in ,

அவனா நீ? (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அலுவலக வேலையாக திருச்சி வரை செல்ல வேண்டியிருந்ததால் அதிகாலையிலேயே எழுந்து அவசர அவசரமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தேன். மேசை மேல் அம்மாவிடமிருந்து வந்திருந்த அந்தக் கடிதம் கிடந்தது.

‘வேலூர் மாமா தன் பொண்ணு கலைவாணியை உனக்கே கட்டித் தர வேணும்ன்னு தெனமும் கேட்டுட்டே இருக்கார்… சீக்கிரம் பதிலைச் சொல்… மாமா வசதி குறைவானவர் என்பது குறித்தெல்லாம் கவலைப்படாதே…! கலைவாணி ஏழைப் பெண்தான் ஆனாலும் குடும்பத்திற்கு ஏற்ற பெண்!…”

கடித வாசகங்கள் நினைவில் வந்து போக, ‘ஹூம்… அம்மா இன்னும் அந்தக் காலமாவே இருக்கு!… இப்பவெல்லாம் அவனவன் வசதியான பெண்ணைக் கட்டிக்கிட்டு வாழ்க்கைல செட்டிலாயிடணும் என்கிற குறிக்கோளோடதான் காலேஜ் படிப்பையே முடிக்கறானுக!… இந்த அம்மா என்னடான்னா… ‘ஏழைப் பொண்ணு…ஏற்ற பொண்ணு!… மாமன் பொண்ணு… மாலைக் கண்ணு”ன்னு ஓல்டு டயலாக் பேசிட்டிருக்கு”

திருச்சியில் அந்த அலுவலக வேலை மதிய வாக்கிலேயே முடிந்து விட, சட்டென்று அந்த யோசனை வந்தது.  ‘கரெக்ட்… நம்ம ‘டான் ரவி” இந்தத் திருச்சிலதான் இருக்கான்!… வீடு கூட புதுக்கோட்டை ரோட்டுலதான் இருக்கு!… அவனைப் போய் பார;த்துவிட்டுப் போனால் என்ன?… அதான் நெறைய டைம் இருக்கல்ல?” மொபைலை எடுத்து அவன் எண்ணிற்கு அழைத்தேன்.

‘டேய் திவாகர்… நீ வரற்துக்கு கேட்கணுமாடா?… தாராளமா வாடா!” டான் ரவி சொல்ல,

“ஓ.கே.டா…. ஓ.கே.டா… அரை மணி நேரத்துல வந்திடறேன்!”

“எதுக்குடா அரை மணி நேரம்?”

“புதுக்கோட்டை ரோட்டுலதானே வீடு?” சந்தேகமாய்க் கேட்டேன்.

“டேய்… அது எங்க அம்மா அப்பா வீடுடா…. நான் இப்ப என் மாமனார; வீட்டோட செட்டிலாயிட்டேன்!…. சத்திரம் பஸ் ஸ்டாப்புல இருந்து ரெண்டு கிலோ மீட்டர்…. ஆட்டோக்காரன்கிட்ட ‘சூர்யா காலனி‘ன்னு சொல்லு… கொண்டாந்து விட்டுடுவான்!… ஏழாம் நம்பா; வீடுடா… முன்னாடி பெரிய கருப்பு கேட் இருக்கும்!”

“சரிடா…சரிடா”

ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன்.   ஆட்டோ ஓட ஆரம்பிக்க, என் நினைவு நாக்கு கல்லூரி நாட்களெனும் தேனை சுவைத்துப் பார்த்தது.  இந்த ரவி அப்போது கல்லூரியில் பெரிய தாதா.  முதலாமாண்டு படிக்கும் போதே மூன்றாமாண்டு மாணவனைத் தாக்கி அவனை ஆஸ்பத்திரி படுக்கையில் போட்டவன்.

கரடு முரடான முகத்தில் தாறுமாறாக வளர்ந்த தாடியுடனும், எப்போதும் இடுப்பில் சைக்கிள் செயினோடும் திரியும் ரவி பல மாணவர்களுக்கு மட்டுமல்ல… ஒரு சில லெக்சரர்களுக்கும் சிம்ம சொப்பனமாயிருந்தவன். கல்லூரித் தேர்தலில் அவனை எதிர்த்துப் போட்டியிட எவனுமே முன் வராததால் அவனே நிரந்தர மாணவர் தலைவன்.  அதனாலேயே சாதார ரவியாயிருந்தவன் ‘டான் ரவி” ஆனான்.

“இந்த வீடா சார்?” ஆட்டோ டிரைவர் கேட்க, சிந்தனை கலைந்து இறங்கினேன்.

கருப்பு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தவன் அசந்து போனேன்.

‘அடேங்கப்பா… எவ்ளோவ் பொpய பங்களா…! பரவாயில்லை நல்ல செழிப்பான இடத்தைப் பிடிச்சுத்தான் செட்டிலாயிருக்கான்!…”

விஸ்தாரமான அந்த போர்ட்டிகோவை கடக்கையில் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுக் கார்களை பிரமிப்புடன் பார்த்தபடி வீட்டினுள்… இல்லை… இல்லை… மாளிகையினுள் சென்றேன். வெகு ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருந்த முன் புறஹாலின் மத்தியில் போடப்பட்டிருந்த உயர்ரக சோபாவில் அசத்தலாய் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி என்னைக் கேள்விக்குறியுடன் பார்க்க,     ‘ரவி…?” கேட்டேன்.

“நீங்க?” கேட்ட தோரணையில் ஒரு திமிர் இருந்தது.

“அவரோட ஃப்ரெண்ட்!… காலேஜ் மேட்!”

மேலும் கீழுமாய்த் தலையாட்டிய அந்தப் பெண்மணி. பூ ஜாடியைத் துடைத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம், ‘டேய்… மணிகண்டா…ரவியை வரச் சொல்லுடா!”

ஏற்கனவே அப்பெண்மணியின் அபார உயரத்திலும்…. ஆணையொத்த கம்பீரத்திலும் மிரண்டு போயிருந்த நான், அவள் ரவியைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டதில் மிரண்டு போனேன்.  ‘அநேகமா இவள் ரவியின் மாமியாராகவே…. இல்லை அவன் மனைவியோட தமக்கையாகவோதான் இருக்கணும்!”

லுங்கி, பனியனில்…. ஒரு வேலைக்காரத் தோற்றத்தில் வந்தவனை நம்ப முடியாமல் பார்த்தேன்.  ‘இவனா?…இவனா ரவி?”

“வா திவாகர்!… நல்லாயிருக்கியா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டவன், அந்தப் பெண்மணி பக்கம் திரும்பி, ‘இது…. என் காலேஜ் ஃப்ரெண்ட்!….பேரு திவாகர்!” என்றான் பவ்யமாய்.

“ம்…ம்…”என்று அலட்சியமாய்த் தலையாட்டியவளை என்னிடம் காட்டி, ‘திவா… இவங்க… என் வைஃப்!” என்றான் ரவி.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  ‘எங்கோ… ஏதோ தப்பு நடந்திருக்கு…‘ என்பது மட்டும் புரிந்தது..

ஒரு சிறிய கணத்தில் ரவி அவளைப் பார்த்து எதையோ எதையோ ஜாடையில் குறிப்பிட, அவள் புரிந்து கொண்டு என்னைப் பார்த்து, ‘ம்ம்… உட்காருங்க” என்றாள்.  உட்கார்ந்தேன்.

“அப்புறம்… ரவி…. ரொம்ப வருஷமாச்சு பார்த்து… எப்படியிருக்கே?…. எத்தனை குழந்தைக…. என்ன படிக்கறாங்க?” கேட்டேன.

அவன் பதில் சொல்லாமல் தன் மனைவியைப் பார்த்தான். அவள் ‘ரெண்டு குழந்தைக…. ரெண்டும் பசங்க!… வெளியூர்ல ஹாஸ்டல்ல படிக்கறாங்க!” என்றாள்.

நான் மேலே பேச வாயெடுக்க, அவள் என்னைக் கையமர்த்தி விட்டு ரவியிடம், ‘போய்…உங்க ஃப்ரெண்டுக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வாங்க!” என்றாள்.

உள்ளே சென்ற ரவி திரும்பி வரும் வரை நான் எதுவும் பேசவில்லை.  அவளும் அதைக் கண்டு கொள்ளவில்லை. ரவியுடன் வந்த வேலைக்காரச் சிறுமி, எனக்கு மட்டும் காபி கொடுத்து விட்டு நகர, நான் ரவியிடம், ‘ரவி…. உனக்கு?” என்றேன்.

“அவர் சாப்பிட்டாச்சு” பதில் அவளிடமிருந்து வந்தது.

அமைதியாய் காபி பருகி முடித்தவன் மெல்ல எழுந்து, அவர்கள் இருவரையும் பார்த்து, அப்ப நான் புறப்படறேன்!” என்றேன்.

“அதுக்குள்ளார என்ன அவசரம்…. நைட்டுதானே பஸ்?… கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டுப் போகலாமல்ல திவாகர்?” ரவி சொல்ல,

“அவருக்கு ஏதாவது வேலையிருக்கும்… அதான் புறப்படறார்… நீங்க ஏன் அவரை தொந்தரவு பண்றீங்க?” என்ற அப்பெண்மணி என்னைப் பார்த்து, ‘ம்…நீங்க கௌம்புங்க!” என்றாள்.

“ஹி..ஹி… அது வந்து… ரொம்ப வருஷமாச்சல்ல அதான்…!” ரவி வழிய, ‘விருட்‘டென்று வெளியேறிய நான் அங்கிருந்து நேரே பேருந்து நிலையத்திற்கு வந்து இரவு பஸ்ஸூக்கான டிக்கெட்டை புக் செய்தேன்.

மறுநாள்.

‘வசதியான வீட்டுப் பெண்ணைக் கட்டினால் ‘தாதா”வும் ‘சாதா” ஆகிவிடுவான்‘ என்கிற ஞானோதயம் பெற்று விட்ட காரணத்தினால், அம்மாவிற்கு உடனே கடிதம் எழுதினேன், ‘வேலூர் கலைவாணியையே நிச்சயம் செய்து விடு” என்று.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அன்புடையார் பிறர்க்கு (சிறுகதை) – M.மனோஜ் குமார்

    என்றும் பூகம்பமே! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்