in ,

கால் டம்ளர் காஃபி கற்றுத் தந்த பாடம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“சங்கவி, ஒரு கால் டம்ளர் காஃபி தரியா?”

தொலைக்காட்சித் தொடரில் மூழ்கியிருந்த சங்கவிக்கு எரிச்சல்தான் வந்தது. டிவி சத்தத்தைக் குறைத்துவிட்டு சலிப்புடன் எழுந்து சமையலறைக்கு வந்தாள். அதற்குள் மறுபடியும் சங்கவி என்று குரல் கேட்டது. மிகவும் கஷ்டப்பட்டு கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அரை டம்ளர் காஃபியைக் கலந்து எடுத்துக்கொண்டு போனாள்.

அறைக்கு அருகில் போன போதுதான் குரல் வந்தது பிரமை என்பதை உணர்ந்து கொண்டாள். மாமியார்தான் இல்லையே இப்போது. மாமியார் தவறி ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இப்படி காஃபி கேட்பது போல் அவர் குரல் சங்கவிக்கு அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அவளையும் அறியாமல் கண்ணீர் பொலபொலவென்று எட்டிப் பார்த்தது. கலந்து கொண்டுவந்த காஃபியை அப்படியே மேசை மேல் வைத்துவிட்டு ஆற்ற முடியாத அழுகையோடு சோஃபாவில் உட்கார்ந்தாள்.

சங்கவியின் மாமியார் செண்பகவல்லி, ஒரு மாதம் முன்பு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் தவறிவிட்டார். அது என்னவோ அவருக்கு காஃபி என்றால் அவ்வளவு இஷ்டம்.

சங்கவி திருமணமாகி வந்தது முதலே அவரது இந்த காஃபி பழக்கத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஒரு சிலருக்கு வாய்க்கு ஏதாவது சாப்பிடவேண்டும் போல் இருந்தால் ஏதாவது நொறுக்குத் தீனியை சாப்பிடுவார்கள். ஆனால் செண்பகவல்லி நினைத்த போதெல்லாம் காஃபியைக் கலந்து குடிப்பார். அதிகம் எல்லாம் இல்லை, ஒரு கால் டம்ளர் அல்லது அரை டம்ளர் அவ்வளவுதான்.

அதுவும் காஃபி குடிப்பதற்கென்றே சின்னதாக ஒரு பித்தளை டவரா டம்ளர் வைத்திருப்பார். அதை அவர் மட்டும்தான் உபயோகப்படுத்துவார். ஒவ்வொரு முறையும் அதில்தான் காஃபி வேண்டும். அதனால் ஒவ்வொரு முறை குடித்த பிறகும் கையோடு அலம்பி வைத்து விடுவார்.

ஒரு நாளைக்கு நாலைந்து முறைக்கு மேல் குடித்து விடுவார். அவராகக் கலந்து குடித்தவரை சங்கவிக்கு அதைப்பற்றிய பெரிதான சிக்கல் எதுவும் இல்லை. முதுமையால் அவருக்கு சற்று முடியாமல் போனபிறகு காலையில் அவர் கலந்து குடித்தாலும், இடைப்பட்ட நேரத்தில் சங்கவி சமையலறையில் இருந்தால் அவளிடம்தான் கேட்பார்.

ஆரம்பத்தில் அது ஒன்றும் பெரிய வேலையாக அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் நாட்கள் போகப்போக இப்படி நினைத்த நேரத்தில் கால் டம்ளர் காஃபி, அரை டம்ளர் காஃபி உஎன்று அவர் கேட்கும் போதெல்லாம் சங்கவிக்குக் கோபம் வர ஆரம்பித்தது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் உண்டு சங்கவிக்கு காஃபியே பிடிக்காது. டீ வேண்டுமானாலும் குடிப்பாளே ஒழிய காஃபி குடிக்கவே மாட்டாள். அவளுக்குப் பிடிக்காத ஒன்றை இப்படி அடிக்கடி கலந்து தரச் சொல்கிறாரே என்ற கோபம் ஒரு புறம். அப்படி அந்த காஃபியில் என்ன இருக்கிறது, காலை மாலை என இருவேளை குடித்தால் மட்டும் போதாதா என்ற கோபம் இன்னொருபுறம்.

அவர் காஃபி கேட்கும் போதெல்லாம் வேண்டா வெறுப்பாகத்தான் கலந்து கொடுத்துக் கொண்டிருந்தாள் சங்கவி. கடந்த ஆறு மாதங்களாகப் படுத்த படுக்கையாகி விட்டார். ஆனாலும் காஃபி குடிப்பது மட்டும் குறையவே இல்லை. நினைத்த நேரத்தில், “சங்கவி, ஒரு கால் டம்ளர் காஃபி தரியா” என்று கேட்பார்.

சின்ன வேலைதான், ஆனால் ஏனோ அவர் கேட்கும்போது சங்கவிக்கு அப்படியொரு கோபம் வரும். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

அவருக்குப் பிடிக்காத காய்கறிகளான கத்திரிக்காய், முட்டைகோஸ், அதே போல் டிஃபன் வகைகளில் அவல் உப்புமா, சேமியா உப்பு, இட்லி இதெல்லாம் செண்பகவல்லிக்கு அவ்வளவாகப் பிடிக்காது. சங்கவி இவற்றைச் செய்யும்போதெல்லாம் அவருக்குக் கோபம் வரும்.

“இந்த இட்லில என்ன இருக்குன்னு எப்பப்பாரு பண்றே? சப்புன்னு இருக்கு. அதுக்கு நாலு தோசையா வார்த்து சாப்பிட்டுட்டுப் போயிடலாம்,” என்பார்.

“முட்டைகோஸ் நாத்தம் அடிக்குது. எனக்குப் பிடிக்காதுனு தெரியும்ல. எப்படித்தான் இதை சாப்பிடறயோ நீ,” என்பார்.

சங்கவிக்கு முட்டைகோஸ், கத்திரிக்காய் எல்லாம் மிகவும் பிடிக்கும். அவளுக்குப் பிடித்த இதுபோன்ற பதார்த்தங்கள் அவள் மாமியாருக்குப் பிடிக்கவில்லை என்றால் இதையெல்லாம் எப்படித்தான் சாப்பிடறயோ என்றுதான் கேட்பார்.

அவர் அப்படிக் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போனதாலோ என்னவோ, அவருக்குப் பிடித்த காஃபியை அடிக்கடி கலந்து தரச் சொல்லும்போதெல்லாம் சங்கவிக்குக் கோபம் வர ஆரம்பித்தது.

அதுவும் அவர் படுத்த படுக்கையான பிறகும் அதே பழக்கத்தைத் தொடர நினைத்தார். நினைத்த நேரத்தில் காஃபி கேட்பார். ஒரு நாளைக்கு ஆறு முறை, ஏழு முறை என்றும் கால் டம்ளர் அளவிற்குக் கலந்து கொடுப்பது சங்கவிக்கு எரிச்சலைத் தந்தது.

“அதுதான் உடம்பு முடியாம இருக்கீங்க இல்ல, காஃபியை இவ்வளவு முறை குடிக்கணுமா? அதுக்கு பதில் சத்தான ஆகாரம் ஏதாவது சாப்பிடலாம் இல்ல. உடம்புக்குத் தெம்பா இருக்கும். அப்படி என்னதான் இருக்கோ அந்த காஃபில,” என்று ஒவ்வொரு முறையும் புலம்பியபடியேதான் அந்த கால் டம்ளர் காஃபியைக் கலந்து கொடுப்பாள் சங்கவி. ஆனால் அவர் பதில் ஏதும் பேச மாட்டார்.

அவர் உடல்நிலை மோசமான பிறகு அவரிடம் இப்படிக் கோபப்படுவதற்கு அவளுக்கே கஷ்டமாக இருந்தது. கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டாள். காஃபியை அவர் கேட்கும்போது மட்டும் கலந்து கொடுத்து விடுவாள்

போன மாதத்தில் செண்பகவல்லியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். டாக்டர்கள் அவர்களால் இயன்ற எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தார்கள். ஒரு கட்டத்தில்,

“இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. எப்போது வேண்டாமானாலும் முடிவு வரலாம். வீட்டிற்கு அழைத்துப் போகலாம்,” என்று சொல்லி விட்டார்கள்.

அவருக்கு நினைவும் அவ்வளவாக இல்லை. மயக்கத்தில் இருப்பது போலவே இருந்தார். ஆனால் நாம் பேசுவது எல்லாம் புரிந்து கொள்ள முடிந்தது. சங்கவியின் கணவர், நாத்தனார் எல்லாம் அவருக்குப் பிடித்த ஒவ்வொன்றாகச் செய்து பார்த்தார்கள். துளசி தீர்த்தம் முதற்கொண்டு கொடுத்துப் பார்த்தார்கள்.

ஆனால் ஏதோ ஒரு குறையோடு அவர் உயிர் போராடிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. சட்டென்று எப்போதும் அவர் விரும்பிக் குடிக்கும் காஃபியை அதே பதத்தில், அதே அளவு சர்க்கரையோடு கலந்து கொண்டு போய் கொடுத்தாள் சங்கவி. அந்தக் கால் டம்ளர் காஃபியைக் குடித்து முடித்ததும் அவர் முகத்தில் அப்படி ஒரு நிறைவு. கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிய அப்படியே அவர் உயிர் பிரிந்தது.

அந்த நிமிடத்தில் நொறுங்கிப் போனாள் சங்கவி. அவருக்குப் பிடித்த அந்த காஃபியைக் குடிப்பதற்கு அவருக்கு உரிமை இல்லையா?

முதுமையினால் அவருக்கு அதைத் தயாரித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்ததற்கு எதற்காக அவ்வளவு கோபப்பட்டோம் என சங்கவி தன்னையே நொந்துகொண்டாள்.

அவருக்குப் பிடிக்காதவற்றை சங்கவி சாப்பிடும்போது அவர் அப்படிப் பேசியிருந்தாலும், தானும் அதையே திரும்பச் செய்ய வேண்டுமா என தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டாள்.

உண்மையிலேயே சங்கவிக்கு தன் மேலேயே கோபம் வந்தது.

இந்தத் தவறை அநேகமாக நாம் அனைவருமே செய்கிறோம். நமக்குப் பிடிக்காத ஒன்று இன்னொருவருக்கு மிகவும் பிடித்திருந்து, ஒரு கட்டாயத்தினால் அவர்களுக்காக நாம் அதைச் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும்போது ஏனோ அப்படி ஒரு கோபம் வருகிறது.

அவர்கள் நமக்குப் பிடித்தமானவர்களாக இருந்தால்கூட இப்படித்தான் செய்கிறோம். மாமியாரிடம் மட்டுமல்ல, மனைவி கணவனிடமோ, கணவன் மனைவியிடமோ, குழந்தைகளிடமோ, பெற்றோரிடமோ… நமக்குப் பிடிக்காத ஒன்றை இன்னொருவரின் வற்புறுத்தலினால் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும்போது நமக்குக் கோபம் வருகிறது.

அதே வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வரும்போது அதைப் பெரிய அழுத்தமாக எடுத்துக் கொள்கிறோம். சங்கவியும் அதே தவறைத்தான் செய்தாள்.

ஆனால் மாமியாரின் மறைவுக்குப் பிறகு, செய்த தவறு சங்கவிக்குப் புரிந்தது. ஆனால் அதனால் பயன் இல்லையே. இந்த ஞானோதயம் அவர் உயிரோடு இருக்கும்போதே வந்திருந்தால், ஒரு கால் டம்ளர் காஃபிக்காக சங்கவி அவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டாம்.

அவர் சங்கவியை என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். அது அவர் குணமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். பதிலுக்கு சங்கவியும் அப்படியே நடந்து கொள்ள வேண்டுமா என்ன?

இது ஏன் இவ்வளவு வருடங்களாக அவளுக்குத் தோன்றவே இல்லை. அந்தக் குற்ற உணர்ச்சி அவளை அழுத்திக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவுதான் இப்படி திடீர் திடீரென்று அவள் மாமியார் காஃபி கேட்பது போலவே ஒரு மாயத் தோற்றம். அவர் இல்லை என்ற ஞாபகமே இல்லாமல் சட்டென்று காஃபியைக் கலந்து எடுத்துப் போகிறாள்.

ஒரு மாதம் ஆயிற்று. இன்னும் அவளால் அந்த பாதிப்பில் இருந்து மீளவே முடியவில்லை. இது ஒரு பெரிய பாடம் சங்கவிக்கு மட்டுமல்ல, நமக்கும்தான். இனிமேல் யாரிடமும் இப்படி சாதாரண விஷயத்திற்குக் கோபப்படக்கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டாள் சங்கவி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நடுத் தெருவில் (சிறுகதை – பிற்பகுதி) – நாமக்கல் வேலு

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (சிறுகதை) – இரஜகை நிலவன்