in ,

பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 5) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4

அன்றைக்கு வழக்கத்தை விட ஆர்வமாக அலுவலகம் வந்தாள் அன்னபூரணி. முடித்து வைத்த கோப்பு ஒன்றை நேற்று அவன் டேபிளில் வைத்து விட்டு வந்திருந்தாள்.சரியாக முடித்தேனா இல்லையா என்று பயம் ஒரு பக்கம். இது தான் அவளிடம் கொடுக்கப்பட்டிருந்த முதல் வேலை. அவனிடம் பேச வேண்டுமே என்ற தயக்கம் ஒரு புறம்.ஆர்வம் ஒரு புறம். அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. சிந்தனைக் குவியலாக அலுவலகம் உள் நுழைந்தாள்.

அவன் இருக்கையை தாண்டுகையில் “ஹலோ!” என்ற குரலில் டக்கென்று நின்றாள்.

“உங்க சீட்ல செட்டிலாய்ட்டு இங்க வாங்க” என்றான் ரகு.

சரி என்று கூட சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு இருக்கையை நோக்கி நகர்ந்தாள்.

தினமும் அலுவலகம் வந்ததும் அவள் இடத்திற்கு அருகிலுள்ள தினசரி காலண்டரில் தேதி கிழித்து, மேசையை துடைத்து விட்டு தான் அமர்வாள். மாலையிலேயே கோப்புகளை அழகாக அடுக்கி விட்டுதான் கிளம்புவாள்.வேலையை ஆரம்பிக்கு முன் அவளுக்கு தெரிந்த கணபதி ஸ்லோகமும் தனம் தரும் கல்வி தரும் என ஆரம்பிக்கும் அபிராமி அந்தாதியை மனதிற்குள் சொல்லிக் கொள்வாள். அவள் பாட்டியின் வளர்ப்பு அப்படி.

இதையெல்லாம் ரகு கவனித்ததால் தான் “உங்க சீட்ல செட்டிலாய்ட்டு வாங்க” என்று கூறினான். அலுவலகம் முழுதும் கண்ணாடி தடுப்புகளால் ஆனது. எனவே அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் கோணத்தைப் பொறுத்து மற்றவர்கள் தெரிவார்கள். ரகு உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பாத்தால் முக்கால் வாசி அலுவலகத்தை பார்க்கலாம்.

அந்த கண்ணாடி வழியாகத்தான் ஒருவரையொருவர் பார்த்து தத்தமது இடத்திலிருந்தே பேசிக்கொள்வார்கள். ரகுவும் அன்னபூரணியும் கூட அப்படித்தான் பேசிக் கொள்வார்கள்.என்ன ஒரே ஒரு வித்தியாசமென்றால் பிறருக்கு தெரியாமல் கண்களின் வழியே பேசிக் கொள்வார்கள்.அவன் கூறிய படியே செட்டிலான பின், அவன் டேபிளின் முன் வந்து நின்றாள்.

“ரோகிணி ப்ளீச்சர்ஸ் பைலை நேத்து என் டேபிள்ல வெச்சீங்களா?”

“ஆமா”

“டேபிள்ல ஏதாவது பைல் வெச்சா என்ட்ட சொல்லணும். நீங்க பாட்டுக்கு சொல்லாம போனா என்ன அர்த்தம்?”

“நேத்து மேடம் பைல கேட்டாங்கனு உங்க டேபிள்ல  இல்லனு எல்லாரும் தேடுனோம். அப்புறம் தான் குகன் சார் சொன்னார், “அந்த பொண்ணு கிளம்பும் போது உன் டேபிள்ட்ட நின்னுட்டு இருந்துச்சுனு” சொன்னதால் என் டேபிள்ல இருந்து எடுத்து மேடம்ட்ட கொடுத்துட்டேன்.”

“சாரி சார். நேத்து சாயந்திரம் நீங்க ஆபிஸ்ல இல்லை. அதான் சொல்ல முடியலை” என்றாள்.

“சரி சரி. அப்படியே நான் இல்லைனாலும் வேற யார்ட்டயாவது சொல்லிட்டு போங்க” என்றான் ரகு.

தலையசைத்து விட்டு இருக்கைக்கு திரும்பினாள்.

அவளது முக வாட்டத்தை பார்த்த ரகு சமாதானப்படுத்தும் நோக்கில் “ஹலோ! அப்படியே அந்த ஃபேனை போடுங்க என்றான். அவளும் எழுந்து போய் காற்றாடியை சுழல விட்டாள்.

பதினோரு மணிக்கு டீ கொண்டு வந்த விஜி அண்ணா அன்னபூரணியிடம், கண்ணு! சீட்ல யாராவது இல்லாதப்ப பைலை எடுத்தாலோ வெச்சாலோ என்ட்ட சொல்லிடு. அவங்க வந்தா நான் சொல்லிடறேன் சரியா? என்றார்

“சரிண்ணா. நேத்து மேடம் சத்தம் போட்டாங்களா?”

“இல்லை இல்லை. அது இன்னிக்கு ஃபைனலைஸ் ஆகனும். அதான் மேடம் கேட்டாங்க என்றபடி விஜி நகர்ந்தார்.

ரகுவின் மேஜையில் டீயை வைத்து “டேய்! அது ரொம்ப சின்ன பொண்ணு ஸ்கூல் முடிச்ச உடனே வேலைக்கு வந்திருக்கு. அதுகிட்ட தண்மையா பேசு. எங்கள விரட்டற மாதிரி அந்த பொண்ணையும் விரட்டாத” என்றார்.

“அண்ணா! நான் இப்போ  என்ன விரட்டற மாதிரி பேசினேன்?

தகவல் சரியா சொல்லனும்னு தானே சொன்னேன்”

“ஆமாண்டா! ஆனா அதை உள்ளே நுழைஞ்சவுடன் சொல்லிட்டே அதத் தான் சொன்னேன் என்றபடி நகர்ந்தார்.

அவன் அவ்ளோ கோபமா சொல்லலியே? என யோசித்தாள். வார்த்தையில் கடுமை மற்றவருக்கு தெரிந்தாலும் கண்களில் ஒரு கனிவை பார்த்தேனே என நினைக்கும் போதே ரகு விருட்டென்று எழுந்து வந்து ஃபேன் சுவிட்சை நிறுத்தி விட்டு சேல்ஸ் டேக்ஸ் ஆபிஸ் போய்ட்டு வரேன் சார் என்று குகனிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.

வெளியில் சென்று திரும்பி வந்த ரகு, தனது மேஜையருகே இருந்த டேபிளில் இரு பைவ் ஸ்டார் சாக்லேட்டை பார்த்ததும், “விஜிண்ணா! விஜிண்ணா என்று அழைத்தான்.

” என்ன ரகு?”

“என் டேபிள் மேல யாரு சாக்லேட் வெச்சது?”

“எனக்கென்ன தெரியும்? நீயே வெச்சுட்டு மறந்திருப்ப”.

“இல்லண்ணா நான் எதுவும் வெக்கலியே. என் டேபிள்ல என்ன இருக்குனு எனக்கு தெரியாதா?”

“சரி விடுடா. சாக்லேட் இருந்தா எடுத்து சாப்பிடு. வேணாம்னா எனக்கு கொடு. இதல்லாம் ஒரு பிரச்சனையா?”

“கண்டுபுடிக்கிறேன். இத வெச்சது யாருனு கண்டுபுடிக்கிறேன்”.

ஆபிஸில் உள்ள எல்லாரும் ஒரு கம்பெனியின் இன்டர்னல் ஆடிட்டிங்கிற்கு சென்றிருந்தனர்.இவள், ரகு, விஜி மற்றும் டைப்பிஸ்ட் ராதா மேடம் மட்டும் தான் ஆபிஸில் இருந்தனர்.ராதா மேடம் கம்ப்யூட்டர் ரூமே கதி என்றிருப்பார். காலையில் கம்ப்யூட்டர் ரூமுக்குள் சென்றால், மதியம் உணவிற்காகத்தான் வெளிவருவார். ஆபிஸில் யாருமில்லையென்றால், விஜி தன்னுடைய மளிகை கடைக்கு தேவையான சாமான்கள் வாங்க சென்று விடுவார்.

ஆபிஸில் யாருமில்லாத போதும், வடிவேல் சார் சீட்டில் இல்லை என்றாலும் வரும் போன் கால்களை அட்டெண்ட் செய்ய யாராவது ஒருவர் வரவேற்பறையில் உட்கார வேண்டும்.அன்று அன்னபூரணி வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தாள். வெளியில் மேகங்கள்  தெளிவில்லாமல் இருந்தன. உள்ளே அன்னபூரணியின் மனமும் தான்.

அன்று ஈரோட்டிலும் நல்ல மழை. கர்நாடகாவில் பெருமழை காரணத்தால்  உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஓகேனக்கல் அருவியில் குளிக்க தடை, மேட்டூர் அணை வரலாறு காணாத அளவு  கொள்ளவு, ஆற்றின் நடுவில் உள்ள ஜலகண்டேசுவரர் கோவில்  நந்தி தலை மூழ்கியது என பேப்பர் முழுதும் பெரு மழை பற்றிய செய்திகள் தான். ஈரோட்டிலும் காவிரிக்கரையில் நீர் ஊருக்குள் புகுந்து விட்டதாகவும் ராகவேந்திரர் மடம் வரையிலும்   நீர் எனவும் உள்ளூர் செய்தியில் காணப்பட்டது.

இந்த மழையில் நனைய அவளுக்கு பிடிக்கும். அலுவலகம் என்பதால் அமைதியாக இருக்கிறாள். பால்கனியில் நின்று தெருவை பார்த்தாள். தெரு எங்கும் மழை நீர்.சின்ன சின்ன பூச்செடிகளில் மழையின் ஈரத்துளிகள் மிச்சமிருந்தன.

இதே பள்ளி விட்டு வீடு திரும்புகையில் மழை வந்தால், ஏதோ ஒரு மரக்கிளையை உலுக்கி மழை நீர் மேல் பொழிவதை ரசிப்பாள். மண் வாசனையை ரசித்தாள்.அந்த சூழலே ஏகாந்தமாக இருந்தது. அனிச்சையாக பார்வை ரகுவின் மேல் திரும்பியது. அவன் ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தான். மழை நின்ற அந்த ரோட்டில் அவன் கைப் பிடித்து சிறு தூறலில் நடக்க வேண்டும் என ஏனோ தோன்றியது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கலங்கி நிற்கிறேனடி, எழுந்து வா! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 7) – தி.வள்ளி, திருநெல்வேலி