in ,

ஏன் கூடாது? (சிறுகதை) – அர்ஜுனன்.S

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தன் வயது நண்பர்களோடு தெருவில் ‘கள்ளன், போலீஸ்’ விளையாடிக் கொண்டிருந்தான் பரமு. மேலக்கோடியில் இருந்த அரச மரத்தடி பிள்ளையாரைப் பார்த்து வணங்கிவிட்டு, நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு, தெருவுக்குள் நுழைந்தார் ‘சுருக்குப் பை’ தாத்தா.

விளையாடிக் கொண்டிருந்த அத்தனை குழந்தைகளும் ‘தாத்தா, தாத்தா’ என்று கூச்சலிட்டு அவரை சூழ்ந்துகொண்டு கை நீட்ட, பரமு மட்டும் ஒதுங்கிக் கொண்டான்.

தன் இடுப்பில் இருந்த சுருக்குப் பையைத் திறந்து ஆளுக்கு ஐந்து பைசாவாக சிரித்த வண்ணம் கொடுத்தார் தாத்தா. 

அவருக்கு குழந்தைகள் மீது மிகுந்த பிரியம். எனவே எப்போதும் தன் சுருக்குப் பையில் சில்லறை காசுகள் வைத்திருப்பார். எந்த குழந்தை கைநீட்டி கேட்டாலும் தயங்காமல் கொடுப்பார். அந்த குழந்தை அவருக்கு சொந்தக்கார குழந்தையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

“நீ மட்டும் ஏன்டா அவர்கிட்ட காசு வாங்கல..? வாடா..” என்று பரமுவை இழுத்துக்கொண்டு போனான் நண்பன் சிவசு.

வீட்டுக்குத் தெரிந்தால் திட்டுவார்கள் என்றாலும், ‘இப்போது இவரிடம் காசு வாங்கும் எல்லோரும் அடுத்து அதை வைத்து ஒரு குச்சி ஐஸ் அல்லது கமர்கட் வாங்கப் போகிறார்கள், நாம் ஏன் தவற வேண்டும்?’ என்று மனசாட்சி கேள்வி கேட்க, தாத்தா முன்பு சென்று தானும் கையை நீட்டினான்.

“நீ யாரு..? புதுசா தெரியுதே..?” என்றார்.

“நான்.. பலசரக்கு கடை ராமர் பையன்..” என்று திக்கித் திணறி சொன்னான் பரமு.

“ஓ.. அப்படியா..? நல்லா இரு..” என்று வாழ்த்தி, அவனுக்கும் ஐந்து காசு கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

‘கடைக்கு போய் அப்பாவிடம் சொல்லி விடுவாரோ? நாமே அம்மாவிடம் சொல்லிவிட்டால் என்ன?’ என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடைபெற்றது.

***

“அம்மா..” என்று கத்திக்கொண்டே  வீட்டுக்குள் நுழைந்த பரமு, அடுத்த வார்த்தை பேசாமல் மென்று விழுங்கினான்.

“டேய் நில்லுடா..” அதட்டினார் பரமுவின் அம்மா.

‘நாம் சொல்லாமலே அதற்குள்ளாகவா அம்மாவுக்குத் தெரிந்திருக்கும்?’ என்ற நினைப்போடு அவன் நிற்க..

“நாக்கை நீட்டு..” என அடுத்த கட்டளை வந்தது.

நாக்கை நீட்டிய பிறகுதான் குச்சி ஐஸில் இருந்த பச்சைக் கலர் கொஞ்சம் இன்னும் நாக்கில் ஒட்டியிருந்தது, அவனுக்கே உறைத்தது.

“நாக்கில என்ன பச்சை கலரு..?”

“குச்சி ஐஸ்.. வாங்கித் தின்னேன்..”

“உனக்கேது காசு..?”

“சுருக்குப் பை தாத்தாகிட்ட எல்லா சேக்காளிங்களும் வாங்கினாங்க.. நானும் வாங்கினேன்..” பொய் சொன்னால் அம்மா புளிய விளாறால் வெளுத்து விடுவாள் என்று தெரியும்.

“அவர்கிட்ட காசு வாங்கக் கூடாதுனு ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல..?”

“நான் மட்டும்.. ஏன்.. வாங்கக் கூடாது..?” தயங்கி தயங்கி கேட்டான்.

“வசதி இல்லாத பசங்களுக்கு தின்பண்டம் வாங்கித் திங்க அவரு காசு தர்றாரு.. நமக்குத் தான் வசதி இருக்குல.. என்கிட்டயோ, அப்பாகிட்டயோ வாங்கிக்க.. அடுத்தவங்களுக்கு சேர வேண்டிய பணத்தை நாம வாங்கி அனுபவிக்கிறதும் பாவம்தான்..” நிதானமாக சொன்னாள் அம்மா.

சந்தேக மேகம் அகல, பரமுவின் அறிவுச் சந்திரன் தெளிவு பெற்றது.

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீபாவளி (கவிதை) – ராஜேஸ்வரி

    சொல்லற்க பயனிலாச் சொல் (சிறுகதை) – பவானி உமாசங்கர்