ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ஊருக்கு ஒதுப்புறமாக இருக்கும் பாழடைந்த வீடுதான் “அவள் வீடு”. யாரந்த அவள்? அவள்தான் அழகு தேவதை ‘இன்மதி’.
அமாவாசை நாட்களில் அந்த வீட்டுப்பக்கம் மக்கள் யாரும் தலைவைத்துக் கூட படுப்பதில்லை. ஒருமுறை யாரோ ஒருவர் அந்த வீட்டிற்கு இரவு நேரத்தில் திருடப்போய், மறுநாள் காலையில் வாய்க்கு வெளியே நாக்கு நீண்டு பற்களால் பற்றிக்கொண்டு கொடூரமாக இறந்து கிடந்தான்.
எல்லோரும் பேய்தான் அடித்துக் கொன்றது என்று கூற, அந்த வீடு ‘பேய் விடு’ என்று முத்திரை குத்தப்பட்டது. அவன் சாவிற்கான காரணம் இன்றுவரை சந்தேக மரணமே. அந்த வீட்டுப் பக்கம் யாரும் போவதில்லை.
இன்மதிக்கு என்ன ஆனது? நாம சுமார் 5 வருடங்களுக்கு பின்னோக்கிப் போய் அந்த வீட்டை சுற்றிப் பார்ப்போம். தைரியமாக வாங்க.
வசதியான குடுப்பதின் ஒரே செல்ல மகள் ‘இன்மதி’. குழந்தை பருவம் முதல் குமரியான வரை கேட்டதெல்லாம் கிடைக்கும். எந்தக் குறையும் இல்லை. இவள் சொன்னதே வேதம். இட்டதே கட்டளை, மறுப்பேதும் இல்லை.
உடன்பிறப்புகள் யாரும் இல்லாததால் அதீத பாசம் ஊட்டி வளர்த்தனர். பள்ளிப்படிப்பு முடிந்தது, கல்லூரிக்கு செல்ல வேண்டும். எந்தப் படிப்பை வேண்டுமாலும் படிக்கலாம் என்று பெற்றோர் சுதந்திரம் கொடுத்தனர் என்றால் பொருந்தாது. அவள் விருப்பியதுதானே எல்லாமே!
கல்லூரியில் முதல் பருவத்தேர்வு முடிந்து வீட்டில் இருந்தாள்.
ஒருநாள்… அலைபேசியில் வந்த குறுஞ்செய்தி ஒன்றைப் படித்தவள், முகம் வாடி காணப்பட்டாள். யாரிடமும் அன்று சரியாக பேசவில்லை. பெற்றோர்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் அவள் அன்று ஏனோ மௌனமாகவே இருந்து விட்டாள். அவர்களும் தொந்தரவு செய்ய வேண்டாமென விட்டுவிட்டனர்.
மறுநாள் நெடுநேரமாகியும் இன்மதியின் படுக்கையறை கதவு திறக்கவில்லை. பயந்து போனவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போனால் காத்திருந்தது அதிர்ச்சி. தூக்கில் தொங்கி கொண்டு இருந்தாள் இன்மதி.
அலைபேசியில் ஒரு ஒளிப்பதிவு இருந்தது.
“அன்புள்ள அம்மா அப்பாவிற்கு, நான் எதையும் உங்களிடம் மறைத்தது இல்லை. படிப்பில் எனக்கும் ஒரு பெண்ணிற்கும் போட்டி இருப்பதை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். சமீபகாலமாக அந்தப்பெண் சரியாக படிக்கவில்லை, அதனால் கல்லூரி பேராசிரியர் திட்டிவிட்டார். கோபத்தில் இருந்த அவள், இன்மதி அழகாக இருப்பதால் பேராசிரியர் அதிக மதிப்பெண் கொடுக்கிறார். இருவருக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்று வதந்தி பரப்பி விட்டாள்.
இதனால் அதிர்ச்சியான பேராசிரியர் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் வந்ததால் தூக்கிட்டு இறந்துவிட்டார். என் தோழி அனுப்பிய அந்த செய்தியால் நானும் மனம் உடைந்தேன். காவல்துறை விசாரணை என்றெல்லாம் வரும், எனக்கு அவமானமாக இருக்கிறது. உங்களைப் பிரிகிறேன், மன்னிக்கவும்”
செல்ல மகளை இந்தக் கோலத்தில் பார்த்தவர்கள் உடலில் தீவைத்துக் கொண்டு இறந்தனர். இவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையாமல் ஆவியாக சுற்றுவதாகவும், அமாவசை நாட்களில் வித்தியாசமான சபதங்கள் வருவதகவும் ஊருக்குள்ள ஒரு வதந்தி பரவிட்டு இருக்கு. காட்டு தீயைவிட மிகவும் பயங்கரமானது இந்த வதந்தி. ஒரே ஒரு பொய் எத்தனை உயிர்களை கொன்றுவிட்டது.
(முற்றும்)
Super nice story romba pudchey erunthathu anna