in ,

ஒத்தையில நின்னதென்ன (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

விடுமுறைக்கு ஊருக்குப் போகலாம் என்று பேச ஆரம்பித்ததுமே என் மகள் ஆரம்பித்து விட்டாள்.

“அம்மா, ஊருக்குப் போகலாம்னு சொல்லிட்டு வெகேஷனுக்கு பாட்டி வீட்டுக்கு எல்லாம் கூட்டுட்டுப் போகாதீங்க. போரடிக்குது மா.”

“வேற எப்போ போக முடியும்? லீவு விடும் போதுதானே ஊருக்குப் போய் எல்லாரையும் பார்க்க முடியும்.”

“அதுக்காக ஒவ்வொரு தடவையும் லீவுக்கு இந்த பாட்டி வீடு, அந்த பாட்டி வீடுன்னு போனா எப்படி மா? வேற எங்கேயாவது போய், ரூம் எடுத்துத் தங்கி சுத்திப் பார்க்க வேண்டாமா?”

“அதுதான் தனியா போறோமே. உறவுகளை எல்லாம் பார்க்க வேண்டாமா?”

“இட்ஸ் போரிங்க் மா. அதுவும் தென்காசி பாட்டி வீட்டுக்குப் போனா கசகசான்னு நிறைய பேர் இருக்காங்க. கூட்டமா இருக்கு. ப்ரைவசியே இல்ல. எப்படி மா அந்த வீட்ல இருக்க முடியும்? உனக்கு வேணும்னா நீ போ மா, நான் வரமாட்டேன்.”

இப்படி கத்தரித்து விட்டது போல் பேசிய என் மகள் வேதாவிடம் பதில் எதுவும் சொல்லாமல் யோசனையுடன் நகர்ந்தேன். அடுத்து என் கணவர்.

“இல்ல மாதவி, உனக்குதான் தெரியுமே. எனக்கு அப்பப்போ ஆஃபீஸ் கால் வரும். உங்க வீட்ல சிக்னலே ஒழுங்கா கிடைக்காது. அதுபோக எல்லாரும் இருப்பாங்க. ஒரே சத்தமா இருக்கும். நீ கிளம்பிப் போ. அதை நான் என்னைக்குமே வேண்டாம்னு சொல்லல. என்னால முடியாது. என்னைக்குத் திரும்ப வரேன்னு சொல்லு, அதுக்கு ஒரு நாள் முன்னாடி வந்து அங்கே தங்கிட்டு அப்படியே உன்னைக் கூட்டிட்டு வந்துடறேன்.”

“இதையே தான் ஒவ்வொரு முறையும் சொல்றீங்க. அப்போ எப்பதான் நீங்க எல்லாரோடவும் சேர்ந்து இருப்பீங்க? நீங்க இப்படி இருக்கறதால வேதாவும் அப்படியே இருக்கா. நாலு பேரோட பழகினால்தானே விட்டுக் கொடுக்கறது, மத்தவங்களைப் புரிஞ்சுக்கறது, அட்ஜஸ் பண்ணிக்கறது இந்தப் பழக்கம் எல்லாம் வரும்.”

“அதெல்லாம் இந்த மாதிரி போயிருந்தாத்தான் வரணும்னு அவசியம் இல்லை மாதவி. வேதா ஸ்கூல் போறா. வெளில நாலு பேரோட பழகறா. அப்புறம் என்ன.”

“இதே பதிலைத்தான் ஒவ்வொரு வருஷமும் சொல்றீங்க.”

“உண்மை இதுதான். அப்போ அதே பதில்தான் சொல்ல முடியும். வேதாவுக்கு இஷ்டமிருந்தா நீ தாராளமா அவளைக் கூட்டிட்டுப் போகலாம். எனக்கு கூட்டம், சத்தம் இதெல்லாம் பிடிக்காது. எங்க வீட்ல நான் அமைதியா இருந்தே பழகிட்டேன்.”

கணவரிடமும் அதற்குமேல் எதுவும் பேச விருப்பமில்லை. வழக்கம்போல் மறுநாள் நான் மட்டும் ஊருக்குக் கிளம்பினேன். நான் திருமணம் முடிந்ததிலிருந்து பூனேவில் இருக்கிறேன். என் பெற்றோர் இருப்பது தென்காசியில். என் கணவரின் பெற்றோர் இருப்பது திருச்சியில்.

ஒவ்வொரு முறையும் ஊருக்குக் கிளம்பலாம் எனும் போதே அப்பாவும், மகளும் ‘இட்ஸ் போரிங்க், வெரி நாய்ஸி’ என்று ஆரம்பித்து. விடுவார்கள். திருச்சியில் என் மாமனார், மாமியார் மட்டும்தான் இருக்கிறார்கள். என் கணவர் ஒரே மகன். அதனால் எல்லாம் பார்த்துப் பார்த்து அவருக்காக செய்து, வளர்த்து விட்டார்கள்.

இப்போதும் அங்கு போனால் அவர் இஷ்டப்படிதான் எல்லாம் நடக்கும். என் மகளுக்கும் செல்லப் பேத்தி என்பதால், இங்கே முழு உரிமை உண்டு. அவள் வைத்ததுதான் சட்டம். அதனால் திருச்சியில்கூட நாலு நாள் தங்கி விடுவார்கள்.

ஆனால் எங்கள் வீட்டில் அப்படி இல்லை. தென்காசியில் அப்பா, அம்மா இருக்கிறார்கள். நான் வருகிறேன் என்று தெரிந்ததுமே செங்கோட்டையில் இருக்கும் என் அக்கா குடும்பத்துடன் வந்து விடுவாள். அதேபோல் மதுரையிலிருந்து என் அண்ணனும் குடும்பத்தோடு அங்கு வந்து விடுவான். இது போதாதென்று அக்கம்பக்கம் ஊர்களில் இருக்கும் சித்தி சித்தப்பா, அத்தை மாமா என்று அனைவருமே குடும்பத்தோடு அங்கே ஆஜராகி விடுவார்கள்.

வீடே திருவிழாக் கோலம் பூண்டது போல இருக்கும். எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து வேலைகளைப் பகிர்ந்து செய்து, சேர்ந்து சமைத்து, சந்தோசமாக, நாட்கள் கழிவது தெரியாமல் அங்கே நேரம் கரையும்.

அனைவரும் சேர்ந்து அருகிலிருக்கும் குற்றாலம் போவதும் அல்லது தென்காசி கோவிலுக்குப் போவதுமாக நிறைவான தருணங்களைத் தந்து, மீண்டும் அடுத்த முறை சந்திக்கும்வரை அந்த நினைவுகளை நெஞ்சில் நிறைத்து வைக்கும்.

ஆனால் இந்தச் சத்தமும், இவ்வளவு பேருடன் ஒன்றாக இருப்பதும் என் கணவருக்குப் பழக்கமில்லாத ஒன்று. ஒற்றைப் பிள்ளையாக, தனி ஆளாகவே வளர்ந்து விட்டார். இப்போது என் மகளும் அதேபோல் இருக்கிறாள்.

ஒவ்வொருமுறை ஊருக்குக் கிளம்பும் போதும் இதே சிக்கல்தான். வேதா குழந்தையாக இருந்தவரை எதுவும் சொல்லாமல் என்னுடன் வந்துவிடுவாள். அப்போதும் என் கணவர் எங்களுடன் வர மாட்டார். நான் தென்காசியில் இருந்து கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு வருவார். அந்த ஒருநாள் அங்கு தங்குவதே முள் மேல் இருப்பதுபோல் இருக்கும் அவருக்கு. மறுநாள் கிளம்பிவிட வேண்டும்.

இப்போது மகளும் பருவ வயதுக்கு வந்துவிட்டாள். அப்படியே அப்பாவை உரித்து வைத்தது போல், கூட்டம், சத்தம், பிரைவசி இல்லை, இப்படி நிறைய சொல்கிறாள். ஆரம்பத்தில் இதெல்லாம் எனக்கு மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும், குடும்பத்தின் அருமையும், உறவுகளின் பெருமையும் தெரியாதவர்களுக்கு அதைப் பேசி புரிய வைக்க முடியாது.

எனக்கு உறவுகள் வேண்டும், நான் கிளம்புகிறேன் என்று தனியாகக் கிளம்பப் பழகி விட்டேன். என்ன, ஒவ்வொருமுறை போகும்போதும், எல்லா உறவுகளும் குடும்பத்தோடு இருக்கும் போது, நான் மட்டும் தனியாக இருப்பேன். ஆனால் அந்தத் தனிமை அங்கே தெரியவே தெரியாது என் மகள் நேரத்துக்கு சாப்பிட்டாளா, கணவர் என்ன செய்தார் இப்படி யோசிக்கக்கூடத் தோன்றாது.

ஆரம்பத்தில் என் வீட்டு உறவுகள் இதற்காக மிகவும் வருத்தப்பட்டார்கள்.

“என்ன மாதவி, உன் வீட்டுக்காரர் மட்டும் வரமாட்டேங்கறாரு? இங்கே அவருக்கு சௌகரியப்படலையா? கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. ஆனா ஒவ்வொரு முறையும் நீ மட்டும் தனியா வந்தா அக்கம்பக்கம் பாக்கறவங்க என்ன நினைப்பாங்க? அவரையும் வரச் சொல்லலாமே.”

“வேலை சரியா இருக்கு மா. இங்க வந்தா சிக்னல் சரியா இல்லை. ஃபோன் ஒழுங்கா எடுக்கறதில்ல. அதனாலத்தான் அவரால வர முடியல மா.”

இப்படி ஒவ்வொரு முறையும் பொய்யைச் சொல்லி சமாளிக்கிறேன். அதேபோல் என் மகளுக்கும் தொடர வேண்டியதாகப் போய்விட்டது.

“என்ன மாதவி, வேதாக் குட்டியைக் கூட்டிட்டு வரலையா? ஒத்த புள்ளையைப் பெத்து வச்சிருக்கே. அதையும் இப்படி ஒத்தைல விட்டுட்டு வந்தா எப்படி நம்ம பிள்ளைகளோட எல்லாம் பழகும். நாலு பேரோட பழகினாத்தானே, கட்டிட்டுப் போற வீட்ல எல்லாரையும் ஒத்துப் போக்கும் அப்பாவைப் போலவே ஒத்த புள்ளையா, தனிக்காட்டு ராணி மாதிரி வளர்க்கறே போல. “

இப்படி ஆளாளுக்கு ஒன்று சொல்வார்கள். நான் வழக்கமாக அதே பொய்யைச் சொல்லி சமாளிப்பேன்.

“இல்ல மதனி, அவளுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு, அதுதான். இல்லேன்னா கூட்டிட்டு வந்திருப்பேன்.”

வருடங்கள் கழியக் கழிய என் மனதில் இருக்கும் சங்கடத்தை உறவுகள் புரிந்து கொண்டார்கள் போலும். அதனால் குடைந்து குடைந்து கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டார்கள். சம்பிரதாயத்திற்காக வேதாவும், வீட்டுக்காரரும் வரலையா என்று கேட்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்.

நானும் இதற்காக மிகவும் கவலைப்படுவதை எல்லாம் விட்டுவிட்டேன். கதம்பம் அனைவருக்கும் பிடிப்பதில்லையே. ஒற்றை ரோஜாதான் பிடிக்கும் என்று அடம் பிடிப்பவர்களிடம் கதம்பத்தின் அருமையை எப்படிப் புரிய வைப்பது?

எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படி, கதம்பமான உறவுகளுடன் ஒரு வாரம் இருந்தால்கூட, அது அந்த வருடத்திற்கான முழு சக்தியையும் கொடுத்து விடுகிறது. என் கணவருக்கும், மகளுக்கும் மட்டும் இது கூட்டம், கூச்சல், ஒத்து வராது என்பது போல் தோன்றுகிறது.

பரவாயில்லை, என்ன செய்வது? நான் குடும்பம் ஒரு கதம்பம் என்பதை ரசிக்கிறேன். அவர்களுக்கு அந்த ரசனையில்லை.

பலத்த சிந்தனைகளுடன் தென்காசி வந்து சேர்ந்தேன். வழக்கமான அதே கேள்வியுடன் இந்த கதம்பம் மணக்க ஆரம்பித்தது.

“என்ன மாதவி, மருமகனும், பேத்தியும் வரலையா? வேலை சரியா இருக்கு என்ன?”

“ஆமாம் மா.”

சொல்லி விட்டு ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன். எனக்கு சந்தோஷம் தருவதை நான் ஏன் தியாகம் செய்ய வேண்டும்.

ஆனாலும் குடும்பமாக இருந்த உறவுகளின் கூட்டத்திற்கு நடுவில் நான் மட்டும் தனியாக நிற்பது போன்ற ஒரு உணர்வு அவ்வப்போது எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    குப்பனுக்காக கடவுளே வருவார் (சிறுகதை) – முகில் தினகரன்