in , ,

உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

 

பீரோவில் தன் துணிகளுக்கிடையில் மறைத்து வைத்திருந்த ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை, அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு அந்தப் படத்தையே சிறிது நேரம்  பார்த்து விட்டு, மீண்டும் பழையபடியே ஒளித்து வைத்தாள் மாதவி.

“என்னை விட்டு நீ போகலாமா அம்மா?“ என்று மெதுவாகக் கேட்டாள்.

அவள் குரலில் அவ்வளவு சோகம். ’ஆம்’ அந்தப் படத்தில் உள்ளது அவள் அம்மாதான். இப்போதுள்ள மாதவியே இருபது வருடங்களுக்கு முன் எடுத்த அந்தப் படத்தில் இருப்பது போல் ஒரு உருவ ஒற்றுமை.

ஒரு விடுகதைக்கு விடை தேடிக் கொண்டிருந்தாள்                    மாதவி. பி.ஈ, இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு கல்லூரி மாணவி. அப்பா ராகவன் ஆர்டஸ் அண்ட் சையன்ஸ கல்லூரியில் பேராசிரியர். அம்மா இப்போது இருந்தும் இல்லை.

மாதவியின் அழகை வர்ணிக்க நான் என்ன கம்பனா இல்லை காளிதாஸனா? கண்ணதாசன் கூட இல்லையே!                பாலும், சந்தனமும், மஞ்சளும் குழைத்து செய்த பொற்சிலை. அலை கடலாக கட்டுக் கடங்காத கூந்தல். அவளுடன் நடந்து வரும் மற்றப் பெண்களை விட இரண்டு அங்குலம் அதிக உயரம்.

மெல்லிய கொடி போன்ற உடல். அகன்ற ஆழமான அறிவினைக் காட்டும் அகன்ற நெற்றி. ஆளை அசத்தும் அழகிய மானின் கண்கள். லிப்ஸ்டிக் இல்லாமலே இயற்கையில் சிவந்த செவ்வதரங்கள். இடியே இடித்தாலும் புன்னகை மாறாத முகம்.  ஆனால் அந்த சிரிப்பு இப்போது எங்கே?

அப்பா தாவரவியல் பேராசிரியராக இருந்தாலும், தமிழில் நல்ல ஆர்வம். பட்டிமன்றங்களிலும், சிறப்பு சொற்பொழிவுகளிலும் அடிக்கடி கலந்து கொள்வார். கல்லூரிப் பேராசிரியராக இருப்பதிலேயே ராகவனுக்குக் கை நிறைய சம்பளம்.

பட்டிமன்றங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் பேசுவது பணத்திற்காக இல்லை, அதனால் கிடைக்கும் புகழிற்காகவும், மற்ற தமிழ் கற்றவர்களோடு பேசினால் கிடைக்கும் தெளிவு, ஒரு மகிழ்ச்சி ஆகியவற்றிற்காகவே தான் அதில் கலந்து கொள்வார்.

சிங்கப்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தாவரவியல் பேராசிரியர் வேலைக்கு ஆன்லைனில் விளம்பரம் வர, பல்கலைகழகத்தில் கேட்ட எல்லா தகுதிகளும் இவருக்கு இருந்ததோடு, அவர்கள் கேட்ட அனுபவத் திறமையை விட, அதிகமாகவே இருந்ததாலும் ராகவனையே தேர்ந்தெடுத்தனர்.

அப்போது மாதவிக்கு ஒரு வயது தான் இருக்கும். அம்மாவும் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். அப்பாவின் வீடு சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கிறது, மிகப் பெரிய பழைய வீடு. 

நடை, தாழ்வாரம், அதில் நான்கு அறைகள்,  பெரிய வாசல், மீண்டும் ஒரு சிறிய நடை அதில் போனால் கன்னங்கரேலென்ற பெரிய சமையல் கூடம், அதையும் கடந்து போனால் தோட்டத்தில் ஒரு கிணறு, பெண்களுக்கு மட்டும் ஒரு குளியலறை, ஆண்களுக்குக் கிணற்றடி தான் குளியல் அறை. பொதுவில் இரண்டு கழிப்பறை.

தோட்டத்தில் வாழை மரங்களும் தென்னை மரங்களும், பூஜைக்குத் துளசிச் செடியும், வேறு பல பூச்செடிகளும் இருக்கும். இதில் மரப்படிகள் வைத்த முதல் மாடி, அதில் ஒரு மூன்று அறைகள். பிறகு மொட்டை மாடி.

இந்த வீட்டைப் பார்த்தாலே வேலை செய்வதற்கு ஒரு வேலைக்காரி கூட வரமாட்டாள். அந்த வீட்டில்  தாத்தா, பாட்டி, ஒரு வாழாவெட்டி அத்தை, அவளுடைய உதவாக்கரை மகன், இரண்டு சித்தப்பாக்கள், சித்திகள் என்று ஒரு பெரிய  கூட்டுக் குடும்பம்.

சித்திகளுக்கு ஒவ்வொருவருக்கும் மாதவியை விட சில வருடங்களே பெரிய இரண்டு பையன்கள். இவ்வளவு பெரிய குடும்பம் இருந்ததால், ராகவன் தன் மனைவி சரயூவையும், தன் சிறிய குழந்தை மாதவியையும் விட்டு தைரியமாக சிங்கப்பூர் சென்றான்.

அந்த வீட்டில் சரயுவைத் தவிர மற்ற எல்லோரும் திராவிட நிறம். ஆனால் சரயூ மட்டும் மஞ்சளழகி. ராகவன் மலையாள மங்கையான சரயூவை உறவினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் புரிந்து கொண்டான்.

முதலில் இவர்களை ஒதுக்கி வைத்திருந்தாலும், பிறகு இவர்கள் இருவரும் சம்பாதிக்கும் பணம் அந்தக் குடும்பத்திற்கு தேவை என்பதாலும், நாளடைவில் எப்படியாவது சரயூவை விரட்டி விட்டு, அத்தை மகள் சீதாவை அந்த வீட்டின் மருமகளாக்கி விட வேண்டும் என்று ராகவனின் அம்மாவும், அவனுடைய வாழாவெட்டி அக்காவும் திட்டம் தீட்டியிருந்தார்கள். இவர்கள் திருட்டு எண்ணங்கள் எதையும் ராகவனோ, இல்லை சரயூவோ தெரிந்து கொள்ளவில்லை.

ராகவன் சிங்கப்பூருக்கு டெபுடேஷனில் ஐந்து வருடக் கான்ட்ராக்டில் போவது அவர்களுக்கு மிகவும் வசதியாகிவிட்டது. சரயுவிற்கு அதிகமாகப் பேசுவதற்கு நேரமும் கிடையாது; தேவையில்லாமல் பேசி பழக்கமும் கிடையாது.

மேலும் இவள் அழகையும், படிப்பையும், சம்பாதிக்கும் திறமையையும் பார்த்து அந்த வீட்டில் உள்ள எல்லோருக்கும் பொறாமை. ஆனால் அந்த வீட்டின் கடைசி மருமகள் லதாவிற்கு மட்டும் சரயுவைக் கொஞ்சம் இல்லை, நிரம்பவே பிடிக்கும்.  

சரயு தான் அவள் இரண்டு குழந்தைகளுக்கும் எல்லாக் கல்விச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டாள். மேலும் காண்போரைக் கட்டயிழுக்கும் அவள் அறிவும், அமைதியான அழகும் லதாவிற்கு மிகவும் பிடிக்கும்.

இரண்டு வயது குழந்தையான மாதவியையும், மனைவி சரயுவையும் பிரிந்து செல்வதற்கு ராகவனுக்கு மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. சரயு தான் மிகவும் தனித்து நிற்பதாய் உணர்ந்தாள்.

ராகவன், “கவலைப்படாதே சரயு. அப்பாவும் அம்மாவும் முன்பு போல் இல்லை, நிறைய மாறிவிட்டார்கள். இப்போதெல்லாம் உன்னிடமும், மாதவியிடமும் மிகவும் பிரியமாகத்தான் இருக்கிறார்கள். லதாவும் குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்கிறாள்.

குழந்தையை ‘டேகேரி’ல் கூட சேர்க்க வேண்டாமென்று வேளாவேளைக்கு நல்ல ஆகாரம் கொடுத்து, சுத்தமாகக் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள். அதனால் நீ எதற்கும் கவலைப்படாமல் தைரியமாக இரு. இதெல்லாம் ஒரு அனுபவம் தான். கண் மூடி கண் திறப்பதற்குள் ஐந்து வருடங்கள் ஓடி விடும்” என்று அவள் கன்னத்தை லேசாகத் தட்டி ஆறுதல் கூறினான்.

“நீயும் ஏதாவது ‘ரிசர்ச்’ ஒர்க்  மாதிரி செய்தால் பொழுதும் நன்றாகப் போய்விடும்” என்றும் கூறினான். எல்லாவற்றிற்கும் அமைதியாகத் தலையாட்டினாள் சரயு.

முதல் ஒரு வருடம் நன்றாகவே சென்றது. அப்போதே அந்த வீட்டில் உள்ளவர்கள் சரயுவைப் பற்றி அவள் இல்லாத நேரத்தில் அவனிடம் ஏதாவது தொடர்ந்து சொல்லி இருக்க வேண்டும். அந்த வருடம் கோடை விடுமுறைக்கு வந்தவன், அவளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்தான்.

கல்லூரி நான்கு மணிக்கு முடிந்தால் அவள் ஐந்து மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்றான். குழந்தையை நீ இருக்கும் போது ஏன் லதா பார்த்துக் கொள்ள வேண்டும் என்றான், ஆனால் அமைதியாகப் பேசவில்லை. குரோதமாகப் பேசுவது போல் தோன்றியது.

 “என்னை சந்தேகப்படுகிறீர்களா?” என்றாள் சரயு.

 “ஏன் சந்தேகப்படமாட்டான்? ஒரு குடும்பப் பெண்ணாக லட்சணமாக நடந்துக் கொள்ள வேண்டாமா?” என்று கத்தினாள் அவள் வாழாவெட்டி நாத்தனார் தமயந்தி.

 “என்னிடம் தானே அவர் பேசுகிறார், இடையில் நீங்கள் ஏன் கத்துகிறீர்கள்?” என்றாள் சரயு எரிச்சலுடன்.

“பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் பேசக் கூடாது, மன்னிப்பு கேள்” என்றான் ராகவன்.

ஆனால் சரயூ ஒன்றும் பேசவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை. அவள் நாத்தனா பேசிய பேச்சு வரம்பிற்கு மீறியது என்று நினைத்துக் கொண்டாள். அதனால் ஏதும் பேசாமல் உள்ளே போய்விட்டாள். ராகவன் மிகவும் மாறிவிட்டான் என்று தோன்றியது அவளுக்கு.

உள்ளே தங்கள் அறையில் இருக்கும் போது, “நீங்கள் சொல்லித்தானே ரிசர்ச் செய்யலாம் என்று என் புரபஸருடன் சேர்ந்து ஒரு தீஸிஸ் எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு லைப்ரரியில் இருந்து நிறைய புத்தகங்கள் ‘ரெபர்’ செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் தான் வீட்டிற்கு வர கொஞ்சம் நேரமாகி விடுகின்றது. மேலும், நீங்கள் இங்கே இருக்கும்போது உங்கள் வண்டியில் என்னை அழைத்துக் கொண்டு வந்து விடுவீர்கள். இப்போதெல்லாம் ‘பீக்அவர்ஸில்’ பஸ்ஸில் ஏறுவதே  மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்றாள்.

 “நொண்டிச் சாக்கெல்லாம் வேண்டாம் சரயு. நம் குழந்தையை நாம் தான் பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும்” ராகவன் கோபத்துடன் கூறினான் .

 “நொண்டிச் சாக்கு என்றெல்லாம் நீங்கள் மிகவும் தவறாகப் பேசுகிறீர்கள் ராகவன். நான் வேண்டுமென்றே லேட்டாக வருகிறேன் என்று நினைப்பது போல் இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் இப்போதே வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, நானும் மாதவியும் உங்களோடு வந்து விடுகின்றோம்” என்றாள் கோபமாக.

 “அப்படியெல்லாம் செய்து விடாதே ! இந்த நேரத்தில் நான் அனுப்பும் பணமும், உன் சம்பளமும் இவர்களுக்கு மிகவும் தேவை“ என்றவன் அதன் பிறகு அவளிடம் இதமாகப் பேசி சமாதானப்படுத்தினான்.

அந்த வீட்டில் ராகவனைத் தவிர மற்றவர்களுக்கு அவளுடைய சம்பளப் பணம் மிகவும்  முக்கியம் என்று சரயுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். ஆனால் ராகவனும் அவர்களைப் போலவே பேசிவிடவும் அவள் மிகவும் நொந்து விட்டாள்.

மூன்று வயதான குழந்தை மாதவி அருகில் வந்து அவள் மடி மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அவள் முகத்தை ஏதோ எல்லாம் தெரிந்தவள் போல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். மூன்று வயது குழந்தைக்குப் போய் என்ன புரியும் என்று நினைத்த சரயு அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழு வாழவிடு (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி