in ,

வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 12) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9     பகுதி 10     பகுதி 11

தனசேகரன் வாத்தியாரை தன்னுடன் அழைத்து வந்தான் சரவணன்.

“சரவணனும், பவானியும்  மனசார விரும்பறாங்க. நீங்க சம்மதிச்சா இரண்டுபேருக்கும் கல்யாணம் செய்யலாம்” என்று தினகரன் கேட்டதற்கு, ராமலிங்கத்தை  பதில் பேச விடவில்லை தனலெட்சுமி.

வாய்க்கு வந்தபடி சரவணனின் குடும்பத்தை பற்றியும், சாதியைப் பற்றியும் தரக் குறைவாகப் பேசி விரட்டி விட்டாள். வாய்ச்சண்டை சாதிக் கலவரமாக மாறும் முன் சரவணனையும், அவன் தாய் தந்தையையும் கட்டாயப்படுத்தி சென்னைக்கு அனுப்பி வைத்தார் தினகரன்.

தன் காதல் வாழ்க்கை நிறைவேறப் போவதில்லை என்று தெரிந்து போனது பவானிக்கு. சரவணனுடன் பேச தடை விதிக்கப்பட்டது. வேதனையின் உச்சத்தில் … சூன்யத்தின் இருளில்….நாட்கள் சுமையான நொடிகளாக நகர்ந்தது.

அவள் தன்னை மறந்து, இதயம் இறுகி இயந்திரமாக இயங்கினாள். சிந்தனை சிறைபட்டுப் போனது. அழுது அழுது கண்களில் நீர் வற்றிப் போனது.

தனலெட்சுமியும், ராக்கம்மாவும் விக்னேஷை பவானியிடம்  பேச வைத்து அவள் மனதை மாற்ற முயற்சி செய்தனர். அவள் மனம் மாறாததைக் கண்டு அவளிடம் எதுவும் சொல்லாமல் விக்னேஷின் குடும்பத்தை வரவழைத்து  நிச்சயதார்த்திற்கு ஏற்பாடு செய்தனர்.

நிச்சயதார்த்தம் நடக்கவில்லை எனில் உன் அப்பா அவமானப்பட்டு உயிரைப் போக்கிக் கொள்வாரென்று  பயமுறுத்தி பணிய வைத்தனர். பவானி தன் மனதை இரும்பாக்கி தீர்மானமாக ஒரு முடிவெடுத்தாள்.

ஃபோனில் முருகேசனிடம் பேசிவிட்டு… நேரே தன் தந்தையிடம் சென்று “அப்பா…..நா…முருகேசனைக் கல்யாணம் செஞ்சுக்கறேன் ” என்றாள்.

அதிர்ந்து போனார் ராமலிங்கம்.

“என்னம்மா…என்ன சொல்ற…?

“ஆமாப்பா….நா தெளிவா முடிவெடுத்து தான் சொல்றேன். எனக்கு விக்னேஷை கட்டிக்க இஷ்டமில்ல…. முருகேசனை கல்யாணம் செஞ்சுகிட்டு நம்ம நிலத்தை பாத்துகிட்டு இந்த ஊர்லயே உங்க கூடவே இருந்துகிடறேன்”

இதை கேட்டு தனலெட்சுமியும் அதிர்ந்தாள். ராக்கம்மாவிற்கு சந்தோஷ அதிர்ச்சியாக இருந்தது. உடனே தன் நாத்தனார் செவ்வந்திக்கு ஃபோன் செய்து விஷயத்தை நாசூக்காகச் சொல்லி விட்டாள்.

முருகேசனை அழைத்து….”இந்த பாரு…உன்னை அதிர்ஷ்டம் தேடி வருது…சமயோசிதமா நடந்துக்க….நா கும்புடற சாமி  என்னை கைவிடலை. உன்னோட ஆட்டத்தையும், பாட்டத்தையும் ஒழிச்சுரு…. ஒழுக்கமா நடந்துக்க….அப்பதான் மாமாக்கு உன் மேல மதிப்பு வரும்… வயலுக்குப் போய் ஒத்தாசையா இரு” என்று சொல்லிவிட்டு சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனாள் ராக்கம்மா.

பவானிக்கும் விக்னேஷூக்கும் நிச்சயம் குறித்த நாளில் பவானிக்கும்,முருகேசனுக்கும்  நிச்சயதார்த்தம் நடந்தது. ராக்கம்மாவின் குடும்பத்தை தவிர மற்ற எல்லோரும் அரை மனதாகவே கல்யாணக் காரியங்களில் ஈடுபட்டனர்.

ராமலிங்கம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். தன் குல தெய்வமான பவானி அம்மன் கோவிலில் தான் திருமணத்தை நடத்த வேண்டுமென்றும் ஊர்மக்களை அழைத்து மறுநாள் விருந்து வைக்கலாம் என்றும்.

ராக்கம்மாவிற்கு அதில் மிக வருத்தம். யாரும் எதிர்த்துப் பேச முடியவில்லை. இந்த மட்டும் திருமணத்திற்கு சம்மதித்தார்களே….என்று மனதை தேற்றிக் கொண்டாள்.

ஊர்க்கோடியில் இருக்கும் காவல் தேவதை பவானி அம்மன் கோவிலில் முருகேசன் பவானிக்கு தாலி கட்டி ஒரு முடிச்சு மட்டும் போட்டான். இரண்டாவது முடிச்சும், மூன்றாவது முடிச்சும் அவன் தங்கைகள் போட்டார்கள். முருகேசன் பவானி இருவர் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

நகைகள் அதிகம் அணியாமலும், மெல்லிய ஜரிகை போட்ட சாதாரணப் பட்டு புடவையில் பவானி இருந்தாள். அதில் ராக்கம்மாவிற்கு மிகுந்த மன வருத்தம். வெளியில் சொல்லவும் முடியவில்லை.

வீட்டிற்கு வந்து சடங்கு, சம்பிரதாயங்கள்,விருந்து முடிந்தது.  “கண்ணு ..பவா….போய் மாடி ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கடா…. சாயங்காலம் சில சடங்கு இருக்கு” என்று பவானியை கொஞ்சி அனுப்பி வைத்தாள் ராக்கம்மா.

மதியம் 3 மணி இருக்கும்.

“யம்மா…யம்மா…என் மோதரத்த பாத்தியா?” என்று கத்தினான் முருகேசன்.

:என்னப்பா… எந்த மோதிரம்…மாமா போட்டதா?”

“இல்ல… நீ போட்டது….உன்ன மாதிரியே லூஸ் இருக்குமே” என்று சிரித்தான்.

“சரி…சரி” என்று சிரித்துவிட்டு, “அது முக்கா பவுனுடா…..போய் தேடு…கையில போட்ருக்கற மோதரத்த ஒழுங்கா வெச்சுக்க மாட்ட….இரு…இரு…நீ தனியா…போவாத” என்று கத்தினாள்.

“இல்ல…என் ஃப்ரெண்ட்ஸ கூட்டிட்டுப் போறேன்”

இரண்டு மணி நேரம் ஆகியும் முருகேசனும், அவன் நண்பர்களும் திரும்பவில்லை. அவனைத் தேடிக்கொண்டு போனவர்கள் இந்த ஊரிலேயே அவர்கள் இல்லை என சொன்னதைக்கேட்டு ராக்கம்மாவிற்கு தலை கிறுகிறுத்தது.

கிசுகிசுவென்ற பேச்சு ஊர் முழுவதும் பரவியது. முருகேசனின் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவன் போகும் இடமெல்லாம் விசாரித்தாள். அவன் கற்கும் டான்ஸ் கிளாஸ் ஏதோ ஷூட்டிங்கிற்கு வெளிநாடு சென்றுவிட்ட தாக செய்தி வந்தது.

பவானி அழுதாள். ராக்கம்மா அவளை சமாதானப்படுத்தினாள்.

“நீயே மனசு வந்து அவனைக் கட்டிக்கிட்ட…. தறுதலப் பய எங்கப் போனான்னு தெரியலயே….எங்க போனாலும் இழுத்துகிட்டு வரேன்” என்று தன் கணவனிடம் சொல்லி ஆட்களை அனுப்பினாள்.

இரண்டு நாள் கழித்து அவன் சினிமா குரூப் டான்ஸ் ஆட்களுடன் அரபுநாட்டில் இருப்பதாக செய்தி கிடைத்தது. ராக்கம்மா மனமுடைந்து போனாள். ராமலிங்கத்தின் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்துப் போனாள்.

ஒருவாரம் கழித்து முருகேசனிடமிருந்து ஒரு செய்தி வந்தது பவானியின் ஃபோனுக்கு…. அதில் முருகேசனும் ,பக்கத்தில் ஒரு பெண்ணும் மாலையுடன் மணக்கோலத்தில் இருந்தனர்.

அதை முதலில் தன் தந்தையிடமும், தாயிடமும் காட்டினாள் இறுக்கமான முகத்துடன்.

ராமலிங்கம் ராக்கம்மாவிடம் அதைக் காட்டி, “இப்ப ஒனக்கு திருப்தியா?…என் புள்ளயோட வாழ்க்கையை இப்படி பாழாக்கிட்டியே….உனக்கு என்ன சொத்து தான வேணும் எடுத்துக்க…. அத்தனையும் எடுத்துக்க….என் புள்ள இனிமே உன் வீட்ல இருக்க வேண்டாம்.  என் வீட்லயே வெச்சுக்கறேன். அதுக்கு கல்யாணமே ஆகலைனு நெனச்சுக்கறேன்” என்று படு கோபமாக கத்திவிட்டு பவானியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

ஒருவாரம் மிகவும் சோகமான நாட்களாக இருந்தது அனைவருக்கும்.  ராக்கம்மா வந்தாள்.ராமலிங்கம் முகம் குடுத்துப் பேசவில்லை. தனலெட்சுமி மட்டும் அரைமனதுடன் வரவேற்றாள்.

“அண்ணி… உங்களுக்குத் தெரியாததில்ல….தாலி கட்டியாச்சு. பவானி எங்க வீட்டுப் பொண்ணு. அனுப்பி வைங்க…அவனை கூட்டியாறச் சொல்லி ஆளு அனுப்பிருக்கேன். ….எப்படியும் வந்துருவான்.”

“அப்படி வந்தா நா அவங்கூட வாழணுமா? “என்று பவானி எகிறினாள்.

“இல்ல கண்ணு…தாலி கட்டிட்டா புருசன் எப்படிபட்டவனா இருந்தாலும் ஏத்துக்க வேண்டியதுதான். அதுதா… நம்ம கலாசாரம். ….என்ன செய்றது ….பொம்பளையாப் பொறந்துட்டாலே கஷ்டத்தை அனுபவிக்க  வேண்டியதுதான். அதுதான் நம்ம தல விதி….”

“இது ஒண்ணும் தலைவிதி கிடையாது…நீங்க எல்லாரும் சேர்ந்து செய்யற சதி. என் மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ விடாம செஞ்சுட்டு இப்ப வந்து தல விதி தெய்வ செயல்…னு பூசி மொழுக வேண்டியது. முருகேசன் தனக்குப்பிடிச்ச பெண்ணைக் கட்டிக்கிட்டான். அவன் வாழ்க்கையையும் கெடுக்காதீங்க… அவன் எனக்கு புருசன் கிடையாது…. அவன் எப்போ இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்டிட்டானோ… அப்பவே என் தாலியை நான் கழட்டிட்டேன்.”

எல்லாரும் அதிர்ந்தார்கள்.

“ஐயயோ… தெய்வக்குத்தம் ஆயிரும்” என்று தனலெட்சுமி பதைபதைத்தாள்.

“அப்போ அவன் செஞ்சது மட்டும் தெய்வக்குத்தமில்லயா?”

இதற்கு யாரிடமிருந்தும் எந்த பதிலும் இல்லை.

(வானம் விரியும்… தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 2) – தி.வள்ளி, திருநெல்வேலி

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 3) – கவிஞர் இரஜகை நிலவன்