in ,

ருக்குமணி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

து நடந்து் ஒரு வருடம் இருக்கும்.

வாசல் பக்கமிருந்து யாரோ கூப்பிட்டார்கள்.. மங்களம் எழுந்து போனாள். அங்கே ரோடில் ஒரு பெண் நின்றிருந்தாள். அழுக்குப் புடவை, எண்ணெய் காணாத தலை, கிழிந்த கவுன் போட்ட ஒரு குழந்தை. அப்போதுதான் கவனித்தாள் தோளில் ஒரு களைவெட்டியும் தொங்கிக்கொண்டிருந்தது.

ரோடு ஓரமாக கிடக்கும் புற்களை வெட்டி விடுவதாகமும், கூடவே உள்ளே இருக்கும் காய்கறித் தோட்டத்துக்குள்ளேயும் களைகளை கொத்தி விடுவதாகவும் சொல்லிவிட்டு கொஞ்சம் பணம் கொடுத்து உதவுமாறும் கெஞ்சினாள். கூடவே குழந்தையைக் காட்டி அதற்கு பசி என்றும் சொன்னாள்.

மங்களத்திற்கு பாவமாகத்தான் இருந்தது. சரியென்று சொன்னால் வேலை செய்வாள். ஆனால், பிறகு ஆயிரம் கொடு ஐநூறு கொடு என்று கரைச்சல் செய்வார்கள் என்று நினைத்து வேண்டாம் என்று சொல்லிவிட நினைத்தாள்.

ஆனாலும் குழந்தைக்கு பசி என்று சொல்லிவிட்டதால் மனது லேசாய் இளகியது. அவள் சொன்னது போல புற்களும் நிறையத்தான் முளைத்துத்தான் கிடக்கின்றன. இன்றைக்கு இல்லையென்றாலும் என்றாவது ஒருநாள் வெட்டிவிடத்தானே வேண்டும் என்பதால், ‘பாரும்மா… நீ கேட்டேனு சரி சொல்றேன்… ரெண்டு பக்கமும் வெட்டிவிடு. முன்னூறு ரூபாத்தான் கொடுப்பேன். அப்புறம் தகராறு பண்ணக்கூடாது‘ என்றாள்.

மறுபேச்சு பேசாமல் மடமடவென் உள்ளே வந்தாள், குழந்தையை வாசற்படியில் உட்கார வைத்தாள். தோட்டத்திற்குள் புகுந்து களைகளை வெட்ட ஆரம்பித்து விட்டாள்.

எவ்வளவு கஷ்டத்தில் இருந்தால் இப்படி மறுபேச்சு பேசாமல் வேளையில் இறங்கியிருப்பாள் என்று எண்ணியபடி அந்தக் குழந்தைக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கலாம் என்றெண்ணி வீட்டுக்குள் போனாள்.

மதியம் மீதம் வைத்த விஜிடபுள் புலாவை அப்படியே ஒரு தட்டில் கொட்டி எடுத்துக் கொண்டு, டம்ப்ளரில் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

தட்டுடன் மங்களத்தைக் கண்டவுடன் உட்கார்ந்திருந்தபடியே இரண்டு கைகளையும் நீட்டியது அந்தக் குழந்தை. இரண்டு வயது இருக்கலாம். தட்டை அதனிடம் கொடுத்த மாத்திரத்தில் லபக்லபக்கென் அள்ளித் தின்றது அது.

சட்டென விக்கவும் தலையை தானாகவே தட்டிக் கொண்டது. சத்தம் கேட்டு நிமிர்ந்த அந்தப் பெண், தன் குழந்தை சாப்பிடுவதைப் பார்த்ததும், ‘பார்த்துடி, கீழே சிந்தாமத் திங்கணும்… நீ எங்கே சிந்தாமத் தின்பே…‘ என்றபடி மங்களத்தைப் பார்த்து, ‘அம்மா நான் அவளுக்கு ஊட்டிவிட்டுட்டு அப்புறமா கொத்திவிடறேம்மா…‘ என்றபடி அவளது பதிலுக்குக் கூட காத்திராமல் ஓடிவந்து தனது மகளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

கொஞ்சம் சாப்பிட்டவுடன் அது போதுமென்று முகத்தைத் திருப்பிக்கொள்ள மீதத்தை தானே அள்ளி வாயில் போட்டுக்கொண்டாள் அவள். இவளுக்கும் பசி இருந்திருக்க வேண்டும். ஆனாலும் மகளுக்கு பசி என்றும் மட்டும் கேட்டிருக்கிறாள் என்று நினைத்தபடி ஒன்றிரண்டாய் கழுவிவிட்டு அவள் நீட்டிய தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே திரும்பினாள் மங்களம். மறுகணம் அவளும் வேலையை ஆரம்பித்து விட்டாள்.

கொஞ்சம் டீ போடலாம் என்று நினைத்தபடி சமயற்கட்டுக்குள் போனாள் மங்களம். உடனே மகள் ருக்குமணிதான் நினைவுக்கு வந்தாள்.

‘ஏன்டி… உனக்கு அறிவு இருக்கா… ஆட்டோ ஓட்டறவனை லவ் பண்றேன்றே… அவன் என்னத்த சம்பாதிப்பான், எப்படி உன்னை வச்சி காப்பாத்துவான். அவனுக்கு சவாரி கிடைக்கலேன்னா உன்னை கூலி வேலைக்கு அனுப்புவானேடி… அப்புறம் நீ என்ன செங்கல் தூக்கப் போவியா, இல்லை நூறுநாள் வேலைக்குத்தான்  போவியா… அறிவில்லை உனக்கு… உனக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு… நான் உங்க மாமனுங்ககிட்டே சொல்லி மாப்பிள்ளை பார்க்கச் சொல்றேன்…’

அவ்வளவு சொல்லியும் அன்றைக்கு இரவே அவள் லெட்டரை எழுதி வைத்துவிட்டு அவள் ஓடிப்போனதும் நினைவுக்கு வந்தது.  கண்கள் தானாக கலங்கின மங்களத்திற்கு.

மங்களத்தின் கணவர் ஒரு இன்ஸூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவருக்கு மூன்று தங்கைகள் இருந்து அவரே அவர்களுக்கு கல்யாணமும் செய்து வைத்து கடன்காரனாகிப் போனதால், மிகவும் சிக்கனமான வாழ்க்கைத்தான் வாழ முடிந்தது மங்களத்தால்.

ருக்குமணிக்கு பத்தொன்பது வயதுதான் ஆகியிருந்தது. அதற்குள் இப்படி செய்து விட்டாளே என்று இருவரும் நொடிந்துதான் போனார்கள்.

ஆட்டோக்காரனை கட்டிக்கொண்டு என்ன வாழ்க்கை வாழமுடியும். கொஞ்சமும் யோசிக்காமல் ஒடி விட்டாளே என்று தினம் தினம் அழுதுக்கொண்டிருந்தாள் மங்களம். இப்போதுதான் கொஞ்ச காலமாக அதையெல்லாம் மறந்திருந்த மங்களத்திற்கு இந்த கூலிக்கார பெண் வந்து ருக்குமணியை ஞாபகப்படுத்திவிட்டாள்.

இப்போது ருக்குமணி எப்படி இருக்கிறாளோ. நல்ல வாழ்க்கை வாழ்கிறாளோ, இல்லை இவளைப் போலவே அவளும் கூலி வேலைக்குப் போகிறாளோ என்று நினைத்துக் கொண்டாள் மங்களம்.

மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. அவளுக்கு இருந்த காதலுக்கு இந்நேரம் அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்திருக்கும்.

‘அம்மா‘ என்று குரல் கொடுத்து அவளது சிந்தனைகளைக் களைத்தாள் அந்தப் பெண்.

மங்களம் வெளியே வர, ‘அம்மா வேலை முடிஞ்சதும்மா… நான் கிளம்பறேன்…‘ என்றாள் அவள்.

‘கொஞ்சம் இரு… டீ போட்டிருக்கேன்… கொண்டு வர்றேன்…‘ என்று நகர்ந்தவளுக்கு குழந்தையின் ஞாபகம் வர  திரும்பிப் பார்த்தாள். அது வாசற்படியின் ஒரு ஓரத்தில் சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தது.

‘ச்சே… என்ன கொடுமை’ என்று நினைத்தபடி உள்ளே போனவள், டீயை கலக்கி இரண்டு கப்புகளில் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்து  ஒரு கப்பை அவளிடம் நீட்டினாள்.

அவள், தானாகவே சொன்னாள். ‘எங்க ஊரு மணப்பாரைமா… ஊருல பஞ்சம். அதான் இங்கே வந்துட்டோம். என் கூட்டுக்காராரு கொத்து வேலைக்குப் போறாருமா… நான் இப்படி கலைக்கொத்தி தூக்கிக்கிட்டு அலையறேன்‘ என்றவள், அவ்வளவு சூட்டோடும் டீயைக் குடித்து முடித்து குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.

‘கொஞ்சம் பொறு…‘ என்றபடி உள்ளே போனவள், முன்னூறு ரூபாயை எடுத்தாள். ஐம்பது ரூபாய் சேர்த்து தரலாமா என்று யோசித்தவள், வேண்டாம் ருக்குமணியின் புடவைகள் இரண்டு அப்படியே இருக்கின்றன, அதை இனியும்  வைத்திருந்து என்ன பயன், இவளிடம் கொடுத்துவிடலாம் என்று எண்ணி அதையும் எடுத்து வந்தாள்.

அவைகளை வாங்கிக் கொண்டவள், ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு, ‘ரொம்ப சந்தோஷம்மா… நீங்க நல்லாயிருக்கனும்‘ என்று சொல்லிக்கொண்டு கிளம்பி விட்டாள்.

ரொம்ப நேரம் அவளும் அவளது குழந்தையும் மங்களத்தின் கண்களுக்குள்ளேயே இருந்தனர்.

ஓரிரு மாதங்களில் ரவியை தஞ்சாவூருக்கு மாற்றிப் போட்டார்கள்.  இவர்களும் ஒரு வீடு பார்த்துக் கொண்டு தஞ்சாவூருக்கே வந்து விட்டார்கள். இடையில் மங்களத்திற்கு பிரஷர் வந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தாள். அதிக வேலைகளும் அவளால் செய்ய முடியவில்லை.

அத்துடன் புது வீடும் கொஞ்சம் பெரிதாக இருக்க, ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்து விட்டார்கள்.  இங்கேயும் முன்னால் குடியிருந்தவர்கள் காம்பவுண்டிற்குள் இருந்தவர்கள் பூச்செடிகள் வைத்திருந்தார்கள்.  காம்பவுண்டுக்கு வெளியேயும் முட்டியளவுக்கு புற்கள் முளைத்ததுதான் இருந்தன. யாராவது கிடைத்தால் அவைகளை வெட்டிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டுதான் இருந்தாள் மங்களம்.

xxxxxxxxx

து இன்று நடந்தது.

வாசல் பக்கமிருந்து யாரோ கூப்பிடும் சத்தம் கேட்க சோபாவில் உட்கார்ந்திருந்த  மங்களம் வேலைக்காரியைக் கூப்பிட்டு யாரென்று பார்க்கச் சொன்னாள். வேலைக்காரி போய் பார்த்துவிட்டு அங்கிருந்தே சொன்னாள்.

‘அம்மா… யாரோ தோள்ல குழந்தையோட நிற்கிறாங்கம்மா… புல்பூண்டுகளை வெட்டி விடலாமானு கேட்கறாங்க… இருநூறு ரூபா குடுத்தா போதும்ங்கறாங்க… ‘ என்றாள்.

மங்களம் எழுந்தாள். இரண்டு எட்டு வைத்தவுடனேயே கதவிடுக்கு வழியே லேசாய் அவள் தெரிந்தாள். பார்த்த மறுநிமிடம் திரும்பி நின்றுகொண்டு, ‘வேண்டாம்னு அனுப்பிடு…‘ என்றுவிட்டு மடமடவென உள்ளே வந்துவிட்டாள்.

சாயங்காலம் வீட்டிற்கு வந்த கணவனிடம், ‘இந்த ஊரு வேண்டாம்ங்க… வேற ஊருக்கு போயிடலாம்ங்க… ‘ என்றாள்.

சிரித்தபடி, ‘விளையாடறியா… நினைச்ச உடனே போறதுக்கு நான் என்ன சொந்தத் தொழிலா பண்றேன்… அதுசரி… ஊரு பிடிக்கலையா இல்லே வீடு பிடிக்கலையா…‘ என்றார்.

‘இத்தனை வருஷத்துக்கப்புறம் இன்றைக்கு ருக்குமணியை பார்த்தேன்… பிச்சைக்காரிமாதிரி நின்னா… கையில ஒரு குழந்தையோ… வயித்துலயும் ஒரு குழந்தையோட…‘ என்று எப்படி சொல்லுவாள்.  கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்தாள் அவள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கைத்தலம் பற்ற (சிறுகதை) – ✍ சாய்ரேணு சங்கர்

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 6) – முகில் தினகரன்