2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
டேய் பீத்த கடங்காரானு, இனிமே என்னை அம்மாவோ அப்பாவோ நண்பர்களோ கூப்பிட மாட்டாங்க.
ஏன்னா, போன மாசம் ஒரு சுபயோக சுபதினத்துல ஶ்ரீலதா என்ற கன்னிகைக்கும், பீதாம்பரம் என்ற வரனுக்கும் (நான்தேன்) கல்யாணம் முடிஞ்சு போச்.
இப்ப நான் கிரகஸ்தனாக்கும், என்னை திட்டிக் கூப்பிட யாருக்கும் மனசு வருமா நீங்களே சொல்லுங்க. இப்ப கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆச்சு எல்லாரும் மரியாதையா கூப்பிடறாங்க. என் மாமனார் என்னை மாப்பிள்ளை, மாப்பிள்ளைனு கொண்டாடறார், மாமியார் புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திண்டு, “டீ லதா உன் ஆத்துக்காரருக்கு காபி கொடுடி, டிபன் கொடுடி”னு ஏக உபசாரம்.
என் ஒய்ஃபா அவளும் ஓகேதான், முதலிரவு அன்னிக்குதான் கொஞ்சம் பிராப்ளம் ஆயிடுச்சு, சினிமால வராப்பல பால் சொம்பல்லாம் கொண்டு வந்து, டம்ளர்ல சரிச்சு கொடுத்தா நானும் கதாநாயகன் மாதிரி பாதி குடிச்சிட்டு, “இந்தாடா ஶ்ரீ செல்லம்னு” டம்ளரை நீட்டினேன்.
அவ களுக்னு சிரிச்சிட்டே தம்ளரை வாங்கிண்டா.
“என்னடா சிரிக்கறே, இதுல என்ன காமெடி”
“இல்லை என்னை செல்லமா சிலர் நீங்க இப்ப கூப்ட மாதிரி ஶ்ரீன்னு கூப்பிடுவா, சிலர் லதானு கூப்பிடுவா, அதான் உங்களை எப்படி கூப்பிடறதுனு” திரும்ப விழுந்து விழுந்து சிரிக்கறா.
எனக்கு பீ-தாம்பரம்னு பேர் வச்ச என் பெற்றோர் மேல கோவமா வந்தது.முத முத நாளே இன்சல்ட். விட்டுக் கொடுக்காம நான் சொன்னேன் “என் அம்மா என்னை பட்டுனு கூப்பிடுவா”
“சரி பட்டு, டயர்டா இருக்கு, படுத்துக்கவானு” சட்னு படுத்து தூங்கிட்டா. அப்பறம் நடுராத்திரில திரும்ப எழுந்து கல்யாணக் கடமைகளை முடிச்சது வேற கதை.
என் கல்யாணம் கும்மோணத்துல முடிஞ்சது, ஒரு வாரம் மாமா, அத்தை, அத்தங்கா, பெரியப்பா, சித்தப்பானு மாத்தி மாத்தி விருந்து முடிஞ்சு. இன்னிக்கு சென்னை கிளம்பியாச்சு. என் மனைவி பிளிய பிளிய கண்ணீர் விட்டு பிரியாவிடை வாங்கிண்டு கிளம்பிட்டா.
மாமனார் என் கிட்ட, ”எங்க ஶ்ரீயை ரொம்ப செல்லமா வளத்துட்டோம், ஏதோ சின்ன சின்ன தப்பு பண்ணிட்டா கூட பெரிசா எடுத்துக்காம நீங்கதான் பாத்துக்கணும்”
என் அம்மா கெத்தா, “அதெல்லாம் எங்க பொண்ணு மாதிரி பாத்துப்போம் கவலைப் படாதீங்க”
ஒரு வழியா கல்யாண அமக்களம் முடிஞ்சு சென்னைக்கு திரும்பியாச்சு. திருவல்லிக்கேணி ராமநகரத்துல ,வெங்கடரங்கம் தெரு திரும்பினா முனைல ஒரு முட்டுச் சந்து , கட்டி வச்சிருக்கற நாலு எருமை மாடுகளுக்கு நடுவுல புகுந்து 20 அடி நடந்தா நம்ம போர்ஷன்தான். கொஞ்சம் சின்ன வீடுதான் ஆனா சிடில சொல்ப வாடகைக்கு வீடு எங்கே கிடைக்கும்.
அம்மா சொல்வா தினம் கார்த்தாலை கோலம் போடறப்ப இந்த எருமை மாட்டு முகத்துல முழிச்சா எம பயமே கிடையாதுனு. ஶ்ரீலதா முத நாள் வீட்டுக்குள்ளே வரவே தயங்கினா, எப்படி இந்த எருமை மாடுகளோட உரசிண்டு வீட்டுக்கு உள்ளே நுழையறதுனு.
நான்தான், அதெல்லாம் எருமை மாடுங்க ஒண்ணும் பயப்படாது , நீ பாட்டுக்க வானு கையை பிடிச்சு கூட்டிண்டு போனேன், ஒரு எருமை ஈனு பல்லை பூரா காட்டி சத்தமா சிரிச்சிண்டே வாலை சுழட்டி முதுகுல அடிச்சிண்டது. இப்ப ஶ்ரீதான் கொஞ்சம் பயந்தா.
வீடுன்னா என்ன ஒரு ஹால் ,ஒரு சின்ன ரூம் , ஹாலை ஒட்டியே சமையலுக்கு ஒரு மேடை. பாத்ரூம், டாய்லட் எல்லாம் காமன், அவசரம்னா சில சமயம் நானு, எருமைங்க எல்லாம் ஒண்ணாவே குளிப்போம்.
“என்ன இது சென்னைல வீடுனு சொல்லிட்டு, மாட்டுக் கொட்டாய்ல கொண்டு வந்து அடைச்சிட்டீங்க”
“இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ சொந்த ஃபிளாட் புக் பண்ணிடலாம்” (நான் மவுண்ட் ரோட்ல ஒரு கலைப்பொருள் அங்காடில சேல்ஸ் மேனேஜர் ,35 ஆயிரம் சம்பளம்)
நான் சொன்னதுல எனக்கே நம்பிக்கை இல்லை.
மூணு மாசம் எப்படியோ ஓடிப் போச்சு. ஞாயித்துக்கிழமை எனக்கு லீவாச்சா,
“ஏய் ஶ்ரீ குட்டி மெரினா போலாமா”
“ஆமாம் மெரினா, சுண்டல், வீடு வேற என்னத்தைக் கண்டேன். அது கூட 1 கிலோ மீட்டர் நடக்கணும்.”
“இன்னிக்கு ரத்தினா கபேல டின்னர் சரியா”
“வேண்டாம் இந்த டயத்தில கண்டதை சாப்பிடக் கூடாதுனு அம்மா சொன்னா”
“என்னது, என்னது? திரும்பச் சொல்லு”
“ஆமாம் என்னத்தை சொல்றது, உங்க பையன் உதைக்கறான்னா”
“நிஜமாவா நீ சொல்லவே இல்லை? “
“எனக்கே இன்னிக்குதான் கன்பர்ம் ஆச்சு, அம்மாகிட்ட ஃபோன் பண்ணி சொன்னேன். அம்மா வரா கூட்டிண்டு போக. டெலிவரி எங்க ஊர்ல இருக்கட்டும். இங்கேன்னா கன்னுக்குட்டி பிறந்துடுமோனு பயமா இருக்கு”
மறுநாள் மாமனார் மாமியார் மூக்கை பொத்திண்டு வீட்டுக்கு வந்தாங்க. கர்ப்பமா இருக்கற பொண்ணு ஆரோக்யமில்லாத சூழ்நிலைல இங்கே இருக்க வேண்டாம், கொசு வேற பிடுங்கறதுனு சொல்லிட்டு ஊருக்கு மறுநாளே கூட்டிட்டு போனாங்க.
ஶ்ரீ என்கிட்ட தனியா, “டெலிவரி ஆறதுக்குள்ளே நீங்க சொன்னாப்பல வீடு புக் பண்ணுங்க, உங்க பையனை புது வீட்டுக்குதான் கொண்டு வருவேன்”
குருடனை பாத்து ராஜமுழி முழிக்கச் சொன்னா பாவம் அவன் என்ன பண்ணுவான். அதுதான் என் நிலைமை. எங்க ஓனர், முருகேசன் செட்டியார் காரைக்குடில இருக்கார் மாசம் ஒரு தடவைதான் வருவார். இந்த கடை தவிர கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் பல ஊர்ல பண்றார். வருஷம் ஒரு தடவை ஒரு ரெண்டாயிரம் சம்பளம் கூட்டினா அதிகம். இதுல நான் ஃபிளாட் எங்கே புக் பண்றது அதுவும் சென்னைல.
இப்ப மாசம் ஒரு தடவை ஶ்ரீயை பாக்க கும்மோணம் போறேன். ஒவ்வொரு தடவையும் பொய் சொல்றேன், நல்ல வீடா தேடிட்டிருக்கேன்னு. ஆச்சு டெலிவரி டைம் நெருங்கறது. குழந்தை வயித்துல ஆரோக்யமாதான் வறரறதுன்றதுல ஒரு சந்தோஷம். அடுத்த திங்கக்கிழமை டேட் கொடுத்து இருக்காங்க. ஶ்ரீ கூடவே இருங்கன்றா. அஞ்சாறு நாள் எப்படி லீவு போட முடியும் தெரியலை செட்டியாரை நேராதான் கேக்கணும்.
ஓனர் சென்னை வந்தா பின்னி ரோட்ல இருக்கே அங்கே கன்னிமாரா ஹோட்டல்லதான் தங்குவார். அவர் இந்த தடவை வந்தப்ப காலைல எட்டு மணிக்கே ஹோட்டலுக்கு ஃபோன் பண்ணிட்டு போனேன். “ வாய்யா புது மாப்பிள்ளை எப்படி இருக்குது குடும்பஸ்தன் ரோல்”
“ஹி, ஹி வீடுதான் பத்தலை, ஒய்ப்பு இப்ப பேறுகாலம், ஒரு வாரம் லீவு கேக்கலாம்னு”
“அப்படியா வாழ்த்துக்கள், நானே உன்கிட்ட பேசணும்னுதான் இருந்தேன், என் கட்டுமான கம்பெனிக்கு உன்னை மாதிரி நம்பகமா ஒரு ஆள் வேணும். இப்ப கடைக்கு வேற ஆள் பாத்துட்டேன். உனக்கு சம்மதமா? எல்லா சைட் போய் அலையணும், நீ சரிண்டா நம்ம கே.கே.நகர்ல ஆபீஸ் போடறேன் அது உனக்கு ஆபீஸ். அங்கேயே பெரிய நவீன காம்ளெக்ஸ் வேலை நடக்குது அது பெரிய வேலை. கீழேயே ஒரு ஃபிளாட் இப்போதைக்கு உனக்கு. சும்மா இல்லை உன் சம்பளத்துல 20 ஆயிரம் மாசம் பிடிச்சிக்கிடுவேன், பூரா காம்ப்ளக்ஸ் இன்னும் 6 மாசத்துல முடியணும்.
என் கண் கலங்கியதை பாத்த செட்டியார், “பயப்படாதே இப்ப வாங்கற சம்பளம் கிடைக்கும் அப்படியே, கூட ஏத்தற சம்பளம் இருபதாயிரம் வீட்டுக்கு, என்ன சம்மதமா”
கண்ணீர் பொங்க அவர் காலில் விழுந்தேன். “போய்யா போ உனக்கு லட்சுமி கடாட்சம் வந்தாச்சு, அடுத்த வாரம் புது வேலைல சேரு ”
ஆனந்தம் பொங்க வீடு விரைந்தேன், அம்மா பரபரப்பா வந்தா, ”சீக்கிரம் புறப்படுடா, லதாவுக்கு பெண் குழந்தை பிறந்தாச்சாம்.”
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings