in ,

பயணங்கள் முடிவதில்லை (சிறுகதை) – ஹேமா பிரேம்

அன்று ஞாயிற்றுக்கிழமை… கோலம் போட வேண்டும், பால் வாங்க வேண்டும் என்கிற கட்டாயங்கள், காலை நேரத்திற்கே உண்டான பரபரப்புகள். எப்போதும் உடன் தூங்கும், பேத்தி சஞ்சனா செய்யும் இடையூறுகள் இவைகள் எதுவுமே அல்லாமல், ஆசைத் தீர நன்றாய் தூங்கி, மெதுவாக எழுந்து அமர்ந்தார் பார்வதி.

‘ம்… எத்தனை வருஷம் ஆச்சு இப்படி தூங்கி, கல்யாணத்துக்கு முன்னாடி தான் இப்படி கமிட்மெண்ட் இல்லாம தூங்கினதா ஞாபகம்’ என நினைத்தவாறே காலைக் கடன்களை முடித்துவிட்டு வெளியே வந்தபோது…

அங்கு “குட்மார்னிங் பாரு” என்றபடியே, இதமான சூட்டில், நாசியை ஈர்க்கும் நறுமணத்தோடு, தானே தயாரித்த பில்டர் காபியைக் கையில் கொடுத்தார், பார்வதியின் கணவர் சங்கரன்.

“ஓ… தேங்க்யூ சோ மச்” மெல்லிய சிரிப்போடு காபியை வாங்கிக் கொண்டு பால்கனியில் சென்று அமர்ந்தவர், மற்ற நாட்களைப் போலப் பரபரக்காமல், ஒரு பெரிய இடைவெளிக்குப் பின்பு, காபியின் ஒவ்வொரு மிடரையும் நிறுத்தி நிதானமாக ரசித்து ரசித்துக் குடித்து முடித்தார். 

பின்பு படிக்க வேண்டும் என வாங்கி, மாதக் கணக்கில் படிக்காமலே வைத்திருந்த புத்தகத்தை எடுத்து, அதன் பக்கங்களை அங்கமங்கமாய் கண்களின் வழி மூளைக்கும், மனதிற்கும் பருகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சங்கரன் அவரையே அமைதியாய் பார்ப்பதைப் போல உணரவே… புத்தகத்திலிருந்து விலகி, என்ன என்பதைப் போலக் கண்களால் அவர் கேட்க, ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்துப் பார்வதியின் கைகளைப் பற்றிக் கொண்டு அருகில் வந்து அமர்ந்து கொண்டார், சங்கரன். 

“இன்னிக்கு நோ நான்வெஜ். எனக்குப் பிடிச்ச வெஜிடபிள் பிரியாணி சூடா சாப்பிடணும். கூடக் கத்திரிக்காய் கிரேவியும், வெங்காயப் பச்சடியும் தான்” எனப் பார்வதி சொல்ல

“ம்… சரி, நீ ரெஸ்ட் எடு அதையும் நானே செஞ்சுத் தரேன். இனிவரும் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் எனக்கான விடுமுறை அல்ல, அது உனக்கானது” என்றார்.

அப்போது, ஒரு கருப்பு நிற சட்டையையும், நீல நிற பான்டையும் எடுத்துக் கொண்டு அவர்களின் மகன் திவாகர் அங்கே வர, புரிந்து கொண்டார் பார்வதி.

அவன் பேசுவதற்கு முன்பாக அவரே முந்திக் கொண்டார்.

“திவா எப்பயும் சொல்லுவியே சும்மா தானே இருக்கன்னு. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே… நீயும் சும்மா தானே இருப்ப. இன்னைக்கு ஒரு நாளாவது நீயே உன் வேலையைச் செய்,  அயன் பண்ணிக்கோ திவா.” என்றவரின் குரலில் இதுவரை உணராத வித்தியாசமும், அழுத்தத்தையும் உணர்ந்து அமைதியாய் நகர்ந்து விட்டான், திவாகர்.

பின்பு வெளியே கேட்டைத் திறந்து கொண்டு, மருமகள் சந்தியாவும், 4 வயது பேத்தி சஞ்சனாவும் வருவதைக் கண்டவருக்கு நேற்று நடந்தது நினைவு வந்தது.

“அம்மா சந்தியா, சஞ்சு தான் இப்ப வளந்துட்டா இல்ல. ராத்திரி எல்லாம் நடுவுல ரொம்ப எந்திரிக்கிறது இல்லை. இருந்தாலும் மத்த நாட்கள்ல நான் பாத்துக்குறேன். ஆனா ஞாயிற்றுக்கிழமை உனக்கு லீவு தானே. அதனால சனிக்கிழமையில மட்டும் சஞ்சுவை, நீ உன்கிட்டேயே தூங்க வச்சுக்கோ மா” என அவளிடம் சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்து விட்டார்.

அதன் விளைவாய், ஞாயிற்றுக்கிழமை தூக்கம் கெட்டுப் போன கடுப்பில், மாமியாரை கண்டும் காணாதாவாறு கடந்து சென்றாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சங்கரனிடம், “என்ன பாக்குறீங்க, ஏற்கனவே சொன்னது தான். இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகள் எனக்கானது, அதில் எனக்குப் பிடித்த மாதிரி நான் எனக்காக வாழப் போகிறேன்.”

“சரி… பிரியாணி செய்யப் போகலையா?” என்றதும், சிரித்துக் கொண்டே சங்கரன் அடுப்படிக்கு விரைந்தார்.

மதியம் சாப்பிட்டு, மாலை நேரத்தில் பார்வதியும், சங்கரனும் பக்கத்தில் இருக்கிற பூங்காவில் காலாற நடந்து, மனதார நிறைய பேசிக் கொண்டிருந்தனர். 

பின்பு சற்று நேரம் அமர்ந்து விட்டு, வீட்டிற்குச் செல்லலாமென நினைத்து அங்கே ஒரு பலகையில் அமர்ந்தனர்.

பார்வதி சேலையில் ஈரம் பட்டதைப் போல உணர, “அடடா ஏதோ ஈரத்தை கவனிக்காமல் அப்படியே உட்கார்ந்து விட்டேன் போலயே” என எழுந்து பார்த்தவரின் சுற்றம் வேறு மாதிரியாக இருந்தது.

பேத்தி சஞ்சனா, தூக்கத்திலேயே சிறுநீர் கழித்து இருக்க, அது உடன் படுத்திருந்த அவரின் சேலையையும் நனைத்திருந்தது. கண்களைக் கசக்கி விட்டுப் பார்த்த அவருக்கு, அப்போது தான் தெரிந்தது எல்லாம் கனவென்று.

‘வயதான பிறகும் ஏக்கமும் தீர்ந்தபாடில்லை, பயணமும் முடிந்த பாடில்லை’ என நினைத்தவாறே நேரத்தைப் பார்க்க அலைபேசியை எடுத்தார்.

அது மணி அதிகாலை 5 எனக் காட்டியது. கூடவே கிழமையையும் தான். அந்த ஞாயிற்றுக்கிழமை அவரைப் பார்த்து நக்கலாகச் சிரிப்பது போல இருந்தது.

“பாரு! என்னமோ தெரியலடி…  தூக்கமே வரல, ஒரு டம்ளர் காப்பிப் போடேன்” பின்னால் கேட்ட சங்கரனின் குரல், ஒருவிதமான சலிப்பை உண்டாக்குவதைத் தவிர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார், பார்வதி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எண்ணிப் பார்ப்பீர் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    ராஜபேரிகை (நூல் விமர்சனம்) – தி. வள்ளி, திருநெல்வேலி