இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஜானவி விழுந்து விழுந்தது சிரிக்கும் சத்தமும், யாதவ் “ஐயோ அம்மா” என முனகும் சத்தமும், வெளியே இருந்த கவின், சார்விக் மற்றும் மகிழவனின் வயிற்றில் புளியைக் கரைத்தது
அவர்கள் அந்த அறையை அணுகும் நேரம், கதவைத் திறந்து கொண்டு சிரிப்புடன் வெளியே வந்தாள் ஜானவி
குழப்பத்துடன் அவர்கள் அறைக்குள் எட்டிப் பார்க்க, “என்ன பார்க்கறீங்க? உங்க பிரண்டு எங்கனு தேடறீங்களா? உங்களோட அதி புத்திசாலித்தனமான திட்டத்தால, உங்க பிரண்டு கட்டில்ல கவுந்து போய்க் கிடக்கறாரு, சீக்கிரம் போய்த் தூக்கி விடுங்க” என்று கூறி விட்டுச் சென்றாள் ஜானவி
அவசர அவசரமாக உள்ளே சென்றவர்கள், அங்கு உடைந்து போன கட்டிலில் கிடந்தவனின் நிலையைக் கண்டு, சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றனர்
ஆனால் அவர்களைப் பார்த்த அவனோ, கடுகடுவென முறைத்துக் கொண்டு, “டேய் இதுக்கெல்லாம் யார் காரணம்னு எனக்கு நல்லாத் தெரியுது, என்னோட அழக ரசிக்காம முதல்ல வந்து தூக்கி விடுங்கடா” என்றான்
அவர்கள் தூக்கிய பின்பே தன் இடுப்பு சுளுக்கிக் கொண்டதை அறிந்தவன், “ஏன்டா நான் உங்களுக்கு என்னடா பாவம் செஞ்சேன், ஏற்கனவே அவ என்னை பயங்கரமா கலாய்ச்சுட்டு இருக்கா. இப்ப இதுவும் சேர்ந்துடுச்சு, இனி அவ என்ன எப்படிடா மதிப்பா” என புலம்பினான் யாதவ்
“இல்ல மச்சி உங்க ரெண்டு பேருல யாராவது கட்டில்ல உட்காந்தா, அது கொஞ்சம் ஆடற மாதிரி தான் செட் பண்ணினோம். அப்படி லைட்டா கீழ விழுந்து உங்க ரெண்டு பேருல ஒருத்தருக்கு அடிபட்டா, இன்னொருத்தங்க அவங்களுக்கு உதவி செய்யற சாக்குல அப்படி இப்படினு ரொமான்ஸ் ஸ்டார்ட் ஆகும்னு நினைச்சோம் டா…” என மகிழவன் கூற
“ஆனா அது இப்படி மொத்தமா உடைஞ்சு உன் இடுப்பை டேமேஜ் பண்ணும்னு நாங்க நினைக்கவே இல்ல” என்றான் சார்விக்
“அடப்பாவிகளா… உங்க திட்டத்துல தீயக் கொளுத்த. ஆனா அவ கட்டில்ல உட்கார்ந்தாடா, நான் தான் வேணும்னே அவகிட்ட வம்பிழுக்கறதுக்காக, என் பெட்டுல நீ எப்படி உட்காரலாம்னு அவளை எழுப்பி விட்டுட்டு அதுல எகிறி குதிச்சேன். இப்போ எனக்கே அது பாக் பயர் ஆகிடுச்சே” என யாதவ் கூறிக் கொண்டிருந்த வேளை, செல்லி பாட்டியுடன் ஜானவி பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது,
“அடேய் போச்சுடா, உன் பொண்டாட்டி செல்லிகிட்ட வத்தி வைக்கப் போய்ட்டா” என பதறிய படி யாதவையும் அழைத்துக் கொண்டு மற்ற மூவரும் வெளியே வர, செல்லி பாட்டி அவர்களைக் கனல் விழிகளால் நோக்கினார்
“டேய்… இவ வேற பாட்டிகிட்ட என்ன சொன்னானு தெரியலையே. அது பார்க்கற பார்வையே சரியில்லையே” என யாதவ் மெல்லிய குரலில் கூறவும்
“அங்க என்னடா பேச்சு?” என அதிகாரமாக வினவினார் செல்லி பாட்டி
“அது வந்து செல்லி, ஒண்ணும் இல்லையே” என்று சார்விக் சமாளிக்க
“டேய்… இன்னைக்கு யாதவுக்கும் ஜானவிக்கும் மொத ராத்திரியா? இல்ல, உங்க நாலு பேருக்குமா?” என பாட்டி கேட்கவும், என்ன சொல்வதெனத் தெரியவில்லை அவர்களுக்கு
“போங்க டா… போய் நேரங்காலமா தூங்கற வழியப் பாருங்க.. என் பேத்தி என் கூடத் தூங்கட்டும்” என்று கூறிவிட்டு முன்னே செல்ல, அவரைப் பின் தொடர்ந்த ஜானவி, யாதவைப் பார்த்துக் கண்சிமிட்டி விட்டு சிரிப்புடன் சென்றாள்
அதைக் கண்ட நால்வரும், திருதிருவென விழித்துக் கொண்டு நின்றனர்
“மச்சான்… என்னடா நடக்குது இங்க?” என்று மகிழவன் கேட்க
“மச்சி உன் பொண்டாட்டி நல்லவளா இல்ல கெட்டவளா டா” என வினவினான் கவின்
“எனக்கும் அதான் மச்சான் புரியல, இவ என்ன பிளான்ல இருக்கா, இன்னும் என்னென்ன செய்யக் காத்துருக்கானு என்னால யூகிக்கவே முடில டா” என யாதவ் கூற
“நீயெல்லாம் ஒரு I.P.S.. தூ.. பொண்டாட்டி என்ன நினைக்கறானு கூடக் கண்டுபிடிக்கத் தெரியல” என மகிழ்வனும் கவினும் கிண்டல் செய்தனர்
அதன் பிறகு அவர்கள் நால்வரும், யாதவின் அறையிலேயே தரையில் போர்வையை விரித்துப் போட்டு படுத்துறங்க ஆரம்பித்தனர்
மறுநாள் காலை விடியல் என்னவோ ரம்மியமாகத் தான் இருந்தது, ஆனால் அது யாதாவிற்கு அல்ல, விபினுக்கும் சாதனாவுக்கும்
காலை டிபனுக்கு இருவரும் விபின் வீட்டிலிருந்து யாதவ் வீட்டிற்குத் தங்கள் குடும்பத்துடன் வந்தனர்
அப்பொழுது ஜானவி மாதுரியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ஜானவியின் தாயும் யாதவின் தாயும் சமையலறையில் இருந்தனர். ஜானவியின் அருகில் சாதனா வந்தமர, விபின் யாதவைத் தேடி அவன் அறைக்குள் சென்றான்
சாதனா ஜானவியிடம் சிறிது நேரம் அது இதென்று பேசிக் கொண்டிருந்தவள், பின்பு மெதுவாக, “அப்பறம் வந்து…நேத்து நைட்டு அண்ணி…” என்று இழுத்தாள்
அதற்குப் பதிலாய் நக்கல் சிரிப்புடன், “அத உன் அண்ணன்கிட்டயே கேளு” என்று பதிலுரைத்தாள். அதைக் கேட்ட சாதனாவோ, குழப்ப முகபாவத்துடன் மாதுரியை ஏறிட்டாள்.
“நான் கேட்டதுக்கும் இதே பதிலைத் தான் சொன்னா சது…” என்றாள் மாதுரி
பின்பு யாதவைக் காணச் சென்ற விபின், பேயறைந்த முகபாவத்துடன் வெளியே வர, மாதுரியும் சாதனாவும் மேலும் குழம்பிப் போனார்கள்
ஜானவியிடம் வந்த விபின், “என்ன ஜானவி, யாதவ் ரூம்ல இந்த கவினும் மகிழவனும் சார்விக்கும் என்ன செய்யறாங்க?” என வினவினான்
அதற்கும் ஜானவி, “ஹ்ம்ம்.. அதையும் யாதவ்கிட்டயே கேளுங்க” என்றாள்
கடுப்பாகிப் போன மாதுரி, “ஏய் என்னைக் கொலைகாரி ஆக்காத, ஒழுங்கா என்ன நடந்துச்சுனு சொல்லிடு” என்று தனது கைகளால் அவளது கழுத்தைப் பற்றியபடி கேட்கவும், சிரித்துக் கொண்டே அவளது கரங்களை விலக்கி விட்டு நடந்ததை விவரித்தாள் ஜானவி
அதைக் கேட்ட மாதுரி, வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க, விபினும் சாதனவுமோ திருட்டு முழி முழித்தனர்
அவர்களது பார்வையைக் கொண்டே கண்டு கொண்ட ஜானவி, “ஹேய்… நீங்களும் இந்தத் திட்டத்துல கூட்டா? உங்களை எல்லாம் நெனச்சா ரெம்ப பாவமா இருக்கு, ஹையோ ஹையோ…” என வடிவேலு பாணியில் கூற, அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாகிவிட்டது அவர்களுக்கு
அப்பொழுது வெளியே வந்த யாதவ் மற்றும் சகாக்கள், விபினையும், சாதனாவையும் பார்த்து ஜானவி சிரித்துக் கொண்டிருக்க கண்டவர்கள், “சிக்கினாண்டா சிவனாண்டி…” என்று நினைத்துக் கொண்டனர்
பின்பு மகிழவனோ, “ஏய் யாதவ், உன் பொண்டாட்டிய பாரு டா, என்ன மாதிரி நிலைமையில உங்க கல்யாணம் நடந்துச்சு. இப்போ உங்க வீட்டுல இது தான் அவளுக்கு முதல் நாள், மாமியாரையும் நாத்தனாரையும் பார்த்து அவ பயப்படுவானு பார்த்தா, உங்கம்மா அவளுக்குப் பெட் காபி கொடுத்து எழுப்பி விட்ருப்பாங்க போலருக்கு. உன் தங்கச்சி அவகிட்ட மொக்க வாங்கி நின்னுட்டுருக்கு. உன் பொண்டாட்டிய பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?” என்று கேட்கவும்
கடுப்பான யாதவ், “ஹ்ம்ம் அவகிட்டயே கேட்டு சொல்றேன் இரு” என்றவன்
“ஜானவி, மகி உன்கிட்ட ஏதோ கேட்கணுமாம்” என கோர்த்து விட்டான் யாதவ்
“என்ன சந்தேகம்? அடுத்து இவரோட வெயிட் தாங்கற மாதிரி ஸ்ட்ராங்கான மரம் எதுனு கேட்கறீங்களா?” என ஜானவி சிரித்தபடி கேட்க, அவளைக் கையெடுத்துக் கும்பிட்டான் மகிழவன்
இவ்வாறு யாதவ் வீட்டில் அலப்பறை நடந்து கொண்டிருக்க, அங்கு அவன்… ஜானவியை அடையத் துடித்த அவன்… சமூக ஊடகத்தில் ஆயிரமாவது முறையாக யாதவ் ஜானவியின் திருமண வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தான்
அவனைச் சுற்றி அவனது அடியாட்கள், அவனால் அடிபட்ட அவனது ஆட்கள், கீழே விழுந்து கிடந்தனர்
அப்பொழுது அந்த அறைக்குள் வந்த அவனது தந்தை, “டேய் உதய், என்னடா இவனுங்கள இப்படி அடிச்சு போட்டுருக்க? உனக்கு ஒரு பொண்ண பிடிச்சுருக்குனா அவகிட்ட நேரடியா போய் நீ பேசியிருக்கணும். அத விட்டுட்டு அவளை விட்டுப் பிடிக்கறேன், விட்டுப் பிடிக்கறேன்னு சொல்லிச் சொல்லி, இப்ப அவளுக்குக் கல்யாணமே ஆகிடுச்சு. ஏண்டா நீ இப்படி இருக்க? உன்னப் பார்த்தா படிச்ச பணக்கார பையன் மாதிரியா தெரியுது? நீயும் உன்கூடவே இருக்கற ரௌடிகளும். என்னமோ புதையல் அது இதுனு அலைஞ்சு வாழ்க்கைய வீணாக்கிடாத” என கோபமாய் மொழிந்து விட்டு சென்றார் அவர்
தந்தையை ஏளனமாக நோக்கியவன், மீண்டும் கோபத்துடன் அந்தத் திருமண வீடியோவைப் பார்க்கலானான்
இவ்வாறு இரு மாதங்கள் கழிய, அடுத்த இரண்டு நாட்களில் யாதவின் பிறந்தநாள் வர இருந்தது
அதற்காக அவனது நண்பர்கள் அவனுக்கு ஏதேனும் சர்ப்ரைஸ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த ஜானவி, “இந்த பர்த்டேக்கு யாதவுக்கு நான் சர்ப்ரைஸ் குடுக்கறேன்” என்றாள்
பிறந்தநாளும் வந்தது… நள்ளிரவிலிருந்தே வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்க, அவனது மனைவியோ, என்றும் போல அன்றும் அவனைக் கண்டுகொள்ளாமல் இருந்தாள்
வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும், ஜானவியின் வாழ்த்துக்காக யாதவின் மனம் ஏங்கியது
அன்று மாலை கேக் வாங்கி வர சார்விக் கிளம்ப, அவனைத் தடுத்த ஜானவி, “நான் வீட்டுலயே கேக் செஞ்சுட்டேன் சார்விக், நீ அஞ்சு மணிக்கு எல்லாரையும் நம்ம வீட்டுக்கு வரச் சொல்லிடு. அது மட்டுமில்லாம, உன் அண்ணன் சரியா ஆறு மணிக்கு தான் இங்க வரணும். அது உன்னோட பொறுப்பு” என்றாள்
“சரி அண்ணி” என சார்விக் வெளியேற, உதட்டில் மலர்ந்த சிரிப்புடன், பிறந்த நாள் விழாவிற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றாள் ஜானவி
மாலை ஐந்து மணி போல் அழைத்திருந்த விருந்தினரெல்லாம் வந்துவிட, யாதவை அழைத்து வர கிளம்பினான் சார்விக்
மற்றவர்கள் அனைவரும் யாதவின் வரவுக்குக் காத்துக் கொண்டிருக்க, சற்று பதட்டத்துடன் இருந்தாள் ஜானவி
சரியாக மணி ஆறு அடிக்க, வீட்டினுள் நுழைந்தான் யாதவ். வருடா வருடம் பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் என்ற பெயரில் நண்பர்கள் கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று, கேக் வெட்டும் நிகழ்வு தான் இது நாள் வரை நடந்தேறிக் கொண்டிருந்தது
இம்முறையும் அது போல ஒன்றை எதிர்பார்த்து வந்தவனுக்கு, வீட்டின் வாசலே ஏதோ வித்தியாசத்தைக் காண்பித்தது
வீட்டினுள் நுழைந்த வினாடி, விளக்குகள் அணைக்கப்பட்டு, ப்ரொஜக்டரிலிருந்து ஒரு வீடியோ ஒளிபரப்பானது
அதில் யாதவிற்கும் ஜானவிக்கும் திருமணம் ஆன முதல் நாளிலிருந்து, யாதவுக்கே தெரியாமல் அவனை ஜானவி எடுத்த அழகிய புகைப்படங்களின் தொகுப்பு ஒளிபரப்பானது.
அதன் பின், யாதவை வாழ்த்தி அவன் மனதுக்கு நெருக்கமானவர்கள், மற்றும் அவனது பிறந்தநாளுக்கு வர முடியாமல் வெளியூரில், வெளிநாட்டிலிருப்பவர்கள் அனுப்பிய வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது
அதைக் கண்ட யாதவின் மனம் நெக்குருகித் தான் போனது. இறுதியாக அணைக்கப்பட்ட விளக்குகள் ஒளிர, இளஞ்சிவப்பு நிற புடவையணிந்து, அனைவரின் முன்பும் நின்றிருந்தாள் ஜானவி
கையில் மைக்குடன் யாதவுக்காகப் பாட ஆரம்பித்தாள் அவள்
“பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த… அந்த நாளும் வந்திடாதோ?
நந்தி குமாரன் விந்தை புரிந்த.. அந்த நாளும் வந்திடாதோ?
அனைவரும் கூடி.. அவன் புகழ் பாடி..
நிர்மல யமுனா… நதியினில் ஆடி..
வனம் வனம் திரிந்தே… வரதனைத் தேடி..
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த… அந்த நாளும்.. வந்திடாதோ…”
என்று பாடிய ஜானவி, இறுதியாக, “ஹாப்பி பர்த்டே யாதவ்..” என்றாள்
ஆனந்த அதிர்ச்சியில் அவளை விழியாகலாது பார்த்துக் கொண்டிருந்த யாதவ், மெல்ல “ஜானகி…” என முணுமுணுக்க
அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஜானவி, “ஆமாம்” என்பது போல் தலையசைத்தாள்
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings