in , ,

தாயல்ல சேய் நீ ❤ (அத்தியாயம் 6) – தி. வள்ளி, திருநெல்வேலி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அம்மாவின் உடல்நிலை குறித்த கவலை மனதை வாட்ட.. அன்று முழுவதும் சங்கீதா ஒன்றுமே செய்யப் பிடிக்காமல் உட்கார்ந்திருந்தாள். முந்தைய நாள் நிகழ்வின் அதிர்ச்சி அவள் மனதில் இருந்து விலகாமல் இருந்தது.

‘இனிமேல் வேலைக்குப் போனா அம்மாவை நல்லா கவனிக்க முடியாது என்று தோன்றியது. யாரை வேலைக்கு வைச்சாலும், என்னைப் போல அம்மாவை யாரும் கவனிக்க மாட்டாங்க ..இனி அம்மாவுக்கு என்னுடைய முழு நேர கவனிப்பு தேவை .’.இந்த எண்ணம் தோன்றியதும் மறுநாளே வேலையை ராஜினாமா செய்தாள் சங்கீதா. 

அம்மாவை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போய் காண்பித்தாள்.திரும்ப எல்லா டெஸ்டுகளையும் எடுத்து பார்த்த பின் அவர்..

“மிஸஸ் சங்கீதா.. அம்மாவுக்கு அல்சீமர் அடுத்த கட்ட நிலைக்கு வந்துருச்சு.. இனி நீங்க கவனமா பாத்துக்கனும். வீட்டை விட்டு வெளியே போறாங்கன்னா அவங்களுக்கு திரும்பத் தெரியாது. அவங்களுடைய பெயரோ, முகவரியோ, தான் யாருங்கிறதையோ சொல்லத் தெரியாது. அதனால கவனமா பாத்துக்கங்க..”

“ரொம்ப கஷ்டமா இருக்கு டாக்டர். அனேக நேரம் ரொம்ப நல்ல ஞாபக சக்தியோட பேசுறாங்க ..என் மகள் ரம்யாகிட்ட நேத்து ஒரு மணி நேரம் போன்ல பேசினாங்க. அவ்வளவு அழகா அவ புள்ளைங்க படிப்பப் பத்தி, ஹெல்த்தப் பத்தி, எல்லாம் கேட்டாங்க …அவளே..”ஆச்சிக்கு தான் இப்ப நல்ல குணமாயிடுச்சு இல்லம்மா..”ன்னு கேக்குறா…அம்மாக்கு நல்ல முன்னேற்றம் இருக்குன்னு நினைக்கும்போது இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு ” என்று இரண்டு நாளைக்கு முன் அம்மா வீட்டை விட்டு வெளியே போய்விட்ட விஷயத்தை சொன்னாள். 

“இந்தப் பிரச்சனையின் தீவிரம் அப்படித்தான் இருக்கும் ..மா. சில நேரம் ரொம்ப நார்மலா இருப்பாங்க ..சில நேரம் தன்னையே மறந்துடுவாங்க ..” டாக்டர் சொல்ல சொல்ல சங்கீதா கவலையில் உறைந்தாள். டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை வழக்கமாக வாங்கும் பார்மஸியில் வாங்கிக்கொண்டு அம்மாவுடன் வீடு திரும்பினாள்.

“என்னடி சங்கீதா.. டாக்டர் என்ன சொன்னாரு? எனக்கு என்ன பிரச்சனை.. ஏன் இப்படி உனக்கு முகம் எல்லாம் வெளுத்துப் போய் இருக்கு..” வீட்டுக்கு திரும்பும் போது பார்வதி கேட்டுக்கொண்டே வர, சங்கீதாவால் பதில் சொல்ல முடியவில்லை.

ஏதாவது சொல்லப் போய் அழுது விடுவோமோ..அப்புறம் அம்மா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. அம்மாவுக்கு இருக்கும் தைரியமும் குறைந்துவிடும் என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“பெருசா ஒன்னும் பிரச்சனை இல்லம்மா …வயசுக்கு உண்டான பிரச்சனை தான் …மாத்திரைகளை சாப்டா சரியாகும்னு சொல்லி இருக்காரு “

“சங்கீதா பாவம்டி நீ எனக்காக ரொம்ப கஷ்டப்படுற… திடீர்னு எல்லாமே மறந்து போகுது.. நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தறேனோன்னு தோணுதுடி “

“அம்மா..என் செல்ல அம்மா… அப்படி எல்லாம் நினைக்காத . எனக்கு என்னைக்குமே நீ பாரம் கிடையாது …நீ எனக்காக உன்னுடைய வாழ்க்கையே தியாகம் பண்ணி இருக்க.. உன்னை நான் பார்த்துக்க மாட்டேனா …உன்னை கவனிக்க வேண்டியது என் கடமை மா…” வலுக்கட்டாயமாக குரலில் ஒரு உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டாள் சங்கீதா.

அன்று பௌர்ணமி.. ரொம்ப நாளைக்கு பிறகு அந்த மகிழ மரத்தடி கீழே உள்ள பெஞ்சில் இருவரும் அமர்ந்திருந்தனர். பல வருடங்களுக்கு முன்னால் இதே போல ஒரு பௌர்ணமி இரவில், அம்மாவின் மடியில் தான் படுத்துக் கொண்டு பாடியது சங்கீதாவுக்கு நினைவுக்கு வந்தது.எவ்வளவு சந்தோஷமான நாட்கள் அவை . 

இப்போது கொஞ்சம் மாறுதலாய் அவள் மடியில் அம்மா படுத்திருந்தாள் …அன்று அவர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் தந்தது வெண்ணிலா ..ஆனால் இன்று நிலைமையே மாறுதலாய் …தொலைந்து போன நிம்மதியுடன். 

தன்னை மறக்கும் குழந்தையாய் மடியில் அம்மா படுத்திருக்க, அவள் விண்ணில் உள்ள முழுநிலவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை ஏறிட்டு பார்த்த பார்வதி.. ” சங்கீதா வெண்ணிலா வா வா என்று ஒரு பாட்டு பாடுவியே அதை பாடேன்” என்றாள்.

திகைத்துப் போனாள் சங்கீதா ..

“அம்மா அத இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா …எப்பவோ பாடிய பாடல் மனதில் வரிகள் நினைவுக்கு வர மறுத்தது. பாடும் மனநிலை இல்லை என்றாலும் …மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள் …

” மேககூடமேறி விளையாடும் 

வெண்ணிலாவே 

விண்ணைத்தாண்டி என்னோடு

விளையாட வா வா …”

மேற்கொண்டு பாடல் வரிகள் மறந்து போக ..பாடுவதை நிறுத்தினாள்…

“என்னடி பாட்டு மறந்து போச்சா. ” என்ற பார்வதி

“நீளும் இந்த இரவில் 

நீயும் நானும் கலந்தாட வா …” என்று நடுங்கும் குரலில் மெல்லிதாய் பார்வதி பாட அதிர்ந்து போனாள் சங்கீதா..

என்றோ பாடிய பாடல் அவள் நினைவில் இருக்கிறது …

அவளையும் அறியாமல் கண்கள் நீரை சொரிய அம்மாவை அணைத்துக் கொண்டாள்…

மறுநாள் காலை ரம்யா பேசும் போது,” அம்மா ஆச்சி எப்படி இருக்காங்க…?”

“பரவாயில்ல.. இருக்கா ரம்யா ..” என்றாள்…. 

ரம்யா, ஆச்சியை அக்கறையாக விசாரித்துக் கொள்கிறாளே என்ற சந்தோஷம் ஒரு கணம் எட்டிப் பார்த்தது ..அந்த மகிழ்ச்சி ஒரு கணம் தான் நீடித்தது.

ரம்யா “அம்மா ஒரு 15 நாளாவது நீ இங்கே வந்து இருக்க முடியுமா ..நானும் சந்தருவும் பிள்ளைகளையும் பாத்துக்கிட்டு, வேலைக்கும் போயிட்டு வர்றதுனால கஷ்டமா இருக்கு . நீ வந்தா கொஞ்சம் வீடெல்லாம் கிளீன் பண்ணி கொடுப்ப..எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும் …”

சங்கீதாவுக்கு “சே” என்று இருந்தது. ” ரம்யா இப்ப ஆச்சியை விட்டுட்டு வர்ற நிலைமைல இல்ல …”

அவள் பேசி முடிக்கும் முன் ரம்யா வெடித்தாள்…”ரஞ்சினிய பாரு.. அவங்க அம்மா வந்து ஒரு மாசமா உட்கார்ந்து வீட்டுக்கு பெயிண்டிங் வேலை அது இதெல்லாம் பாத்து குடுக்குறாங்க. எனக்கு எப்ப பாரு நீங்க ஏதாவது ஒரு சாக்க சொல்லிக்கிட்டு வர மாட்டீங்க..”

“ஏண்டி இப்படி சொல்ற.. நானும் ஆச்சியும் மாறி, மாறி அடிக்கடி உன் வீட்டுக்கு வந்து இருக்கத்தானே செஞ்சோம். உன் பிள்ளைகள் வளர்ற வரைக்கும் நாங்க உனக்கு எவ்வளவு உதவி பண்ணி இருக்கோம். நீ உங்க அத்தையை வேணா கேட்டுப் பாரு அவங்க முடியும்னா அவங்கள வந்து ஒரு மாசம் இருக்க சொல்லு ” 

சங்கீதா மாமியாரை கேட்டுப்பாரு என்று சொன்னதும் கோபத்தில் வெடித்தாள் ரம்யா …ஏனென்றால் அவளுக்கும் மாமியாருக்கும் ஏழாம் பொருத்தம் தான். எப்போதும் மாமியாருடன் ஒத்துப் போக மாட்டாள். இப்போ அம்மா மாமியார் என்று சொன்னதும் கோபம் சுறுசுறுவென ஏறியது. 

“நல்லா இருக்கு.. பெத்த பொண்ணுக்கு செஞ்சதுக்கு சொல்லி காமிக்கிற.. வேணா போஸ்டர் அடிச்சு ஒட்டிடுறேன். நீ செஞ்ச உதவி எல்லாம் பட்டியல் போட்டு…நான் உன்னை கூப்பிட்டா நீ என் மாமியார் வர சொல்லுன்னு சொல்ற ..ரொம்ப நல்லா இருக்கு …சரிமா உன்னிடம் பேசுனது தப்பு… நான் வச்சிடுறேன்..” என்று போனை டக்கென்று வைத்தாள் ..சங்கீதாவுக்கு மனம் வலித்தது. 

கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளாவிட்டால் கூட பரவாயில்லை, புரிந்து கொள்ளவே இல்லை என்றால் என்ன செய்வது. .அவள் மாமியாரும் நல்ல மனுஷி தான் அவசரத்துக்கு கூப்பிட்டால் வந்து உதவி செய்யக் கூடியவர் தான்.. ஆனால் இவளுக்கு இஷ்டம் போல் இருக்க முடியாது என்று அவர்களைக் கூப்பிடப் பிடிக்காது.

ரம்யா எப்போதுமே சுயநலக்காரி தான். அது தெரிந்த விஷயம் தானே என்று தன் மனதை தேற்றிக்கொண்டாள்.

பயன் இருந்தால் தான் பொருளுக்கு மட்டுமல்ல மனுஷனுக்கும் மரியாதை மதிப்பு என்று எண்ணம் சங்கீதாவின் மனதில் ஓடியது ..என்ன சுயநலமான உலகம் ..மனம் முழுக்க ஒரு கசப்புணர்வு பரவியது ..ஆனால் யதார்த்தம் அதுதானே ஏத்துக்கொள்ள தான் செய்யனும் பக்கத்தில் அயர்ந்து தூங்கும் அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா ..நித்ராதேவி அவளையும் மெல்ல ஆட்கொண்டாள். 

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தாயல்ல சேய் நீ ❤ (அத்தியாயம் 5) – தி. வள்ளி, திருநெல்வேலி

    தாயல்ல சேய் நீ ❤ (நிறைவுப் பகுதி) – தி. வள்ளி, திருநெல்வேலி