எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“விஜி…. அம்மாவின் தீனமான குரல், சமையல் அறையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த விஜியின் காதில் விழுந்தது”.
“அம்மா பாத்ரூம் போகணுமா இதோ வந்துட்டேன் என்ற விஜி ,”நித்யா இந்த மிச்ச பாத்திரங்களை கொஞ்சம் கழுவி வைச்சுடுமா “என மகளுக்கு ஆணை பிறப்பித்தபடி தன் அம்மாவை கவனிக்க விரைந்தாள்.
அதற்குள் வாக்கரைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்த லக்ஷ்மி அங்கேயே சிறுநீர் கழித்து விட்டார்.
“அச்சச்சோ என்னம்மா அவசரமா வந்துடுச்சா, கொஞ்சம் முன்னாலேயே கூப்பிடலாம் இல்ல” என்றாள் விஜி ஆதங்கத்துடன்.
லக்ஷ்மி தன் தலையில் அடித்துக் கொண்டார்.”உனக்கு ரொம்ப துன்பம் கொடுக்கிறேன் விஜி “என்று அரற்றிய லக்ஷ்மியின் கைகளைப் பிடித்தபடி “ஒண்ணுமில்ல நான் கிளீன் செய்துக்கறேன் விடு,நீ மெல்ல பாத்ரூம் வாம்மா” என லக்ஷ்மியை அழைத்துச் சென்றாள் விஜி.
அறை வாசலில் எட்டிப் பார்த்த விஜியின் கணவன் பார்த்திபன் முகத்தில் அசூசை படர்ந்தது.முகம் கடுகடு வென கோபத்தில் கனன்றது.
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்க வரும் முன் அம்மாவின் அருகில் சென்று பார்த்த விஜி அவள் கண்ணயர்ந்திருப்பதைக் கண்டு தன் படுக்கையில் வந்து அமர்ந்தாள்.
“விஜி “என்று கணவன் அழைப்பதைக் கேட்டு மகளும் பார்த்திபனும் உறங்கும் அறைக்குச் சென்றாள் விஜி ..”என்ன “என்பது போல் கணவனைப் பார்த்தவளிடம் “நீ ஏன் இப்படி கஷ்டப்படறே விஜி ,ஆள் போட்டாலும் உனக்கு பிடிக்க மாட்டேங்குது பிடிவாதமா நான்தான் செய்வேன்னு இருக்க, உன் அண்ணனுங்க சொற்ப பணத்தை அனுப்பிச்சிட்டு அவனுங்களுக்கு எதுவும் சம்பந்தமில்லாத மாதிரி இருக்கானுங்க” எனப் பொரிந்தான் பார்த்திபன்.
“அவங்க இரண்டு பேரும் அம்மாவை புட்பால் மாதிரி இங்க இரண்டு மாசம் அங்க இரண்டு மாசம்ன்னு உதைச்சுத் தள்ளினதுனால இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றாள் விஜி வருத்தத்துடன்.
“அதுக்கு நான்தான் பிணையா ? எங்க வீட்டு ஆளுங்க ஏசறாங்க, தடி தடியா இரண்டு பசங்கள வைச்சுக்கிட்டு இந்த அம்மா மாப்பிள்ளை வீட்டில் வந்து உட்கார்ந்திருக்குது பாருன்னு” என்ற பார்த்திபனை உறுத்துப் பார்த்தாள் விஜி.
“இந்த அம்மான்னு சொல்றீங்க இப்போ , ஆனா இவங்க தான் நம்ம நித்யாவை ஒரு ஆளாக்கினாங்க . நீங்க ஆக்ஸிடென்ட் ஆகி படுத்த போது எல்லா வேலையையும் தன் தலையில் போட்டுகிட்டு என்னையும் தேற்றினாங்க. நமக்கு நன்றி கொஞ்சமாவது இருக்கணுங்க” என்றவள் “இதுக்கு மேல பேசினா நம்ம இரண்டு பேருக்கும் சண்டையாகும். நான் போய் படுக்கறேன்” என்று நகர்ந்த விஜி தன் படுக்கையில் வந்து சாய்ந்தாள்.
“இவ திருந்த மாட்டா” என முணுமுணுத்தபடி பார்த்திபனும் படுத்தான். மாமியாருக்கு உடம்பு சுகமில்லாமல் போனதிலிருந்து கடந்த மூன்று மாதங்களாக விஜி அவள் அம்மா படுத்திருக்கும் அறையில் தான் படுக்கிறாள். அதனால் இரவில் பார்த்திபனுக்கு மனைவியின் அண்மை கிடைக்காததும் அவன் கோபத்துக்கு ஒரு காரணம்.
விஜிக்கு தூக்கம் வரவில்லை. துக்கத்தில் மனம் பொங்கி கண்கள் கரித்தன. அவள் பெற்றோருடன் தெக்கலூர் கிராமத்தில் இருந்தவரை அவள் வாழ்க்கை தெளிந்த நீரோடை போலிருந்து. விஜியின் பெற்றோருக்கு இரு ஆண் பிள்ளைகளுக்குப் பிறகு பல வருடங்கள் கழித்துப் பிறந்த விஜி கடைக் குட்டியாக அந்த வீட்டில் இளவரசி போல் இருந்தாள்.
எல்லாம் அவள் அண்ணன்களின் திருமணம் வரை தான். அதன் பின் அந்த வீட்டில் அனைத்தும் அவள் அண்ணிகளின் எண்ணப்படி தான் நடந்தேறியது. குடும்ப அமைதிக்காக விஜியின் பெற்றோரும் விட்டுக் கொடுத்தனர். அவள் சகோதரர்கள் இருவரும் அரசு வேலை பார்ப்பதால் அவளை கோவை நகராட்சியில் வேலை பார்க்கும் பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அதுவும் பார்த்திபன் விஜியின் சின்ன அண்ணிக்கு உறவினன். விஜியின் அண்ணிகள் இருவருக்கும் பிறந்த வீட்டில் சீராடவும் அவர்கள் வீட்டு மனிதர்களை கொண்டாடவும் தான் பிரியம். அதற்கு கணவன்மாரும் ஒத்துப் போனதால் அவர்கள் கிராமத்துக்கு வருவது அத்தி பூப்பது போல் தான்.
விஜிக்கு திருமணம் ஆகும் வரை அவள் பெற்றோர் கிராமத்தை விட்டு யார் வீட்டிலும் வந்து தங்கியதில்லை. அவள் தந்தைக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் இருந்ததால் விவசாய வேலைகள் காரணமாக அவர்கள் தன் மகன்கள் வீட்டில் கூட தங்கியது கிடையாது.
விஜிக்கு கிராமத்தில் முதல் பிரசவம் சிக்கலாகி குழந்தை இறந்து போனதால் இரண்டாம் முறை நித்யாவை உண்டான போது பார்த்திபன் கோவையில் தன் வீட்டில் தான் பிரசவத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என கண்டிப்பாக கூறி விட்டான். ஆனால் பார்த்திபனின் பெற்றோர் அவன் அக்கா திருமணத்தை நடத்தியதும் கடமை முடிந்தது போல் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டனர்.
அதனால் விஜியின் அம்மா லக்ஷ்மி தான் விஜி இரண்டாவதாக உண்டானதிலிருந்தே அவள் வீட்டுக்கு வந்து அவளை கவனித்துக் கொண்டார். நித்யா குறை மாதக் குழந்தையாக ஏழு மாதத்திலேயே பிறந்து விட்டதால் கண்ணுக்கு கண்ணாய் பார்த்த லக்ஷ்மியின் கை பக்குவத்தில் தான் நித்யா வளர்ந்ததே. விஜியின் அப்பா குமரேசன் தான் கிராமத்திற்கும் டவுனுக்குமாய் அல்லாடிக் கொண்டிருந்தார்.
ஆனால் அண்ணிகள் இருவரும் எப்போது விஜியிடம் பேசினாலும் , “அத்தையும் மாமாவும் எப்போதும் உன்னைத்தான் கவனிக்கறாங்க. சென்னைக்கோ ,திருப்பூருக்கோ வரவே மாட்டேங்கறாங்க” என்று சலித்துக் கொள்வார்கள்.
விஜியும் அவர்களிடம் , “என்ன செய்யலாம் அண்ணி அப்பாவுக்கு விவசாய வேலை இருக்குதுல்ல ” என்று கூறி சமாளிப்பாள். ஆனால் விஜிக்குத் தெரியும் உண்மை நிலவரம். அங்கு போனால் அவள் பெற்றோருக்கு சரியான வரவேற்புக் கிடைக்காது என்று. ஆனால் அவர்களிடம் வெளிப்படையாக கூற முடியாது.
அதனால் “நீங்க கூப்பிடுங்க அண்ணி அப்பாவும் அம்மாவும் வருவாங்க” என்பாள்.
“எங்க விஜி, நீ ஒரு புள்ளைதான் அவங்களுக்குங்கற மாதிரி இல்ல இருக்காங்க அத்தையும் மாமாவும். எப்போ போன் போட்டாலும் அத்தை கோயம்புத்தூரில இருக்காங்கன்னு தான் சொல்றார் மாமா” என்று குற்றம் சொல்வர் அண்ணிகள் இருவரும்.
அவர்கள் சொல்வதற்கு ஏற்றார் போல் நித்யா ஐந்து வயது குழந்தையாய் இருந்த போது டூவீலரில் சென்ற பார்த்திபனை லாரி இடித்துத் தள்ளியதில் பிழைப்பது கஷ்டம் என்ற நிலையில் தான் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருந்தனர். அப்போது லக்ஷ்மியும் முருகேசனும் தான் மகளைத் தேற்றி மருமகன் நல்லபடியாக பிழைத்து வர அனைத்து உதவிகளையும் செய்தனர்.
லக்ஷ்மி மருமகனை தன் மகன் போல் கவனித்துக் கொண்டார். அவர்கள் மூவரின் மனநலம், உடல்நலம் பேணி ஒரு தாய் போல் கவனித்துக் கொண்டார் லக்ஷ்மி.
விஜி கூட அவள் தந்தை முருகேசனிடம், “அப்பா நீங்க என்னை மட்டும் பார்க்கற மாதிரியே சூழ்நிலை அமையுது “எனப் புலம்புவாள்.
“அதெல்லாம் இல்லை கண்ணு இது எங்க கடமை, யாருக்கா இருந்தாலும் நாங்க செய்வோம் “என்று அவளைத் தேற்றுவார் முருகேசன்.
அந்த நன்றி கொஞ்சமாவது இருக்கா இவருக்கு என நினைத்தவளுக்கு அடி வயிற்றிலிருந்து கேவல் வந்தது. விஜி பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டாள் .
இரண்டு வருடங்களுக்கு முன் குமரேசன் இறந்த பின் லக்ஷ்மி சென்னையில் தன் பெரிய மகன் வீட்டில் தான் இருந்தார்.அங்கு மருமகளோ பேரக் குழந்தைகளோ லக்ஷ்மியுடன் பேசக் கூட மாட்டார்கள் .லக்ஷ்மியாக ஏதாவது வேலை செய்யப் போனாலும் அதெல்லாம் ஒண்ணும் செய்ய வேண்டாம் என்று தடுத்து விடுவர். அங்குள்ள மேஜை நாற்காலி போல் ஒரு ஜடப்பொருளாகக் தான் இருந்தார் லக்ஷ்மி.
சின்ன மகன் வீட்டில் இதை விட மோசம் . லக்ஷ்மியை ஒரு ரூமில் அழையாத விருந்தாளி போல் அடைத்திருந்தனர். இது தெரிந்து பொறுக்க மாட்டாமல் விஜி ஆறு மாதங்கள் முன்பு லக்ஷ்மியை தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாள்.
விஜியின் மனம் ரணமாய் வலித்தது.இது ஆணாதிக்க உலகம் தான்.ஆணுக்கு இருக்கும் உரிமை இங்கு பெண்ணுக்கு இல்லை . அம்மாவை தன் வீட்டில் வைத்துப் பராமரிக்க கணவன் அனுமதி கொடுக்க வேண்டும்.ஆஸ்தியை மூன்று பங்காக்கி தந்த போது ஆசையாய் எங்க மாமா, எங்க அத்தைன்னு சொன்ன வாய்தான் இப்போ இந்த அம்மான்னு சொல்லுது.
நினைக்க நினைக்க ஆறவில்லை விஜிக்கு. லக்ஷ்மி விஜி வீட்டுக்கு வந்த இரண்டொரு மாதத்தில் அவருக்கு தீடீரென கால் நடக்க முடியாமல் போனது. டாக்டரிடம் காண்பித்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பயனில்லை. அறுபத்து ஐந்து வயதில் எத்தனை பேர் நல்லாயிருக்காங்க அம்மாவுக்கு மட்டும் ஏன் இப்படி கால் நடக்க முடியாம போகணும் .
விஜி தன் அம்மாவை நினைத்து மறுகினாள்,கடவுளே அம்மா உடம்பை சீக்கிரம் குணமாக்கு, இல்லைன்னா இந்த கஷ்டத்திலிருந்து அவளை விடுவிக்கவாவது செய் என வேண்டிக் கொண்டாள் ஆற்றமாட்டாமல்.
இரண்டு நாட்கள் வீடு மனப்பொறுமலுடனே இருந்தது. அன்று ஆபிஸிலிருந்து வந்த பார்த்திபன் ,”விஜி “என அழைத்தபடி அவளருகில் வந்து “நான் ஒரு யோசனை சொல்றேன் கோவிக்காம கேளு” என்றான்.
“அம்மாவைப் பற்றியா” எனக் கேட்டவளை அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்தான்.
“பொறுமையாக் கேளு விஜி இங்க என் கொலீக் ஒருத்தருக்கு தெரிஞ்ச ஒரு நல்ல ஓல்டு ஏஜ் ஹோம் இருக்குது நீயும் மூணு மாசமா ரொம்ப கஷ்டப்படற” என்றவனை மறுத்து “எங்க அம்மாவைப் பார்க்க எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லைங்க” என்றாள் விஜி வருத்தத்துடன்.
“விஜி நீ யதார்த்தத்தைப் பாரு, அக்கா இப்பதான் போன் செய்தாங்க. பிள்ளைங்க லீவுக்கு இங்க வரலாம்ன்னு பார்த்தா, அத்தை உடம்பு சுகமில்லாம இருக்காங்க நாங்க வேற வந்து எதுக்கு தொல்லைங்கறாங்க” என்ற பார்த்திபனிடம்
“நாமெல்லாம் இப்படியேவா இருப்போம் நமக்கும் வயசாகுங்க வயசான இது போல சிரமம் வருங்க நான் ஒரே மகளாயிருந்தா நீங்க இப்படித்தான் பேசுவீங்களா” என்றாள் விஜி ஆதங்கத்துடன்.
“இந்த வியாக்கியானமெல்லாம் பேசாத. நான் உன் அண்ணங்களோட பேசிட்டேன். அவங்களும் சம்மதம்ன்னு சொல்லிட்டாங்க நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை, நானும் நீயும் அந்த ஹோமுக்கு போய் பார்த்துட்டு வரலாம் .நல்லா இருந்தா அடுத்த வாரத்தில் உங்க அம்மாவை அங்க சேர்த்து விடலாம்” என முடித்துக் கொண்டான் பார்த்திபன்.
மறுநாள் இருவரும் இடிகரை என்ற இடத்தில் இருந்த அந்த ஹோமுக்கு காலை பத்து மணிக்குச் சென்றனர். அப்போது பிரார்த்தனை கூட்டம் நடப்பதால் அங்கிருந்த உதவியாளர் அவர்களை காத்திருக்கும்படி கூறினார்.
இருவரும் அந்த இடத்தை கண்களால் அளந்தனர் விசாலமான இடத்தில் சின்ன சின்ன காட்டேஜ்கள் கட்டப்பட்டிருந்தன. நல்ல காற்றோட்ட மாக செடி கொடிகளுடன் இருந்தது அந்த இடம்.எங்கும் சுத்தம் பராமரிக்கப்பட்டு இருந்தது.விஜிக்கு சற்று மனம் ஆறுதலாகியது.
சற்று நேரத்தில் நிர்வாகி வந்து விட்டதாக உதவியாளர் அவர்களிடம் கூறியதும் இருவரும் அந்த அலுவலக அறையினுள் நுழைந்தனர். சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்ற நிர்வாகிக்கு பார்த்திபன் வயது தான் இருக்கும்.
பார்த்திபனை உற்றுப் பார்த்த நிர்வாகி “ஏய் நீ பார்த்திபன் தானே “என அவனை நன்கு அறிந்தவர் போல் கேட்டார்.
பார்த்திபனும் “நீ .. நீங்க சங்கரநாராயணன் தானே” என்றான்.
“நானேதான் கண்டு பிடிச்சுட்டயே” என்றவர் விஜியிடம் “நாங்க இரண்டு பேரும் ஸ்கூல் மேட்ஸ்மா” என்றார் உற்சாகமாக.
சற்று நேரம் இருவரும் பழைய பள்ளிக் கதைகளைப் பேசினர். அதன்பின் பார்த்திபன் நிர்வாகியிடம் “சங்கர் நீ யு.எஸ்ல இருக்கறதா கேள்விப்பட்டேன். எப்ப இந்தியா வந்தே ,அதுவும் இப்படி ஒரு ஓல்டு ஏஜ் ஹோம் நிர்வாகியா நான் எதிரே பார்க்கவில்லை” என ஆச்சர்யத்துடன் கூறினான்.
“என்ன செய்வது, சில எதிர்பாராத நிகழ்வுகள் நம் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது” என்றான் சங்கரன் ஒரு பெருமூச்சுடன்.
“உன் அம்மா அப்பா எப்படி இருக்காங்க” என பார்த்திபன் கேட்டதும் சங்கரனின் கண்களில் கண்ணீர் தளும்பியது.
அதை அடக்கியபடி “உன்னிடம் சொல்வதற்கென்ன பார்த்தி, ஒரே மகனான என்னை அருமை பெருமையாக வளர்த்து ஆளாக்கிய என் பெற்றோரை உதாசீனப்படுத்திவிட்டு பணத்தின் பின்னே ஓடினேன். அமெரிக்காவில் பெரிய கம்பெனியில் வேலை பார்த்த நான் இந்தியா வந்து என் பெற்றோரை கவனிக்கவே இல்லை. அவர்களின் உணர்வுகளை மதிக்கவும் இல்லை. என் அம்மாவின் இறப்புக்குக் கூட என் மனைவி வற்புறுத்தியதால் தான் இந்தியா வந்தோம். அம்மா இறக்கும் தருவாயில் என் பெயரையே சொல்லிக் கொண்டு இருந்தார் என என் அப்பா கூறிய போது கூட எனக்கு உறைக்கவில்லை. அடுத்த பத்து நாட்களில் என் அப்பாவும் இந்த உலகை விட்டு மறைந்தார். அவர்களுக்கு பணம் அனுப்பினால் போதும் என நான் நினைத்தேன். ஆனால் அவர்கள் என் அன்பையும் பாசத்தையுமே எதிர்பார்த்து நான் அனுப்பிய பணத்தை தொடாமல் என் அக்கெளண்டிலேயே போட்டு வைத்திருந்தார் என் அப்பா.
பாசமான பெற்றோரை அலட்சியப்படுத்தியதற்கு எனக்கு வாழ்க்கையில் நல்ல அடி விழுந்தது. அன்பான மனைவி, அழகான இரு பிள்ளைகள், பெரிய பங்களா என ஆரவாரமாக இருந்த என் வாழ்க்கை ஒரேநாளில் தலைகீழாக மாறிவிட்டது.
என் மனைவி பிள்ளைகள் மூவரும் டூர் போன இடத்தில் ஒரு ஆக்ஸிடென்டில் இறந்து போயிட்டாங்க.மூவரையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்த நான் அன்று தான் உறவுகளின் மகத்துவத்தை தெரிந்து கொண்டேன். என் பெற்றோரின் பாசம் அன்பு எல்லாம் எனக்கு புரிந்தது.
மனிதனுக்கு பணத்தை விட உறவுகளின் உணர்வும் , அன்புப் பரிமாற்றமுமே முக்கியம் என அறிந்து கொண்டேன். எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை ஒன்று உண்டு என்பார்கள். அதனால் நான் செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை என்றே அதை எண்ணினேன்.
என் குடும்பத்தாரின் மறைவுக்குப் பிறகு யு.எஸ்ஸில் இருக்க பிடிக்காமல் இங்கு வந்து விட்டேன். மனஅமைதிக்காக ஏதாவது செய்ய யோசித்த போது என் பெற்றோரை கவனிக்காமல் இருந்ததற்கு பரிகாரமாக என்னைப் போன்ற பிள்ளைகளால் கை விடப்படும் பெற்றோரை கவனிப்பதே நல்லது என இந்த இல்லத்தை ஆரம்பித்தேன்” என வருத்தம் தோய்ந்த குரலில் முடித்தான் சங்கரன்.
சங்கரனின் கதையை கேட்டு பார்த்திபன் அவன் கைகளை ஆறுதலாகப் பற்றி கொண்டான். விஜிக்கும் கண்கள் கலங்கியது. சற்று நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்த சங்கரன் “ஆமா பார்த்தி, நீ எதுக்கு இங்க வந்திருக்க, யாரையும் பார்க்கணுமா” என்று வினவினான்.
பார்த்திபன் அவசரமாக “இல்லை அடுத்த வாரம் என் மகளுக்கு பிறந்தநாள் வருகிறது. அதற்கு இங்கிருப்பவர்களுக்கு ஒரு நேரம் உணவளிக்கலாம் என நாங்கள் விரும்புகிறோம்” என்றான் விஜியைப் பார்த்து புன்னகைத்தபடி.
விஜிக்குப் புரிந்தது. பரிகாரம் சங்கரன் மட்டும் செய்யவில்லை பார்த்திபனும் தன் அன்னைக்கு அவர்கள் வீட்டில் இடமளித்து அவள் அன்பில் மனம் நிறைகிறார் எனத் தெரிந்து விஜியும் புன்னகைத்தாள்.
எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings