இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சலந்தாரியும் சங்கப்பதுமனும் கொல்லிமலையில் நடந்த விஷயங்களை ஆர்வத்துடன் செவிமடுக்க தூமவதியும் தொடர்ந்து கூறினாள்.
அம்மா அந்த பல்லி இருக்குமிடம் உங்களுக்கு தெரியுமா? என்ற சங்கபதுமனின் கேள்விக்கு சிரித்துக் கொண்டே “நேரம் உனக்கு பதில் சொல்லும்” என்றவள் பேச தொடர்ந்தாள்.
“ராட்சத பல்லியினால் நானும் என் தாத்தாவும் நாங்கள் வந்த காரியத்தை மறந்து விட்டோம். பிறகு தான் எனக்கு சித்தரின் நினைவு வந்தது. அப்போது வேப்ப மரத்தடியில் இருந்தப் பாறையை பார்த்தேன். அங்கு கருநாகமும் இல்லை கீரிப்பிள்ளையும் இல்லை, ஆனால் அவ்விடத்தில் ஏதோ தெய்வ சக்தி இருப்பதை உணர்ந்த என் தாத்தா அதன் அருகே செல்ல ஆரம்பித்தார். நானும் அவரை தொடர்ந்தேன்.
தேவ மரத்தை நெருங்க நெருங்க மல்லி, முல்லை, மகிழம் போன்ற வாசனையான மலர்களின் நறுமணம் மூக்கு தொலைத்து மனதை இதமாக்கியது. பாறையின் அருகில் சென்று நின்றதும் என் மனம் ஒருநிலைப்பட்டது, வேறு எந்த எண்ணமும் தோன்றாமல் ஒரே சிந்தனையாக மனம் சித்தரை நினைத்தது.
திடீரென கண்களை கூசும் அளவிற்கு மின்னல் வெளிச்சத்துடன் ஒரு உருவம் தோன்றியது. அது அந்த சித்தரே தான். பஞ்சாட்சர மந்திரத்தை ஒலித்தபடியே எங்கள் முன் பிரசன்னம் ஆகினார். அவரை நானும் என் தாத்தாவும் வணங்கி நின்றோம்.
எங்களை ஆசீர்வதித்த அவர் ஏன் இங்கு வந்தீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும் என்றார். என் தாத்தாவும் சித்தரை பார்த்த பக்தி மயக்கத்தில் பேச வாய் வராது பரவசத்தில் நின்றிருந்தார். அதனால் நான் சித்திரிடம் பேச ஆரம்பித்தேன்”
“சாமி கலையில் நீங்கள் என்னை பார்த்து வித்யா காத்திருக்கிறாள், கரம் கொடுக்க நான் இருக்கிறேன்” என்றீர்களே அதற்கு விளக்கம் என்ன? இது மட்டும் அல்ல, அதே வாசகம் சற்று முன் நாங்கள் கோவிலில் இருக்கும் போது கூட கேட்டது. அதை பற்றி சொல்லுங்கள்.
புன்முறுவலுடன் சொல்ல ஆரம்பித்தார் சித்தர்.
“இந்த உலகுக்கே படி அளக்கும் பரமசிவனின் இடபாகத்தில் அமர்ந்தவள் அன்னை பராசக்தி. அவளுக்கு ஈடுஇணை இவ்வுலகில் எவரும் இல்லை அவளின் ஆற்றல் பெருங்கடலையும் தாண்டி நிற்க கூடியது. அவளின் 18 வடிவங்களில் ஒரு வடிவம் தான் வித்யா. அவளை உபாசனை செய்து, மந்திரங்களால் உருவேற்றி சித்தியாக்கினால் இவ்வுலகில் வெல்ல முடியாத காரியம் என்று ஒன்றுமில்லை. அட்டமா சித்திகள் கைகூடும், அன்னையின் தரிசனம் கைகூடும், அவள் உதவியுடன் நமக்கு வேண்டிய காரியத்தை சாதிக்கலாம். ஆனால், வித்யா உபாசனை என்பது அவ்வளவு எளிதல்ல ஒரு மண்டலத்திற்கு 48 நாட்கள் வீதம் 3 மண்டலம் பூஜை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் சோதனை மேல் சோதனை வரும் அதனை கடந்தால் அன்னையின் அளப்பறியாத பேராற்றல் நமக்கு கிடைக்கும்” என்றார்.
சிரித்து கொண்டே என்னைப் பார்த்த சித்தர் “நீ முன் ஜென்மம் செய்த நல்வினைப் பயனாக இந்த ஜென்மத்தில் நீ வித்தியாவை உபாசனை செய்வாயாக! நானே உனக்கு குருவாக இருந்து தீட்சை வழங்குகிறேன்” என்றார்.
அன்னையின் பேரருள் இவ்வளவு எளிமையாக கிடைத்து விட்டதே என்ற மகிழ்ச்சியில் இருந்த நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன். ஆனால் என் தாத்தா முகத்தில் அவ்வளவாக மகிழ்ச்சி தென்படவில்லை.
“சாமி என்ன விட்டா இவளுக்கு வேறு யாருமில்லை, காலகாலத்துக்கு இவளுக்கு கல்யாணம் செய்து வைக்கணும். இந்த பூஜை செய்வதால் கல்யாணத்தில் ஏதாவது தடை வருமா?” என்று சித்தரிடம் வினவினார் தாத்தா.
“இவள் ஜெனித்த ஜாதகத்தின்படியும், காலபுருஷ தத்துவத்தின் படியும் திருமணத்திற்குப் பிறகு பல சோதனைகளை இவள் தாண்ட வேண்டியிருக்கும். அதனால் திருமணம் ஆகுவதற்கு முன்னே இவள் வித்யாவை உபாசனை செய்தால்தான் இவளுக்கு வரக்கூடிய சோதனைகளை இவளால் மீள முடியும். வித்யா உபாசனை செய்வதால் திருமணத்திற்கு ஏதும் தடை இல்லை” என்றவர், எனக்கு அன்னையின் மந்திர உபதேசம் செய்தார்.
“திருமணம் விரைவில் நடைபெறும்” என்று ஆசிர்வதித்து “உன் கழுத்தில் மாங்கல்யம் ஏறும் வேளையில் உனக்கு வித்யா சித்தியாகி இருப்பாள்” என்று வாழ்த்தி அங்கிருந்து மறைந்தார். நானும் என் தாத்தாவும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம்.
அன்று முதல், நேரம் தவறாது காலையும், மாலையும் நியம நிஷ்டையுடன் தவறாது மந்திர ஜபம் செய்து வந்தேன். நான் செய்யும் வித்யா உபாசனை பூஜையில் இரண்டு மண்டலங்களை வெற்றிகரமாக முடித்தேன். மூன்றாவது மண்டல பூஜை தொடங்கும் பொழுது தான் எனக்கு தடங்கல்கள் ஒவ்வொன்றாக ஏற்பட்டது. அதுவும் அந்த கொடூரன் கருடகொடியோன் மூலம் தான் வந்தது.
நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் குடி வந்தான். கருடகொடியோன் வந்த புதியதில் பார்ப்பதற்கு நல்லவனாகவும் பண்பு நிறைந்தவனாகவும் தெரிந்தான். அதனால் என் தாத்தாவும் அவனிடம் நல்ல நட்பாக பழகினர். அந்த நேரத்தில் தான் என் தாத்தாவின் மனதில் ஒரு ஆசை பிறந்தது. இவ்வளவு பண்பான குணம் கொண்ட கருடகொடியோனுக்கு என்னை மணம் முடித்து வைப்பதே அவர் விருப்பம்.
என் தாத்தாவின் பேச்சுக்கு மறு பேச்சு என்னிடம் கிடையாது. அதனால், நான் மூன்றாம் மண்டல பூஜை முடிந்த பிறகு வித்யா எனக்கு சித்தியானதும் திருமணத்திற்கு ஒப்பு கொண்டேன். அவன் என்னை பார்ப்பதற்காகவே அடிக்கடி வீட்டிற்கு வந்தான். என்னிடம் பேசுவான் எனக்கும் அவன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. வித்யாவை உபாசனை செய்யும் பொழுது இது போன்ற ஆசைகள் மனதில் ஏற்படுவது தவறு என்று என் உள்ளுணர்வு சொல்ல அவரிடம் நான் பேசுவதை குறைத்து கொண்டேன்.
அவர் என்னிடம் பேச அருகில் வரும்போதெல்லாம் பூஜை இருக்கிறது விரதம் இருக்கிறது என்று சொல்லி பூஜை அறைக்குள் சென்று விடுவேன். இருப்பினும், பூஜை அறைக்குள்ளும் வந்து பேசுவான். இவனால் பூஜைகள் தடைபடுமோ என்ற அச்சம் என் மனதில் அவ்வப்போது ஏற்படும். அடிக்கடி உடல்நிலையும் குறைவும் ஏற்படும் இருப்பினும், அன்னையின் பேரருளால் தடங்கல்கள் பல தாண்டி மூன்று மண்டல பூஜையும் செய்து முடித்தேன்.
பூஜையின் இறுதி நாள் அன்னை. எனக்கு கனவில் காட்சி கொடுத்தாள். “மந்திரம் சித்தித்தது! மகாசக்தியும் மகிழ்ந்தேன்! உன் மார்கத்தை மாற்று! மாங்கல்யம் நிலைக்க வழிசெய்வேன்!” என்று கூறி மறைந்ததும் கனவு கலைந்தது.
கனவு குறித்து என் தாத்தாவிடம் சொன்னதும் இதை பற்றி சித்தரிடமே கேட்கலாம் என்று அவர் என்னை கொல்லிமலை காளி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். இந்த மூன்று மண்டல பூஜையின் போது பல நாட்கள் அவரை தேடி காளி கோவிலுக்கு சென்றோம். ஆனால் எங்கும் அவர் தென்படவில்லை. கொல்லிமலையில் இப்போது இருப்பாரா? இல்லையா? என்ற சந்தேகத்துடனே நானும் தாத்தாவும் சென்றோம்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings