in ,

அகத்தின் அழகு (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“ஆடி மாசத்துல பொறந்ததால தானோ என்னவோ? இப்படி அல்லாடிட்டு இருக்கான் ‘சங்கர்’…” என்று உறவுகள் பரிகாசம் செய்வதைக் கேட்க மனவருத்தமாதான் இருக்கு சங்கரின் பெற்றோருக்கு .

என்ன செய்ய? 36 வயசு ஆகியும் குரு பலம் இன்னும் கூடி வரல. பல இடங்களிலும் பொண்ணு தேடி அலுத்துப் போய்விட்டனர் . அப்போதான் உறவினர் ஒருவர் சொன்னார் …

“நாமே தேடினா கிடைக்காது …தரகர் கிட்ட சொல்லி தேடலாம் …அவுங்களுக்குதான் பொண்ணு எங்க எங்க இருக்குன்னு தெரியும் …என்ன கொஞ்சம் செலவு ஆகும் … தரகர் பொருத்து ஒவ்வொருத்தரும் 500 முதல் 2000 ரூபாய்க்கு மேல கூடக் கேப்பாங்க”.

“காசு போனாலும் பரவாயில்ல …நல்ல இடமா கெடச்சி அவன் வாழ்க்கை நல்லா இருந்தா போதும்” என்று சொன்னார்கள் சங்கரின் பெற்றோர்.

 இன்னொரு உறவினர்…

“நிறையத் திருமணத் தகவல் மையங்கள் இருக்கிறதே …அதுல பதிவு பண்றதுதானே?” என்றார்

 சரி அதுலேயும் பதிவு பண்ணி வைப்போம் என்று விசாரித்ததில் …ஒவ்வொரு மையத்திலும் பதிவு கட்டணம் சுமார்  20 ,000/- முதல் 1,00,000/- வரை என்று இருப்பது தெரிய வந்தது.

 சங்கரின் பெற்றோர் அங்கேயும் பணம் கட்ட முன்வந்த போது தரகர் ‘பழனிசாமி ’ ஒரு நல்ல செய்தியைக் கொண்டுவந்தார் . வாழப்பாடி பக்கம் ஒரு பெண் இருப்பதாக.

“வரும் வாரம் வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்த நாள் …அன்றைக்கே சங்கர வர சொல்லுங்க.பொண்னு பார்த்துட்டு …பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்” என்று தரகர் தகவல் தர…ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்னையில் இருந்து வியாழன் இரவு சேலம் வந்து சேர்ந்தான் ரிசர்வ் பேங்க் அதிகாரி சங்கர்.

வெள்ளிக்கிழமை காலையில் குலதெய்வ கோயிலுக்குப் போய்விட்டு சங்கர் மற்றும் அவரது தந்தை இருவரும் தரகர் பழனிசாமியுடன் வாழப்பாடி நோக்கி புறப்பட்டனர் .

 காரில் ஏறியதும் தரகர் பழனிசாமி தற்புகழ் பாட ஆரம்பித்துவிட்டார் .வானளவுக்கு வாயளந்தார் . தரகர்களுக்கே உள்ள தனித்திறமை போல …இல்லேன்னா வண்டி ஓடுமா ?… முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரைக் கூறி… “அவரு எம்.எல்.ஏ ஆகுறது முன்னாடி இந்த டீ கடையில் தான் நாங்க ரெண்டுபேரும் டீ குடிப்போம் தம்பி” என்று ஒரு கடையைக் காட்டினார் … 

“ஓ அப்படிங்களா …சரிங்க” என்று சங்கர் பதில் கூற.. 

 “ஆமா …அவரு பொண்ணுக்கு நான்தான் மாப்பிளை பார்த்தேன்”

“நல்லதுங்க”

“உங்களுக்கும் நல்ல இடம் அமையும் …இப்போ போற இடம் முடியும் …கல்யாணம் முடிவு ஆச்சுன்னா பார்த்து கவனிச்சிடுங்க”

“அதுக்கென்ன …ஏதோ உங்க வாய் முகூர்த்தமா அப்படியே நடந்துச்சுன்னா செஞ்சுட்டா போச்சு” என்று சங்கர் அப்பா பதில் சொன்னார்.

 “நடக்கும் ஸார் …எவ்வளவு கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன் …ஆனாலும் அதே வேலையா சுத்தறது இல்ல…உங்க போல முக்கியமானவங்களுக்கு மட்டுந்தான் இப்படி போறது…அங்கே தெரியுது பாருங்க தென்னந் தோப்பு பாக்குத் தோப்பு அது எல்லாம் ஒரு காலத்துல எங்க நிலம்தான் …நான் தான் வித்துட்டு வந்துட்டேன்”…சென்னையில் உள்ள பிரபலமான துணி கடை ஒன்றின் பெயரை சொல்லி …அவுங்க தான் வாங்கி இருக்காங்க என்றார் .

 எப்.எம் ஆன் செய்தது போல் தொடர்ந்து அவர் பாட்டிற்குப் பேசிக்கொண்டே வந்தார் . வேறு வழியில்லாமல் சங்கரும் அவரது தந்தையும் கேட்டுக் கொண்டே வந்தனர் .

 ஒரு வழியாக…. மின்வெட்டு போல பேச்சு நின்றது பொண்ணு வீட்டின் அருகினில் கார் நின்றது.  

 பெண் வீட்டாரிடம்  நன்கு பரிட்சயமானார் போல் பேசினார் …

 உள்ள வாங்க தம்பி என்று கூப்பிட்டார் …அவரே ஒரு சினிமா டைரக்டர் போல் … “தம்பி நீங்க இங்க உட்காருங்க …ஐயா நீங்க இங்க உட்காருங்க” என்று சங்கர் மற்றும் அவர் தந்தைக்கு இருக்கைகளைக் காட்டினர்.

 இருக்கைகளில் அமர்ந்ததும்…பெண் வீட்டாருக்கு…சங்கரை அறிமுகப் படுத்தினார் ..பின்னர் சங்கரிடம் … 

 “இவங்கதான் பொண்ணோட அப்பா, அம்மா…இவுங்க…பொண்ணோட மூத்த அக்கா…அவுங்க வீட்டுக்காரர் …நாம வர வழியில ஒரு காம்ப்லக்ஸ் காட்டினேனே அது இவுங்களோடதுதான் ஒரு கடையில ஹார்ட்வேர் பிசினஸ் பன்றாங்க ….இன்னொரு அக்கா ஓசூர்ல இருகாங்க …அவுங்க வீட்டுக்காரர் ஐடி- ல வேலை பார்க்கிறார் …இந்த பொண்ணுதான் கடைசிப் பொண்ணு…என்று அறிமுகப் படலம் முடிந்ததும் …அவரே …“பொண்ண  டீ எடுத்துட்டு வரச்சொல்லுங்க” என்றார் 

 பெண்ணின் அம்மா ‘ஐஸு’ டீ எடுத்துட்டு வாம்மா …பொண்ணு பெரு ஐஸ்வர்யா …நாங்க ஐஸு ன்னு தான் கூப்பிடுவோம்…” என்று சொன்னார் 

பொண்ணு டீ கொண்டு வரும்போதே …“தம்பி நல்லா பாத்துக்குங்க” என்று தரகர் சொன்னார்.

பொண்ணு மாநிறம் , நல்ல லட்சணமாக முகம், உயரம் சரியாகத்தான் இருக்கும். பிடித்திருக்கிறது என்று சொல்லிடலாம் என்று சங்கர் மனக்கணக்கு போட …தம்பி பொண்ணு உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணுமாம் என்று தரகர் சொன்னார் .

 சங்கரும் சரி என்று பொண்ணு பின்னாடி மொட்டை மாடிக்குப் போனதும்… ஐஸ்வர்யாவே உரையாடலைத் தொடங்க 

 “உங்கள பத்தி முழு விவரம் தரகர் சொல்லல …அதான் தெரிஞ்சிக்கத் தனியா பேசணும்ன்னு சொன்னேன்…உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே”

 “அப்படி எதுவும் இல்ல”

 “என்ன படிச்சி இருக்கீங்க?”

 “எம்பிஏ …நீங்க என்ன படிச்சிருக்கீங்க?”

 “நான் எம்.ஏ இங்கிலீஷ்  …தனியார் கல்லூரியில லெக்ச்சரரா இருக்கேன்”

 “RBI ல வேல பாக்கிறதா சொன்னாங்க …எவ்வளவு சம்பளம் வரும்?”

 “பிடித்தம் போக 70,000/- வரும்”

 “சென்னையில வீடு வாடகைக்கு எடுத்து இருக்கீங்களா?”

 “இல்ல …கவுர்மென்ட் குட்டர்ஸ் இருக்கு…அதிலே தான் தங்கி இருக்கேன்”

 “உங்க கூடப் பிறந்தவங்க எத்தனை பேரு?”

 “ஒரே தங்கச்சி… திருமணமாகி கோயம்பத்தூரல இருக்காங்க”

 “அவுங்க அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவார்களா?”

 “தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வருவாங்க …அப்புறம் பசங்களுக்கு விடுமுறையின்னா வருவாங்க”

 “வந்தா எவ்வளவு நாள் இருப்பாங்க?”

 “ஒரு வாரம் போல இருப்பாங்க”

 “உங்க அப்பா அம்மா எங்க இருக்காங்க?”

 “அவுங்க சேலத்தில்”

“ஒரு வேளை …நமக்குத் திருமணம் ஆனா… உங்க அப்பா அம்மா எங்க இருப்பாங்க? சேலத்திலயா ? சென்னையிலையா ?”

 “எங்க இருக்கனுன்னு நீங்க நினைக்கிறீங்க?”

 “சேலத்திலேயே இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன் …நீங்க வேறு எதுனா என்ன பத்தி தெரிஞ்சிக்கணும் நினைச்சா கேட்கலாம்…ஏன்னா நான் ஓபன் டைப்”

 “வேற எதுவும் கேட்கறதுக்கு இல்ல….நல்லா தெரிஞ்சிகிட்டேன்”

 மொட்டை மாடியிலிருந்து கீழே வந்ததும் …அனைவருக்கும்  வணக்கம் சொல்லி கிளம்பினர் சங்கர் அவரின் அப்பா மற்றும் தரகர் பழனிசாமி

 கார் புறப்பட்டுக் கொஞ்ச தூரம் போனதும் தரகர் ….

“என்ன தம்பி பொண்ணு புடுச்சிருக்கா?…மேற்கொண்டு பேசலாமா?…நல்ல குடும்பம்…மூணே பொண்ணுங்க தான் பசங்க இல்ல …சொத்து இருக்கு… என்ன சொல்லறீங்க?”

 “நான் வீட்டுக்கு போயிட்டு சொல்றேனே”

 “நல்லது…அப்பா அம்மா தங்கச்சி எல்லார்கிட்டயும் கலந்து பேசி ஒரு பதில் சொல்லுங்க” 

 “வாழ போறது நான்…என் முடிவுக்கு அவுங்க எதுவும் சொல்ல மாட்டாங்க”

 மறுநாள் தரகர் அழைத்தார் …

 “தம்பி பொண்ணு வீட்டில கேட்டாங்க …என்ன முடிவு பண்ணி இருக்கீங்க ?…பொண்ணு நல்லாத்தானே இருக்கு?”

 “அகத்தின் அழகு …”

 “முகத்தில் தெரிந்ததா …?!”

 “இல்ல…பேசிய வார்த்தைகளில் தெரிந்தது”

 “அப்படின்னா …?”

 “விளக்கமா சொல்ல விரும்பல”

 “சரி விடுங்க தம்பி …என் ஜிபே – க்கு ஒரு 2000/- போட்டு விடுங்க… நாமக்கல் பக்கம் மூணு நாலு பொண்ணு இருக்காம் போயிட்டு வந்து விவரம் சொல்றேன்”

 “நன்றி”

 அலைபேசி உரையாடல் அத்தோடு முடிவுற்றது.

“திருமணம் தேவையா?” என்ற தீவிர யோசனையுடன் அன்றிரவே சென்னைக்கு புறப்பட்டான் சங்கர்.

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாஸ்மார்க் (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

    உண்ணா நோன்பு (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்