2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“சாவித்திரி அக்கா எங்கேம்மா” என்று கேட்ட மகளைப் பார்த்த லட்சுமிக்கு பெருமிதமாக இருந்தது. சாதாரணமாகவே நல்ல அழகியான சுமதி, பட்டுப்புடவையில்… புதுப்பெண் அலங்காரத்தில் வானத்து தேவதையாய் ஜொலித்தாள்.
இன்று காலையில் அவள் கழுத்தில் குடியேறியிருந்த அந்தப் புது மஞ்சள்சரடு அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.
“என்னம்மா நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்… நீ பாட்டுக்கு என்னையே பார்த்துட்டு நிற்கிறே? சாவித்திரி அக்கா எங்கேம்மா?”
அவள் மீண்டுமொரு முறை கேட்டதும் சுதாரித்துக் கொண்ட லட்சுமி, “அவ உன்னோட சாந்தி முகூர்த்தக் கட்டிலை அலங்காரம் பண்ணிட்டிருக்கா“ என்றாள் சன்னமான குரலில்.
“அப்படின்னு நீ சொல்றே… ஆனா மாப்பிள்ளையோட அம்மா வந்து என்கிட்ட ‘என்ன சாந்தி முகூர்த்தம் அறை அப்படியே கிடக்கு… கட்டில் அலங்காரம் பண்ணலையா?’னு கேட்டுட்டுப் போறாங்க!”
குழம்பிப் போன லட்சுமி, “இவதானே வலிய வந்து “தங்கச்சி ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நான்தான் அலங்காரம் பண்ணுவேன்னு சொல்லிட்டு ரூமுக்குள்ளார போனா?” சொல்லிக் கொண்டே சாந்தி முகூர்த்தத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்தாள் லட்சுமி.
அறையும் கட்டிலும் எந்தவித அலங்காரமும் செய்யப்படாமல் அப்படியே கிடக்க கோபமானாள். “இவளையெல்லாம் நம்பி ஒரு காரியத்தை ஒப்படைச்சேன் பாரு… என்னை சொல்லணும்”
வேகமாக அறைக்கு வெளியே வந்த லட்சுமி, “இப்ப யாருகிட்ட இந்த வேலையை ஒப்படைக்கிறது? நேரம் வேற ஆயிட்டேயிருக்கு… கொஞ்சம் சுறுசுறுப்பாச் செய்யணுமே?” யோசித்தாள்.
“கரெக்ட்… பெரிய அத்தைதான் சரியான ஆளு” என்று தனக்குள் முடிவெடுத்தவள் பெரிய அத்தையைத் தேடிப் பிடித்து பொறுப்பை ஒப்படைக்க
“அதனாலென்ன… நம்ம சுமதியோட சாந்தி முகூர்த்தத்துக்கு நான் செய்யாமல் வேற யார் செய்வாங்க?” மகிழ்ச்சியுடன் பூக்கூடையையும், பழக்கூடையையும் எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் சென்றாள் பெரிய அத்தை.
“அப்பாடா…” நிம்மதியான லட்சுமிக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது, “ஆமாம் சாவித்திரி எங்கே?” வீடு முழுதும் தேடினாள்.
எங்கும் அவள் இல்லை. “ஒருவேளை கோயிலுக்குப் போயிருப்பாளோ?”
அப்போது, மொட்டை மாடியிலிருந்து “தப… தப”வென ஓடி வந்த சிறுவர்களை நிறுத்தி, “டேய்… சாவித்திரி அக்காவை எங்காவது பார்த்தீங்களாடா?” கேட்டாள்.
“வந்து… சாவித்திரி அக்கா… சாவித்திரி அக்கா…” சொல்ல முடியாமல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான் அந்தச் சிறுவன்.
“சொல்லுடா சாவித்திரி அக்கா எங்கே?” பரபரப்பானாள் லட்சுமி.
“மொட்டை மாடியில் தனியா உட்கார்ந்து அழுதிட்டிருக்காங்க” என்றான்.
“என்ன? அழுதிட்டிருக்கா?…
மொட்டை மாடியை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் சென்ற லட்சுமி இடப்புற கைப்பிடி சுவரோரம் முகத்தை முழங்கால்களுக்கு நடுவில் புதைத்துக் கொண்டு குலுங்கி கொண்டிருந்த மகளைப் பார்த்தது நெகிழ்ந்து போனாள்.
திருமணமாகி ஒரே வருடத்தில் கணவனுடன் பிணக்கு ஏற்பட்டு அவனைப் பிரிந்து வந்து தாய் வீட்டோடு தங்கி விட்ட தன் மூத்த மகன் சாவித்திரி மீது அவளுக்கு எப்போதுமே தனிப்பாசம் உண்டு. ஊரே அவளை வாழாவெட்டி என்று சொன்னாலும், “அவள் எங்க வீட்டு மகாலட்சுமி… அவ வந்த நேரம்தான் எங்க குடும்பத்தில் செல்வ செழிப்பே வந்துச்சு… அவ புகுந்த வீட்டுக்கு அந்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை” என்று அவளை விட்டுக் கொடுக்காமல் பேசுபவள் லட்சுமி.
மெல்ல மகளருகே வந்தமர்ந்து, அவள் தோளைத் தொட, சடாரென்று தலையைத் தூக்கிய சாவித்திரியின் கண்களில் குற்றால சீசன்.
“என்னடா… என்ன ஆச்சு?… யாராச்சும் ஏதாச்சும் சொல்லிட்டாங்களா?”
அவசரமாக கண்ணீரை துடைத்துக் கொண்ட சாவித்திரி, “அம்மா ஃபர்ஸ்ட் நைட் ரூம் அப்படியே இருக்கும்மா!… யாரையாச்சும் அனுப்பி அலங்காரம் பண்ணச் சொல்லும்மா” என்றாள்.
“ஏன் நீ பண்றேன்னு சொன்னியே?”
“இல்லைம்மா… நான் பண்ணலை” விரக்தியாகச் சொன்னாள்.
“அதான்… ஏன்னு கேட்கிறேன்?”
“நான் ராசி இல்லாதவள்… வாழாவெட்டி… என் கையால சாந்தி முகூர்த்த கட்டிலை அலங்காரம் பண்ணினா சுமதிக்கு புள்ள பொறக்காது… அப்படியே பொறந்தாலும் அது புள்ளையாய் இருக்காது” சொல்லும் போது சாவித்திரி கண் கலங்கியது.
“யார் சொன்னது அப்படின்னு?”
“பெரிய அத்தை” என்று சொல்ல வந்தவள், சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டு, “யாரும் சொல்லலை நானேதான் சொல்றேன்” என்றாள்.
லட்சுமியின் கற்பூர புத்தி உடனே கண்டுபிடித்து விட்டது. “இது நிச்சயம் அந்த பெரிய அத்தையின் வேலையாய்த்தான் இருக்கும்… அதனாலதான் நான் சொன்னதும் ‘நம்ம சுமதிக்கு நான் பண்ணாம வேற யார் பண்ணுவாங்க?’னு சொன்னாளா?… இருக்கட்டும்… இருக்கட்டும்… இப்ப வேண்டாம் நாளைக்கு காத்தால கவனிச்சிக்கிறேன்!”.
மனசுக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.
மறுநாள் மாலை புதுமணத் தம்பதிகள் பக்கத்திலுள்ள மலைக் கோயிலுக்குப் புறப்பட்டு சென்றதும், லட்சுமி ஆரம்பித்தாள். அவ்வளவுதான், எல்லோரும் சேர்ந்து அந்தப் பெரிய அத்தையைப் “பிலு…பிலு”வென்று பிடித்துக் கொண்டார்கள்.
“எங்க பொண்ணைப் பத்திப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது உனக்கு? உன்னோட நாரதர் வேலையையெல்லாம் உங்க வீட்டோட வச்சுக்கோ!.. எங்க வீட்டுக்குள்ள வந்து கலகம் பண்ணி வைக்காதே!.. சேவூரிலிருந்து பொழைக்க வந்த நீ… பரம்பரை பரம்பரையாக் கொடி கட்டிப் பறந்த எங்களைப் பத்தியா பேசறே?.. உன்னையெல்லாம் விசேஷங்களுக்கு கூப்பிடுறதுன்னா… ஒண்ணுக்கு ரெண்டு தடவ யோசிக்கணும் போலிருக்கு”
உறக்கம் கலைந்தும் எழாமல் படுத்துக் கிடந்த சாவித்திரியை கூடத்திலிருந்து வந்த சூடான சம்பாஷனைகள் உசுப்ப, “என்ன சத்தம்?” யோசித்தபடியே தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.
அங்கே, பெரிய அத்தையை எல்லோரும் சுற்றி நின்று ஆளாளுக்கு கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தனர். வேகமாய் அவர்களை நெருங்கிய சாவித்திரி, “நிறுத்துங்க…. நிறுத்துங்க” என்று கத்த, சுவிட்சை ஆப் செய்தது போல் எல்லோரும் ஒரே நேரத்தில் ஆஃப் ஆயினர்.
“எதுக்கு எல்லோரும் இப்படிக் கத்திட்டிருக்கீங்க?” கேட்டாள்.
“ஏ.. ராசாத்தி உன்ன மனசு நோகற மாதிரிப் பேசிப்புட்டாளமே இவ?” ஒரு கிழவி சொல்ல,
“அவங்க பேசினது அத்தோடு மறைஞ்சு போச்சு…. மறந்தும் போச்சு!… நானும் இப்பக் கொஞ்சம் தெளிவாயிட்டேன்!.. ஆனா நீங்க அதை மறுபடியும் கிளறி ஆளாளுக்கு அதைப் பற்றி திரும்பத் திரும்பப் பேசி… ஆறின புண்ணை ஆளாளுக்குக் கீறி விட்டு வேடிக்கை பார்க்குறீங்களா?.. இது என்ன நியாயம்?..”
அத்தனை பேரும் வாயடைத்துப் போயினர்.
“நான் பெரிய அத்தைகிட்ட பேசிக்கிறேன்… நீங்கெல்லாம் முதல்ல இந்த இடத்தை விட்டுப் போங்க!” அதிகாரத் தொணியில் சாவித்திரி சொல்ல, அனைவரும் நகர்ந்தனர்.
“திரு…திரு”வென்று விழித்தபடி நின்று கொண்டிருந்த பெரிய அத்தையை நெருங்கி நின்று, தோளைத் தொட்டுத் திருப்பி, “ரொம்ப நன்றி அத்தை” என்றாள்.
சாவித்திரியை ஊடுருவி பார்த்த அத்தை, “என்னம்மா சொல்ற?.. நன்றியா?… எனக்கா?… எதுக்கு?” தயங்கியபடி கேட்க.
“ஆமாம் அத்தை… உங்களுக்குத்தான் நன்றி!… எதுக்குன்னா… ஒருவேளை நான் ஆசைப்பட்ட மாதிரி சுமதியோடு சாந்தி முகூர்த்த ரூமையும் கட்டிலையும் நான் அலங்காரம் பண்ணப் போயிருந்தா, அலங்காரம் பண்ணிட்டிருக்கும்போது என் மனசு நிச்சயம் என்னோட முதலிரவை நினைத்துப் பார்க்கும்!… உடனே மனசு ஏங்க ஆரம்பிச்சுடும்!.. கவலை வந்திடும்!
ஒண்ணு மட்டும் நிஜம் அத்தை.. எந்த வேதனையை வேணாலும் ஒரு பொண்ணு தாங்கிக்கலாம்.. ஆனா அந்த வேதனையை மட்டும்… முடியவே முடியாது!… இப்ப இவங்கெல்லாம் நீங்க என்னை வாழாவெட்டி… அது இதுன்னு பேசி வேதனைப்படுத்திட்டதா சொல்றாங்களே… இது நல்லதுக்குத்தான்!… இல்லாட்டி இன்னேரம் நான் மனசு உடைஞ்சு… நெஞ்சு வெடிச்சு… செத்தாலும் செத்திருப்பேன்!
இப்ப புரியுதுங்களா நான் ஏன் உங்களுக்கு நன்றி சொன்னேன்னு… ஒரு பெரிய சோகத்துல மூழ்க இருந்த என்னை ஒரு சின்ன சோகத்தைக் கொடுத்து… மேலே தூக்கி விட்டுட்டீங்களே அதை நான் மறக்க முடியுமா?” தொடர்ந்து பெரிய அத்தை அழுததற்கான காரணம் சாவித்திரிக்கு புரியவில்லை.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings