடி சொன்னான் அவன்.

          அப்போது அங்கு வந்த மூத்த டாக்டர் “இங்க பாருங்கப்பா… வீ ஆர் டாக்டர்ஸ்… எங்களுக்கு உயிரைக் காப்பாத்தற கடமையிருக்கு… அதனால… நீங்க “ஓ.கே.” சொல்லுற வரைக்கெல்லாம் நாங்க காத்திட்டிருக்க வேண்டிய அவசியமில்லை… பேஷண்ட் கண்டிஷன் ரொம்ப சீரியஸாகிட்டிருக்கு!… ஸோ… ரத்தம் தர வந்திருப்பவன் எப்படியிருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை… நாங்க வந்திருக்கற நபரைச் செக் பண்ணப் போறோம்… ரத்தம் ஓ.கே.ன்னா… இம்மீடியட்டா ஆபரேஷனை ஸ்டார்ட் பண்ணப் போறோம்!” கண்டிப்புடன் சொல்லி விட்டு நகர்ந்தார்.

         கரை வேட்டிகள் குழப்பத்தில் செய்வதறியாது நின்றன.

        அடுத்த சில நிமிடங்களில், அந்தக் குரல் எங்கிருந்தோ ஒலித்தது.

        “ரத்தம் பொருந்திடுச்சாம்… ஆபரேஷன் ஆரம்பிச்சிட்டாங்களாம்!”

         சரியாக ஒரு மணி நேரம் கழித்த பிறகு, “ஆபரேஷன் சக்ஸஸ்… பையன் பொழைச்சிட்டான்” என்கிற தகவல் வந்த போது எம்.எல்.ஏ. குலோத்துங்க சோழனும் வந்து சேர்ந்தார்.

வந்தவுடன் பிரத்யேக அனுமதி பெற்று, மகனைப் பார்த்து விட்டுத் திரும்பினார். நடந்தவற்றை டாக்டர் வாயிலாகவும், கட்சித் தொண்டர்கள் மூலமாகவும் தெரிந்து கொண்ட எம்.எல்.ஏ. குலோத்துங்க சோழன்,

          “எங்கே அந்த மனிதர்?… நான் அவரை உடனே பார்க்க வேண்டும்!… என் மகனின் உயிரைக் காப்பாற்றிய அந்த மாமனிதரைப் பார்த்து ஏதாவது செய்யணும்!… என் குலக் கொழுந்தைக் காலனிடமிருந்து மீட்ட அந்தக் கோமகனுக்கு கோவில் கட்டா விட்டாலும்… கோமேதகத்தைக் கொட்டிக் கொடுக்கா விட்டாலும்… குன்றி மணியளவு நன்றி காட்ட ஏதாவது செய்தாகணும்!” அரசியல்வாதி என்பதைத் தன் பேச்சில் குலோத்துங்க சோழன் நிரூபித்தார்.

           “அய்யா… அதோ அந்த மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்திட்டிருக்கார் பாருங்க?… அவர்தான்!’ சீனியர் கரை வேட்டி சொல்ல,

         “அடப்பாவிகளா… உதிரம் தந்து உதவிய உத்தமரை உதாசீனப்படுத்தி உச்சி வெயிலில் உட்கார வைத்து விட்டீர்களே இது நியாயமா?” கேட்டபடியே அந்த மரத்தடிக்கு விரைந்து, அந்த மனிதரை நெருங்கி அவர் முகத்தைப் பார்த்த எம்.எல்.ஏ.குலோத்துங்க சோழனின் முகம் சட்டென்று மாறியது.

          “நீ… நீ… உன்னைய இதுக்கு முன்னாடி எங்கியோ பார்த்திருக்கேனே!”

          “என்ன குலோத்துங்க சோழா… அதுக்குள்ளார மறந்திட்டியா?… சாலையோரமா நடந்து பள்ளிக்கூடம் போய்க்கிட்டிருந்த என் பத்து வயது மகனை வேகமா கார்ல வந்து உன் மகன் இடிச்சுக் கொன்னப்ப… என்கிட்ட  “கேஸெல்லாம் வேண்டாம்… ஆயிரம் தர்றேன்… லட்சம் தர்றேன்”னு பேரம் பேசினியே?… மறந்திட்டியா?” பிச்சைக்காரத் தோற்றத்திலிருந்தவன் சற்றும் பயமில்லாமல் தெளிவாகப் பேசினான்.

          கட்சித் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் எதிரில் அந்த மனிதர் அப்படிப் பேசியதில் கோபமுற்ற எம்.எல்.ஏ.குலோத்துங்க சோழன், “என்னப்பா வம்பு பண்ணணும்னு வந்திருக்கியா?”

          “ம்ஹூம்… பிச்சை போட வந்தேன்… போட்டுட்டேன்… கௌம்பறேன்”

          “என்னது?… பைத்தியக்காரன் போலிருக்கும் இவன் எனக்கு பிச்சை போடறானா?… என்ன சொல்றான் இவன்?” அவன் பேச்சு புரியாத குலோத்துங்க சோழன் அவனை ஊடுருவிப் பார்க்க,

          “என் மகனைக் கொன்ன பயலுக்கு ரத்தப் பிச்சை போட வந்தேன்… போட்டுட்டேன்”

          கரை வேட்டிகள் கோரஸாய், “டா….ய்!” எனக் கத்த,

          “ச்சூ… கத்தாதீங்கய்யா… இனிமே உங்க தலைவரு பையன் வாழுற வாழ்க்கையே நான் போட்ட பிச்சைதான்… இது போதும்… காலம் பூராவும் உங்க எம்.எல்.ஏ. நொந்து சாக…”

          சொல்லி விட்டு நகர்ந்தவனை தர்மசங்கடமாய்ப் பார்த்த எம்.எல்.ஏ.குலோத்துங்க சோழன், “இந்தப்பா… உன் பேர் என்ன?… சொல்லிட்டுப் போ” கேட்டார்.

          திரும்பி நின்று, “இரண்டாம் குலோத்துங்க சோழன்” என்று அலட்சியமாய்ச் சொல்லி விட்டு, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தான் அவன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பவியிடமிருந்து ஒரு பாராட்டு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    கண்ணான கண்ணே (சிறுகதை) – சுஶ்ரீ