in , ,

அணில் (சிறுகதை) – பிரபாகரன்.M

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கோகுல் பத்து வயதுச் சிறுவன்; அவன் வீட்டின் பின்புறம் சிறு கொல்லை ஒன்று உண்டு; அந்தக் கொல்லையில் தென்னை நாரத்தை இலவம் பப்பாளி முருங்கை கொய்யா போன்ற மரங்கள் இருந்தன. சிறு செடிகளும் இருந்தன.

அந்தக் கொல்லையில் அணில் ஒன்று வசித்து வந்தது. சற்றே வயது முதிர்ந்;த அணில்; தென்னைமரத்தில் இருந்த சிறு உடைபொந்தில் அது வசித்து வந்தது.. வசிப்பது தென்னையில் என்றாலும் பெரும்பாலும் அது மற்ற மரங்கள் மீதுதான் சுற்றித் திரியும்.

சற்றே பழுப்பு கலந்த பச்சை வண்ணம் இருத்த பஞ்சு போன்ற உடல்; முதுகில் வெளிறிய மூன்று கோடுகள்; சிறிய முகம்; உடலைக் காட்டிலும் சற்று குட்டையான புசுபுசுவென்று ரோமங்கள் அடர்ந்;த வால் என்று அந்த அணில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

காலைப் பொழுதில் அணில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அப்போது ஆரம்பித்து முற்பகல் வரை இடைவிடாது அது கிறீச்சிட்டுக் கொண்டே இருக்கும். ஓற்றை அணில்தான் என்றாலும் அதன் குரல் கொல்லை எங்கும் எதிரொலிக்கும். இயற்கையோடு  இயைந்த அதன் கிறீச்சிடலில் கோகுல் மனம் லயித்துப் போவான்.

நண்பகலுக்கு மேல் அணில் பெரும்பாலும் கிறீச்சிடாது. ஏதேனும் அடர்ந்த மரக்கிளைகளில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும். ஒருவேளை  நேரம் தவறி  கிறீச்சிட்டால் அங்கே கண்டிப்பாக ஏதோ ஒரு அந்நியப் பறவை விலங்கு சர்ப்பம் இவைகளின் நடமாட்டம் இருக்கும்.

அந்தக் கிறீச்சிடலும் வேறு விதமாக இருக்கும். மாலை வேளையில் அது தென்னைமரப் பொந்தில் அடைவதைத் தற்செயலாகப் பார்த்துதான் கோகுல் அதன் வசிப்பிடத்தைத் தெரிந்து கொண்டான் தென்னைமரப் பொந்தில் அணில் தன் முகுகுப் பகுதியைக் காட்டி ஒடுங்கும் போது அநேகமாக அது இருப்பதே தெரியாது.

அணில் தன் உணவைக் கொறிப்பதைப் பார்ப்பதே தனி அழகுதான்; தனது முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கிக் கிட்டத்தட்ட கங்காருவைப் போன்று நின்று கொள்ளும். மனிதர்கள் தங்கள் கைகளைப் பயன்படுத்துவது போல அது  முன்னங்கால்களைப் பயன்படுத்தும். வைத்திருக்கும் உணவை அது தானியமோ பழமோ அல்லது வேறு எதுவோ என்றாலும் அதை வேகவேகமாகக் கொறிக்கும்.

அணில் தினமும் காலைவேளையில் முருங்கை மரத்தின் கிளைகளில் குறுக்கும்  நெடுக்கும் ஓடும்; முருங்கைப் பூக்களைக் கொறிக்கும்; சமயங்களில் கொய்யா மரத்தின் மீதும் ஓடும். கொய்யா கனிகளைக் கறும்பும். எல்லாப் பழங்களையும் கறும்பாது. குறிப்பிட்ட பழங்களைத்தான் கறும்பும். அணில் கடித்த பழம் மிகவும் சுவையாக இருக்கும் என்பார்கள்.

எப்படி இது சுவையான பழம் என்று அது கண்டுபிடிக்கிறது! அணில் கடித்ததினால் பழம் சுவையாகிறதா அல்லது சுவையான பழம் இதுவென்று தெரிந்து அணில் கடிக்கிறதா என்று கோகுலுக்கு யோசனை உண்டாகும். கொய்யா மரத்தில் அணில் ஓடும் போதெல்லாம் தனது மெத்தென்ற உடலில் மரத்தின் முட்கள் கீச்சி விடாமல் எப்படி இலாவகமாகச் செல்கிறது என்று கோகுல் ஆச்சரியப் படுவான்.

கோகுலின் வீட்டின் பின்புறம் கொல்லைப் பக்கம் சிறு தாழ்வாரம் உண்டு; தகர மேற்கூரை கீழே சிமெண்ட்தளம் நடுவில் அடைக்காத தாழ்வாரம் அது. தாழ்வாரத்தில் காலை மாலை இருவேளையும் கிழக்கு மேற்கு  சூரியனி;ன் ஒருபக்க சாயும் வெயிலும் மறுபக்க நிழலும் மாறிமாறி வரும்.

கோகுலின் பாட்டி அங்கு அமர்ந்;துதான் சமையலுக்குத் தேவையான காய்கறிகள் நறுக்குவார். தானியங்களைத் தூசிதும்பு பார்த்து புடைப்பார். வற்றல் வடாகம் காயப்போடுவது எல்லாம் நடக்கும். அணில் தாழ்வாரத்தில் வந்து நடமாடும். பழகி விட்;டதால் கோகுலைக் கண்டும் பாட்டியைக் கண்டும் அது பயப்படாது. அவர்கள் அமர்ந்திருந்தால் அவர்களைச் சுற்றி விளையாடும்.

சிந்தும் தானியங்களையும் காய்கறி உணவுத் துணுக்குகளையும் எடுத்து சாப்பிடும். சமயங்களில் இவர்களின் மடியின் மீது கூட ஏறிச் செல்லும். கோகுல் பாட்டியிடம் அணிலின் முதுகில் உள்ள கோடுகள் பற்றிக் கேட்டான்.

பாட்டி “அது ராமர் வரைந்த கோடுகள்!” – என்றார்.

இவன் புரியாமல் பார்க்க “ராமர் இலங்கைக்குப் போறதுக்குக் கடல்ல பாலம் அமைச்சப்பம் வானரங்கள் எல்லாம் பெரிய பெரிய பாறைகளைக் கொண்டாந்து போட்டுச்சுங்க! அப்ப அணில் நாமளும் ஏதாவது உதவி பண்ணனும்னு நினைச்சு சிறுகல்லைக் கொண்டாந்து போட்டுச்சாம்! அதைப் பாராட்டுற விதமா ராமர் அணிலோட முதுகுல வாஞ்சையா மூணு விரல்களால வருடிக் கொடுத்தாராம்! அதுதான் அந்தக் கோடுகள்!” – என்றார்.

ஒருநாள் அணில் தாழ்வாரத்தில் ஓடிக் கொண்டிருந்த போது சட்;டென்று பூனை ஒன்று எதிர்பட்டது. அது அணிலைப் பிடிக்கப் பாய்ந்தது. கோகுல் ஒருகணம் உறைந்து போனான். ஆனால் அணில் ஓடித் தப்பித்து விட்டது. கோகுல் பாட்டியிடம் “இங்க பூனை வராத மாதிரி நாம பாத்துக்கனும்!” – என்றான்.

“அப்படி நாம செய்ய முடியாது! இந்தப் பூனை இல்லாட்டி வேற பூனை வரும்!” – என்றார்.

சமயங்களில் அணில் அவர்கள் வீட்டுக் கொல்லையைத் தாண்டி வெளியே செல்லும். கோகுல் பதைபதைத்துப் போவான். வெளியே நிறைய காகங்கள் கரிச்சான் குருவிகள் உயரே பருந்துகள் நடமாடும். அவைகள் அணிலைத் தூக்கிச் செனறு விடும் என்று அச்சப்படுவான்.

“வயதில் முதிர்ந்த உடல் வலுவுள்ள அணிலை பறவைகளாலத் தொட முடியாது! அவைகளை எதிர்த்து சண்டையிடும்!” – என்றார் பாட்டி; இருந்தாலும் இவன் கவலை நீடிக்காத வண்ணம் அணில் மீண்டும் கொல்லைக்குத் திரும்பி வந்து விடும்.

அது ஒரு மழைகாலப் காலைப் பொழுது; வானம் மேகமூட்டமாய் இருந்தது. தட்டான்களும் வண்ணத்துப்பூச்சிகளும் குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருந்தன. சில்வண்டுகளின் ரீங்காரம் இன்னும் ஓயவில்லை. ஒன்றிரெண்டு காகங்கள் மரத்தில் அமர்ந்து கரைந்து கொண்டிருந்தன.

ஆனால் அணிலைக் காணும்; இலேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. அதனால் அது எங்காவது இலை மறைவில் அமாந்;திருக்கும் என கோகுல் எண்ணிக் கொண்டான். ஆனால் அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் அணில் வரவில்லை. கோகுலை கவலைத் தொற்றிக் கொண்டது. அவன் பாட்டியிடம் கேட்டான்.

“வயது முதிர்ந்த அணில்தான? அணிலோட ஆயள்காலம் மூன்று முதல் ஐந்து வருடங்கள்தான்!” – என்றார்;

“பறவை மிருகங்களோட ஜனனத்தைக் கூட நாம பார்க்க முடியுது! ஆனா அதுக மறையுறது பெரும்பாலும் நமக்குத் தெரியுறதுல்ல! அப்படித் தெரியாம இருக்குறது நல்லதும் கூட! மனசு சஞ்சலம் அடையாம இருக்கும்!” – என்றார் அவர். அவனுக்குக் கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. 

ஒருhள் காலையில் கொல்லையில் அணில் கிறீச்சிடும் சப்தம்; அணில் திரும்பி வந்து விட்டதா? கோகுல் ஓடிச் சென்று பார்த்தான். அவன் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது. அது பழைய அணில் இல்லையென்று. அதைக் காட்டிலும் இது மிகவும் சிறியதாக இருந்தது.

இவனைப் பார்த்தவுடன் பயந்து போய் வேகமாக ஓடி மரத்தில் ஏறிக் கொண்டது. மரத்தின் பின்னால் மறைந்து கொண்டு இவனை எட்டிப் பார்ப்பதும் பயத்தில் கத்துவதுமாய் மாறி மாறி செய்தது. கண்டிப்பாக பழைய அணிலுக்கு ஏதோ ஆகியிருக்கும். அது இருந்திருந்தால்; இந்த புதிய அணிலை தனது ஜாகைக்குள் அனுமதித்திருக்காது.

கோகுல் யோசித்தான். இந்த அணிலும் முருங்கை மரத்தில் ஓடியது. முருங்கைப் பூக்களை கொறித்தது. கொய்யா  கனிகளைக் கறும்பியது. பழைய அணிலைப் போன்றே தென்னை மரப்  பொந்தில் வசித்தது. இது கிறீச்சிடுவதும் கொல்லை முழுவதும் எதிரொலித்தது. ஆனால் இன்னும் தாழ்வாரத்துக்கு வந்து பழகவில்லை. 

“கொஞ்ச நாள்ல்ல இதுக்கு நம்மளோட முகம் பழகிரும்! பயம் போயிருச்சுனா இதுவும் தாழ்வாரத்துல நடமாட ஆரம்பிச்சிரும்!” – என்றார் பாட்டி.

கோகுல் ஆமோதித்தான். அவன் பழைய அணிலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தான். அவன் இப்போது இந்த புதிய அணிலின் சேட்டைகளை ரசிக்க ஆரம்பித்து விட்டான்.

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன்னைத் தானே…! (சிறுகதை) – இரஜகை நிலவன்

    உழைப்புச் சுரண்டல் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்