in ,

மெழுகில் ஒரு அம்மா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

      அந்த உயர் ரக ரெஸ்டாரெண்ட்டில் ருக்மணியம்மாவும், அவள் கணவரும் அருகருகே அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்தாள் ஹரிணி.

ருக்மணியம்மாவின் முகபாவத்தில் தெரிந்த ஆர்வமின்மையைக் கண்டு உள்ளூர சோகமானாள் ஹரிணி. ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “சொல்லுங்கம்மா” என்றாள் செயற்கைப் புன்னகையோடு..

“நான்… இவரைப் பார்த்திருக்கேன்” என்றாள் ருக்மணியம்மா.

      நெற்றி சுருக்கினாள் ஹரிணி.  “எப்படி?… அதற்கு வாய்ப்பே இல்லையே?… என்னோட அப்பா வீட்டை விட்டு வெளியே சென்று கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கும் மேலாச்சே!… எங்க அம்மா இறந்த பிறகு அவள் வீட்டுக்குள்ளாரவே அடைந்து கிடக்கார்!… அதைப் பொறுக்க மாட்டாமல்தான் நான் அவருக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க முயற்சி செய்யறேன்!… அப்படியாவது அவர் அந்தப் பழைய சோகத்திலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வரட்டும்ன்னு நான் ஆசைப்படறேன்” ஏறக்குறைய அழுதே விட்டாள்.

      “பார்த்திருக்கேன்”னு சொன்னது… நேர்ல இல்லைம்மா… யூ-டியூப்ல!…” என்ற ருக்மணியம்மா குரலைச் சற்று தாழ்த்திக் கொண்டு, “அது செரி ஹரிணி… வீட்ல உன்னோட தாய் நல்லா இருக்காங்களா?” கேட்க,

குழப்பமான ஹரிணி, “மேடம்… எங்கம்மா இறந்து போய் ரெண்டு வருஷத்துக்கும் மேலாச்சு மேடம்!… எங்கப்பாவுக்கு உங்க மகளை இரண்டாம் தாரமாய்க் கேட்கத்தான் நான் இங்கே வந்திருக்கேன்!” என்றாள் சற்றுக் கடுப்பான குரலில்..

 “தெரியும் ஹரிணி!… நான் கேட்டது உன்னோட நிஜத்தாயை அல்ல!… உன்னோட மெழுகுத்தாயை… அவங்க நல்லாயிருக்காங்களா?” என்று ருக்மணியம்மா மறுபடியும் கேட்க,

      அதிர்ந்து போனாள் ஹரிணி, “அது… வந்து… உங்களுக்கு அதெல்லாம் தெரியுமா?” திகிலுடன் கேட்டாள்.

      “எனக்கு மட்டுமா… இந்த உலகத்துக்கே தெரியும்!… அதான் உங்கப்பா அந்த மெழுகுத்தாயைப் பற்றி யூ-டியூப்ல வீடியோ போட்டு… உருக்கமாய்ப் பேசி லட்சக்கணக்குல சப்ஸ்கிரைஸர்ஸை சம்பாதிச்சு ஃபேமஸ் ஆயிட்டாரே!” என்றாள் ருக்மணியம்மா.

      “என்ன ருக்மணி?… என்ன சொல்றே?… எனக்கு எதுவுமே புரியலை” குழப்பமாய்க் கேட்டார் மாசிலாமணி. ருக்மணியம்மாவின் கணவர்.

      பேக்கிலிருந்த லாப்டாப்பை அவசரமாய் எடுத்து, நிதானமாய்த் திறந்து யூ-டியூபிற்குள் சென்று, ஹரிணியின் தந்தை பதித்திருந்த அந்த வீடியோ பதிவைத் தன் கணவருக்குக் காட்டினாள் ருக்மணியம்மா.

       “என் மனைவி மேல் நான் உயிரையே வைத்திருந்தேன் அவளோட இழப்பை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை!… அப்பத்தான் வெளிநாட்டுல ஒருத்தர் தன் அப்பா உருவத்தை மெழுகு பொம்மையா செஞ்சு… வீட்டுல வெச்சு… அதைத் தன் நிஜ அப்பாவா ஏத்துக்கிட்டு… அன்பு காட்டி வாழ்ந்திட்டிருக்கார்!ங்கற விஷயத்தை யூ-டியூப்ல பார்த்தேன், உடனே அவரைத் தொடர்பு கொண்டு அவர் மூலமா என் மனைவியோட மெழுகு பொம்மை செய்தேன்!… அச்சு அசலா அப்படியே என் மனைவி உருவம்!… உண்மையில் அவளே என் கூட இருக்கற மாதிரி இருக்கு!… இப்ப தெனமும் அந்த மெழுகு பொம்மையோட பேசறேன்.. சாப்பிடச் சொல்லி ஊட்டிக் கூட விடறேன்… பக்கத்துல உட்கார்ந்து நேரம் போறது தெரியாம பேசிட்டிருக்கேன்… இப்ப நான் மனைவி இல்லைங்கற குறையே இல்லாம சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கேன்!… இதே மாதிரி நான் சாகிற வரைக்கும் அவ என் கூட இருப்பா மெழுகு பொம்மையா”

      வித்யாசங்கர் தழுதழுக்கப் பேசி முடித்து, மெழுகு மனைவியை அணைத்து, அற்புதமாய் வீடியோ எடுத்து போட்டிருந்தார்.

      நிச்சயமாய் அவருடைய அந்தப் பேச்சையும், முக பாவங்களையும் பார்த்தால் கல் நெஞ்சக்காரர்கள் கூட நெகிழ்ந்து போய் விடுவர்.

       “அம்மா ஹரிணி…. உங்கப்பா மானசீகமா அந்த மெழுகு பொம்மையோட சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கார்… அதான் மறு கல்யாணத்துல ஆர்வமே இல்லாம இருந்திருக்கார்… அது புரியாம நீ எங்க கிட்டே வந்து  “உங்க மகளை எங்கப்பாவுக்கு இரண்டாம் தாரமாய்த் தர தயாரா?”ன்னு கேட்கிறே!… இப்படிப்பட்ட ஒருத்தருக்கு என் மகளைக் கட்டி வெச்சா… அவ வாழ்க்கை எப்படியிருக்கும்னு யோசிச்சுப் பாரு!… அவ அங்க இரண்டாம் இடத்துலதான் இருப்பா… மெழுகு பொம்மைதான் முதல் இடத்தில் இருக்கும்… அதாவது எங்க மக உயிருள்ள பொம்மையாய்த்தான் அந்த வீட்டில் இருப்பா… அப்படியொரு போலி வாழ்க்கை அவளுக்குத் தேவையில்லை” சொல்லியபடியே எழுந்த ருக்மணியம்மா, “கிளம்புங்க” என்று தன் கணவரின் தோளைத் தட்ட, அவரும் எழுந்து பின் தொடர்ந்தார்.

      வாயடைத்துப் போனாள் ஹரிணி.  “அப்பா எனக்குத் தெரியாம யூ-டியூப்ல என்னென்னவோ பண்ணிட்டிருக்கார்!… இட்ஸ் ஓ.கே… இதுக்கு மேலேயும் அவரை இன்னொரு கல்யாணத்துக்கு வற்புறுத்த நான் விரும்பலை!… அவர் அந்த மெழுகு பொம்மையோடவே வாழட்டும்!”

      அதே நேரம் ஹரிணியின் வீட்டில்,

      “என்ன சார்… இந்த மெழுகு பொம்மையை அதிக விலை வெளிநாட்டிலிருந்து வாங்குனீங்க… உயிரோட இருக்குற சம்சாரத்தைப் பார்த்துக்கற மாதிரி… கண்ணுக்குக் கண்ணா பார்த்துக்கிட்டீங்க… இப்ப “பொசுக்”குன்னு வெளிநாட்டுக்கே திரும்பி அனுப்பறீங்களே ஏன் சார்?” அந்த இண்டர்நேஷனல் கார்கோ சர்வீஸ்காரன் கேட்க,

       “காலம் பூராவும் இந்த மெழுகு மனைவியோடவே வாழ்ந்திடலாம்னுதான் நெனச்சேன்..  ஆனா என் மகள் அவளுக்கு இன்னொரு அம்மா… அதுவும் உயிருள்ள அம்மா வேணும்ன்னு அடம்பிடிக்கறா… நான் அப்படியொரு அம்மாவைக் கொண்டு வந்தால்தான் அவ ஆஸ்திரேலியா போய் மேல் படிப்பை தொடருவேன்”னு பிளாக்மெயில் பண்றா… அதாவது என்னைத் தனியா விட்டுட்டுப் போக அவளுக்கு விருப்பமில்லை!… இட்ஸ் ஓ.கே… அவளுக்காக… அவ படிப்புக்காக நான் ஒத்துக்க வேண்டியதா போச்சு!… அதான் இந்த மெழுகு மனைவியைத் திருப்பி அனுப்பறேன்” சோகமாய்ச் சொன்னார் வித்யாசாகர்.

       “இதையும் வீட்டுல ஒரு மூலைல வெச்சுக்க வேண்டியதுதானே?…” கார்கோ ஆள் தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்க,

       “ம்ஹும்… கூடாது… புதுசா வர்ற அந்த இன்னொரு அம்மாவுக்கு அது வீண் மனச் சங்கடங்களைக் கொடுக்கும்… எனக்கே கூட சில நேரங்கள் அதைப் பார்த்தா பழைய ஞாபகங்கள் வரும்… தேவையில்லாத பிரச்சினைகள் வரும்… அதான் திருப்பி வெளிநாட்டுக்கே அனுப்பறேன்… இது ஒரு வகை காஸ்ட்லி மெழுகு… இதை உருக்கி அவங்க இன்னொரு பொம்மை செய்திடுவாங்க”

       “ஓ.கே…சார்” மிகவும் கவனமாய் வித்யாசங்கரின் மெழுகு மனைவியை பக்காவாய் பேக்கிங் செய்து, வேனில் ஏற்றிக் கொண்டு பறந்தான் கார்கோ ஆசாமி.

      அவன் சென்ற சில நிமிடங்களில் கேட்டிற்குள் நுழைந்தது ஹரிணியின் கார்.  போர்ட்டிகோவில் காரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் வந்த ஹரிணி, “டாடி… இனிமேல் உங்களை நான் மறுமணத்திற்க்காக தொந்தரவு செய்ய மாட்டேன்!… நீங்க உங்க மெழுகு மனைவியோடவே வாழுங்க… நான் ஆஸ்திரேலியா கிளம்பறேன்!..” கையிலிருந்த ஃப்ளைட் டிக்கெட்டை ஆட்டிக் கொண்டே மாடிப்படிகளில் ஏறினாள் ஹரிணி.

      விக்கித்து நின்றார் வித்யாசாகர்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சம்போ..சிவசம்போ (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    காதலுக்கு ஜே (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு