எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சிவபாலன் தன்னையே நொந்து கொண்டான். எதற்காக வந்தோம் என்று புரியாமல் அங்கே உட்கார்ந்திருப்பது சங்கடமாக இருந்தது.
இத்தனைக்கும் அது வேறு யார் வீடும் இல்லை, அவன் மனைவி மாதவியுடைய பெற்றோர் வீடுதான். கடந்த பத்து நாட்களாக அவனுக்கும் மாதவிக்கும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. எதற்காகவோ கோபித்துக் கொண்டு வந்தவளை கூப்பிட்டுப் போக அவனும் பல முறை வந்து விட்டான் .அவள் வருவதாகவும் இல்லை. அவனுடன் பேசுவதாகவும் இல்லை.
திருமணமாகி ஒரு வருடத்துக்குள் இது மாதிரி எத்தனையோ முறை. கொஞ்சம் அனுசரித்துப் போனால் ஒரேயடியாக கீழே விழத் தட்டிவிடுவார்கள் என்பதை அவன் புரிந்து கொள்ளவே நிறைய நாட்கள் ஆயிற்று. அதற்குள் திருமண வாழ்க்கை அவனை என்ன என்று குசலம் விசாரித்து ஒரு வழியாக்கிவிட்டது.
ஒவ்வொரு முறையும் அவளும் அவள் அப்பாவும் தான் மூச்சைப் பிடித்துக்கொண்டு கத்துவார்கள் . இந்த முறை அவள் அம்மாதான் அவனை வரவேற்று உபசரித்து உட்கார வைத்திருக்கிறாள். அவர்கள் இருவரும் வெளியே போயிருக்கிறார்களாம்.
தேவைதான் அவனுக்கு. மனைவி தன்னுடன் உடனே கிளம்பி வந்து விடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.ஆனால் அதற்காக வருவதாக சொல்வியிருந்தும் வீட்டிலேயே இல்லாமல் வெளியே போவது என்றால்! அவனுக்குள் கோபக்குமிழ்கள் வெடிக்க ஆரம்பித்தன. வரட்டும் ,நன்றாக கேட்டுவிட்டு போகலாம் என்று எரிச்சலை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
மாலை வேளையில் அலுத்து சலித்து சைட்டிலிருந்து வந்த அவனுக்கு பார்வதி கொண்டு வந்து கொடுத்த அந்த ரவா இட்லியும் தக்காளிச் சட்னியும் அமிர்தமாக இருந்ததன. சூடாக காஃபியையும் கொண்டு வந்து வைத்தவள் கடமை முடிந்தது என்பது மாதிரி பேசாமல் உட்கார்ந்திருக்கிறாள்.
மாதவி எப்போது வருவாள் என்று கேட்டு கேட்டு அலுத்துப் போய் கிளம்பி விடலாமா என்று தோன்றி விட்டது அவனுக்கு.
அவனையே பார்த்துக் கொண்டு எதிரில் அமர்ந்திருந்த பார்வதிக்கு அவன் எண்ண ஓட்டங்கள் நன்றாகவே புரிந்தன.
அவன் வரும் போதெல்லாம் ஆவேசப்படுவதோடு பெண்ணோடு சேர்ந்து மணிவண்ணனும் கத்தி கூச்சல் போட்டு விஷயம் எதுவுமே புரியாமல் போயிற்று.
அவளும் எவ்வளவோ தரம் சொல்லிப் பார்த்துவிட்டாள. எதற்கெடுத்தாலும் அவசரப்பட்டு கோபத்தை கொட்டுவதில் பயனில்லை. அவரை பேசவே விடாமல் செய்கிறீர்கள். இருவரும் கேட்பதாகவே இல்லை. கடுமையான வாதங்களுக்குப் பிறகு இந்த முறை அவர்கள் இருவரையும் உள் அறையில் உட்கார வைத்திருக்கிறாள்.
இந்த தடவை நான் பேசிப் பார்க்கிறேன் என்று சொல்லி அவர்கள் இருவரையும் வெளியே வரக்கூடாது என்று கண்டித்து சொல்லியிருக்கிறாள்.
சின்னதாக ஒரு பொறி போதும். விஷயம் வெடித்துக் கொண்டு வெளியே வந்துவிடும். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவள் அவன் எழுந்து நின்றதும் திகைத்துப் போனாள்.
நல்ல உயரம். கம்பீரமான தோற்றம். எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் முகம். இதுதான் சிவபாலன்.
சிறந்த ஒரு கட்டுமான கம்பெனியில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒரு பொறியியல் வல்லுநன். மும்பையில் கடல் பாலம் கட்டியது கூட இவர்களது பணிதான்.
ஐ.டி.யில் பணிபுரியும் மாதவிக்கு அவனது வேலை புரியவில்லை. புரியவில்லை என்பதை விட புரிந்துகொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மை.இரவு ஒரு மணிவரை வேலை இருந்தது. கான்கிரீட் போட்டோம். லோட் வந்தது மணல் வந்தது என்றெல்லாம் சொல்வதை அவள் ரசிக்கவில்லை.
சொல்லப்போனால் அவளுமே இரண்டு மணிவரை லாப்டாப்பில் ஆழ்ந்திருக்கிறாள். ஆனால் அது வீடு. இவனைப் போல எப்போது வருவான் என்று காத்துக் கிடக்க தேவையில்லை. மணமான புதிதில் கணவன் மனைவி இருவர் ஒத்துப் போவதே பெரிய விஷயம் என்றாகிவிட்ட இந்த நாளில் வேறுபட்ட துறைகள் ஒத்துப் போவது எப்படி சாத்தியம்?
அவ்வப்போது வரும் சண்டைகள் பூசல்கள் மேலும் மேலும் விரிசலைத்தான் உண்டாக்கியது. நல்ல பையன் என்று பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டு இப்போது மதில் மேல் பூனையாக பெற்றவர்கள். யார் பக்கம் பேசுவது! எப்படி சமாதானமாக சேர்த்து வைப்பது என்று தெரியவில்லை.
சிவபாலன் முகத்தில் கோபமும் எரிச்சலும் வெளிப்படையாகத் தெரிய ஒரு சின்ன பார்சலை எடுத்து அங்கிருந்த டேபிள் மேல் வைத்தான்.
“என்ன இது! “ஆச்சரியத்துடன்வினவியவளை ,”பிரித்துப் பாருங்கள்” என்றான்.
மூன்று குரங்குகள் காதினை வாயை கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் அந்த பரிசுப் பொருளைப் பார்த்து அவள் திகைத்துப் போனாள்.எல்லோருக்கும் தெரிந்த தீயதை பேசாதே கேட்காதே பார்க்காதே என்பதுதானே!
அவன் பதில் கொடுத்தான்.
“இதுக்கு அர்த்தமேவேற! நல்லதையே பார்க்காதே ! நல்லதையே பேசாதே! நல்லதையே கேட்காதே என்று சொல்கின்றன.உங்க பொண்ணுக்கு நல்லாபொருந்தும்.”
அவள் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
அவன் எரிச்சலுடன் தொடர்ந்தான்.”ஒருதடவை கூட அலுத்து சலித்து வருகிறானே என்று நினைக்கவே மாட்டாள். எப்போதும் போர்க் கொடியை கையில் தூக்கிக் கொண்டு நிற்பாள். நிலவென்ன நெருப்பென்ன உலவும் பேரழகே அப்படின்னு ஒரு பாட்டு வரும் . நிலவே கிடையாது எப்பவும் நெருப்பு தான்.”
“சீக்கிரம் வராதா சொல்லிட்டு சொல்லிட்டு வராமல் லேட்டா வரதா அவள் சொல்கிறாள்”.
மெதுவாக பார்வதி வாயைத் திறந்தாள்.
“நான் என்ன ஊரைச் சுற்றிவிட்டா லேட்டாக வருகிறேன். எதிர்பாராமல் எத்தனை குறுக்கீடுகள்”
“உங்களுக்கு எங்கள் அலுவல் பத்தி என்ன தெரியும்? சினிமாவில் காட்டுற மாதிரி ஆபரேஷன் முடிஞ்ச உடனே டாக்டர் ஆஸ்திரேலியாவிலோ அமெரிக்காவிலோ டூயட் பாட முடியாது. அன்றைக்கு பத்து அடி உயரத்திலிருந்து ஒருத்தன் விழுந்துட்டான். அவனைக் காப்பாற்ற நாலு பேர் போனால் அவன் செஞ்சுகிட்டிருந்த வேலையை பார்க்க நாலு பேர் வேண்டாமா! “
அவள் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தது அவனை மேலும் உசுப்பேற்றியது.
“ஃப்ளைட்டில் போயிருக்கிறீர்களா!. விமானம் கிளம்புவதற்கு முன் எத்தனை வேலைகள் நடக்க வேண்டும்! எத்தனை பணியாளர்கள் சுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டு இருப்பார்கள் தெரியுமா! ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட வேலை இருக்கும். பெட்டிகளை கொண்டு வரும் சின்ன டிரக், உதவியாளர்கள் என்று ஒரு படையே வேலை செய்து கொண்டிருக்கும். தரையிறங்கும் விமானம் சரியான இடத்தில் இறங்கி வட்டமிட்டு அதற்கான இடத்தில் நிற்கும் வரை பொறுப்பெடுக்க வேண்டும். ஸப்போஸ் , யாரோ ஒரு ஊழியருக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டால் எல்லா வேலைகளும் அப்படியே நின்று விடமுடியுமா? அப்படி ஏதாவது நடந்தால் பயணிகள் சும்மா இருப்பார்களா? “
அவளுக்கு அவன் சொன்ன விஷயம் நன்றாகப் புரிந்தது.
“அது மாதிரிதான் அன்றைக்கும் நடந்தது. அலுப்போடு வீட்டுக்கு வந்தால் என்ன என்றே கேட்காமல் கத்தி தீர்த்தாள். நல்ல பசி வேற! இவள் கோபம் , கோபமா! கோபாம் என்றுதான் சொல்ல வேண்டும். அணுகுண்டு வெடிக்கிற மாதிரிதான் வார்த்தைகள் வரும்.”
அவன் மடை திறந்த வெள்ளம் போல பேசிக்கொண்டே போனான்.
“இன்னொரு நாள் பாருங்க ! தார் மாதிரி ஒரு கெமிகல். கொள்கலனில் கொதித்துக் கொண்டு இருக்கும். வெளியே வந்தால் உடனே உஷ்ணம் மாறிவிடும். அதை சரியாக ஒரே இடத்தில் விரிசல் இல்லாது சீராகப் பரப்ப வேண்டும். மெஷின் தான் என்றாலும் கண்காணிக்க வேண்டாமா? ஒவ்வொரு பகுதியாக முடிந்து எங்கள் இடம் வரும்போது இரவு மூன்று மணி ஆகிவிட்டது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று வரமுடியுமா?இதென்ன லாப்டாப்பா விட்டுவிட்டு போவதற்கு!”
படபடவென்று பேசியதில் அவன் முகம் சிவந்திருந்தது.
அவள் எதிர்பார்த்த மாதிரியே அவன் தன் மனதை கீறிய விஷயங்களை கொட்டிக் கொண்டிருக்கிறான். உள்ளேயிருந்து அவர்கள் இருவரும் கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். புரிந்தால் சரி!
அவன் மேலும் தொடர்ந்தான்.
“எங்க வேலையிலே ஏகப்பட்ட தரக்கட்டுப்பாடு இருக்கும். ஒவ்வொரு லெவலிலும் சோதனையும் இருக்கும். ஒரு பாலம் திறக்கிறோம் என்றால் எத்தனையோ விதமான சோதனைகளை கடந்தாக வேண்டும். கனரக வண்டிகள் போகலாமா, அழுத்தம் தாங்குமா என்று ஒவ்வொரு தரப்பிலும் சோதிப்போம் .அன்றைக்கு எங்க சீனியர் வந்து பார்க்கிறதா இருந்தது. அவர் வரவே லேட் ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம் அவர் சொன்ன பல விஷயங்களை சரிபார்க்க வேண்டியிருந்தது. அப்படியும் பாதி வேலையை புனித்தை பார்த்துக்க சொல்லிட்டு வந்தேன்”.
‘புனித் என்றால்’, வேகமாக கேட்டுவிட்டு பார்வதி வாயைமூடிக் கொண்டாள்.
“யாரோ புனிதா என்று பேசிக் கொண்டே இருக்கிறான்” என்று ஒரு குற்றச்சாட்டு வைத்திருந்தாள் அவள் அருமைப் பெண்.
புனித் சந்திரன் , தேவ் பாண்டியன் இவர்கள் எல்லாம் என்னுடன் வேலை பார்ப்பவர்கள்.
அவன் இயல்பாக சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தான்.அப்படி வந்தும் பிரயோசனமில்லாமல் வாசலிலேயே நிற்க வைத்து கத்திவிட்டு இங்கே வந்துவிட்டாள்.
“யாராவது ஒருத்தருக்காவது மத்தவங்க கஷ்டம் தெரியாதா என்று நினைத்து தான் இங்கே வந்தேன். ஆனால் உங்கள் வீட்டில் அப்படி யாருக்குமே மனது பொறுமை எதுவுமே கிடையாது என்று தெரிந்துகொண்டேன். இனிமேல் நான் இங்கு வரமாட்டேன். உங்கள் பெண்ணிடம் சொல்லிவிடுங்கள். அவள் இஷ்டப்படி நடந்து கொள்ளட்டும்”.
சொல்லிவிட்டு திரும்பியவன், எதிரில் நின்ற மாதவியை கண்டு வியந்து போனான்.
‘என்ன இது? ‘என்று அவன் விழிகள் பார்வதியை கேள்விகேட்டன.
“நீங்கள் சொன்னீர்கள் இல்லையா பொறுமையே இல்லை என்று” அவளும் பார்வையாலேயே பதில் சொன்னாள்.
அவனுக்குப் புரிந்தது . பாராட்ட வாயைத் திறந்தான்.
அதற்குள் மாதவி அவன் கரங்களை பிடித்துக் கொண்டிருந்தாள்.கருமேகம் மறைத்த நிலவு வெளிவந்து பளிச்சிடுவதைப் போல் அவள் முகம் மலர்ந்திருந்தது.
“என்னை மன்னித்து விடுங்கள். நான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்.”
“கொஞ்சமா? ஏகப்பட்ட பாடுபடுத்தி விட்டாய்! “
வார்த்தைதான் கடுமையாக வந்ததே தவிர முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு! அவளும் தான் என்ன பேசியதெல்லாம் மறந்து சிரித்துக் கொண்டு நிற்கிறாள்.
என்ன நடக்கிறது இங்கே! பார்வதி வியப்புடன் பார்த்துக்கொண்டு நின்றாள். அப்பாடி! ஒருவழியாக சமாதானம். ஆனார்கள்.பெரிய பிரச்சினை ஒன்று நல்லபடியாக தீர்ந்தது.
உள்ளேயிருந்து வந்த மணிவண்ணன்,” வெரி ஸாரி! தப்பாக நினைத்து கொள்ளாதீர்கள்” என்றபடி அவன் எதிரில் வந்து நின்றார்.
கிளம்பும் ஜோரில் இருந்த அவன் ஓகே ஓகே என்று தலையாட்டினான். அவர் கண்கள் பெண்ணைத் தேடின. எங்கே அவள்தான் கார் சாவியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு போய்விட்டாளே.
சமாளித்துக் கொண்டவராக இந்த பொம்மை என்று எடுத்து நீட்ட அது உங்களுக்குத்தான் என்று அமர்த்தலாக கூறிவிட்டு அவன் வெளியேற, பார்வதி அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings