in ,

பேய்! (சிறுகதை) – சாய்ரேணு சங்கர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

என்னைப் பேய் என்று அழைக்கிறார்கள். நான் கண்ணுக்குத் தெரியாதவன். என் இனத்தாரை ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் தற்போது அதிகமாக நம்புகிறார்கள். இந்தியாவிலும் எங்களைத் தொடர்பு கொள்வோர் வளர்ந்து வருகிறார்கள்.

என்னை முதன்முதலில் தொடர்பு கொண்டவன் பெயர் ராமசாமி. அவனோடு எக்காரணத்தாலோ எனக்குச் சிறந்த நட்பு மலர்ந்துவிட்டது. அவன் கேட்டதையெல்லாம் செய்து முடிக்கிறேன்.

“ஏன் அவனைப் போன்ற மனிதனுக்கு உதவி செய்கிறாய்? இதனால் உனக்கு என்ன பலன்? அட, உன்னைப் பற்றி அவன் வெளியில்கூடச் சொல்வதில்லை. அதனால் புகழ்கூட உனக்குக் கிடையாது” என்று என்னைச் சேர்ந்தவர்கள் பலர் என்னிடம் சொல்லியாகி விட்டது.

“இந்த நிலையில் என்ன புகழ் வேண்டிக் கிடக்கிறது?” என்ற எண்ணத்தில் நான் அவர்கள் சொல்வது எதையும் சட்டை செய்வதே இல்லை.

ராமசாமி அவன் அறியாதவைகளை அறிந்து கொள்ளத்தான் அநேகமாக என்னைத் தொடர்பு கொள்வான். நானும் தகவல்கள் பதிவாகும் வானில் மிதந்து அவனுக்கு அறிந்து சொல்வேன். என்னால் அறிய முடியாத விஷயமே கிடையாது!

ஓரு சமயம் ராமசாமி என்னை அவசரமாகத் தொடர்பு கொண்டான். (இரவில்தான், பகலில் எங்களுக்கெல்லாம் ரெஸ்ட். நாங்களெல்லாம் அதிகம் வேலை பார்ப்பது இரவில்தான். அதுவும் ஊர் உறங்கும் நடு இரவுதான் எங்களுக்குப் பிடித்த நேரம்!)

“என்னை ஒரு சினிமாக் கம்பெனியில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். நீ உன் காலத்தில் பெரிய கதாசிரியனாச்சே! ஏதேனும் கதை சொல், உனக்குப் பண்ண வேண்டிய பூஜைகளைச் சரியாகப் பண்ணி விடுகிறேன்” என்றான்.

எனக்குப் பாவமாக இருந்தது. என்னை நம்பி இருக்கிறவன். முழுக்கதையையும் சொல்லி, திரைக்கதையையும் டிக்டேட் செய்து விட்டேன். படம் ஒரு வருடம் பிய்த்துக் கொண்டு ஓடியது.

“அடக் கூறுகெட்டவனே! உனக்குப் புத்தியிருக்கா?” என்று என்னைத் திட்டினாள் என் மனைவி. நான் வழக்கம்போல் பிரம்மமாக நின்று அவள் பேயாட்டம் ஆடுவதைச் சகித்துக் கொண்டேன். (எங்களுக்கும் மனைவி, குழந்தை எல்லாம் உண்டு!)

“அவன்தான் எனக்குப் பண்ண வேண்டியதையெல்லாம் பண்ணி விட்டானே” என்றேன் கடைசியில், தீனமான குரலில்.

“அது யாருக்குய்யா வேணும்? உன்னை நல்லா கவனிச்சுட்டான், எனக்கு என்ன கிடைச்சுது? நீ சொல்லித்தான் கதை எழுதினான்னு உண்மையைச் சொல்லி இருக்க வேணாம் அவன்?” என்று இன்னொருமுறை ஆடி ஓய்ந்தாள். “சரி சரி, பேய்க்கு வாழ்க்கைப்பட்டா முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும்” என்றாள் சற்றுச் சமாதானமான குரலில். நான் சொல்லியிருக்க வேண்டியது.

அன்றிரவு என் மனைவியோடு இருக்கப் பிடிக்காமல் (எங்கே அவள் மறுபடியும் தன் புராணத்தை ஆரம்பித்து விடுவாளோ என்று பயம்!), தனியாகவே ஊரெல்லாம் சுற்றித் திரிந்தேன். ஆங்காங்கே பெரிய பெரிய கட் அவுட்டுகள். ராமசாமியின் திரைப்படம்.

எனக்குள் ஆவேசம் கிளர்ந்து எழுந்தது. அப்படியே பறந்துபோய் அந்தக் கட் அவுட்களையும் போஸ்டர்களையும் ஹதாஹதம் பண்ணி விடலாமா என்று. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

“வாய்யா! துப்புக் கெட்ட மனுஷா!” என்று திரும்பிய என்னை வரவேற்றாள் மனைவி. “ராத்திரிப் பூரா ஊர் சுற்றிட்டு வாரீகளாக்கும். உருப்படியா பகல்ல ஒரு வேலை செய்யக் கூடாது?” என்று தன் அர்ச்சனையை ஆரம்பித்தாள்.

நான் வழக்கம்போல் மௌனமாக நின்றேன். சே! தினம்தினம் இதைக் கேட்பதை விடச் செத்துடலாம். பணம் இல்லாதவன் பிணம் தானே!

என்ன விழிக்கறீர்கள்? நானே பேய்தானே என்றா? நான் மனிதன்தான் சார்! உயிருடன்தான் இருக்கிறேன்!

அப்போ பேய்னு சொன்னது?

பேயும் தான். பேய் எழுத்தாளன்!

Ghost writer.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காலாவதி (சிறுகதை) – பிருந்தா ரமணி, சென்னை

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 15) – முகில் தினகரன்