எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
எனக்கு ஏனோ முதல் பார்வையிலேயே அந்த ராபர்ட்டை பிடிக்கவில்லை .. அவனும் அவன் மூஞ்சியும் .. இந்த வெள்ளைக்காரன் எதுக்கு இங்க வந்து சேர்ந்தான் என்று ஒரே கடுப்பாக இருந்தது. இத்தனைக்கும் அவனுக்கும் எனக்கும் எந்த நெருங்கிய பழக்கமும் கிடையாது.நல்ல வேளையாக அவன் எனக்கு ஜாக்கியாக வந்து சேராமல் போனான்..
என்னுடைய ஓங்கு சாங்கான உருவத்தை பார்த்து அரவிந்தனுக்கு என்னை ரொம்ப பிடித்துப் போனது. எனக்கும் அரவிந்தை புடிக்கும். என் குணத்திற்கு நேர்எதிர். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான்.. அவன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். ஆனால் நான் அப்படி இல்லை. எனக்கு சட்டு சட்டு என்று கோபம் வரும். கோபம் வந்தால் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாது. அதனால் தான் என்னை எல்லோரும் “முரட்டு குதிரை” என்று கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். என் அருகில் வர பயப்படுவார்கள்.
ஆனால் அரவிந்தன் அப்படி கிடையாது. அருகில் வந்து அன்பாக என் முகத்தை தடவி கொடுப்பான். முகத்தோடு முகம் வைத்து கொஞ்சுவான். அவன் அருகில் வரும்போது என் முரட்டுத்தனம் எல்லாம் எங்கோ ஓடிவிடும். ஒரு இனம் புரியாத பாசம் எங்கள் இருவருக்குள்ளும். அவன் எனக்கு ஜாக்கியாக அமைந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. மற்றவர்களைப் போல் சாட்டையோ, சவுக்கோ அவன் கையில் இருக்காது.
அவன் என்னிடம் பேசுவதே ஒரு நட்புடன் இருக்கும்.. மற்றவர்களுக்கெல்லாம் இருக்கும் திமிர் இவனிடம் கிடையாது. மனுஷ பிறவி என்றால் என்னமோ கடவுளால் படைக்கப்பட்ட உயர்ந்த பிறவி என்பது போலவும், என்னவோ எங்களுக்கு ஒரு அறிவு குறைவாக இருப்பதால் நாங்கள் கீழ்பிறவி என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் நிறைய பேர்.
ஒரு அறிவு கூட இருந்தும் மனுஷன் எதில் உயர்த்தி? ஒருத்தனுக்கு ஒருத்தன் குழி பறிக்கிறான். துரோகம் பண்ணுகிறான். அதுவும் இந்த ராபர்ட்டை போல எத்தனை ஈனப்பிறவிகள். எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது.. அதுவும் அந்த ராபர்ட்டை நினைக்கையில் ..
தொண்டையிலிருந்து வந்த கனைப்பு சத்தத்தில் பக்கத்தில் இருந்த மற்ற நண்பர்கள் எல்லாம் நடுங்கிப் போனார்கள்.
என் அருகில் வந்த அரவிந்தன் என்னை தடவி கொடுத்து கையில் இருந்த புற்கட்டை வாயில் கொடுத்தான் ..”ஏன்டா ஜித்தா எப்ப பாத்தாலும் கடுகடுன்னு இருக்க. நானும் உன்ன போல தான் ஒரு காலத்துல இருந்தேன். இப்ப பாரு எவ்வளவு சிரிச்சு சந்தோஷமா இருக்கேன். நீயும் இப்படி இருக்க பழகிக்கணும். அதுவும் உனக்கு இந்த ராபட்டை பார்த்தாலே கோபம் கோபமாக வருகிறது. அவன் உன்னை என்ன பண்ணினான்”
அரவிந்த் அருகில் இருக்கும் போது மட்டும் என் முரட்டுத்தனம் கோபம் எல்லாமே தானாகவே குறைவது எனக்கே தெரிகிறது .. இந்த ஜித்தனையே அடக்கியாளும் திறமை அரவிந்தனிடம் இருப்பது எனக்கு புரிந்தது. பெருகி வந்த அன்பால் அரவிந்தனின் கைகளில் என் முகத்தை புதைத்துக் கொண்டேன்.
எப்படி ஒரு அம்மாவின் கையில் குழந்தை ஆறுதல் பெறுமோ, அதுபோல என் மனம் சற்றே அடங்கியது. என் உள்ளக் குமறலை எந்த வார்த்தையால் நான் அரவிந்தனுக்கு சொல்லுவேன்.. ஆனால் என் சிறு கனைப்பும் முனகலுமே அவனுக்கு என் மனநிலையை காட்டிவிடும்..
“இதோ பாரு ஜித்தா நம்ம வேலைய நம்ம பார்த்துட்டே போவோம்.. தேவையில்லாம மத்தவங்ககிட்ட நம்ம கோபத்தை காண்பிக்க கூடாது..அப்புறம் முரடன் என்கிற பெயர்தான் மிஞ்சும்” என்றான் அரவிந்தன்.
ஆனால் அரவிந்தன் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை என் முகத்தில் இப்படியும் அப்படியும் திருப்பி எதிர்ப்பை காண்பித்தேன்..
“சரி சரி உனக்கு மூடு சரியில்லை.”. கொள்ளை என் முன் வைத்து விட்டு அகன்றான் அரவிந்தன்.
அப்போது என்னை கடந்து சென்ற ராபர்ட் என்னை ஏளனமாக பார்த்தான். அவன் பார்வையிலே ஒரு திமிர் இருந்தது. அடுத்த போட்டியில் அவன் என்னையும், என்னை வைத்து அரவிந்தனையும் தோற்கடிக்க போட்ட திட்டம் எனக்கு புரிந்தது. நான் குடிக்கும் தண்ணீரில் மருந்தை கலக்க இருக்கிறான் அதுவும் முக்கியமான அந்த இறுதிப் பந்தயத்தில்.
முக்கிய இறுதி பந்தயத்தில் தோற்றால் என் முதலாளி என்னை கொன்று விடுவான்.. அரவிந்தனும் அசந்து போவான் அந்த எண்ணம் தான் ராபர்ட்டுக்கு என்பது எனக்கு புரிந்தது. நீயா நானா யார் முந்திக் கொள்வது என்று பார்ப்போம்.
மறுநாள் அதற்கு சந்தர்ப்பம் வாய்த்தது. ராபர்ட் தனியாக நின்று கொண்டிருக்க யாருமே அருகில் இல்லாத போது அவனை நோக்கி வெறித்தனமான பாய்ச்சலில் பாய்ந்து ஓடினேன் எனக்குள் எங்கிருந்துதான் அந்த வெறி வந்தது என்று தெரியவில்லை ..
“ஏய் ஏய்.. என்ன செய்ற.. எதுக்கு என்கிட்ட பாய்ற” என்று
சம்பந்தமில்லாத வார்த்தைகள் ராபட்டின் வாயிலிருந்து வந்தது .. அப்படியே என் இரு கால்களையும் வைத்து ராபர்ட் நெஞ்சில் ஓங்கி உதைக்க ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அடுத்த உதையில் அவன் எமலோகத்தை எட்டினான் ..
இத்தனை நாளும் என் மனதிற்குள் கொதித்துக் கொண்டிருந்த அனல் அணைந்தது. அரவிந்துக்கு ராபர்ட்க்கும் முன் ஜென்மத்தில் தாங்கள் யாரென்று என்பது நினைவிலில்லை என்றாலும், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இதோ இந்த பிறவியில் ராபர்ட்டாக இருக்கும், என்னால் கொல்லப்பட்ட இவன், போன ஜென்மத்தில் ரவிதாசன் என்னும் பாண்டிய ஆபத்துதவி. என் எஜமானர் ஆதித்த கரிகாலனை கொன்றவன்.. அரவிந்த் மேல் எனக்கு இருந்த பாசமே முன் ஜென்ம தொடர்பு என்பது
எனக்கு புரிந்து ஒன்று.
என் எஜமானனை இழந்து நான் பட்ட வேதனை, கோபம் எல்லாமே இந்த ஜென்மத்தில் அப்படியே எனக்குள் இருக்க, இப்போது என் பழியை தீர்த்த கொண்ட பிறகுதான் என் மனம் அமைதியானது. இனி என்னிடமிருந்த முரட்டுத்தனம் போய்விடும்.. நானும் சாதுவாகி விடுவேன். இவனைக் கொன்றதால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கிடைக்கட்டும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஜித்தன் மனம் என்றும் இல்லாத அமைதியை அடைந்தது.
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings