in ,

கணக்கு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ங்க மணி எழரையே ஆச்சு. இன்னும் இந்த பால்காரம்மாவையே காணோமேங்க… எவ்ளோ நேரம்தான் ரோடையே பார்க்கறது.. அவளோட வீடு வரைக்கும் கொஞ்சம் போய்ட்டு என்னன்னு பார்த்திட்டு வாங்களேன்… ’ என்றாள் மல்லிகா.

நிமிர்ந்து பார்த்த ராமன், ‘ சரி… போறேன். கொஞ்சம் இரு… இன்னும் ரெண்டு பக்கம்தான்… ‘ என்று விட்டு மறுபடியும் பேப்பருக்குள் மூழ்கினான்.

‘பாப்பாக்கு பால் கலந்து கொடுக்கணுங்க. டைம் ஆகிட்டே போகுதில்ல… ‘ என்றவள் தொடர்ந்து, ‘இந்தம்மா ஏன்தான் இப்படி பண்ணுதோ. ஒவ்வொரு நாளைக்கு வர்றதில்லை. மறுநாள் வந்து கன்னுக்குட்டி பாலைக் குடிச்சிடுச்சு… பால் கம்மியா கறந்துச்சுன்னு ஏதாவது ஒரு சால்ஜாப்பு சொல்லுவா… சரி, கொடுக்கற பாலைத்தான் நல்ல பாலா கொடுக்கறாளானா அதுவுமில்லை, தண்ணியாத்தான்  கொடுக்குறா. இவளோட போராடறதுக்கு… பேசாம பூத்லேயே போய் பால் வாங்கிக்கலாம் போல இருக்கு…‘ என்று புலம்பித் தள்ளிக்கொண்டே போனாள்.

‘ சரி… புலம்பாதே… போறேன்… ‘ என்றபடியே பேப்பரை மூடினான்.

‘போய் ஒரு சத்தம் போட்டுட்டு வாங்க… அப்போத்தான் உறைக்கும். ஒருவேளை, வீட்லே பால் வச்சிருந்தாள்னா, இதோ உங்க பக்கத்துல தூக்கு வச்சிருக்கேன் பாருங்க, அதுலயே வாங்கிட்டு வந்திருங்க… ‘ என்றாள்

‘ சரீ… ‘ என்று எழுந்தான் அவன்.

‘இந்த லட்சணத்துல ஒவ்வொரு மாசமும் ரவுண்டா கொடுக்கறேன்… மீதியை தர்றதேயில்லை… போன மாசத்துக்கு முந்தின மாசம் நானூத்தி எண்பத்தஞ்சு ரூபாய்க்கு ஐநூறு ரூபாயா கொடுத்தேன். மீதி காசு தந்துடறேன்னா தரவேயில்லை… அதேமாதிரி போன மாசம் ஐநூத்தி அறுபத்தஞ்சுக்கு, அறுநூறு ரூபாயா கொடுத்தேன். அதுலேயும் மீதி வரவேயில்லை… அதுக்கும் முன்னாடியும் அதே போலத்தான். இதுவரை கிட்டத்தட்ட அம்பது அறுபது ரூபாக்கு மேல அந்தம்மாக்கிட்டே நிக்கிது.  இந்த மாசம் குடுக்கற காசுல பிடிச்சிக்கிட்டுத்தான் கொடுக்கப் போறேன்…  அம்பதோ அருபதோன்னாலும் பணம் என்ன, மரத்துலேயா காய்க்குது… ‘ என்றாள் கறாராக.

இனி இவள் நம்மை விடமாட்டாள்… புலம்பிக்கொண்டேதான் இருப்பாள்  என்று நினைத்தபடி ஓடிப்போய் மொபெட் சாவியை எடுத்தான் ராமன்.

அதே நேரம் காம்பவுண்டு கேட்டை யாரோ திறக்கும் சப்தம் கேட்டு, எட்டிப் பார்த்தான்… பால்காரம்மாதான் வந்துகொண்டிருந்தார்.

உடனே ராமன், ‘ அடடே, மல்லி… அந்தம்மாவே வந்திடுச்சு, பாத்திரத்த எடுத்துக்கிட்டு வா… ’ என்று குரல் கொடுத்தான். அப்போதுதான் கவனித்தான் அந்தம்மாள் வெறும் கையுடன் வந்து நிற்பதை.  அதற்குள் பாத்திரத்துடன் வெளியே வந்த மல்லிகாவும் அதிர்ந்து நின்றாள்.

‘எங்கேக்கா, வெறும் கையோட வந்திருக்கே… பால் தூக்கு எங்கே, பால் கொண்டுவரலையா  ’ என்று கொஞ்சம் கடுப்புடன் கேட்டாள்.

உடனே கண்களை கசக்க ஆரம்பித்தாள் பால்காரம்மா. ‘நான் என்னத்தைம்மா சொல்லுவேன்…‘ என்று கண்களை கசக்கிக்கொண்டே, ‘அம்மா…. மாடு செத்துப் போச்சும்மா… ’ என்றாள்.

‘மேயப் போன இடத்துல பாம்பு ஏதும் கடிச்சிதோ என்னவோ, விடிஞ்சு  பார்த்தா மாடு செத்து கெடக்குது. டாக்டரும் வந்து பார்த்துட்டு ராத்திரியே செத்திருக்குன்னு சொல்லிட்டுப் போய்ட்டார்… விடிஞ்சதும் அழுதுகிட்டே ஒவ்வொரு வீடா போய் சொல்லிக்கிட்டு வந்துக்கிட்டிருக்கேன்மா… ’ என்றாள் துக்கம் தொண்டையை அடைக்க.

‘சரி… மாட்டை என்ன பண்ணினீங்க… ‘ என்றாள் மல்லிகா.

‘எங்கேயாவது தூர கொண்டு போய் புதைச்சிடலாம்னு பார்த்தா, குட்டி லாரி கொண்டு வரணும், குழித் தோண்டனும்… அடக்கம் பண்ணனும்… குழியை மூடனும், ரெண்டாயிரம் கொடுங்கங்கறாங்க…. மாசக் கடைசில நாங்க அவ்வளவு காசுக்கு எங்கேம்மா போவோம்… ’ என்று அந்தம்மா புலம்பிக் கொண்டிருக்கும்போதே மடமடவென உள்ளே போனாள் மல்லிகா.

‘இவளென்ன, இந்தம்மாள் அழுதுகொண்டிருக்கும்போது உள்ளே போகிறாள்… ‘ என்று ராமன் திகத்துக்கொண்டிருக்கும்போதே, உள்ளே போனவள் கையில் ஐநூறு ரூபாய் நோட்டுடன் திரும்பி வந்தாள்.

‘இந்தாம்மா, என்னால முடிஞ்ச காசு… இதை நீயே வச்சிக்க… திருப்பித் தரவேணாம். பற்றாக்குறைக்கு வேற எங்கேயாவது புரட்டிக்கிட்டு போய் முதல்ல மாட்டை அடக்கம் பண்ற வேலையை பாரு… செத்துப் போன மாட்டை வீட்டுலயேவா போட்டு வச்சிருப்பாங்க… மனசை தளரவிடாத… கடவுள் இருக்கார்… எல்லாம் நல்லபடியா நடக்கும்… ’ என்றபடி ரூபாய் நோட்டை அவளது கையில் திணித்தாள். பால்காரம்மா பணத்தை வாங்கிக்கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்டு தனக்குள் ஏதோ புலம்பியபடி திரும்பிப் பார்க்காமல் போனாள்.

அதிர்ச்சியுடன் மனைவி பக்கம் திரும்பினான் ராமன்.

‘என்னடி..? இப்போதான்… பதினைஞ்சு, இருபது ரூபாயெல்லாம் கணக்கு பார்த்தே.. பணம் என்ன மரத்துலேயா காய்க்குதுன்னே… இப்போ முழுசா ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்துட்டு திருப்பி தரவேண்டாம்னு வேற சொல்றே…. என்ன கணக்கு… உன் கணக்கு…’ என்றான்.

ஒரு சிறு புன்னகையுடன், ‘பாவங்க… மாடு செத்துப் போச்சுங்கறா… இப்போ போயி கணக்கு பார்க்க முடியுமா… ‘ என்றவள் கீழேயிருந்த தூக்கை எடுத்துக் கொடுத்து, ‘ சரி சரி.. மசமசன்னு நிக்காம போய் பால் பூத்லேர்ந்தாவது பால் வாங்கிட்டு வாங்க. அவனும் தீர்ந்துடுச்சுன்னு சொல்லிடப் போறான்… பாப்பா வெறும் வயிரோட இருக்கா… நாமளும் இன்னும் டீ குடிக்கலை… ’ என்றாள்.

ராமன் முனகிக்கொண்டே மொபெட்டில் கிளம்பிப் போனான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மலைக்கோயில் வாசலில் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    அம்மா கிட்ட (சிறுகதை) – சுஶ்ரீ