2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
காலை ஒன்பதரை மணி. அந்த அலுவலகம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
“என்ன மேன் இதென்ன டேபிளா? இல்லை குப்பைக் கூடையா?”
குனிந்து எழுதிக் கொண்டிருந்த குமார் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். தன் டேபிளுக்கு எதிரே நின்று எம்.டி.ராஜசேகர் தன்னைத் தான் திட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து அவசரமாய் எழுந்து நின்றான். ஆபீஸிலிருந்த மற்ற ஸ்டாஃப்கள் அனைவரும் தலையைத் தூக்கிப் பார்க்க, குமாரின் நெற்றியில் வியர்வை மொட்டுக்கள் உருவாகி நிற்க, தொண்டை வறண்டது.
“வாட் ஈஸ் திஸ்?… இங்க ரெண்டு மூணு ஃபைல் திறந்து கெடக்கு… அங்க நாலஞ்சு பேப்பர் ஃபேன் காத்துல துடிச்சிட்டிருக்கு… ரெண்டு பேனா திறந்தே கெடக்கு… போன் குப்புறக் கெடக்கு… காலைல டீ சாப்பிட்ட எச்சில் டம்ளர் எடுக்காம அப்படியே கெடக்கு… ச்சை… டேபிள் மேனர்ஸ்ன்னா என்னனு தெரியுமா மேன் உனக்கு?… இப்படியொரு கசகசப்புல உட்கார்ந்து எப்படித்தான் வேலை செய்ய முடியுதோ உன்னாலே?.. பத்து நிமிஷத்துல இந்த டேபிள் க்ளீன் ஆகணும்… இல்ல ஐ வில் டேக் சிவியர் ஆக்ஷன்!… வேலை செய்யறது எவ்வளவு முக்கியமோ… அதை விட முக்கியம் தான் வேலை செய்யும் இடத்தைப் பராமரிப்பது!” சொல்லி விட்டுத் தன் அறையை நோக்கி நடந்த எம்.டி.ராஜசேகரை நடுக்கமாய்ப் பார்த்தான் குமார்.
அவர் தன் அறைக்குள் புகுந்ததும் மெல்லத் தலையைத் திருப்பி தன் மேஜையைப் பார்த்தான். அப்போதுதான் அவனுக்கே உறைத்தது. “ஆமாம்… எம்.டி. சொல்ற மாதிரி என்னோட டேபிள் குப்பையாட்டம்தான் இருக்கு”
பார்வையை மேலே தூக்கி மற்றவர்களின் மேஜையைப் பார்த்தான். எல்லா மேஜைகளுமே நீட்டாக இருந்தது. அடுத்த நிமிடமே எல்லா வேலைகளையும் நிறுத்தி விட்டுத் தன் மேஜையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டான்.
இரவு எட்டரை மணியிருக்கும். டைனிங் டேபிளில் எம்.டி. ராஜசேகரும் அவரது எட்டு வயது மகள் நிவேதிதாவும் அமர்ந்திருக்க, திருமதி ராஜசேகர் பரிமாறிக் கொண்டிருந்தார்.
குருமாவுடன் சப்பாத்தியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜசேகர், பக்கத்திலிருந்த சட்னி பாத்திரத்தைத் திறந்து அதிலிருந்து கொஞ்சம் எடுத்து தன் பிளேட்டில் இட்டுக் கொண்டார்.
அப்போது மிஸஸ் ராஜசேகர் ஜாம் பாட்டிலை எடுத்து வர, “வெரி குட், நானே கேட்கலாமென்றிருந்தேன்… நீயே கொண்டு வந்திட்ட” சொல்லியவாறே பாட்டிலை வாங்கி அதிலும் கொஞ்சம் தன் பிளேட்டில் கொட்டிக் கொண்டார்.
அப்போது மொபைல் ஒலிக்க, எடுத்து சன்னக்குரலில் பேசி விட்டு ஆஃப் செய்தார்.
“டாடி” நிவேதிதா மெல்லிய குரலில் அழைக்க,
“எல்னம்மா?” வாயில் சப்பாத்தியை வைத்துக் கொண்டே கேட்டார்.
“என்ன டாடி இது?… ஒரு கம்பெனி எம்.டி… நீங்க!… இப்படியிருக்கீங்க!… போங்க டாடி… எனக்குப் பிடிக்கலை” சொல்லி விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நிவேதிதா.
அவர் எதுவும் புரியாமல் அவளைக் கூர்ந்து நோக்க, “பின்னே என்ன டாடி… ஏற்கனவே ப்ளேட்ல குருமா இருக்கு… அதை முழுசும் சாப்பிட்டு முடிச்சிட்டுத்தான் சட்னி போட்டுக்கணும்… நீங்க என்னடான்னா அதுக்குள்ளாரவே சட்னியைப் போட்டுக்கறீங்க… சரி பரவாயில்லை… அந்த சட்னி பாத்திரத்தை திறந்தீங்களே?… திரும்பவும் மூடி வெச்சீங்களா… அது பாட்டுக்குத் திறந்தே கெடக்கு…” முகத்தை அஷ்ட கோணலாய் வைத்துக் கொண்டு கேட்டாள்.
ராஜசேகர் விழிக்க, “அதை விடக் கொடுமை… மம்மி ஜாம் பாட்டிலைக் கொண்டு வந்ததும்… அவசரமாய் வாங்கி ஜாமையும் ப்ளேட்ல போட்டுக்கிட்டீங்க… ஜாமை எடுக்கும் போது அந்த ஸ்பூனை கொஞ்சம் கூட யோசிக்காம எச்சில் கையாலேயே எடுக்கறீங்க… இதுக்கு நடுவுல செல்போன்ல வேற பேசறீங்க… ச்சை… போங்க டாடி… உங்களுக்கு டேபிள் மேனர்ஸ் கொஞ்சம் கூட இல்லை டாடி… இந்தப் பக்கம் ஒரு பாத்திரம் திறந்து கெடக்கு… அந்தப் பக்கம் ஜாம் பாட்டில் திறந்து கெடக்கு… பக்கத்துல செல்போன்… நீங்க சாப்பிடுற ப்ளேட்ல குருமா… சட்னி… ஜாம்…ன்னு ஒரே கலவரமா இருக்கு… எல்லாத்துக்கும் மேலே அப்பப்ப இங்கிருந்தே ஹால்ல ஓடற தொலைக்காட்சியைப் பார்க்கறீங்க…”
செல்லமாய்க் கடிந்து கொண்ட தன் எட்டு வயது மகளை ஊடுருவிப் பார்த்தார் எம்.டி.ராஜசேகர். அவர் கண்களுக்கு அங்கு அமர்ந்திருப்பது ஆபீஸில் தன்னிடம் திட்டு வாங்கிய குமாராய்த் தெரிய, தலையைச் சிலுப்பிக் கொண்டார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings