in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 18) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6   பகுதி 7   பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13    பகுதி 14    பகுதி 15    பகுதி 16    பகுதி 17

வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே ராம்சந்த் வீடு பரபரப்பாக இருந்தது.வேலையாட்கள் எல்லோரையும் ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தாள் மாலினி தேவி. முதன் முதலில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வருகிறார்கள்.

அவர்கள் வீட்டை பார்த்ததுமே இம்ப்ரஸ் ஆகி விட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாள்.

கிச்சனில் மணக்க மணக்க டிபன் ரெடியாகிக் கொண்டிருந்தது. சுத்த நெய்யின் வாசனை வீட்டை தூக்கியடித்தது. இந்த இடம் மட்டும் அமைந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். தன்னுடைய பிரண்ட்ஸ் மத்தியில் கெத்தாக இருக்கும்…பொறாமையில் எல்லோரும் புழுங்கிப் போவார்கள்… மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் மாலினி தேவி.

ராம் சந்த் அங்கே வர,” என்ன மாலினி! காவ்யாவைக் காணும் மாடில இருக்காளா ..?”

“இல்ல..இல்ல… அவ காலேஜ் வரைக்கும் போயிருக்கா. அவ காலேஜ்ல இன்னைக்கு பஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் ஜாயின் பண்ணறாங்க.. சீனியர்ஸ் ஏதோ பங்க்ஷன் வச்சிருக்காங்க. அதனால போயிட்டு ஒரு நாலு மணிக்குள்ள வந்திடறேன்னு சொல்லிட்டுப் போனா..”

“என்ன மாலினி! பொறுப்பில்லாம பேசுற! எதுக்கு அவளை காலேஜ் போக விட்ட ..இன்னைக்கு போக வேண்டாம்னு ஸ்டிரிக்டா சொல்லிட வேண்டியதுதானே..இவ எப்ப வருவான்னு நாம ஆங்சைட்டியோட காத்துக்கிட்டிருக்க முடியுமா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரத்துல இவ ரெடியாயிருக்க வேணாமா?”

” ஏற்கனவே நேத்து என்கிட்ட கல்யாணம் வேண்டாம்னு எதிர்த்து பேசிக்கிட்டிருந்தா..நான் கோபப்பட்டு பேசினதும் முகத்த தூக்கி வைச்சுகிட்டிருந்தா ..இன்னைக்கு அவங்க வரும்போது சிரிச்சு சந்தோஷமா பேச சொல்லு …முகத்த தூக்கி வச்சிருந்தா நான் சும்மா விடமாட்டேன்.. உங்க ரெண்டு பேரையும் …”

“நீங்க எதுக்கு டென்ஷனாகுறீங்க! அவ வந்துடுவா ..என்ன பெரிய பட்டு புடவை கட்டி தலையிலிருந்து கால் வரை நகைய போட்டுகிட்டா நிக்கப் போறா.. ஏதோ ஒரு டிசைனர் சாரி கட்டப் போறா.. அதுக்கு ரெண்டு மாடர்ன் ஜூவல் போட போறா தலையை பின்னி பூ முடிக்க போறதா இருந்தாத்தான் நேரம் ஆகும். இவ பண்ற மேக்கப்புக்கெல்லாம் 15 நிமிஷம் போதும்.”

“இந்தப் பாரு டிரஸ் அவ இஷ்டப்படி போடட்டும். ஆனால் நகை இந்த பாசியை கீஸி எல்லாம் போடாம, வைர நெக்லஸ், வைர அட்டிகை.. போடச் சொல்லு ..நம்ம ஸ்டேட்டஸ் அவங்களுக்கு தெரியும், இருந்தாலும் முதல் முதல்ல மாப்பிள்ளை காவ்யா வைப் பாக்குறாரு..”

” இந்த இடம் மட்டும் முடிஞ்சுதுன்னா இதைவிட பெரிய சந்தோஷம் கிடையாது .பரமேஸ்வரன் கொஞ்சம் கரடு முரடான ஆளுதான். ஆனா இந்தப் பையன் ஆதர்ஷ் பத்தி நிறைய விசாரிச்சுட்டேன்.. எல்லாருமே ரொம்ப நல்லா சொல்றாங்க… ரொம்ப கெட்டிக்காரப் பையன் ..அவங்க அப்பா கஷ்டப்பட்டு பண்ணிக்கிட்டிருந்த பிசினஸை, இவன் ஈசியா தூக்கி நிறுத்திட்டான். இப்படிப்பட்ட ஆள் இருந்தா நம்ம கம்பெனியை எனக்கு முடியாதப்ப பாக்குறதுக்கு ரொம்ப வசதி ..”

“என்ன கொஞ்சம் மாப்பிள்ளை அம்மா பிள்ளையா இருப்பாரு போலத் தெரியுது. எல்லாமே அம்மாவை கேட்டுத்தான் செய்வாராம்…அந்தம்மா எப்படி டைப்னு தெரியல .காவ்யா என்னைப்போல கிடையாது அவ ஒரு புள்ள பூச்சி ..அவ வாய் பேசுறதெல்லாம் நம்ம கிட்ட தான்..மாமியாரை எதிர்த்து பேசி கண்ட்ரோல்ல வச்சுகிட்டா தான் இவளுக்கு நல்லது “என்றாள் மாலினி தேவி .

“எது நீ அந்தக் காலத்தில இருந்தயே.. அந்த மாதிரியா”

“போதும் வேண்டாத பேச்சு…வேலை நெறய கெடக்கு.. நீங்க போங்க..” என்று பேச்சை கட் பண்ணினாள் மாலினி தேவி. மூன்று மணி ஆனதும் லேசாக ஒரு டென்ஷன் வர திரும்பத் திரும்ப காவ்யாவுக்கு போன் போட்டுக் கொண்டிருந்தாள் .

காவ்யா காலேஜிலிருந்து 4 மணிக்கு கிளம்பி விட்டேன் என்று போன் பண்ணினாள். வீடு வந்து சேர டிராபிக்கில் நாலே முக்கால் ஆகி விட்டது. டென்ஷனில் இருந்தாள் மாலினி தேவி..

“காவ்யா எப்ப பாரு இப்படித்தான் செய்கிற .போ.. போய் சீக்கிரம் பேஸ் வாஷ் பண்ணிட்டு டிரஸ் பண்ணிக்கோ. அவங்க சரியா அஞ்சு முப்பதுக்கு வந்துடுவாங்க, அவங்க வர்றதுக்குள்ள நீ ரெடியா இருக்கனும் “

“தெரியும்மா.. ரெடியாடுவேன்” என்றாள் எரிச்சலோடு. அதற்கு மேல் மாலினி தேவி பேசவில்லை. பேசினால் வேண்டாத விவாதம் வரும். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரம், மகள் மூட்அவுட்டாக கூடாது என்று பேசாமல் நகர்ந்தாள்.

ஆதர்ஷும், ருக்மணி தேவியும், கிளம்பி ஹாலில் உட்கார்ந்து இருந்தார்கள். பரமேஸ்வரன் கிளம்பிக் கொண்டிருந்தார். ஆதர்ஷ் முகம் சலனமற்றிருந்தது.

முந்திய நாள் ருக்மணி தேவி ” ஆதர்ஷ், இப்போ எதுவும் சொல்லாத.. உங்கப்பா இஷ்டப்படி நாம நாளைக்குப் போய் அந்த பொண்ண பார்த்துட்டு வருவோம் .பொண்ணு பாக்கத் தானே போறோம் .தாலி கட்டவாப் போறோம்.அதனால அவசரப்பட வேண்டாம் …இப்போதைக்கு எந்தப் பிரச்சினையும் வேண்டாம் தம்பி” என்றாள்.

பரமேஸ்வரன் கிளம்பி வந்தார். “அம்மாவும், புள்ளையும் ரெடியாயாச்சா? நான்தான் லேட்டா?.. சரி வாங்க கிளம்புவோம் ..”

“அப்பா ஒரு நிமிஷம் ..ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லனும்”

“என்ன” என்பது போல் ஏறிட்டுப் பார்த்தார் பரமேஸ்வரன்.

“நான் நீங்க சொன்னதுக்கு ஒத்துகிட்டேன். நீங்க பெண் பார்க்க இன்னைக்கு போகனும் சொன்னதுக்கு நான் சம்மதிச்சேன். இப்ப நான் வர்றதுக்கு ஒரே ஒரு கண்டிஷன்..”

“நீரஜா எந்த பிரச்சனையும் இல்லாமல், எந்த சேதாரமும் இல்லாமல், அவளும், அவள் குடும்பமும், அவங்க வீட்டுக்குத் திரும்பனும். அவங்களுடைய வாழ்க்கையில நீங்க எக்காரணம் கொண்டும் தலையிடவோ, உங்களுடைய வேலையை காட்டவோ, கூடாது ..உங்களப் பத்தி நான் நல்லா புரிஞ்சுகிட்டேன். நீரஜாவுக்கோ.. அவ குடும்பத்துக்கோ.. ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். அதுக்கு அப்புறம் நீங்க என்ன சொன்னாலும்.. நான் கேட்க மாட்டேன்” என்றான் தீர்மானமாக.

ஒரு கணம் கோபம் சுறுசுறுவென தலைக்கேறியது. ஆனால் அடக்கிக் கொண்டார் பரமேஸ்வரன். இப்போது ராம்சந்த் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது ஏதாவது சொல்லி அவனுக்கு மூட் அவுட்டாச்சுனா அங்க வந்து உம்ன்னு உட்கார்ந்திருப்பான். அது நல்லாயிருக்காது என்று மனதுக்குள் யோசித்தார்.

“நான் ஏம்பா அவ விஷயத்தில் தலையிடப் போறேன். நீ என்ன தப்பா நினைச்சுகிட்டிருக்க. குமாரவேலு எங்கிட்ட வேலை பார்த்தவர் தானே.. அவரும், அவர் குடும்பமும், எனக்கு ஒன்னும் எதிரி இல்லையே! நீ சொன்ன மாதிரி நான் அவங்க விஷயத்தில தலையிட மாட்டேன். அத நான் சத்தியமா சொல்றேன் .”

காரில் போகும்போதும் ஆதர்ஷ் யாரிடமும் பேசவில்லை. பலவித எண்ணங்கள் அவனுக்குள் அலைமோதிக் கொண்டிருந்தது.ஆனாலும் ஆதர்ஷ் மனசில் ஒரு சின்ன நிம்மதி ..

இந்த குழப்பங்களுக்கு நடுவே நீரஜா பாவம்! ஒரு பாவமும் அறியாதவள், செய்யாத ஒரு தப்புக்காக ..அவளும் அவள் குடும்பமும் எதுக்கு கஷ்டப்படனும் ..அவள் ஆசைப்பட்டு எந்த வார்த்தையும் என்னிடம் கூறியதில்லை. நான் அவள் மேல் வைத்த ஒரு சிறு அன்புக்கு அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? .அப்பாவின் கேவல புத்திய என்ன சொல்வது.

அடுத்த அரை மணி நேரத்தில் கார் ராம்சந்த் வீட்டை அடைந்தது. அங்கே அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

(அலை வீசும்  🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாய்த்துடுக்கு (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    குழந்தை மனம் (சிறுகதை) – பு.பிரேமலதா, சென்னை