in ,

வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 11) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9     பகுதி 10

தன் தந்தை மாடிப்படிகளில் ஏறி வரும் சத்தம் கேட்டதும், தன்னிடம் ஏதோ முக்கியமாகப்  பேச வருகிறார் என்று பவானி அவசரமாக கண்களைத் துடைத்துக்கொண்டு கடிதத்தை புத்தகத்தில் மறைந்தாள்.

“உட்காரு பவா….” என்று நாற்காலியில் அமர்ந்து கொண்டே கூறினார்.

“பரவால்ல….ப்பா” என்றாள் பயம் கலந்த மரியாதையுடன்.

அவளை நேருக்கு நேர் பார்த்தபடி “சரவணன் எப்படிமா இருக்கான்? கால்ல ரொம்ப அடியா?” என்று பரிதாபம் கலந்த குரலில் கேட்டார்.

“ம்….கால் கணுக்கால் எலும்புல அடிபட்ருக்கு…. மாவுக் கட்டு போட்ருக்காங்க… இன்னும் ஒரு வாரத்துல பிரிச்சிருவாங்க….லாம்…” என்று கவலை தோய்ந்த குரலில் தடுமாறியபடி கூறினாள்.

“ம்…சரவணன் ரொம்ப நல்ல பையன். அவனுக்கு இப்படி ஆகியிருக்க வேண்டாம். எப்படி அடிபட்டதாம்? “என்று வினவினார்.

பவானி சரவணன் தன்னிடம் சொன்ன விவரத்தைச் சொன்னாள்.

“ம்…சரி….இந்த ஊர்லயே போன மாசம் நடந்த சாதி கலவரம் பத்தி உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

“ம்…தெரியும்….பள்ளிகூடத்துல எங்கூடப் படிச்ச மல்லிகா தூக்கு மாட்டிகிருச்சு…” என்றாள்  அழுகை கலந்த குரலில்.

“ஏன்னு தெரியுமா?” என்று நெற்றியைச் சுருக்கியபடிக் கேட்டார்.

“வேற சாதிப் பையனை வீட்டுக்குத் தெரியாமக் கல்யாணம் கட்டிக்கிட்டான்னு பெரிய கலவரமாகி அவனை வெட்டிட்டாங்க. அந்த கோவத்துல இவ இப்படிப் பண்ணிக்கிட்டா…..னு…பானு சொன்னா….”

“ம்…. நம்ம வீட்லயும் அந்த மாதிரி நடந்துருமோன்னு எனக்கு பயமா இருக்கு.” என்றார் அவளை கூர்ந்து பார்த்தபடி…

“இல்லப்பா….நா ….நாங்க அப்படியெல்லாம் பண்ண மாட்டோம்…” என்று கூறிவிட்டு, புத்தகத்தில் மறைத்து வைத்த சரவணனின் கடிதத்தை தைரியமாக தந்தையிடம் நீட்டினாள்.

படித்துவிட்டு “ம்….அப்போ சரவணன் சொல்ற மாதிரி மேலப் படிக்கப் போறியா? அவனுக்காக காத்திருக்கப் போறியா?” என்றபடியே கடிதத்தை அவளிடம் கொடுத்தார்.

“ஆமா…பா….நான் சரவணனைத் தான் கட்டிக்குவே….” சொல்லும்போதே

“செவிட்டு ல நாலு அறை வுட்டா பேச வாய் இருக்காது…..” என்றபடியே பாய்ந்து அடிக்க வந்தாள் பவானியின் அம்மா தனலெட்சுமி.

“ஏய், புள்ளய அடிக்காத… அவள் கையைப் பிடித்துத் தடுத்தார்” ராமலிங்கம்.

 “நீங்க தான் அவளுக்கு இவ்வளவு எடம் குடுத்து வெச்சுருக்கீங்க. பொம்பளப் புள்ளைக்கு இம்புட்டு தைரியம் ஆகாது… வாய்லேயே போடணும்” என்று தனலெட்சுமி கோபத்தில் முகம் சிவக்க கத்தினாள்.

“அது என்ன சொல்லுச்சு அப்டி  வரிஞ்சுக் கட்டிகிட்டு வார…”

“எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுத் தான் இருந்தேன். அப்டி மட்டும் நடந்துச்சு. நா உசிர வுட்ருவேன் பாத்துக்க…” என்று விரல நீட்டி பவானியை எச்சரித்து விட்டு சென்றாள்.

பவானிக்கு கண்ணீர் முட்டியது.

அதை கண்ட ராமலிங்கம், “அழாதப்பா….. எல்லாம் நல்லபடியா நடக்கும்…. கவலப்படாத…. நா உன் பக்கம் இருக்கேன்” என்று தைரியப்படுத்தினார்.

ராமலிங்கம் படிகளில் இறங்கும்போது அங்கு நின்று கொண்டிருந்த தனலெட்சுமி, “பொம்பள புள்ளய ஆம்பள மாதிரி வளர்தீங்க…. இப்ப என்ன ஆச்சு பாத்தீங்கள்ள….” எகிறினாள்.

“சரி…சரி…விடு… எல்லாம் சரியாகும்…”

“ஆமா….நீங்க என்னை அடக்குங்க….அவள அடக்காம…” வாக்குவாதம் மெல்ல தேய்ந்து போனது அவளது செவிகளில். மனம் மிகவும் வாடியது.

ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? அன்பு என்பது இயல்பு தானே. அதற்கு ஏன் இவ்வளவு அடக்குமுறை.? தடையாக இருப்பது எது? முன்னோர்கள் சொல்லி வைத்த சடங்குகளும், சம்பிரதாயங்களுமா?

இல்ல…இல்ல…சாதி தான் முக்கியக் காரணம். சாதி…. தொழிலின் அடிப்படையில் தானே ஏற்பட்டது. குணங்களும் காரணமாக இருக்கலாம். கருத்து வேறுபாடு…. தெய்வத்தைக் கொண்டாடும் விதத்துல இருக்கலாம்.

சொந்தங்களுடன் எப்போதும் உறவாடணும்னு இருக்கலாம். மனசுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனா…அவங்களுக்கு பிடிச்ச மாதிரி….அவங்களுக்கு பிடிச்ச உறவோட நானும் உறவாடணும் மனசார ஏத்துக்கணும்கிறது எந்த விதத்துல நியாயம்?

உடனே செத்துப் போவேன்னு மிரட்ட வேண்டியது…. அன்பை வெச்சு அராஜகம் தான் நடக்குது….. உண்மையான அன்பு எதையும் எதிர்பாக்காது. இப்படியாக பவானி தன் மனதுடன் குமுறிக் கொண்டிருந்தாள்.

மறுநாள், ராக்கம்மா தன் புருஷனோடு மாமியாரையும் நாத்தனாரையும் அழைத்து வந்தாள்.

“அண்ணே… .இன்னிக்கு நல்ல நாளா இருக்கு. அதா…நல்லப் பேச்ச ஆரம்பிச்சிரலாம்னு” மனதில் குழப்பத்துடன் இருந்த ராமலிங்கம் என்ன பதில் சொல்வதென்று தடுமாறினார்.

“எண்ணன்ணே….செவ்வந்தி அக்கா…வ தெரியலயா?” என தன் நாத்தனாரை காட்டிக் கேட்டாள்.

“வாங்க..வாங்க…ஏம்மா…நா மறப்பேனா….அவங்க வெளியூருல இருந்தாலும்  நம்ம குடும்ப விசேஷத்துக்கெல்லாம் விட்டுக்கொடுக்காம வந்துருவாங்களே…” என்று சிரித்தபடி மனதார வரவேற்றார்.

“நல்லா இருக்கீங்களாம்மா?” என்று ராக்கம்மாவின் மாமியாரைக் பார்த்து விசாரித்தார்.

“அண்ணே…. அக்காவோட மவன் சென்னைல….டாக்டர் படிப்பு படிச்சுட்டு….. அதென்ன படிப்புக்…..கா….எனக்கு வாய்ல நுழைய மாட்டேங்குது. எம்.பி.பி.எஸ்; எம்.எஸ். படிச்சுருக்கான். இப்ப ஒரு பெரிய பிரைவேட் ஆஸ்பிட்டல்ல ஒரு வருஷமா வேலை செய்யறான். வரன் பாக்க ஆரம்பிக்கலாம்னு ராக்கம்மாகிட்ட சொல்லி வச்சிருந்தேன். நம்ம பவானி தங்கச் சிலையாட்டம் இருக்கறப்ப நீ எதுக்கு ஊரெல்லாம் தேடறனு இங்க கூட்டியாந்துட்டேன். எண்ணன்ணே….நாஞ் சொல்றது?” என கடகடவெனச் சிரித்தாள் ராக்கம்மா.

பதில் சொல்லாமல் தலையாட்டி புன்னகைத்தார் ராமலிங்கம்.

“அக்கா… நம்ம விக்னேசு ஃபோட்டோவக் குடுங்க… அண்ணே பார்க்கட்டும்” செவ்வந்தி பையிலிருந்து ஃபோட்டாவை எடுத்தவுடன் பிடுங்காத குறையாக வாங்கி தானே தன் அண்ணனிடம் கொடுத்தாள் ராக்கம்மா.

“எப்படி ராசாவாட்டம் இருக்கான், பாருங்கண்ணே. பாருங்க அண்ணீ…. பார்த்துவிட்டு பவானிக்கு இப்ப நேரம் கொஞ்சம் நல்லால்ல….. இரண்டு மாசம் கழிச்சு தான்.. தை மாசத்துல தா ஆரம்பிக்கப் போறேன். பாக்கலாம்…கடவுள் எங்க முடிச்சு போட்ருக்கார்னு பாக்கலாம்…இருந்து சாப்பிட்டுங்க” என்று உபசரித்துவிட்டு ஃபோட்டாவைத் திரும்பக் கொடுத்தார்.

“இல்லண்ணே…. நம்ம வீட்டுல…. அவங்களுக்கு சமைச்சுருக்கேன். நைட் ஊருக்கு கிளம்பறாக”

எல்லாரும் கிளம்பியதும் ராக்கம்மாவின் கணவன் ஆறுமுகம் ராமலிங்கத்திடம்  வந்து “மச்சான், நம்ம பவானிகிட்ட எவனோ கொடக்கூலிப் பய வாலாட்டினாம்ல…. என் மனசு தாங்குமா? ஒரு தட்டு தட்டிட்டேன்ல…. எவனாச்சும் நம்ம குடும்பத்துல தலைய  நீட்டினான்னா தயங்காம என்கிட்ட சொல்லுங்க.  சீவிர்றேன் …..சீவி….” என்று காதில் கிசுகிசுத்தான்.

மூச்சுக்காற்றில் அழுகிய பழ மணம் வீசியது.

ராமலிங்கம் கையெடுத்துக் கும்பிட்டார். “என் குடும்பத்துக்கு  நீங்கள்லாம் உழைக்கும் போது எனக்கென்ன கவலை?”

கோணலாகச் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.

அவனது சிரிப்பைக் கண்டு அவருக்கு வயிறு கலங்கியது. தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து சிறிது பயம் மனதை கவ்வியது.

இரண்டு மாதமும் தனலெட்சுமியும், ராக்கம்மாவும் நச்சரித்துக் கொண்டே இருந்தனர். ராமலிங்கத்தால் மன நெருக்கடியை பொறுத்துக் முடியவில்லை.

பவானியிடம் பேசினார்.

“இனிமேல் என்னால் உன் கல்யாணத்த தள்ளிப்போட முடியாது… நீ யாரை கல்யாணம் கட்டிக்கிட்டாலும் எனக்கு சந்தோசந்தான். சீக்கரம் ஒரு முடிவெடு.”

பவானி சரவணனிடம் பேசினாள். அவன்  “உசிரு போனாலும் பரவால்ல… நா  வரேன்” என்று கிளம்பி வந்தான்.

(வானம் விரியும்… தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 1) – தி.வள்ளி, திருநெல்வேலி

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 2) – கவிஞர் இரஜகை நிலவன்