இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கோடை விடுமுறையில் வரும் ராகவன், சரயுவோடு சண்டை போடுவதும், ஊருக்குக் கிளம்பும்போது சமாதானப் படுத்துவதும் வழக்கமாகி விட்டது.
ஆனால் நான்காம் ஆண்டு கோடை விடுமுறையில் அவன் வந்தபோது மாதவிக்கு நான்கு வயதாகி விட்டது. யாரிடம் பேசலாம் யாரிடம் பேசக் கூடாது என்பதைக் கூட அந்தக் குழந்தை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தது.
அம்மாவிடமும் லதாவிடமும் தவிர வேறு யாரிடமும் அதிகமாக சரயு பேசுவதில்லை. மற்றவர்களும் அவளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால் ராகவன் இருக்கும் போது மட்டும் அந்தக் குழந்தையிடம் அதிகமான அன்பைக் கொட்டுவார்கள். அதை சரயுவும் நன்கு உணர்ந்திருந்தாள்.
ஐந்தாம் வருடம் கோடை விடுமுறையில் வந்த ராகவன் மேலும் ஓராண்டிற்கு சிங்கப்பூர் பல்கலைகழகத்தில் பணி தொடர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்றார். அதனால் எல்லோருக்கும் மிகவும் சந்தோஷம். ஏனெனிவ் இங்கு கிடைக்கும் சம்பளத்தை விட அங்கு இருமடங்கு அதிகம், ஆனால் சரயுவிற்குப் பிடிக்கவில்லை.
“இன்னும் எத்தனை வருடங்கள் தான் பணத்திற்காகப் பிரிந்து வாழ வேண்டும்” என்று சண்டையிட்டாள். மாதவிக்கும் ஐந்து வயது தான் முடிந்திருந்தாலும், சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்ளும் அறிவு பெற்றிருந்தாள்.
சரயுவும் டாக்டரேட் முடிப்பதற்காக, கல்லூரியிலும் பேராசிரியருடன் லைப்ரரி புத்தகங்களையும், ரெபர் செய்வதிலும் வீட்டிற்கு வர மணி ஆறாகி விடுகின்றது. வீட்டிலும் இரவு சமையலுக்கு மற்றவர்கள் கூட இருந்து உதவி செய்துவிட்டு, குழந்தையையும், குழந்தை போலவே படுத்தும் கணவனையும் கவனித்து விட்டு, அடுத்த நாள் வகுப்பில் எடுக்கும் பாடங்களைத் தயார் செய்து முடிக்க இரவு மணி பன்னிரண்டைத் தாண்டிவிடும்.
இந்த உடல் உழைப்பும் ,கணவனைப் பிரிந்தே வாழும் ஏக்கமும் சரயுவிற்கும் மிகுந்த ஆற்றாமையைக் கொடுத்தது. கோபமும், எரிச்சலும் வந்தது. இந்த முறை ராகவன் வரும் போதும் ஒரு வாரமாக வீட்டிற்கு வர மணி ஏழாகி விட்டது. லதாவைத் தவிர மற்றவர்கள் ஏதாவது சொல்லி ராகவனின் கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.
ராகவன் ஊருக்குக் கிளம்ப இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. அன்றும் சரயு வீட்டிற்கு வர மணி ஏழாகி விட்டது. அவள் தங்கள் அறையில் நுழைந்து உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் செல்லக் கிளம்பினாள். அவள் பின்னாலேயே குழந்தை மாதவியோடு வந்த ராகவன், குழந்தையை அங்கிருந்த கட்டிலில் உட்கார வைத்தான்.
“யார் பேச்சையும் மதிக்காமல், குழந்தை இருப்பதையும் கருத்தில் கொள்ளாமல் உன் இஷ்டப்படி நடப்பவளுக்கு இந்த வீட்டில் இடம் இல்லை. உடனே கிளம்பு, நீ இங்கே இருக்க வேண்டாம்” என்று கர்ஜித்தான் மெதுவாக, ஆனால் திடமான குரலில்.
“என்ன உளறுகிறீர்கள்?” என்றாள் சரயு.
“நான் ஒன்றும் உளறவில்லை, உண்மையைத் தான் சொல்கிறேன். உடனே இங்கிருந்து வெளியே போ. உன்னிடம் பலமுறை நேரத்தோடு வீட்டிற்கு வர வேண்டுமென்று சொல்லிவிட்டேன். என் பேச்சையோ இந்த வீட்டில் உள்ள மற்றவர்கள் பேச்சையோ நீ மதிப்பதாக இல்லை. அதனால் தான் சொல்கிறேன், வெளியே போ” என்றான் முன்னைவிட கடுமையான குரலில்.
“இந்த இரவு நேரத்தில் என்னை வெளியே போகச் சொன்னால், இந்தக் குழந்தையோடு நான் எங்கே போவேன்?” என்றாள் சரயு கலங்கிய குரலில்.
“உனக்குத்தான் போக நிறைய இடங்கள் இருக்குமே, அங்கே எங்காவது போ. குழந்தையெல்லாம் நீ போகின்ற தகாத இடங்களுக்கெல்லாம் வர முடியாது” என்று இரட்டை அர்த்தம் தொனிக்கும் குரலில் கூறியவன், மிக வேகமாக அவள் துணிகளி வாரி, அவளுடைய லெதர் சூட்கேசில் அள்ளிப் போட்டு வெளியில் வீசியெறிந்தான்.
“என் குழந்தையை என்னிடம் கொடுங்கள், நான் எங்காவது போகிறேன். உங்களை நம்பி வந்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்றாள் சரயு அழுதுக் கொண்டே.
வேற்று மனிதர்கள சண்டை போட்டாலே பயப்படும் மாதவி, கண்கள் கலங்க அவள் அம்மாவின் கால்களை இறுகக் கட்டிக் கொண்டாள். குழந்தையைப் பிடுங்கி தன் சண்டைக்கார அக்காவின் கையில் கொடுத்து அவள் அறைக்கு எடுத்துப் போகச் சொன்னான் ராகவன்.
“என் குழந்தையை என்னிடம் கொடுத்து விடுங்கள். அவளைப் பிரிந்து என்னால் ஒரு கணம் கூட இருக்க முடியாது” என்று கதறினாள் சரயு.
“என்னிடமிருந்து அவளைப் பிரித்தால் நான் போலீசுக்குப் போவேன்” என்று வெறித்தனமாக்க் கத்தினாள் அந்தத் தாய். சொன்னவுடனே அவள் கன்னத்தில் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தான். அவளுடைய பெட்டியை வீசி எறிந்தாற் போலவே அவளையும் வெளியில் தள்ளிக் கதவை சாத்தினான்.
“ஒழுக்கம் கெட்டவளை நம்பி என் பெண்ணை அனுப்ப முடியாது” என்று கத்தினான். அந்தத் தெருவே வீட்டின் எதிரில் கூடி விட்டது. அடிவாங்கிய கன்னத்தைத் தடவியபடி வீட்டிற்கு வெளியே வந்து விழப் போனவள் தள்ளாடி நின்றாள்.
ஒரு கல்லூரிப் பேராசிரியை, ஏன் எந்தத் தவறு செய்யாத ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தால் கூட எவ்வளவு நேரம் அழுது கொண்டு தெருவில் நிற்பாள்? மாதவி அவளுடைய அம்மாவை அப்போது பார்த்ததுதான். அதன் பிறகு அவளைப் பார்க்கவேயில்லை.
மாதவியும் அன்றோடு அந்த வீட்டில் உள்ளவர்களோடு பேசுவதையும், சிரிப்பதையும் நிறுத்தி விட்டாள். ஆனால் இவள் ஏன் இப்படி மற்றவர்களோடு ஒன்றிப் பேசாமல், பழகாமல், சிரிக்காமல் இருக்கிறாள் என்பது ராகவனுக்குத் தான் புரியாத புதிராகவே இருந்தது. ராகவனுடைய சிங்கப்பூர் டெபுடேஷன் பீரியட் முடிவடைந்து சென்னைக் கல்லூரியிலும் பணியில் சேர்ந்து விட்டான்.
ராகவன் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு சந்தேகப்பட்டு மனைவியை விரட்டி விட்டானே தவிர, சிங்கப்பூரில் தனிமையில் இருக்கும் போது சிந்தித்ததில் அவசரப்பட்டுக் கொடுமையான நடவடிக்கை எடுத்து விட்டோமோ என்று சிந்திக்கத் தொடங்கினான்.
லதாவின் கணவன், அதாவது ராகவனின் இரண்டாவது தம்பி மட்டும், “அவசரப் பட்டுவிட்டாயே அண்ணா” என்றான் ஒருமுறை. சரயு இல்லாத அந்த வீட்டில் நுழையவே அவனுக்குப் பிடிக்கவில்லை.
ஒரு நாள் லதாவைத் தவிர மற்ற எல்லோரும் பக்கத்து கிராமத்தில் ஒரு திருவிழாவிற்கு போயிருந்தனர். ராகவன் கல்லூரியிலிருந்து திரும்ப மாலை ஆறு மணி ஆகிவிட்டது. அப்போது தான் அவனுக்கு மனம் உறுத்தியது.
‘இந்த சென்னை டிராபிக்கில், கல்லூரியில் இருந்து காரில் வீடு திரும்பவே இவ்வளவு நேரம் ஆகிறதே, அதனால் தான் சரயுவிற்கு வீடு திரும்ப அவ்வளவு நேரமாகியது போலும்’ என்று அவன் மனம் முதன் முதலாக யோசித்தது.
அவள் விஷயத்தில் தான் எடுத்த முடிவு தவறோ என்று மனம் ஒரே ஒரு கணம் சிந்தித்தது. ஆனால் அவன் ஈகோ அவள் மேல் எழுந்த நல்லெண்ணத்தை உடனடியாக அழித்தது. வீட்டில் இருந்த மற்றவர்களும் சரயூவைப் பற்றிய அவன் நல்ல எண்ணங்கள் அவன் உள்ளத்தில் துளிர் விடுவதை அப்போதே ஏதாவது பேசி அழித்து விடுவார்கள்.
கூடவே மாதவி ஏன், இந்த வீட்டில் யாருடனும் பேசவோ அல்லது சிரிப்பதுவோ இல்லை என்ற கேள்வியும் அவனுள் விஸ்வரூபமெடுத்து எழுந்தது.
அன்று வீட்டில் லதா மட்டும் தான் இருந்தாள். ராகவனைப் பார்த்ததும் அவனுக்கு காபியும், கொஞ்சம் குட்டி சமோசாக்களும் எடுத்து வந்து கொடுத்தாள்.
“மாமா , நீங்கள் சரயு அக்காவைப் போய்ப் பார்த்தீர்களா?” என்று கேட்டாள்.
ராகவன் அவளை உறுத்துப் பார்த்தான். “நான் ஏன் அவளைப் பார்க்க வேண்டும்?” என்றான் எரிச்சலோடு. ஆனால் உள்ளுக்குள் மட்டும் அவன் ஏதோ தவறு செய்கிறான் என்ற எண்ணம் அவனை அரித்தது.
அதிகம் பேசாமலே இருந்த மாதவி, “தப்பு செய்தவர்கள் தானே தழைந்து போக வேண்டும்?” என்றாள் லேசான கோபத்தோடு.
“நான் என்ன தவறு செய்தேன்?” என்றான் கேள்விக் குறியோடு.
“என்ன செய்யவில்லை?” என்றாள் மாதவி மீண்டும் கோபத்துடன்.
“மாதவி, கொஞ்சம் இருடா கண்ணா, அப்பாவிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்” என்றாள் லதா.
“உங்கள் இருவருக்கும் இன்று என்ன ஆயிற்று? மாறி மாறி கலாட்டா செய்கிறீர்களே” என்றான் ராகவன்.
“நாங்கள் கலாட்டா செய்யவில்லை மாமா. தெரியாத சில உண்மைகளை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எங்கள் கடமை இல்லையா?” என்றாள் லதா.
“என்ன உண்மைகளை எனக்குத் தெரிவிக்கப் போகிறாய்? வெளிநாடுகள் எல்லாம் சுற்றி வந்த எனக்கு, பல தரப்பு மக்களை நேரில் சந்தித்த எனக்குத் தெரியாத உண்மைகள், என்ன உனக்குத் தெரிந்துவிடப் போகிறது?“ என்றான் கேலியாக.
அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்த லதா எப்படி பேச்சைத் தொடங்குவதென்று யோசித்துப் பிறகு மெதுவாகப் பேசினாள்.
“மாமா, இந்த ஆண்கள் சந்திர மண்டலத்திற்கு ராக்கெட் விடுவார்கள், ஒவ்வொரு கிரகத்திலும் எத்தனைச் சந்திரன்கள இருக்கின்றன என்றெல்லாம் கணக்குப் போடுவீர்கள். ஆனால் உங்களைப் பற்றியே இருபத்தி நான்கு மணி நேரமும் உடலாலும் மனதாலும் உழைத்துக் கொண்டும், நினைத்துக் கொண்டும் இருக்கும் உங்கள் மனைவிக்கு என்ன பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. ஒருவரை ஒருவர் மனதார விரும்பித் தானே திருமணம் செய்து கொண்டீர்கள். பிறகு எப்படி காரணம் தெரியாமலே சந்தேகப்படுகிறீர்கள்?” என்றாள் கோபத்துடன்.
“சில நேரங்களில் யோசித்தால் நான் செய்தது தப்போ என்று என் மனம் சஞ்சலப்படுகிறது. எனக்கே ஒன்றும் புரியவில்லை. என்னை இவ்வளவு கேள்விகள் கேட்கிறீர்களே? நீங்கள் அவளோடு பேசினீர்களா?” என்றான் ராகவன்.
“மாதவியும் நானும் பலமுறை போனில் அழைத்தோம். ஆனால்’ ஸ்விட்ச் ஆப் ‘ என்றே வருகிறது. பிறகு ஒரு நாள் சரயு அக்கா வேலை செய்யும் கல்லூரியில் இருவருமாகப் போய் கேட்டோம். ‘அவர்கள் பணியை ராஜினாமா செய்து போய்விட்டார்கள்‘ என்று கூறினார்களே தவிர எங்கு சென்றார்கள் என்று தெரியாது என்று கூறிவிட்டார்கள். சரயு அக்கா தங்கியிருந்த ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலிலும் போய் விசாரித்தோம். அவர்களும் தெரியாதென்றே கை விரித்து விட்டார்கள்” என்றாள் லதா .எல்லாவற்றையும் அருகில் நின்ற மாதவி ’உம்’மென்று முகத்தை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நாம் என்ன பண்ண முடியும், எல்லாம் அந்த ஆண்டவன் கையில் தான் இருக்கின்றது. நான் செய்தது தவறாகவே இருக்கட்டும், அவள் தான் கொஞ்சம் இறங்கி வந்து மன்னிப்பு கேட்டிருக்கலாம் இல்லையா?”
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings