in ,

பொய் முகங்கள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வாய்க்குள் எதையோ மென்றபடி அலட்சியமாக நடந்து வந்த பாஸ்கர் திகைத்தான்.

“அக்கா ,அத்தான் நீங்களா? இங்கே எப்படி? “

“இது என் ஃப்ரெண்டோட பெண் கல்யாணம்!”

சாரதி சொன்னதும் “என் ஃப்ரெண்டோட தம்பி பையன்”, என்றவன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

 “ஸாரி அத்தான், வர முடியாமல் போய்விட்டது” என்றான்.

“மூன்று மாசமாச்சுப்பா! ஃபோனில் கூட நீ பேசலை! நானாக உன்னை எதுவும் கேட்கவில்லை.நீ பேசியதற்கு பதில் சொன்னேன்”, என்றவர்  “உமா , நான் கார்த்திக் கூட பேசிட்டு வரேன்” என்று கழன்று கொண்டார்.

அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பினான்

 “என்னக்கா! இவருக்கு இவ்வளவு கோபம் வருது ! எப்படித்தான் சமாளிக்கிறாயோ!”

“அவர் கோபமாக ஒன்றுமே சொல்லவில்லையே! நீ எதற்கு கொம்பு சீவுகிறாய் ?”

“அது சரி நீ அவரை விட்டு கொடுப்பியா? “

“இப்போ என்ன ஆச்சு அப்படின்னு இங்கே வம்பு வளர்க்கிறே! உண்மையிலேயே அவருக்கு கோபம் வரும் என்று நினைத்திருந்தால் என் மாமியார் இறந்ததற்கு வந்திருப்பாய்! அன்றைக்கு இல்லாவிட்டாலும் இதற்குள் என்றோ ஒரு நாள் வந்து போயிருக்கலாம். உண்மையிலேயே உனக்கு நேரமில்லையா இல்லை மனசு இல்லையா?”

“ஆமாம் உனக்குத்தான் சூடு சுரணை எதுவும் கிடையாது. நாங்களும் அப்படி இருக்க முடியுமா? அப்பா அம்மாவை அந்தப் பாடுபடுத்தின அந்த பொம்பளை போனதை துக்கம் வேற விசாரிக்கணுமா !என்ன பேச்சு பேசியிருப்பாள்!”

“பின்னே அதை அப்படியே சொல்ல வேண்டியதுதானே! ஏன் சமாளிப்பு வேலை!”

“என்னக்கா பேசுற ! இது உன்னோட வாழ்க்கை இல்லையா! வந்த இடத்திலும் ஏதாவது பேசி உனக்கு நிம்மதி போய்விடக் கூடாது இல்லையா! “

“சரிதான்! எங்கேயோ பார்க்கும் இடத்திலாவது என்னைப் பற்றி நினைக்கிறாயே! சந்தோஷம்.”

“உன்னைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியுமா! “

பதில் கொடுத்தவனை வெறித்து பார்த்தாள் அவள் . 

“நல்லா பேசுறடா! எனக்காக யோசிக்கிறவங்க அன்னிக்கு வந்து நின்னிருக்கணும். ஒரு கூட்டத்தில தன்னோட பொண்ணுக்கு எத்தனை சங்கடமாக இருக்கும் என்று நினைத்து பார்க்க முடியவில்லை. அவர் சாதாரணமாக பேசியதற்கே கோபமாக இருக்கிறார் என்கிறாய்! அன்றைக்கு எவ்வளவு பேசியிருக்க கூடும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லையே!”

“ரொம்ப கஷ்டமாயிடுச்சாக்கா! என்ன செய்றது எங்களுக்கு மனசு ஒப்பலை. அப்பா வேற நம்ம வராதது அவங்களுக்கு நல்ல அவமானமா இருக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டார்”.

“அவமானம் அவங்களுக்கில்லை எனக்குத்தான் “,என்றவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். “ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்தாச்சுன்னா அதோட முடிஞ்சுடுமா! ஒரு கல்யாணம் கார்த்திகைக்கு வரணுமில்லையா!  சரி அது கூட வேண்டாம்! இந்த மாதிரி ஒரு சமயத்தில் கூட முகத்தை காட்டினால் எப்படி !

கண்டிப்பா பிறந்த வீட்டு சீர் வரணும். பொண்ணு மாப்பிள்ளை பேரப் பசங்களுக்கு துணிமணி எடுத்து கொடுத்து நாங்க எப்பவும் உங்களுக்கு ஒரு பாதுகாப்பா இருப்போம் அப்படின்னு சொல்றது. எல்லா சமூகத்திலும் இந்த வழக்கம் இருக்கும். பொண்ணோட நல்லது கெட்டதுலே கண்டிப்பா பிறந்த வீடு நிக்கணும். அதை விட்டுட்டீங்க! இதை தான் அன்னிக்கு எல்லாரும் ஒன்று போல பேசினாங்க!

போடா போ! பெரிசா பேச வந்துட்டான். நிஜமா இது உங்களுக்குத்தான்டா அவமானம். யாரையோ அவமதிக்கிறதா நினைச்சு உங்களை நீங்களே தாழ்த்திக்கிட்டீங்க. அவர் நினைச்சிருந்தா உன்னோட என்னை பேச விடாம தடுக்க முடியாதா! அவரும் இரண்டு வார்த்தை பேசிட்டு தானே போனாரு. மற்றவங்களை மட்டம் தட்டி பேசுறதை முதல்லே நிறுத்திக்கோ!”

படபடவென்று பொரிந்தவள் எழுந்து வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

எதையோ சொல்ல வந்தவன் எதுவும் பேச முடியாமல் விரைந்து சென்று கொண்டிருந்த தமக்கையையே வெறித்துப் பார்த்தான்.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கூண்டுக்கிளிகள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    மார்க் கூண்டுகள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்