எழுதுங்கள் எழுதுங்கள் கவிதை யொன்றை
எவருக்கோ என்றோநல் பயனை நல்கும்
அழுகின்ற ஒருவர்தம் கண்து டைத்தே
அக்கவிதை ஆதரவாய் அணைக்க லாமே !
விழுந்திட்ட ஒருவர்தம் மனத்தைத் தேற்றி
வீறுகொண்டு எழுவதற்குத் தூண்ட லாமே
பழுத்தயிலை போல்துயரில் விழுந்த வர்க்குப்
பசுந்துளிராய் நம்பிக்கை ஊட்ட லாமே !
தோல்வியிலே துவண்டவனின் தோளைத் தட்டித்
தொடர்வெற்றி வருமென்று சொல்ல லாமே
கால்நடுங்கி அச்சத்தில் அமர்ந்தோர் நெஞ்சுள்
கால்தூக்கும் துணிவுதனை எற்ற லாமே !
கோல்பிடித்து நடக்கின்ற முதிய வர்க்குக்
கோல்போல உறுதுணையாய் அமைய லாமே
நாள்கொல்லும் தனிமையிலே தவிப்ப வர்க்கு
நறவுபோல பேச்சுதுணை யாக லாமே !
அன்பில்லார் நெஞ்சுள்ளும் மனித நேய
அருங்கருணை பிறக்கவைக்க முளைய லாமே
கன்னல்சொல் விடுத்துவேம்பாய்ப் பேசு வோரைக்
கனியவைக்கும் மந்திரச்சொல் லாக லாமே !
அன்புகாட்டி மறுத்திட்ட காதல் நோயின்
அன்பர்க்கு மருந்தாக அமைய லாமே
நன்றாக எழுதுங்கள் கவிதை யொன்றை
நாட்டோர்க்கு நலம்பயக்கும் கவிதை யொன்றை !
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings