in ,

கடல் கடந்த காதல் ❤ (சிறுகதை) – வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + இலவசமாய் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

மேகம் கருத்திருந்திருந்தது. மழை வருமோ என்று தோன்றியது. சிலுசிலுவென இளம் குளிர்காற்று மனதிற்கு இதமாக வீசிக் கொண்டிருக்க …எதையும் ரசிக்க முடியாமல் வெளியே போயிருந்த மகள் இன்னும் வீடு வரவில்லையே என்று ரஞ்சினி மட்டும் வீட்டின் உள்ளும் வெளியுமாக நடந்து கொண்டிருந்தாள்.

ஆதர்ஷ் கார் உள்ளே நுழைய நெஞ்சினில் நிம்மதி வந்தது. ஜனனியை வீட்டில் இறக்கிவிட வந்த ஆதர்ஷை, “உள்ளே வாப்பா!” என்று வரவேற்றாள் ரஞ்சனி. என்ன இருந்தாலும் அந்த வீட்டிற்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவன் அல்லவா.

இருவரும் உள்ளே நுழைய… ரஞ்சனி  உள்ளே போய் ஒரு தட்டில் தேன்குழலும், அதிரசம் வைத்து எடுத்துக் கொண்டு வந்து ஆதர்ஷ் கையில் கொடுத்தாள்.

“ஆன்ட்டி! எங்க உங்க ஸ்பெஷல் மசாலா டீ?” என்றவனை செல்லமாக அடித்தாள் ஜனனி.

“டேய்! இப்ப தானே காபி ஷாப்ல காபி குடிச்ச அதுக்குள்ள என்னடா டீ?”

“அது வேற.. இது வேறம்மா.. நான் வேணாம்ன்னு சொன்னால் ஆன்ட்டி வருத்தப்படுவாங்க”. அவர்கள் விளையாட்டு சண்டையை ரசித்தவாறே, ரஞ்சினி டீயை எடுத்து வர உள்ளே போனாள். மணக்க மணக்க டீயை கொண்டு வந்து கொடுத்தவள்,  ஏதோ சொல்ல வந்து தயங்க….

“என்ன ஆன்ட்டி! என்கிட்ட எதுவானாலும் தயங்காம சொல்லுங்க..”

“அதில்ல தம்பி! அப்பா, அம்மா கல்யாணத்துக்கு கண்டிப்பா சம்மதம் சொல்லிடுவாங்க தானே?” என்றாள் ரஞ்சினி தயக்கத்தோடு.

“அந்த கவலையே வேண்டாம் ஆன்ட்டி! அப்பா அம்மா இன்னைக்கு நைட்டு பிளைட்ல ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பறாங்க. நாளைக்கு வந்திடுவாங்க. ஜனனியை போட்டோல பார்த்தே ரொம்ப பிடிச்சு போச்சு அவங்களுக்கு. எங்கம்மா ஒரே கேள்வி மேல கேள்வி. மருமகளை பார்க்க துடிச்சுகிட்டு இருக்காங்க” என்று சிரித்தான் ஆதர்ஷ்.

“தம்பி! நம்ம வீட்டிலேயே அவங்கள தங்கச் சொல்லுங்க. மாடில கெஸ்ட்ரூம் பக்காவா இருக்கு. வேற ஏதாவது வசதி வேணும்னாலும் பண்ணிடலாம்” என்றவளை இடைமறித்தான் ஆதர்ஷ்.

“இல்ல ஆன்ட்டி! அவங்களுக்கு தாஜ்ல ரூம் போட்டுட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க, ஹோட்டல்ல ஸ்டே பண்ணினா கம்பர்டபிளா பீல் பண்ணுவாங்க. இன்னும் இரண்டு குடும்பமும் அறிமுகமாகல. என்னதான் இருந்தாலும் ஒரு தயக்கம் இருக்கும். நீங்களும், அங்கிளும் அவங்கள மீட் பண்ண டேபிள் புக் பண்ணிட்டேன். நாளை அவங்க வந்தாலும் ஜெட் லாக் இருக்கும். அதனால நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு, நாளை மறுநாள் மதியம் நாம மீட் பண்ணலாம். நீங்க மூணு பேரும் லஞ்சுக்கு அங்க வந்துடுங்க” என்றான்.

ஒருபக்கம் விளையாட்டாக பேசினாலும், பொறுப்பாக சிந்தித்து தெளிவாக முடிவெடுக்கும் அவனை நினைக்கையில் பெருமையாக இருந்தது ரஞ்சினிக்கு. இவன் எவ்வளவு நம்பிக்கை கொடுத்தாலும் ஒரு சிறு பதட்டம் அவளுக்குள் இருக்கவே செய்தது. இரண்டு ஆண்டுகளாக அவர்கள் கண்ணியமாக பழகி வந்தது, ஆதர்ஷ் பெயரில் மிகப் பெரிய மரியாதையைக் கொடுத்தது. அதனாலேயே ஜனனியின் அப்பா பாஸ்கரும் மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். அதேபோல ஆதர்ஷ் பெற்றோரும் மனமார சம்மதித்து, எந்த பிரச்சனையும் இல்லாமல் கல்யாணம் நல்லபடியாக முடிய வேண்டுமென குலதெய்வத்தை பிரார்த்தித்துக் கொண்டாள். சின்னஞ்சிறுசுகள் பேசிக் கொண்டிருக்கட்டும் என்று உள்ளே நகர்ந்தாள்.

ரஞ்சனி உள்ளே போனதும் ஜனனி அமைதியாய் இருப்பதை பார்த்த ஆதர்ஷ், “என்ன ஜனனி வருங்கால மாமியார், மாமனாரை பார்க்க போகிற ஆர்வமா? இல்லை டென்ஷனா? சிந்தனை பலமாயிருக்கு”

“உனக்கு எல்லாம் விளையாட்டுதான், சீரியஸா எதையும் நினைக்க மாட்டியா ஆதர்ஷ்? “

“சீரியஸா யோசிக்க என்ன விஷயம் இருக்கு ஜனனி? நம்ம காதல்ல வில்லன் கூட இல்லையே! நாம நல்ல பிரண்ட்ஸா தான் பழகினோம். காதல் எட்டிப் பார்க்க… கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னன்னு யோசிச்சோம். வீட்டிலேயும் பச்சைக்கொடி காட்டிட்டாங்க..”

“எல்லாம் ஈஸியா நடக்கிறது தான் எனக்கு ஒரு பயத்தை கொடுக்குது”

“நீ அனாவசியமா பயப்படுற ஜனனி. என் அப்பா அம்மாவிடம் பேசினா  உன் பயம் போயிடும். அவங்க ரொம்ப முற்போக்கான, பெருந்தன்மையான மனுஷங்க. நான்னா, அவங்களுக்கு உயிர். என் விருப்பம்தான் அவங்க விருப்பம்.” பெற்றோரை பற்றி முகம் மலர, கண்கள் விரிய பேசுபவனை பார்த்து நம்பிக்கை வர, ஜனனி புன்னகைத்தாள்.

மறுநாள் பொழுது மலர, ஆதர்ஷ் அம்மா, அப்பாவை வரவேற்க ஏர்போர்ட் கிளம்பினான். மோகன்-உஷா தம்பதியருக்கு மகனைப் பார்த்ததும் மனது மகிழ்ச்சியால் நிறைந்தது. உஷா கண்களில் கண்ணீர் வந்தது.

“உஷா! பாசத்தையெல்லாம் தேக்கி வெச்சுக்கோ. உன் பாசத்தை பங்கு போடப் மருமகப் பொண்ணு வரப்போறா” என்றார் கிண்டலாக.

“போங்க… அவளுக்கும் சேர்த்து பாசத்தை கொட்டுவேன். நமக்கு என்ன மகளா இருக்கிறா?” என்றாள் உஷா. அவர்கள் பேச்சை ரசித்தவாறே காரை ஓட்டினான் ஆதர்ஷ்.

ஹோட்டல்ல செக்கின் முடிந்ததும், “நல்ல ரெஸ்ட் எடுங்க இரண்டு பேரும். நானும் உங்க ரூமுக்கு அடுத்தாப்பல எனக்கு ரூம் போட்டிருக்கேன். நீங்க தூங்கி எழுந்ததும் பேசுவோம்” என்றான்.

“ஆதர்ஷ்! ஈவினிங் ஜூவல்லரி ஷாப் போகணும்டா. அப்பா வேணா ரெஸ்ட் எடுக்கட்டும். நாம ரெண்டு பேரும் போய் ஒரு வைர நெக்லஸ் வாங்கனும். ஜனனியை முதல் சந்திப்பிலேயே கிப்ட் கொடுத்து அசத்தனும்”

“ஓகே மம்மி போகலாம்” என்று சிரித்தான்.

மறுநாள் காலை புலர்ந்தது. மதியம் நகர்ந்து வர.. பரபரப்பானான். ஜனனி 12 மணியளவில் கிளம்பி விட்டதாக போன் பண்ண, மூவரும் ஓட்டல் ரிசப்ஷனுக்கு வந்து உட்கார்ந்தனர். உஷாவும், மோகனும் சந்தோஷமாக இருந்தனர். ஆதர்ஷ் எந்த பெண்ணை விரும்பினாலும் அதற்கு மறுப்பு சொல்ல கூடாது… என்பதில் தீர்மானமாக இருந்ததால், ஜனனியை ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை அவர்களுக்கு.

ஜனனியின் கார் ஹோட்டல் போர்டிகோவுக்கு வர, ஆதர்ஷ் எழுந்து வந்தான். காரை பார்க் பண்ண சொல்லிவிட்டு, மூவரையும் உள்ளே அழைத்து வந்தான். உஷா பாசமுடன் கையை பிடித்து ஜனனியை தன்னருகில்  அமர்த்திக் கொண்டாள். மோகன் முகம் மட்டும் குழப்பத்தில் வெளிறிப் போய் மாறுவதை ரஞ்சினி கவனித்தாள். எல்லோரும் சகஜமாக பேச ஆரம்பித்தனர். ரஞ்சினிக்கு மட்டும் அவ்வப்போது வார்த்தைகள் தடுமாறியது.

“என்ன ஆன்ட்டி! உங்க டென்ஷன் இன்னும் போகலையா? அப்பா, அம்மா லவ்லி பர்சன்ஸ். நீங்க மனம் விட்டு பேசலாம், வாங்க சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்!” என்று புக் பண்ணிய டேபிளுக்கு கூட்டி வந்தான்.

சாப்பிடும்போதும் மோகன் சற்றும் கலகலப்பு இல்லாமல் அமைதியாக இருப்பதை கவனித்தாள் உஷா ‘என்ன ஆச்சு இவருக்கு?’ என்று நினைத்துக் கொண்டாள்.

சாப்பிட்டதும் “ரூமுக்கு வாங்க” என்று எல்லோரையும் உஷா கூப்பிட, மோகன் மட்டும் “நீங்க பேசிகிட்டு இருங்க! நான் ஆதர்ஷ் ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன். கொஞ்சம் தலைவலியா இருக்கு” என்று  பதிலை எதிர்பாராமல் ரூம் சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினார்.

எல்லோரும் ரூமுக்கு வந்ததும், உற்சாகத்தால் வாங்கி வைத்திருந்த வைர நெக்லஸை பரிசளிக்க…. ரஞ்சனி  மட்டும் “இப்ப வேண்டாங்க! கல்யாணம் நல்லபடியா முடியட்டும்! அப்புறம் உங்க மருமகளுக்கு ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிக் கொடுங்க” என்று மறுத்தாள். அதை சட்டை பண்ணவில்லை உஷா.

ஆதர்ஷும், “ஆன்ட்டி! அம்மா நெனச்சா அவ்வளவுதான்.. ஜனனி கழுத்துல அந்த நெக்லஸை போட்டு அழகு பார்த்தால் தான் அவங்களுக்கு இன்னைக்கு ராத்திரி தூக்கம் வரும்.”

“ஏண்டா! என்ன போட்டு விட  சொல்ற. அப்படீத் தானே.”  கலகலப்பாய் அனைவரும் சிரிக்க ரஞ்சினி மட்டும் தவித்தாள்.

அடுத்த அறையில் மோகன் குழப்பத்தின் உச்சியில் இருந்தார். ஆதர்ஷ் ஆசைப்பட்டு எதையும் மறுத்ததில்லை .இந்த கல்யாணம் வேண்டாம் என்று எப்படி சொல்வது? உஷாவும் ஆதர்ஷும் காரணம் கேட்பார்களே.. இவ்வளவு ஏன் ஆதர்ஷ் மேல் உயிராக இருக்கும் ஜனனி  மனம் எவ்வளவு வேதனைபடும்.

ஆனால் இந்த கல்யாணம் நடக்காது… கடவுளே ஏனிந்த சோதனை? மனம் அமைதியிழந்து தவித்தது. அப்போது ஆதர்ஷ் கதவை தட்டி, “அப்பா! அவங்க கிளம்புறாங்க” என்று கூப்பிட… ஒப்புக்கு வழியனுப்ப வந்த மோகனிடம், “அங்கிள் நீங்களும், ஆன்ட்டியும் எங்க வீட்டுக்கு வாங்க” என்றாள் ஜனனி அன்போடு. தலையாட்டினார் மோகன்.

அம்மாவும் மகனும் ஈவினிங் ஷாப்பிங் கிளம்பிவிட, மோகன் மட்டும் கனத்த மனத்துடன் படுத்திருந்தார். போன் அடிக்க எடுத்தவர் அதிர்ந்தார்.

“உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்… வர முடியுமா?” நேரடியாகவே விஷயத்திற்கு வந்தாள் ரஞ்சனி.

“ஆதர்ஷும் அவங்க அம்மாவும் வெளியே போயிருக்கிறதா ஜனனி சொன்னா. நீங்க பக்கத்துல இருக்கிற கிரீன்வேஸ் ஹோட்டலுக்கு வாங்க. நான் அங்கேயிருந்து தான் பேசறேன். அட்ரஸ் ஷேர் பண்ணுறேன்” என்றவள் பதிலை எதிர்பாராமல் போனை வைத்தாள்.

உடனே ரெடியான மோகன் கால் டாக்ஸி புக் பண்ணினால் நேரம் ஆகும் என்று ஒரு ஆட்டோவை பிடித்து ஹோட்டலுக்கு விரைந்தார். ரஞ்சினி என்ன சொல்ல போகிறாள்? நிச்சயம் கல்யாணத்திற்கு அவளும் சம்மதிக்க மாட்டாள். என் மகன் என்று தெரிந்ததும் அவள் எப்படி சம்மதிப்பாள். மனம் படபடப்பாக இருந்தது. அடுத்த பத்து நிமிடத்தில் ஹோட்டல் வர உள்ளே நுழைந்தார். ரஞ்சினி அவருக்காக காத்திருந்தாள்.

“வாங்க மோகன்! உட்காருங்க! எப்படி இருக்கீங்க?”

“என்ன மன்னிச்சிடு ரஞ்சினி! ஜனனி உன் மகள்னு எனக்கு தெரியாது.”

“தெரிஞ்சா பார்க்காமலே திரும்ப ஆஸ்திரேலியா ஓடியிருப்பீங்க”

“சாரி ரஞ்சினி! என்னை மன்னிச்சிடு! நான் ஒரு சூழ்நிலை கைதி”

“உயிருக்குயிராய் காதலிச்சு விட்டு அப்படியே அத்தை மகளை கல்யாணம் பண்ணிட்டு ஆஸ்திரேலியாவுக்கு ஓட… அதுக்கு ஒரு காரணமா?”

“ரஞ்சினி! நம்ம காதலை அப்பாகிட்ட சொல்ல இருந்த நேரத்தில்தான் மாமாவுக்கு திடீர்ன்னு ஹார்ட் அட்டாக்.. உஷாவை என் கையிலே பிடிச்சு கொடுத்து, இனி இவ உன் பொறுப்புன்னு சொல்லிட்டு உயிரை விட்டார். அப்பாவும், மாமா செய்த உதவிகளை சொல்லி கண்டிப்பா நீ அவளை கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு என்னை வற்புறுத்தினார்…என்னால எதுவும் பண்ண முடியாம போயிடுச்சு”

“ரொம்ப பழைய காதல் கதை… ஒரு உயிருக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்திற்காக இன்னொரு உயிரை கொன்னீங்க. நான் ஜனனியயோட அப்பாவுக்கு உண்மையான மனைவியாக இருந்தாலும், ஒரு குற்றஉணர்ச்சியில எத்தனை நாள் தவிச்சிருக்கேன் தெரியுமா? உங்களை காதலிச்சதுக்கு நான் அனுபவிக்க வேண்டிய தண்டனையாக அதை நெனச்சேன்.”

“மன்னிச்சிடு ரஞ்சினி! நடந்தது எதையும் மாற்ற முடியாது. உன்னை மாதிரி நானும் குற்ற உணர்ச்சியில தவிச்சேன். ஒன்னு உறுதியா சொல்றேன். உன் மனசை மேலும் புண்படுத்த மாட்டேன். ஆதர்ஷ் என் மகன் என்று தெரிந்ததுமே நீ அவனை வெறுத்திருப்ப. இனி ஜனனி வாழ்க்கையில ஆதர்ஷ் குறுக்க வர மாட்டான். அவன் கைல கால்ல விழுந்தாவது இதைச் செய்வேன்” என்றார் மோகன் கண்களில் நீர் வழிய.

“சபாஷ்! இன்னொரு காதல் கொலை!” ரஞ்சனி உரக்க சிரித்தாள். அவள் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

“ஜனனியும் ஆதர்ஷும் என்ன பாவம் பண்ணினாங்க, நமக்கு பிள்ளையா பிறந்ததை தவிர. உங்க மகன் ஜனனி மேல உயிரையே வைத்திருக்கிறான். மேலும் நாம அனுபவிச்ச வலியையும், வேதனையையும் நாம அவங்களுக்கு கொடுக்க வேண்டாம். இந்த நிமிடம் பழைய கதைகள்… நமக்கு மட்டுமே தெரிந்த இந்த கதைகள்… எல்லாவற்றையும் ஒரு இரேஸ் பட்டனை அழுத்தி அழிச்சிடுவோம். இனி நீங்க எனக்கு ஆதர்ஷ் அப்பா மட்டும்தான். நானும் உங்களுக்கு ஜனனியின் அம்மா மட்டும் தான். வேறு எந்த நினைப்பும் உறவும் நம்மிடையே கிடையாது.”

“இந்த கல்யாணம் முடிவானதும் நாம அண்ணன்-தங்கை உறவுக்குள் வந்திடுவோம். ஒரு நல்ல தங்கையா என்னை நீங்க நினைக்கிறது மட்டும் தான் நீங்க எனக்கு செய்யக்கூடிய உபகாரம். என் மனசுலயும் எந்த பழைய நினைவுகளுக்கும் இடம் கிடையாது. நம்ம குழந்தைங்க சந்தோஷத்துக்காக நாம இதை செஞ்சுதான் ஆகனும்” என்றபடி கை கூப்பினாள்.

மிகத் தெளிவாகப் பேசும் அவளை பிரமிப்புடன் பார்த்த மோகனும், குழப்பங்கள் நீங்க மனம் தெளிவாக ரஞ்சினியைப் பார்த்து, “சரிம்மா! இந்த கல்யாணத்தை சிறப்பாக நடத்துவோம்” என்றார் மோகன் மனபாரம் நீங்கியவராய்.

சரியான, தெளிவான, முடிவெடுத்த திருப்தியுடன் ரஞ்சனி ஹோட்டலை விட்டுக் கிளம்பினாள், விரைவில் ஆதர்ஷ்-ஜனனி  திருமணத்தை சிறப்பாக நடத்தும் எண்ணத்துடன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இருபதாம் எலிகேசி ! (சிறுகதை-முற்பகுதி) – நாமக்கல் எம்.வேலு

    உலகளாவிய சிறுகதை / குறுநாவல் / நாவல் போட்டி 2023-24 (பரிசுத்தொகை ரூபாய் 10,000 + இலவசமாக புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு)