in ,

ஆற்றங்கரை பிரசங்கம் (சிறுகதை) – அர்ஜுனன்.S

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

திருவரங்கம் நகரமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. சும்மாவா? வட தேசமெல்லாம் சுற்றித் திரிந்த துறவி நீண்ட வருஷங்கள் கழித்து இங்கு விஜயம் செய்திருக்கிறாரே? அவர் ஆன்மீகத்தைப் பற்றி புதியதொரு கருத்தை சொல்கிறாராம். எனவே அவரைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.

காவிரி ஆற்றங்கரை ஓரம் ஒரு குப்பத்தில் வசிப்பவன் குப்பன்.  துப்பரவு பணி செய்வது அவனது தொழில். அன்று  தன் தொழில் முடித்து திரும்பி வருகையில் பஜனை மடத்தில் நிறைய கூட்டமாக இருக்கவே, இவனும் ஒரு ஓரமாக நின்று பிரசங்கத்தை கேட்டான்.

துறவியின் உரைக்கு கூட்டத்தில் இருந்த அனைவரும் மகுடி கண்டு ஆடும் நாகமாய் கட்டுண்டு கிடந்தனர். மணிப்பிரவாள நடை. வடமொழி வார்த்தை கலப்பு இருந்தாலும், கடையனுக்கும் புரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

“அன்பர்களே.. நீங்கள் கடவுளைக் காண சொர்க்க லோகம் போக வேண்டியதில்லை.. .அவன் உங்களுக்கும் இருக்கிறான், எனக்குள்ளும் இருக்கிறான்.. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது உண்மையானால், நம் உடலின் ஒவ்வொரு அணுவுக்குள் அவன் இருக்கிறான் தானே?.. அப்படியானால் நீங்களும், நானும் கடவுள் தானே?.. இதைத்தான்‌ வடமொழியில் அத்வைதம் என்கிறோம்.. த்வைதம் என்றால் இரண்டு; அத்வைதம் என்றால் இரண்டல்ல, ஒன்று தான்.. அதுவே எங்கும் இருக்கிறது..”

நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது குப்பனுக்கு. தன் குப்பத்திற்கு வந்து அந்தப் பிரசங்கத்தைப் பற்றி தன் நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக்கொண்டு இருந்தான்.

ஆனால் அவர்களோ, “வேதப் படிப்பு படிச்சவங்க எல்லோரும் பெரிய பெரிய வார்த்தை பேசத்தான் செய்வாங்க.. நடைமுறையில் அவங்க பக்கத்தில கூட போக முடியாது..” என்றனர்.

மறுநாள் அந்த துறவியை எப்படியாவது அருகில் இருந்து பார்த்துப் பேசி நண்பர்கள் சொன்னதை பொய்யாக்க வேண்டும் என்று துடியாக துடித்தான் குப்பன். தன் குப்பத்தில் இன்னும் சில நண்பர்களை அழைத்து, அதிகாலையில் அவர் ஆற்றில் குளித்து சந்தியாவனம் செய்யும் போதே சந்தித்து விடலாம் என முடிவு செய்தனர்.

ஆனால் அவர் குளிக்கும் படித்துறை பக்கமே போக முடியாதே..? எனவே சிறிது தூரத்திற்கு முன்பே ஆற்றில் இறங்கி, நீந்தியே வந்தனர். துறவி படித்துறையில் இறங்கி வருவதற்கும் இவர்கள் போய்ச் சேர்வதற்கும் சரியாக இருந்தது.

அதில் முதலாவதாக வந்த குப்பன் அவரை வணங்கி.. “சாமீ.. கும்பிடுறேன் சாமீ..” என்றான்.

துறவி புன்முறுவலோடு அவன் தோளைத் தொட்டு, “என்னப்பா.. என்ன விஷயம்?” என்றார்.

“உங்களைப் பார்க்கத் தான் சாமீ.. இப்படி ஆற்றுக்குள் இறங்கி நீந்தியே வந்தோம்..”

“ஏன்..?  படித்துறை வழியாகவே வந்திருக்கலாமே..?”

“சாமீ.. எல்லோரும் ஒன்னு தான் நீங்க நேத்து சொன்னீங்க.. ஆனா நீங்க குளிக்கிற படித்துறை பக்கம் கூட நாங்க வரமுடியலையே..?”

“உன் பேரு என்னப்பா?..”

“குப்பன் ..சாமீ..”

“நல்லது.. அதோ அந்த நெல் நாத்து இப்போ தான் நட்டியிருக்காங்க பாரு.. அது எவ்வளவு நாள்ல அறுவடைக்கு தயாராகும்?..”

“மூணு, நாலு மாசம் ஆகும் சாமீ..”

“அதுபோலத் தான் நான் சொன்ன அத்வைத சிந்தனையும்.. இது ஒரு புதிய சிந்தனை.. எல்லோரும் ஒத்துக்கொண்டு எல்லோரையும் சமமாக நடத்தும் காலம் மெல்ல மெல்ல வந்துவிடும்.. அப்போ தெய்வத்தைத் தவிர யாரையும் சாமீன்னு கூப்பிடுறது கூட நின்று போகும்.. ” என்று புன்னகை புரிந்தார்.

ஆதவன் கீழ்வானில் உதித்து தன் வெளிச்சத்தை பரப்ப ஆரம்பித்தான்.

(முற்றும்)  

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மறைந்த உறவுகள் (சிறுகதை) – சுஶ்ரீ

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 6) – கவிஞர் இரஜகை நிலவன்