எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அது ஐந்தாம் வகுப்பு மாணவியர்க்கான வகுப்பறை. நீதிபோதனை ஆசிரியை வகுப்பில் இருந்தார். அவர் மாணவர்களுக்கு அறநெறிக் கதைகள் சொல்லுவார். அவர்களைச் சிந்திக்கத் தூண்டும் விதத்தில் பேசுவார். சில சமயங்களில் அவர்கள் எதையாவது தெரிந்து கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுவார்.
அன்றைக்கு அவர் மாணவியரிடம் “ஒரு நாட்டின் செல்வம் எது?” – என்ற கேள்வியைக் கேட்டார். அநேக மாணவியர் அமைதியாக இருக்க ஒரு மாணவி மட்டும் எழுந்து “ஒரு நாட்டின் செல்வம் அதன் இயற்கை வளம்!” – என்றாள்.
“சரியான பதில்!” – என்றவர் “அந்த இயற்கை வளம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?” – என்று தனது அடுத்த கேள்வியை எழுப்பினார். மாணவியருக்கு இதற்கான பதில் தெரியவில்லை. அமைதியாக இருந்தனர். “சரி! அடுத்த வாரம் இதுக்கான பதிலைத் தெரிஞ்சிக்கிட்டு வந்து சொல்லுங்க!” – என்றபடி வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்து விட்;டார்.
ரம்யா அந்த வகுப்பின் மாணவி. எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் துறுதுறுப்பும் உள்ள சிறுமி. அவளுக்கு ஆசிரியையின் இந்தக் கேள்வி மனதைக் குடைந்தது.
மாலையில் வீட்டில் அம்மாவிடம் “ஒரு நாட்டின் வளம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?” – என்று கேட்டாள். அம்மாவிடம் இருந்து எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் சட்டென்று பதில் வந்தது.
“மலைகள் ஆறுகள் பள்ளத்தாக்குகள் சமவெளிகள் புல்வெளிகள் என்று பசுமையாக இருக்க வேண்டும்!” – என்றார் அவர். ரம்யா தலையாட்டினாள். ஆனால் இதற்கு மேலும் ஒரு நல்ல பதில் இந்தக் கேள்விக்கு இருக்கக் கூடும் என அவள் எண்ணினாள். அப்பாவிடம் கேட்டாள். அம்மாவின் பதிலைத் தாண்டி அப்பாவிற்கு ஒன்றும் தோன்றவில்லை.
அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை. அப்பாவும் ரம்யாவும் நடைபயிற்சி சென்றார்கள். ஊருக்கு வெளியே குடியிருப்புப் பகுதிகளைத் தாண்டி வயல் வரப்போரம் செம்மண் பாதையில் நடந்து சென்றார்கள். சாலையின் இருபறமும் வயல்வெளியில் முற்றிய நெற்கதிர்கள் தலை சாய்ந்து அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தன. சில வரப்புகளில் அப்பொழுதுதான் அறுவடை முடிந்திருந்தது. அறுவடை முடிந்த அந்தக் களத்தில் நிறைய எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
“இப்பலாம் எருமைகளைப் பாக்குறதே ரொம்ப அபூர்வமாப் போச்சு! அதோட எண்ணிக்கை ரொம்பக் குறைஞ்சு போச்சு!” – என்றார் அப்பா.
உண்மைதான். ரம்யா அவ்வபோது ஊருக்குள் பசுக்கள் நடமாடுவதைப் பார்த்திருக்கிறாள். எருமைகள் கண்ணில் பட்டதில்லை. அவள் ரொம்ப சாசுவதமாக மேய்ந்து கொண்டிருந்த அந்த எருமைகளைப் பார்த்தாள். அவைகளின் மேல் நிறைய நாரைப் பறவைகள் அமர்ந்திருப்பதைக் கண்டாள். ஒவ்வொரு எருமையின் கால் குளம்படிகளைச் சுற்றி ஒன்றிரெண்டு பறவைகள் நடந்து கொண்டிருப்பதையும் கண்டாள்.
அவளுக்கு அந்தக் காட்சி விநோதமாக இருந்தது. அவள் அப்பாவிடம் “ஏம்பா இந்த நாரைகள்ல்லாம் மாடுகளோட காலைச் சுத்தி நடக்குதுங்க?” – என்று கேட்டாள்.
“மாடுக மேயுறப்பம் சேறும் சகதியுமா மண் கிளைஞ்சு மேல வரும்! மண்ணோட சேர்ந்து அதுல மறைஞ்சிருக்குற புழுபூச்சியும் மேல வரும்! அதைக் கொத்திச் சாப்பிடறதுக்காக நாரைங்க இப்படி மாடுகளோட காலைச் சுத்தி வருதுங்க!” – என்றவர் தொடர்ந்து “சமயங்கல்ல நண்டு நத்தை தவளை சின்ன மீன்கள் கூட பறவைக்கு இரையாகக் கிடைக்கும்!” – என்றார்.
ரம்யா கவனித்தாள். எருமையின் முதுகில் இருந்த நாரைகளில் சில அந்தக் காலை வேளையிலும் நன்றாகத் தூங்கி வழிந்து கொண்டிருந்தன. மாடுகள் அசையும் போது கீழே விழுந்து விடாமல் இருக்க கால்களை மட்டும் நகர்த்தி சமாளித்துக் கொண்டிருந்தன. அது மிகவும் கோமாளித்தனமாக இருந்தது. ரம்யாவிற்கு சிரிப்பு வந்தது.
“விவசாயிக நிலத்துல பெருசா பாடுபடலை! இருந்தாலும் ஆத்துப் பாசனம்ங்குறதுனால நல்ல விளைச்சல் ! வருஷத்துக்கு குறைஞ்சது ரெண்டு போகமாவது எடுத்துருவாங்க!” – என்றார் அப்பா.
“விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல்! கருதறுத்த வயல்ல மேயுறதுனால மாடுகளுக்கும் நல்ல தீனி! பறவைகளுக்கும் உணவு தேடிப் போகாம இருந்த இடத்துலயே நல்ல வேட்டை! வயிறு ரொம்பிருச்சு! அதான் காலை வேளையிலேயே நாரைகளுக்கு சுகமான தூக்கம்! அப்படித்தானப்பா?” – என்றாள் ரம்யா.
“ஆமா! இதுவே தரிசு நிலமா இருந்தா விதையே போட முடியாது! பயிர் வராது! ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு புல்லு பூண்டு தேடி ரொம்பத் தொலைவு ஓட்டிட்டுப் போகனும்! பறவைகளும் உணவுக்காக இரை தேடி இடம் மாறிப் போக வேண்டியிருக்கும்! அந்த பூமி வாழுறதுக்கு உகந்த பூமியா இருக்காது!” – என்றார் அப்பா.
அப்பா இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது ரம்யாவிற்கு சட்டென்று மின்னல் வெட்டியது போலிருந்தது. நீதிபோதனை ஆசிரியையின் கேள்விக்கு ஏதோ விடை கிடைத்தது போன்றிருந்தது.
வகுப்பறை. நீதிபோதனை ஆசிரியை மாணவியரிடம் “என்ன போன வாரம் நான் கேட்ட கேள்விக்குப் பதில் தெரிஞ்சுட்டு வந்தீங்களா? கேள்வி என்னனு திரும்பச் சொல்லவா?” – என்றவர் “ஒரு நாட்டின் இயற்கை வளம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இதுதான் கேள்வி!” – என்றார். மாணவியர் அனைவரும் ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னார்கள். ரம்யா எழுந்தாள்.
“ஒரு நாட்டின் வளம் அங்கு வாழும் உயிரினங்களை குறிப்பா மக்களை ரொம்ப கஷ்டப்படுத்தாத மாதிரி இருக்கனும்!” – என்றாள்.
ஆசிரியை அவளைப் புரியாமல் பார்க்க அவள் தொடர்ந்து பேசினாள். “மனிதர்கள் உயிர்வாழ அடிப்படைத் தேவை உணவு உடை இருப்பிடம்! இதுல உணவுக்கான தேவை தானியங்களின் உற்பத்தி! ஒரு நாட்டு மக்களுக்கு குறைவான உழைப்புல நிறைய விளைச்சல் தர்ற அளவுக்கு இயற்கை வளமா இருக்கனும்! உணவுத் தேவை நிறைவேறிச்சிருனா மற்ற இரண்டு தேவைகளான உடை இருப்பிடமும் எளிதா அமைஞ்சிரும்! அப்படிப்பட்ட நாட்டுல மக்கள் மகிழ்ச்சியா வாழ்வாங்க! அந்த நாட்டில் கலைகள் சிறக்கும்!” – என்றாள் ரம்யா.
“சூப்பர்! இதுதான் நான் எதிர்பார்த்த பதில்!” – என்ற ஆசிரியை ரம்யாவைப் பாராட்ட மற்ற மாணவியரும் தைகதட்டி அதை வரவேற்றனர்.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings