in ,

ஞாபகமறதி (சிறுகதை) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

எழுதணும்னு ஆரம்பிச்சிட்டேன் ஆனா என்ன எழுத, எதை எழுத எத்தனையோ ஞாபகங்கள் யானைக் கூட்டமா தாக்க வருது அன்பாயுதம் எடுத்து எதிர்த்து நின்னா ஒண்ணும் பண்ணாது குட்டி யானை ஒண்ணு பக்கத்தில் வந்து ஏதோ கேக்கறது, பேச நினைக்கிறதோ “விசாலம் ஃபிரிட்ஜ்க்கு மேல கூடைல வாழைப்பழம் இருக்கு கொண்டுவாயேன் இந்த குட்டிக்கு கொடுப்போம்”

“என்ன காலங்காத்தலே கைல பேப்பரை வச்சிண்டே தூங்கிட்டேளா, கனவுல யாரைப் பாத்தேள் அம்மு பாட்டியா, உங்க ராமு சித்தப்பாவா?”கைல காபி டம்ளருடன் என் பார்யாள்.அலங்க மலங்க பாத்த நான், ஈசிசேர்ல உக்காந்து எதை எழுதலாம்னு யோசிச்சிண்டே கண் அசந்துட்டேன் போல, யானையும் காணோம் குட்டியும் காணோம், 85 கிலோல நம்ம யானைதான், என் ஹாஸ்ய உணர்வை நானே ரசிச்சு சிரித்துக் கொண்டேன்.

“என்ன சிரிப்பு, ஏதாவது தப்புதப்பா யோசிச்சு உங்க காமெடியை நீங்களே ரசிச்சு சிரிச்சிண்டாதான் உண்டு. நீங்களும்தான்,கல்கி ரேஞ்சுக்கு எழுதறதா நினைச்சிண்டு எழுதறேள், காலம் போன காலத்துல, எதுக்கு இதெல்லாம்.ஒரு நாதி படிக்கறதில்லை என்னவோ எனக்குனு வந்து வாச்சிருக்கே” புலம்பிண்டே காபி டம்ளரை நக்னு வச்சிட்டு உள்ளே போனாள்.

அவ சொன்னதுல ஒரு தப்பும் இல்லை ரிடயர் ஆனாமோ.பேப்பர் படிச்சோம், TV ல நியூஸ் பாத்தோம் கோவிலுக்கு போனோம், பார்க்குல நம்ம வயசு கிழவர்களோட அரட்டை அடிச்சோம்,சாப்பிட்டோம் தூங்கினோம்னு நார்மலா இல்லாம இதென்ன எழுதற ஆசை.யார் வீட்டுக்கு வந்தாலும் நான் கதாசிரியர் ஆயிட்டேன்னு என் கதை ஃபோல்டரை கொடுத்து பாவம் அவர்களும் மரியாதை நிமித்தம் படிக்கற மாதிரி பாவ்லா பண்ணி “அருமையா இருக்கே குமுதம், விகடன் காரா பாத்தான்னா அள்ளிண்டு போயிடுவாளேனு” அவர்களையும் பொய் சொல்ல வச்சு என்ன பொழப்பு இது.

அப்படித்தான் விசாலத்தோட ஒண்ணு விட்ட சித்தப்பா அன்னிக்கு தஞ்சாவூர்ல இருந்து வந்தார் மனைவியோட. “ஒரு பூனல் கல்யாணத்துக்கு வந்தோமா சென்னைல நீங்கள்ளாம் இருக்கறப்ப ரூம் போட்டு தங்கினா நீங்க கோச்சிப்பேளே அதான் எக்மோர்ல இருந்து நேரா மயிலாப்பூர், எனக்கு தெரியாதா விசாலத்தையும் உங்களையும் உரிமையோட எத்தனை தடவை கூப்பிட்டிருப்பேள்.”

சத்தியமா அவர் முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லை, ஆனா என்னத்தை சொல்ல “ஆமாம் ஆமாம் வாங்கோ பேஷா இங்கே தங்கிக்கலாம் எத்தனை நாள் வேணா”

அவர், “ எனக்கு தெரியாதா நீங்க எப்படிப் பட்டவானு சும்மா சென்னை பட்டணம் சுத்திப் பாத்து நாளாச்சு பாத்துட்டு கிளம்பிடுவோம், ஏதாவது தெரிஞ்சவா டாக்சி சொல்லிடுங்கோ ரெண்டு மூணு நாளைக்கு போறும்”

நான் எப்படா கேப் கிடைக்கும் நம்ம எழுத்தாற்றலை பறை சாற்றலாம்னு பாத்தா கேப் விடாம பேசறார். நான் விடுவேனா அவர் டிபன் காபி சாப்பிடற கேப்ல புகுந்துட்டேன். இதைப் பாருங்கோ போன வாரம் முகநூல்ல பதிவிட்ட நான் எழுதின கதை ஏகப்பட்ட வரவேற்புனு அந்த மேனுஸ்கிரிப்டை அவர் மடில திணிச்சேன்.( உண்மையை சொன்னா அந்த பதிவுக்கு ஒரு கமெண்ட் வரலை, 5 லைக் அதுல ஒண்ணு நானே போட்டது.என் மனைவி, பொண்ணு, பையன், என் கிட்ட 700 ரூபா கடன் வாங்கின கோண்டுவை வற்புறுத்தி போட வைச்சது ஒண்ணுனு சொல்லவே கூச்சமா இருக்கு)

அந்த சித்தப்பா பக்கத்தை படபடனு புரட்டிட்டு “பின்னிட்டீரேய்யா, சடகோபன்னு ஒரு எழுத்தாளர் முன்னே எழுதுவார், அவருக்கு அப்பறம் அப்படி ஒரு எழுத்தை பாக்கவே இல்லை, யாரோ ஒத்தன் கொலையே பண்ணிட்டான் அவரை, பாவம்”

எனக்கு அடி வயித்தில் புளியை கரைச்சது, அப்படியெல்லாம் யாரைப்பத்தியும் எழுதல்லையே கொலை ரேஞ்சுக்கு பேசறாரேனு.அவசரமா பேப்பரை பிடுங்கி வச்சிண்டேன். இந்தக் காலத்துல நல்ல எழுத்துக்கு எங்கே மதிப்பு இருக்கு.

ஆமாம், வேறே ஏதோ தலைப்புக்குன்னா எழுத ஆரம்பிச்சேன் , வயசாச்சா தொடர்ச்சியா எதுவும் ஞாபகத்துல வரதில்லை. யாருக்காவது ஞாபகம் வந்தா சொல்லுங்களேன்

 தலைப்பு என்ன??

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உள்ளொன்று (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    ஒரே ஜாதி (சிறுகதை) –  தி.வள்ளி, திருநெல்வேலி