எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ராஜேஸ்வான் அந்தச் சிறிய கிராமத்தில் போஸ்ட் மாஸ்டராக வேலைக்கு சேர்ந்த போது அங்கேயுள்ள மராத்தி மொழி கொஞ்சம்கூட புரியாமல் போனது. தனக்கு தெரிந்த ஆங்கிலத்திலும் இந்தியிலும் எப்படியாவது சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் பக்கல்பட் கிராமத்திற்கு மாற்றலாகி வந்தான்.
‘இந்த கிராமத்தில் சப்பாத்தியும், மராத்திய மொழியும் தவிர மீதி எல்லாம் சமாளித்து விடலாம். அரிசிச் பொங்கினாலும் சோறு சமைக்கத் தெரியாத காரணத்தால் இங்குள்ள ஹோட்டல்களில் தான் சாப்பிட வேண்டும்’ என்று யோசித்துக் கொண்டே பஞ்சாயத்துத் தலைவர் கைகாட்டிய வீட்டில் வாடகைக்குத் தங்கி வேலையில் சேர்ந்தான்.
பக்கல்பட் கிராமத்தில் சேர்ந்து மூன்று வாரத்திற்குள் தன்னைப் பார்க்க தினம் ஒரு பெண் போஸ்ட் ஆபீசிற்கு வருவது முதல் முதலாக அவனுக்குப் புரிந்தது. இருந்தாலும் அவள் பேசும் சுத்த மராத்தியும், இவன் பேசும் ஆங்கிலம் கலந்த இந்தியும் இருவருக்குமே ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாத போதும், அவள் அவனோடு சைகையில் பேசிய போதுதான் அவன் தங்கியிருக்கும் வீட்டுக்காரரின் மகள் என்று புரிந்தது.
காதல் மலர்ந்து இருவரும் வேகமாக பேசிக் கொள்ள அவனையறியாமல் மராத்தி மொழி எளிதில் கற்றுக் கொள்ள முடிந்தது. அவள் பெயர் லியோனியா என்றும், அவள் பக்கத்துக் கிராமத்தின் பள்ளியின் ஆசிரியை என்றும் புரிந்தது.
அன்று போஸ்ட் ஆபீசில வேலைகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உடைகளை மாற்றி விட்டு புத்தகம் வாசிக்க அமர்ந்த போது நிழலாட கதவை எட்டிப் பார்த்தான்.
லியோனியா நின்று கொண்டிருந்தாள். முகத்தில், வெட்கம் பூசியிருந்தது. கையில் ஏதோ பலகாரம் எடுத்து வந்திருந்தாள். “என்?” மராட்டியில் கேட்டான் ராஜேஸ்வரன்.
“இன்றைக்கு எங்கள் ஊர்த் திருவிழா, நாங்கள் செய்த ஸ்வீட் கொண்டு வந்தேன்” என்று நீட்டினாள் லியோனியா.
“உள்ளே வரமாட்டாயா?”
“வெட்கமாகவும், பயமாகவும் இருக்கிறது”.
“நான் ஒன்றும் கடித்துச் சாப்பிட்டு விட மாட்டேன்.”
“வாங்கிக் கொள்கிறீர்களா, நான் போக வேண்டும்”
“உள்ளே வர விருப்பமில்லையென்றால் நீ கொண்டு வந்ததை எடுத்துக் கொண்டு போகலாம்” என்று போலிக் கோபத்தில் ராஜேஸ்வரன் சொன்னதும்
“ஐயையோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்று உள்ளே வந்தாள் லியோனியா.
அவள் கையிலிருந்த ஸ்வீட்டை தான் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு விட்டு அவளிடம் நீட்டினான். முதலில் மறுத்தவள் வாயில் வாங்கிக் கொண்டாள்.
“ஸ்வீட் வாங்கிக் கொண்டாய். நான் இன்னொன்று தந்தால் வாங்கி கொள்வாயா” என்று உதட்டைக் காட்டினான்.
“ம்கூம் அதெல்லாம் கூடாது.”
“ஏன்?”
“அப்புறம் நான உங்களோடு நிறையப் பேச வேண்டும்.”
“உட்கார்ந்து பேசேன்.”
“ம்கூம்… அம்மா தேடுவார்கள். நாளைக்கு பக்கத்திலிருக்கிற குளத்திற்கு முடியுமா?”
“கண்டிப்பாக… எப்போது வரணும்?”
“நான் முதல் முறை தண்ணீர் எடுத்து விட்டு வருவேன். இரண்டாவது முறை தண்ணீர் எடுக்கப்போகும் போது என் கூட வந்தால் தனிமையான இடத்தில் அமர்ந்து பேசலாம்.”
“சரி”
“நான் கிளம்பட்டுமா?”
“எனக்கு ஒன்றும் தர மாட்டாயா?” என்று ராஜேஷ் கன்னத்தைக் காட்ட, கன்னத்தில் தட்டி விட்டு பழிப்புக் காட்டி விட்டு ஓடினாள் லியோனியா.
மறுநாள் அவன் போஸ்டல் வேலைகளை முடித்து விட்டு வேகமாக வீட்டிற்கு வந்தபோது லியோனியா தண்ணீர் எடுக்கப் புறப்பட்டாள்.
ராஜேஸ் அறைக்கு வந்து உடை மாற்றிக் கொண்டு, முகத்தில் பவுடர் பூசி, சென்ட் அடித்துக் கொண்டு ஜன்னல் வழியாக லியோனியா வந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு, அடுத்த முறை அவள் தண்ணீர் எடுக்கக் கிளம்பிய போது அவனும் பின்னால் கிளம்பினான்.
தனிமையான அந்த மரங்கள் அடர்ந்த சூழ்நிலை மிகவும் ரம்யமாக இருக்க, “இங்கே இருக்கலாமே லியோனியா” என்றான் ராஜேஸ்.
இருவரும் அமர்ந்து மிக மிகழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தபோது, “இது என்ன இவ்வளவு பெரிய கட்டிடம். இப்படி பாழடைந்து கிடக்கிறதே” என்று அருகில் உடைந்து கிடந்த கட்டிடத்தைக் காட்டினான் ராஜேஸ்.
“அந்தக் கட்டிடத்திற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது தெரியுமா?”
“என்னது?”
“அறுபது வருஷத்துக்கு முன்னாலே இங்கே ஒரு குலாபின்னு ஒரு பெண்ணு இருந்தது. அவளுக்கு வெளியூரிலிருந்து இங்கே வேலை செய்ய வந்த… அதாவது உங்களை மாதிரி ஆள் என்று வைத்துக் கொள்ளுங்கவேன். ராம் என்றவருக்கும், குலாபிக்கும் காதல் வந்துருச்சி.
குலாபியோட வீடுதான் இது. ராம் தண்ணீர் குடிக்க வந்தவர் தினமும் அவளை பார்க்க வந்தார். இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடிவு பண்ணினாங்க. ராம் வீட்டிலே போய்ச் சொல்லி அவளை பெண் கேட்க வருவதாகச் சொல்லி விட்டுக் கிளம்பி போனார்.
ராம் வருவார் என்று காத்திருந்த குலாபி சாப்பாடு எதுவமில்லாமல் காத்திருந்தாள். அவளுடைய அப்பா அம்மா எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவே இல்லை. ஊருக்குப் போன ராம் விடுதலைப் போரிலே ஜெயிலுக்கு போய் விட்டார். அது அவளுக்கு தெரியாமல் எப்படியும் வருவார் என்று காத்திருந்த குலாபி, எதுவுமே சாப்பிடாமலே இறந்து போனாள்.
ஜெயிலிலேயிருந்து விடுதலையாகி வந்த ராம் அவள் இறந்து போனதை அறிந்து அந்த இடத்திலேயே விழுந்து இறந்து போனார். இறந்த இருவரையும் புதைத்து விட்டு அந்த வீட்டை விட்டுப் போய் விட்டார்கள் குலாபியின் அப்பாவும், அம்மாவும். அதற்கப்புறம் அந்தப் பங்களாவை யாரும் கவனிக்காததால் அப்படியே இந்தக் கட்டிடம் உடைந்து சிதிலமடைந்து போய் விட்டது.”
“இவ்வளவு கதைகள் இருக்கிறதா? ஆனாலும் காதலித்தவர்கள் எப்படியெல்லாம் தங்கள் காதலில் மூழ்கிப் போகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.”
“என்னை அந்த ராம் மாதிரி விட்டுவிட்டுப் போக மாட்டீர்களே” என்று கேட்டாள் ளியோனியா.
“சீ! எந்த ஜென்மத்திலேயும் உனனைப் பிரிய மாட்டேன். கவலைப்படாதே” என்றான் ராஜேஷ்.
அவள் அழுது கொண்டேயிருக்க, “கண்ணைத் துடைத்துக் கொள் லியோனியா. நான் அம்மா அப்பாவிடம் சொல்லி சம்மதம் கேட்டு விட்டு வருகிறேன். வந்ததும் உன் அப்பா அம்மாவிடம் முறையாகப் பெண் கேட்டு வருகிறேன்” என்றான் ராஜேஸ்.
“உங்களைப் பிரிய வேண்டுமென்று நினைக்கும் போது இறந்து போகலாம் போலத் தோன்றுகிறது” திரும்பவும் விம்மினாள் லியோனியா.
“அழாதே பெண்ணே. நான் ஒரு வாரத்தில் திரும்புகிறேன்” என்று சொல்லி சூட்கேஸை எடுத்துக் கிளம்பினான் ராஜேஸ்.
லியோனியா ஜன்னலில் நின்று கையசைத்தாள், அவன் போவதை பார்த்துக் கொண்டே.
பக்கல்பட் கிராமத்தில் பஸ் ஏறி அருகிலிருந்த சோலாப்பூர் ரயில் நிலையத்தில் வந்தபோது இரண்டு போலீசார் அவனை நோக்கி வந்தார்கள்,
“மும்பையில் வெடிகுண்டு வைத்தவன் நீ தானே மிஸ்டர் சமீர். எங்கே ஓடப் பார்க்கிறாய்?” என்றவாறு அவனை கைது செய்து இழுத்துக் கொண்டு போனார்கள்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings