in ,

அளவை தாண்டாதே ஆசையே (சிறுகதை) – செந்தில் செழியன்

எழுத்தாளர் செந்தில் செழியன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஒரு ஊரில் மச்சேந்திரன் என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு பெரிய ஆசை. தன்னை விட யாரும் ஊரில் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்க கூடாது என்று நினைத்தவன் அதற்கு என்ன செய்யலாம் என்று நீண்ட நாட்களாக யோசித்து கொண்டிருந்தவனுக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது.

அதை உடனே செய்வது என்று தீர்மானித்தவன் வழியில் தனக்கு தேவையான உணவு மற்றும் வழி பயணத்திற்கு தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டில் அவசர வேலையாக கிளம்புவதால் வர சில நாட்கள் ஆகலாம் என்று மட்டும் தகவல் சொல்லிவிட்டு வண்டி கட்டி கிளம்பினான் 

சரியாக இரண்டு நாட்கள் பயணத்திற்கு பிறகு ஓரிடத்தில் நின்றவன் அங்கு சற்று ஓய்வெடுக்கலாம் என்று முடிவு செய்து அங்கு இறங்கி அங்கிருந்த ஒரு மர நிழலில் அமர்ந்து கொண்டு வந்த உணவு பொட்டலத்தில் ஒன்றை எடுத்து பிரித்து சாப்பிடத் தொடங்கினான்.

இரண்டு வாய் சாப்பிட்டவன் மூன்றாவது வாய் சாப்பிட போகும் போது மரத்தில் இருந்த ஒரு காகம் அவன் உணவின் மேல் எச்சம் போட்டு உணவை உண்ண தகுதியற்றதாக்கி விட்டு அவன் கோவத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து எறிய முற்பட பறந்து சென்று விட்டது 

கொண்டு வந்த உணவு இதோடு காலி ஆகிவிட்டது அதுபோக கிளம்பிய வேலை இன்னும் முடியவில்லை என்பதால் வேலை முடியாமல் திரும்பியும் செல்ல முடியாது என்பதால் ஆத்திரம் அவனுக்கு தலைக்கேறியது 

சரி கையில் இருக்கும் பணத்தை வைத்து ஏதாவது சாப்பிடலாம் என்றாலும் பக்கத்தில் எதுவும் கடைகள் இருப்பதாக தெரியவில்லை. பசியால் சற்று சோர்வு தட்ட தொடங்கியதால் உடனடியாக சாப்பிட நினைத்தவன், இங்கு ஓய்வெடுப்பது இப்போது சரியாக இருக்காது கடையை தேடி பசியாறுவதே முதல் வேலை என்று முடிவெடுத்து கிளம்பினான். 

பாதி தூரம் வந்ததும் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு சற்று தொலைவில் தெரிந்த கடை ஆறுதலாக இருந்தது. சரி சென்று சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடர்வோம் என்று நினைத்தவன் கடைக்கு முன்னால் சென்று வண்டியை நிறுத்திவிட்டு கடைக்குள் நுழைய முதலில் கண்ணில் பட்ட நாள்காட்டியில் இன்று செவ்வாய்க்கிழமை என்பதை பார்த்தபடி உள்ளே சென்றவன் கிடைத்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு கடையில் இருப்பவனை அழைத்து சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்க அவன் சொன்ன அனைத்தும் அசைவ உணவுகளாக இருந்தது அவனுக்கு இன்னும் அதிர்ச்சி.

காரணம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடும் பழக்கம் அவனுக்கு கிடையாது. பக்கத்தில் வேறு கடைகள் இல்லையா என்று கேட்டால் அதற்கு இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்று கடையில் இருந்தவன் சொல்ல அவனுக்கு தலையே சுற்றியது.

ஆனாலும் வேறு வழி இல்லை பசியாறி ஆக வேண்டும் என்று வேகமாய் வெளியில் வந்து வண்டியை எடுத்து புறப்பட்டவன் சில மணி நேர பயணத்தில் வழியில் ஒரு கோவிலை அடைந்தான்.

அங்கு கூட்டம் நிற்பதை பார்த்து தன்னை கடந்து சென்ற ஒருவனை அழைத்து என்னவென்று கேட்க அது அன்னதான கூட்டம் அங்கு சாப்பிட வரிசையில் நிற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு சென்றான்.

அதை கேட்ட அவனுக்கு முகத்தில் சற்று பிரகாசம் தெரிந்தது. ஆனால் இன்னொன்றும் அவன் மனதில் தோன்ற அந்த பிரகாசம் மறைந்து போனது. ஊரில் நமக்கு இருக்கும் செல்வாக்கிற்கு நாம் கோயிலில் போடும் அன்னதான சோறை சாப்பிடுவதா என்று யோசித்தவன் அப்படி சாப்பிடும் போது நம்மை பற்றி அறிந்த யார் கண்ணிலாவது பட்டால் தகவல் ஊர் முழுக்க பரவி நம்மை பற்றிய அபிப்ராயம் குறைய தொடங்கி விட்டால் அடுத்து நம்மை யார் மதிப்பார்கள் என்றெல்லாம் யோசிக்க தொடங்கியிருந்தான் 

ஆனாலும் பசி ஒரு படி மேலே சென்று இனி பேர் புகழா பசியா என்றால் பசிதான் முக்கியம் சாப்பிட்டு விடு என்று அவனை எட்டித் தள்ள வேறு வழி இல்லை என்று வண்டியில் இருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி மெல்ல நடந்து கூட்டத்தை வந்து அடைந்தவன் வரிசையில் நிற்கும் யாரும் தன்னை பார்த்துவிடக் கூடாது என்பதற்காக தோளில் இருந்த துண்டை எடுத்து முகத்தை சுற்றி மூடிக்கொண்டான்.

வரிசை மெல்ல நகரத் துவங்க உணவு வழங்கும் இடத்தை சில நிமிடங்களில் அடைந்தவன் கையில் சாப்பாடு தட்டு வழங்கப்பட்டு உணவை வாங்கிக் கொண்டவன் அங்கிருந்து சற்று தொலைவில் தெரிந்த மரத்தடியில் வந்து அமர்ந்த போதுதான் வாங்கும் போது மூடிக்கொண்ட முகத்தை சாப்பிடும் போது எப்படி மூட முடியும் என்ற உண்மை விளங்கியது 

ஆனால் இனி பசிக்கு முன்னால் எதுவும் பெரிதில்லை என்று யோசித்தவன் துண்டை உதறி கீழே போட்டுவிட்டு உணவை அள்ளி வேகவேகமாக சாப்பிடத் துவங்கினான். வயிறார சாப்பிட்டு முடித்து கையை கழுவிவிட்டு துண்டில் துடைத்துக்கொண்டவன் மீண்டும் அந்த மரநிழலில் அமர்ந்து சற்று தெளிவடைந்து கொண்டு யோசித்தபோதுதான் ஒவ்வொன்றாய் உணர தொடங்கினான்.

கிளம்பியதில் இருந்து வழி பயணங்களில் நடந்த ஒவ்வொரு நிகழ்வாய் அசை போட தொடங்கி இன்று இந்த நிமிடம் வரை நடந்த அனைத்தையும் அசை போட்டுக் கொண்டிருந்தான்

கிளம்பிய வேலை முடியும் முன்பே கொண்டு வந்த உணவு தீர்ந்து அந்த உணவையும் சாப்பிட முடியாமல் காக்கையின் எச்சம் பட்டு வீணாகி கையில் தேவைக்கு மீறிய பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் தேடி அலைந்து ஒரு கடையை கண்டுபிடிக்க அங்கும் நாள் கிழமையால் சாப்பிட முடியாமல் போக கடைசியில் கோவிலில் கிடைத்த சாப்பாடு தான் பசிக்கு உதவியது என்பது வரையில் அனைத்தையும் யோசித்து முடித்திருந்தான் 

அப்படி என்றால் எவ்வளவு பணம் இருந்தாலும் அது எல்லா நேரங்களிலும் உதவாது இக்கட்டான சூழலில் பசி என்று வந்தால் செல்வந்தன் என்ற பெயரை வைத்து கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்தவன் ஒரு பெரிய ஏப்பம் விட அந்த ஏப்பத்தோடு அவனுக்குள் இருந்த ஆசையும் வெளியேறி வந்த வழியிலேயே மீண்டும் வீடு நோக்கி கிளம்பலாம் என்று முடிவெடுத்து துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு ஒரு தெளிவான புன்னகையோடு வீட்டை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான் 

கருத்து: குதிரைக்கு மட்டும் அல்ல ஆசைக்கும் பல நேரங்களில் கடிவாளம் தேவை. இல்லை என்றால் கட்டு மீறி ஓடி காயப்பட வேண்டி வரும்.

எழுத்தாளர் செந்தில் செழியன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்ணே கனியமுதே (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

    உறவென்று சொன்னால் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்