in ,

பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 8) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7

மங்கை மங்கை மங்கை புது கங்கை இந்த மங்கை. தாலாட்டு பாடத்தானே வந்தாள்… தாயாக மாறி இங்கு வந்தாள் ….. கார்மேக அன்பை அள்ளி தந்தாள்… காவல் தெய்வம் அவளே மங்கை……

டிவியில் டைட்டில் பாடல் கேட்டு நிமிர்ந்த கமலம்மாள் “மீனாட்சி! மங்கை போட்டான் பாரு. இன்னும் அடுக்களைல என்ன பண்ற? சீக்கிரம் வா!

“இதோ இந்த கூட்டுக்கு தாளிச்சுட்டு வந்துடுறேன் அத்தை”

அத்தையும் மருமகளும் அவ்வளவு ஒற்றுமை. மாமியார் – மருமகள் போலவே தெரியாது. பார்ப்பவர்கள் அம்மா – பெண் என நினைப்பார்கள்.இருவரும் சாப்பிட்டுக் கொண்டே சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர். காலையில் வேலைக்கு சென்ற காயத்ரி தலைவலி என்று பாதியிலேயே வந்து விட்டாள். பாட்டி, “சுக்கு காபி போட்டு தரவா  காயத்ரி?”

“வேணாம் பாட்டி” நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்” என தூங்க போனாள்.

நேற்று இரவு சுதா வீட்டிலிருந்து வரும் வழி நெடுக நவநீதனிடம் போனில் பேசியதை அசை போட்டபடியே வந்தாள். ஏனோ ஒரு வித்தியாசமான உணர்வாக இருந்தது.

அந்த மகிழ்ச்சியிலேயே வீட்டிற்குள் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. அத்தனை  உற்சாகமும் வடிந்து விட்டது.

“மீனா! நவநீதனுக்கு அவாத்துல பொண்ணு பார்க்கறாளாம். அவன் இங்க வேலை பார்க்கறதால, பொண்ணு ஈரோடா இருந்தா நன்னாருக்குமாம். ஏதாவது ஜாதகம் இருந்தா வைத்தி மாமா அனுப்ப சொன்னார் .”

“நம்ம விசாலாம் பொண்ண சொல்லலாம்ண்ணா!”

“அட ஆமாம்! ஜாதகம் கூட என்கிட்டதான் இருக்கு. அவனுக்கு பொருத்தமான பொண்ணு தான். “

“நாளைக்கு நவநீதன் ஊருக்கு போறானாம், அவன்ட்டயே ஜாதகம் கொடுத்தனுப்பிடலாம்.”

இதை நேற்று கேட்டதிலிருந்து அவள் இரவு முழுதும் தூங்கவே இல்லை. அலுவலகத்திலும் வேலை ஓடாததால், தலைவலி என்று லீவு சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து விட்டாள். உறக்கமும் வரவில்லை. உறங்கவும் இயலவில்லை. ஹாலை எட்டி பார்த்தாள். அம்மாவும் பாட்டியும் தூங்கி கொண்டிருந்தார்கள். மதிய உணவு முடிந்தவுடன் இருவரும் சிறிது கண்ணயர்வது வழக்கம் தான்.மெல்ல எழுந்து, கதவை லேசாக சாத்தி விட்டு சுதா வீட்டிற்கு சென்றாள்.

சுதா அவள் வீட்டின் முன் இருந்த மாமரத்தின் அடியில் விஸ்ராந்தியாக உட்கார்ந்திருந்தாள்.

காயத்ரியை பார்த்ததும் சுதா, “வா காயத்ரி! இன்னிக்கு லீவா?”

“தலைவலி “

” எங்கேடி உன் பையன் ?”

“அம்மா அவனை வெளில கூட்டிட்டு போய் இருக்காங்கடி”

“சுதா! உன்கிட்ட பேசலாம்னு வந்தேன்”

” நவநீதனை பத்திதானே?”

“ஆமாம். அவனுக்கு எங்க அப்பா பொண்ணு பார்த்திருக்கிறார் “

“பொண்ணு யார்?”

“இப்ப அதுவா முக்கியம்?” எரிச்சலுடன் கூறினாள் காயத்ரி.

பின் அடிக்குரலில் “விசாலம் அத்தையோட பொண்ணு”

“அதுக்கு?”

“என்ன சுதா! எல்லாம் தெரிஞ்சு தான் பேசறியா?”

“நீ ஒரு பக்கமா மட்டும் யோசிக்கிற காயத்ரி. உனக்கு தோன்றிய மாதிரி அவனுக்கும் தோன்ற வேண்டும் “

“அதெல்லாம் அவனும்  பிடிச்சு தான் பேசறான்”

“முதல்ல அதை உறுதி செய்”

“அவன் கிட்டயே கேட்டு விடட்டுமா?”

“என்னனு கேட்க போற?”

“உனக்கு என்ன பிடிச்சிருக்கானு?”

“புடிக்கலனு சொன்னா என்ன பண்ணுவ?”

“அவன் புடிச்சிருக்குனு தான் சொல்வான்”

“கண்டதும் காதலானு நக்கலா கேட்டா என்ன பண்ணுவ?”

இதை கேட்டவுடன் காயத்ரி ஒரு நொடி அதிர்ந்தாள்.

“சுதா ! உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லாமல் விட்டுவிட்டேன்டி”

“என்ன முக்கியமான விஷயம்?”

“அவன நான் இன்னும் பார்த்ததில்லைடி”

இதைக் கேட்ட சுதா, அதிர்ச்சியுடன் தன் நிறைமாத வயிற்றுடன் நடக்க முடியாமல் நடந்து காயத்ரி  அருகில் வந்தாள்.

“பார்த்ததில்லையா! பின்ன எப்படி புடிச்சிருக்குனு சொல்ற?”

“எதுக்கு சுதா பார்க்கணும்? காதல்ங்கிறது மனசு சம்பந்தப்பட்டது. அதுக்கு அந்த காதலை உணர்ந்தா மட்டும் போதும் “

“சினிமாக்கு தான் நீ சொல்றது நல்லா இருக்கும். நிஜ வாழ்க்கை வேற காயத்ரி “

“நான் நவநீதனை பிடிச்சிருக்குனு சொன்னது வயசுக் கோளாறு இல்லைனு மட்டும் எனக்கு உறுதியா தெரியும் சுதா”

“அவனை நேரில் பார்த்ததில்லை தான். ஆனால் அவன் கிட்ட போன்ல நிறைய பேசிருக்கேன். ஆரம்பத்துல அவன் அப்பாக்கு  போன் பண்ணும் போது, என் கைல போன் இருந்ததால பேசிட்டு அப்பாட்ட கொடுத்தேன். அதற்கு பிறகு அவன் கிட்ட பேசனும்னு அந்த டைம்ல போன் என் கைக்கு வரும் மாதிரி பார்த்துக்கிட்டேன். “

“அப்படி என்னதான் போன்ல மணிக்கணக்கா பேசுவீங்க?”

“பொக்ரான் அணுகுண்டு சோதனை, காட்மாண்டு ப்ளைட் ஹைஜாக், வெங்காயத்தால் ஆட்சியை கவிழ்த்தது, கிளிண்டன் மோனிகா   ப்ளூ ட்ரஸ்ல இருந்து சுஜாதாவோட மெக்ஸிகன் ஜோக் வரை எல்லாமே பேசிருக்கோம் போதுமா?”என்றாள் காயத்ரிஆத்திரத்துடனும் அழுகையுடனும்.

சிறிது நேரம் கழித்து “ஓ அந்த அளவுக்கு பேசிட்டீங்களா? அப்ப எதுக்கு யோசிக்கிற? இதையும் அப்படியே பேசிடு”.

“அது மட்டும் தான் என்னால பேச முடில”

சிறிது நேரம் யோசித்த சுதா, “அவனுக்கு என் வீட்டு நம்பர் தெரியும் தான?”

” தெரியும். நேத்து பேசுனப்போ சேவ் பண்ணிக்கிறதா சொன்னான். “

“அப்ப சரி. நீ அவன் நம்பருக்கு கால் பண்ணிட்டு நாலஞ்சு ரிங் போனவுடன் கட் பண்ணிடு. அவன் திரும்ப கூப்பிடுவான். அப்போ நீ ஹால்ல இருக்க டெலிபோனையும் நான் பெட்ரூம்ல இருக்கிற டெலிபோனையும் ஒரே சமயத்தில் எடுக்கணும். நான் மட்டும் தான் பேசுவேன். நீ உன் சைடு சத்தம் வராம பார்த்துக்க சரியா?”

“ஏன் சுதா அப்படி செய்யணும்?”

“அவன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சா, நீ தைரியமா பேசலாம்”.

சுதா சொல்லியவாறே அவனுக்கு மிஸ்டு கால் கொடுத்தாள். “நீ முதல்ல கதவ தாழ் போடு. யாராவது பாதில வர போறாங்க”

கதவை தாழிட்டு காயத்ரி திரும்பவும் போன் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. பேசி வைத்தபடி ஆளுக்கு ஒரு போனை காதில் வைத்தனர்.

“ஹலோ! மின்னல்! “

“மின்னலா?யாருங்க நீங்க?”

“சாரிங்க. இந்த நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தது. என் பிரெண்டா இருக்குமேனு நினைச்சு திருப்பி கூப்பிட்டேன்”

“நீங்க நவநீத கிருஷ்ணனா?”

“ஆமாங்க”

“நான் காயத்ரியோட பிரெண்டு சுதா பேசறேன். அவ தான் உங்களுக்கு லைன் ட்ரை பண்ணிட்டு, எடுக்கலனு வீட்டுக்கு போயிட்டா. நான் போய் கூட்டிட்டு வரட்டுமா?”

“பரவால்லங்க. நான் சாயந்திரமா கால் பண்றேன்”

“அவங்க பாட்டி வாசல்லதான் நிக்கறாங்க. அவள வர சொல்லட்டுமா?”

“அய்யோ பாட்டியா! வேணாங்க “

“ஆமா அதென்ன மின்னல்?”

“அது பெட் நேம்”

“வழக்கமா எங்க காயத்ரி தான் எல்லார்க்கும் பட்ட பெயர் வைப்பா. அவளுக்கு நீங்க பட்ட பெயர் வெச்சு கூப்பிட்டும், அவ ஏன் சும்மா இருக்கானு தெரியல”

” ஒரு வேளை பிடிச்சுருக்கோ என்னவோ?”

“பேரையா? பேரு வெச்ச உங்களையா?”

இந்த தடாலடி கேள்வியை எதிர்பார்க்காத நவநீதன் சற்று சுதாரித்து கொண்டு, சிரித்தபடியே

“உங்க பிரண்டு. நீங்க தான் கேட்டு சொல்லனும் “

” நான் அவகிட்ட கேட்டுக்கிறேன் “

“உங்களுக்கு வேணும்னா நீங்களே  அவகிட்ட கேட்டுக்கங்க”

“அப்போ ராத்திரி ஏழு மணிக்கு இதே நம்பருக்கு வந்து கேட்டுக்கலாமா?

“யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்” என்றபடி சுதா , போனை கீழே வைக்க போன காயத்ரியை சைகயால் நிறுத்தினாள். நவநீதன் லைன் கட் செய்ததை உறுதி செய்த பின் இருவரும் தங்கள் டெலிபோனை கீழே வைத்தனர்.

“நீ சொன்னது சரி தான் காயத்ரி. அவனுக்கும் உன்னை பிடிச்சிருக்கு. அநேகமா இன்னிக்கு ப்ரோபோஸ் பண்ணிடுவான் “

இதை கேட்ட காயத்ரி ஓடி வந்து சுதாவை கட்டிப்பிடித்தாள்.

“ஹே! விடுடி என்னை” என்றவாரே காயத்ரியின் அணைப்பிலிருந்து  விடுபட்ட சுதா அம்மாவென்று பெருங்குரலுடன் அருகிலிருந்த சோபாவில் சாய்ந்தாள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 5) – ரேவதி பாலாஜி

    காதல் ஒழிக (சிறுகதை) – முகில் தினகரன், கோவை