in ,

பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 10) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8

பகுதி 9

நவநீதனிடம் தொலைபேசியில் பேசிவிட்டு இணைப்பை துண்டித்தாள் சுதா. திடிரென்று பெருங்குரலில் அம்மா என அலறவும், முதலில் ஒன்றும் புரியாத காயத்ரி, பின் நிலைமையை ஊகித்ததால், அவளை முதலில் சோபாவில் உட்கார வைத்து விட்டு, உடனே தன் வீட்டை நோக்கி ஓடினாள். அம்மாவையும் பாட்டியையும் உடன் அழைத்து வந்தாள்.

” என்னடிமா  சுதா கொஞ்சம் பொறுத்துக்கோ. கஷாயம் வெச்சு தறேன். பொய் வலியா இருந்தா நின்னுடும்” என்றார் பாட்டி. அதற்குள் சமயலறைக்கு சென்ற மீனாட்சி நொடியில்  கஷாயம் கொண்டு வந்து கொடுத்தார். அதை குடித்த உடன் கொஞ்சம் ஆசுவாசமானாள் சுதா. முகத்தில் வலியின் வேதனை இன்னும் மிச்சமிருந்தது.

பாட்டி, சுதாவிடம் “உங்க அம்மா எங்க போனா? நெறமாசக்காரிய விட்டுட்டு?”

“ரேஷனுக்கு போயிருக்கா” வலியுடனே கூறினார்.

உதிர போக்கானதை பார்த்த பாட்டி, “காயத்ரி உடனே ஆட்டோக்கு போன் பண்ணு. நீ ரேஷனுக்கு போய் அவ அம்மாவ அழைச்சுண்டு வந்துடு” அடுத்த நொடி வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல காயத்ரி தன் சன்னியை குதிரை வேகத்தில் பறக்க விட்டாள்.

“மீனாட்சி | நீ நம்மாத்துக்கு போய் பழைய துணி, வேட்டி எல்லாம் எடுத்துண்டு வா!

“டீ பொண்ணே! உனக்கு மாத்துடை எல்லாம் தயாரா வெக்க சொன்னேனே? எடுத்து வெச்சியா? எப்ப பாரு அரட்டை இல்லனா கதை பொஸ்தகம் படிக்க வேண்டியது “

ஹாலில் ஓரமிருந்த கட்டை பையை சுட்டிக் காட்டினாள் சுதா. பாட்டி அதைக் கொண்டு வந்து வாசலில் வைத்தார். நேரமாக நேரமாக சுதாவிற்கு வலி அதிகமாகியது. “பாட்டி உக்கார முடில, தலை அழுந்தறது போல ” வலியில் வார்த்தைகள் விட்டு விட்டு வந்தது.

“கொஞ்சம் பொறுத்துக்க பொண்ணே ! “அம்மா கர்ப்ப ரட்சை! காப்பாத்துடீம்மா! ஜகன்மாதா !லோக நாயகி! ஆபத்பாந்தவி! அனாத ரட்சகி!

அதற்குள் வாசலில் ஆட்டோ வந்துவிட்டது. நல்ல வேளை அதற்குள் காயத்ரி சுதாவின் அம்மாவையும் மகனையும் கூட்டி வந்து விட்டாள். பாட்டியும் சுதாவின் அம்மாவும் சுதாவுடன் ஆட்டோவில் புறப்பட்டனர். அவ்வளவு அவசரத்திலும் பாட்டி, “காயத்ரி நீ இவாத்துலயே பெரியவன வெச்சுட்டு இரு. மாதவனுக்கு சொல்லிடு. சாயந்திரம் சுவாமி விளக்கு ஏத்திட்டு லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிட்டிரு. பத்திரம்” என்றார். காயத்ரி சரி சொல்வதற்குள் ஆட்டோ தெரு முனை தாண்டிவிட்டது.

காயத்ரிக்கு எல்லாமே கண் மூடி திறப்பதற்குள் நடந்த மாதிரி இருந்தது. மாதவனுக்கு தகவல் சொல்ல, அவன் நேரடியாக மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டான்.

சூரியன் அந்தி சாயும் போது சுவாமி விளக்கேற்றி லலிதா சஹஸ்ர நாம பாராயணம் முடித்து விட்டு அமர்ந்தாள்.

மருத்துவமனையில்……

ஆட்டோ அந்த  மகப்பேறு மருத்துவமனை வாசலில் நின்றது. பாட்டியும் சுதா அம்மாவும் அவளை கைத்தாங்கலாக உள்ளே அழைத்து சென்றனர். வரவேற்பறையில் ஒரு இளைஞனும் நர்சும் உட்கார்ந்து இருந்தனர். இவர்களை பார்த்ததும் இருவரும் பரபரப்பானார்கள்.

அங்கிருந்த நர்ஸ், அப்படி உக்காருங்க, பெரிய டாக்டரம்மா அவங்களோட இன்னோர் ஆஸ்பத்திருக்கு போயிருக்காங்க என்றார். வலி பொறுக்காத சுதா அழுவதை பார்த்த “அந்த இளைஞன், நர்ஸ் சீக்கிரம் அந்த வீல் சேரை கொண்டு வாங்க, இவங்கள உடனே லேபர் வார்டு கூட்டிட்டு போங்க”

“சார் நீங்க டாக்டருக்கு  வெளிநாட்ல படிச்சிருக்கலாம். ஆனா இங்க டிரெயின்ங்லதான் இருக்கீங்க. பெரிய டாக்டர் வராம எதும் பண்ண முடியாது. அவ்ளோ அவசரம்னா வேற ஆஸ்பத்திரிக்கு போகட்டும். “

“ஹியுமன் ப்ளட்டோட வேல்யூ தெரியுமா உங்களுக்கு ? முதல்ல லேபர் ரூம அரேஞ்ச் பண்ணுங்க என்ற அந்த பயிற்சி மருத்துவர் சுதாவை வீல்சேரில் உட்கார வைத்து லேபர் வார்டுக்கு அழைத்து சென்றார்.

 சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணி வெச்சா இதான் சிக்கல் என நர்ஸ் வாய்க்குள் முனகினார். அடுத்த அரை மணி நேரத்தில் வெளிவந்த பயிற்சி மருத்துவர், ” சுகபிரசவம்.ஆண் குழந்தை பிறந்திருக்கு. குழந்தை நல்லா இருக்கு. நிறைய இரத்த போக்கு ஆனதால, அம்மாக்கு இரத்தம் தேவைப்படுது. எங்க கிட்ட இருக்கிற பேக்கப் வெச்சு ரத்தம் ஏத்திக்கிட்டிருக்கிறோம். நாளைக்கு காலைக்குள்ள இன்னோர் யூனிட் ஏற்பாடு பண்ணிருங்க. சுதாவின் அம்மா அவரை கையெடுத்து கும்பிட்டார்.

சிறிது நேரத்தில் வந்த பெரிய டாக்டர் குழந்தையையும் சுதாவையும் பரிசோதித்து விட்டு, பயிற்சி மருத்துவரை நோக்கி “வெல்டன் கிருஷ்ணமூர்த்தி! முதல் கேஸே சிக்கலான கேஸ். அதையும் சக்சஸ் கேசாக்கிட்ட. ஐ விஷ் யூ வெரி ஆல் த பெஸ்ட் என கை குலுக்கினார்.

டெலிபோன் மணி அடித்தவுடன் தான் , காயத்ரிக்கு நவநீதன் நினைப்பே வந்தது.

ஆர்வமாக போனை எடுத்த காயத்ரி மறுமுனையில் மாதவன் குரலை கேட்டதும் பரபரப்பானாள்.

“என்னாச்சு மாதவா?”

“பையன் பிறந்திருக்கான் காயத்ரி.சுதாக்கு தான் இரத்தம் தேவைப்படுதாம். ஏற்பாடு பண்ணனும். அரை மயக்கத்துல அப்பப்ப  என்ட்ட பேசறா. இன்னும் கண்ணு முழிக்கல. பெரியவன் என்ன பண்றான்?”

“அவன் இப்பதான் சாப்பிட்டான். விளையாடிட்டு இருக்கான். நான் வீட்டை பூட்டிட்டு அவன எங்காத்துக்கு அழைச்சிட்டு போய்டறேன். சுதா வர வரைக்கும் அவன் எங்காத்துல இருக்கட்டும் “

“சரி காயத்ரி. நவநீதன்ட்ட  இருந்து போன் வந்துச்சானு கேட்டுட்டு வர சொன்னா.

” அதெல்லாம் இருக்கட்டும் மாதவா. அவ வீட்டுக்கு வரட்டும். அப்புறமா பேசிக்கலாம்னு சொல்லு”

” அரை மயக்கத்துல கூட அவளுக்கு உன் நினைப்பு தான். நீ கூட என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டல்ல?”

” என்ன தான் நீ என் பிரண்டோட புருஷனா இருந்தாலும், ஸ்கூல் சீனியராச்சே அந்த பயம் தான் என்றாள் ” இதை கேட்டு இருவருமே நகைத்தனர்.

 “சரி காயத்ரி நான் வெக்கறேன். எதுனா அவசரம்னா கூப்பிடறேன் என அழைப்பை துண்டித்தான்.

விளையாடிக் கொண்டிருந்த  சுதாவின் பையன் தூங்க ஆரம்பிக்கவே தன் வீட்டிற்கு அவனை அழைத்து செல்லலாம் என எண்ணி பூட்டை தேடினாள். டெலிபோன் மணி மீண்டும் அடிக்கவே, முருகா! சுதாக்கு ஏதும் ஆகிட கூடாது என்றபடியே போனை எடுத்தாள்.

“ஹலோ மின்னல்!”

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆயிரம் ரூபாய் (சிறுகதை) – ரேவதி பாலாஜி

    மூடுபனி கோபுரங்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை