in ,

அனுப்பப்படாத கடிதம் (சிறுகதை) – முனியப்பன் பாஸ்கர்

எழுத்தாளர் முனியப்பன் பாஸ்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருகிறான் சேகர். அப்பொழுது அழுக்குத் துணியுடன் பல நாட்கள் குளிக்காமல் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தில் கையில் ஒரு பேனாவுடன் கீழே கிடக்கும் காகிதங்களை ஒன்று ஒன்றாக எடுத்து அதில் ஏதோ ஒன்றை எழுதிக்கொண்டும் அதை மீண்டும் தன்னுடைய சட்டைப் பையில் வைத்துக் கொண்டும் நடந்து வருகிறார் ஒரு பெரியவர்.

அருகில் இருக்கிறவர்கள் இந்த பிச்சைக்காரர்களுக்கு வேற வேலையே இல்லை பேருந்து நிறுத்தத்தில் நின்றாலே பிச்சை எடுக்க வந்துவிடுகிறார்கள் என்கின்றனர். ஆனால் யாரிடமும் எதையும் கேட்காமல் அப்படியே கடந்து செல்கிறார் அந்த பெரியவர்.

சேகர் அந்த பெரியவரைப் உற்றுப் பார்த்துக்கொண்டிருகிறான். இவரை எங்கேயோ பார்த்ததைப்போல இருக்கிறதே என்று யோசித்துகொண்டிருக்கிறான். ஆனால் அவனுக்கு அவர் யாரென்று நினைவுக்கு வரவில்லை. அவர் அவனைக் கடந்து சில தூரம் சென்றுவிட்டார்.

சிறிது தூரம் சென்று கீழே இருந்து மீண்டும் ஒரு காகிதத்தை எடுத்து ஒரு சுவற்றில் வைத்து ஏதோ எழுதுகிறார். அதைப் பார்த்த சேகருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது அவர் அவனுக்கு பள்ளியில் கணக்கு பாடம் எடுத்த பரமசிவன் வாத்தியார் என்று.

பள்ளி வகுப்பறையில் அவர் திரும்பி நின்று தானே கணக்கை எழுதி போடுவார். அதனால்தான் என்னவோ அவர் பின்னால் திரும்பி நின்று அந்த காகிதத்தில் எழுதி கொண்டிருக்கும்போது அவனுக்கு நினைவுக்கு வந்திருக்கிறது.

உடனே ஓடிச்சென்று அய்யா! என்னை நினைவிருகிறதா… நான் தான் சேகர்.. உங்கள் மாணவன் என்கிறான். ஏன் அய்யா.. என்ன ஆயிற்று? ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள்? என்று தன்னுடைய கேள்விகளை அடுக்குகிறான் சேகர்.

ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் ஏதோ ஒன்றை எழுதி கொண்டிருகிறார். “அய்யா என்னுடன் வாருங்கள்” என்று தன்னுடைய வீட்டிற்கு கூட்டிச் சென்றான் சேகர்.

சேகரின் மனைவி  இவர் யாரென்று வினவ, “வா சொல்கிறேன்” என்று உள்ளே அழைத்துச் சென்று அவருக்கு நல்ல ஆடையை அணிவித்து உணவு அருந்த வைக்கிறான். “இவர் தான் என்னுடை கணக்கு வாத்தியார் ஏதோ பித்து பிடித்ததைப் போல சாலையில் சுற்றிக் கொண்டிருந்தார். இவருக்கும் நம்ம ஊர் மதுரை தான் சொந்த ஊர். மதுரையிலிருந்து எப்படி சென்னைக்கு வந்தார் இப்படி ஒரு நிலையில்? இவர் ஏன் இப்படி இருக்கிறார் என்று தெரிந்து இவரை உரிய இடத்தில் சேர்க்கும் வரை இவர் நம் வீட்டிலேயே இருக்கட்டும்” என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு தன்னுடைய அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறான் சேகர்.

மதுரையில் இருக்கும் தன்னுடைய நண்பனிடம் பேசி அவருக்கு அவருக்கு என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்துகொண்டு உள்ளே வந்தவுடன். சேகர் தன்னுடைய மகன் கார்த்திக்கை கூப்பிட்டு பரமசிவன் வாத்தியார் முன் நிக்கவைத்து “அப்பா ! உங்க பேரன் கணிதத்தில் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறான் என்று பாருங்கள்” என்றான்.

அவர் உடனே “எவ்ளோ கண்ணு மதிப்பெண் எடுத்திருக்க..?”‘ என்று கேட்க

“நூற்றுக்கு நூறு தாத்தா…” என்றான். இதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருக்கிறாள் சேகரின் மனைவி வளர்மதி.

வளர்மதி சேகரை தனியே அழைத்து, “என்னங்க சொல்கிறீர்கள்? நீங்கள் யாரிடம் அலைபேசியில் பேசிவிட்டு வந்தீர்கள்” என்று கேட்கிறாள்.

“என் நண்பனிடம் கேட்டபோது அவரின் மனைவி சமீபத்தில் தவறிவிட்டார் என்றும் மேலும் அவருடைய மகன் அமெரிக்காவில் குடயுரிமைப் பெற்று அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான்” என்றும் சொன்னான்.

“தனிமையில் புத்தி பேதலித்து எப்படி இங்கு வந்தோம் என்றே தெரியாமல் அதிஷ்டவசமாக நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறார். அதனால் எனக்கு பிடித்த என்னுடைய கணக்கு வாத்தியார் பரமசிவனையே என்னுடைய அப்பாவாக ஏற்றுக்கொண்டேன். மேலும் தாத்தா பாட்டி இல்லாத நம் மகனுக்கு இவரை தாத்தா என்று அறிமுகம் செய்தால் அவனும் மகிழ்ச்சி அடைவான்” என்றான்.

“உங்களுடைய இந்த முடிவு எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றாள் வளர்மதி.

பரமசிவன் எழுதி வைத்திருந்த காகிதத்தில் ஒன்று காற்றில் பறந்துவந்து சேகரின் சட்டையில் பட்டது. அதை படித்த சேகர் கண் கலங்கி நின்றான்.

அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய மகனுக்கு ஆங்கிலத்தில் எழுதிய ஒரு சிறு கடிதம் தான் அது. அந்த காகிதத்தை வாங்கி இவ்வாறு படிக்கிறாள் வளர்மதி மை டியர் சன் சேகர், ப்ளீஸ் கம் அண்ட் டேக் மீ வித் யு….

எழுத்தாளர் முனியப்பன் பாஸ்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அற்றை நாள் பொங்கல் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    ஆன முதலில் அதிகம் செலவானால் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி