in ,

காதலித்துப் பார் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“என்ன காவ்யா, வந்ததுல இருந்து நானும் பார்த்துட்டிருக்கேன், ஏண்டீ ஒரு மாதிரி இருக்கே? எப்பவும் இருக்கற கலகலப்பு இல்லையே, என்னாச்சு?”

“போர் அடிக்குது மா. வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமே இல்லாம ஓடற மாதிரி இருக்கு. அதுக்குள்ளே வாழ்க்கை வெறுத்துப் போச்சு.  சுதந்திரமே இல்லை, எல்லாம் மத்தவங்களுக்காகவே வாழற மாதிரி இருக்கு.”

“என்ன சுதந்திரம் இல்லாம போச்சு உனக்கு? உங்க வீட்டுக்காரர், அவங்க வீட்டு மனுஷங்க எல்லாருமே நல்ல மாதிரி தானே. அவ்வளவு பிரியமா இருக்காங்க உன்கிட்ட. அப்புறம் என்ன?”

“என்னத்த பாசமா இருக்காங்க? எப்பவும் மத்தவங்களுக்காக யோசிக்கற மாதிரிதான் இருக்கு. நமக்குப் புடிச்ச மாதிரி எதுவும் இல்லை. இதுக்குத்தான் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் லவ் பண்ணி கல்யாணம்  பண்ணாத்தான் லைஃப் நல்லா இருக்கும்னு சொன்னாங்க.

வீட்டுல பார்த்து வைக்கற,  யாரு என்னன்னே தெரியாத  ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிட்டா எப்படி ஒத்துப் போகும் மா? அவங்க டேஸ்ட்டுக்கும், நம்ம ரசனைக்கும் ஒத்தே வரமாட்டேங்குது.

எனக்குப் பிடிச்சது அவருக்குப் பிடிக்கல, அவருக்குப் பிடிச்சது எனக்குப் பிடிக்க மாட்டேங்குது. எல்லா விஷயத்துலயும் ஆப்போசிட்டா இருக்கோம். அப்புறம் எப்படிமா வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்?

சுவாரஸ்யமே இல்லை, கோவம் கோவமா வருது. அவருக்குப் பிடிச்சதையே எப்பவும் நான் செஞ்சிட்டே இருக்கணுமா? எனக்குப் பிடிச்ச மாதிரி எப்பத்தான் வாழறது?”

“என்னது உனக்குப் புடிச்ச மாதிரி வாழறது? இப்ப இருக்கற உன் வயசு பொண்ணுங்க எல்லாம் எப்பவும் இப்படித்தான் பேசறீங்க. கல்யாண வாழ்க்கைக்கு மட்டுமில்ல, எல்லா விஷயத்துக்கும் இதைச் சொல்லிடறீங்க, எனக்குப் பிடிச்ச மாதிரி வாழறதுன்னு.

வாழ்க்கை நம்ம கைல இருக்கு காவ்யா. நமக்குப் புடிச்ச மாதிரி மாத்திக்கணும். உனக்குப் புடிச்ச மாதிரி மட்டும் வாழணும்னா யார் கூடவும் ஒத்துப்போகவே முடியாது.

நான் உங்க அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கும் போது, எனக்கு அவர் யாருன்னே தெரியாது. என்னோட குணத்துக்கும் அவரோட குணத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. ரெண்டு பேரும் எதிரும் புதிருமாத்தான் இருப்போம்.

கல்யாணமாகி ஒரு வருஷம் சிரமமா இருந்தது. ஆனா அந்த ஒரு வருஷத்துல அவரை நான் நல்லா புரிஞ்சுகிட்டேன். அவர் என்னைப் புரிஞ்சுகிட்டார். அதுக்கு அப்புறம்தான் எங்களோட உண்மையான காதல் வாழ்க்கை ஆரம்பமாச்சு.

வருஷங்கள் கூடக் கூட காதல் அதிகமாகிட்டே போகுது. நீ சொல்றியே,  லவ் பண்ணி கல்யாணம் பண்ணாத்தான் புரிதலோட வாழ்க்கை நல்லா இருக்கும்னு. அதே வாழ்க்கைதான் இப்போ நானும், உங்க அப்பாவும் வாழறோம்.

நீங்க சொல்ற காதல் வாலிப வயசுல இருக்கற ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து, பேசி, வெளில சேர்ந்து சுத்தி சந்தோஷமாயிருக்கிறது மட்டும்தான். அதைத்தான் காதல்னு நிறைய பேர் நினைக்கறீங்க. ஆனா அந்தக் காதல்ல வயசுக் கிளர்ச்சி மட்டும்தான்  இருக்கும். சரியான புரிதல் வராது.

அந்தக் காதல், ஒருத்தர்கிட்ட இருக்கற நமக்குப் பிடிக்காத விஷயத்தைக்கூட வேற கோணத்தில் பார்த்து நமக்குப் புடிச்ச மாதிரி நம்மை யோசிக்க வைக்கும். அது ஒரு மாய உலகம் மாதிரி. நல்ல குணங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.

ஆனா சேர்ந்து வாழ்க்கையை வாழ ஆரம்பிச்ச பிறகு, நாம சூப்பர், சூப்பர்னு நினைச்ச விஷயங்கள் எல்லாம் ஒத்து வராத மாதிரி இருக்கும். காதலிச்சப்போ வேற மாதிரி இருந்தியேன்னு சண்டை வரும். அதுக்காக எல்லா காதலும் அப்படித்தான்னு சொல்லல.

இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. ஒரு வருஷம்தானே ஆகுது. உன் வீட்டுக்காரர் எப்படிப்பட்டவர், அவருக்கு என்ன பிடிக்கும்னு உனக்குத் தெரியுமில்ல. அவரைக் காதலிக்க ஆரம்பி. அவரை மட்டுமில்ல, அந்தக் குடும்பத்தையே உன் குடும்பமா நினைச்சு விரும்ப ஆரம்பி.

முதல்ல உன் கணவரை உனக்குத் தெரியாத யாரோ ஒருத்தர்னு நினைக்காதே. அப்படிப் பார்த்தா எல்லா உறவுகளும் நமக்கு ஆரம்பத்துல தெரியாதவங்கதானே. பழகப் பழகத்தானே புரிஞ்சுக்கறோம்.

நீ உன் கணவரைக் காதலிக்க ஆரம்பி. காதலிச்சுப் பார். அவர்கிட்ட இருக்கற நல்ல குணங்கள் மட்டுமே  கண்ணுக்குத் தெரியும். அவருக்காக சிலதை விட்டுக் கொடுக்கறதுல ஒரு தனி சந்தோஷம் கிடைக்கும் பாரு, அதை அனுபவிச்சாத்தான் தெரியும். அப்போ அவரும் நீ எதிர்பார்க்கறதைவிட அதிகமா உனக்காக நிறைய மாத்திக்குவார். அப்போ காதல் கூடும்.

காதல்னா என்னன்னு நினைச்சே? எதிர்பார்ப்பில்லாம அன்பு செலுத்தறதுக்குப் பெயர்தான் காதல். அந்தக் காதல்ல உனக்குப் பிடிச்சது, எனக்குப் பிடிச்சதுன்னு தோணவே தோணாது.

உனக்குப் புடிச்ச மாதிரியே வாழ்ந்துட்டிருந்தா, ஒரு கட்டத்துல வாழ்க்கை போர் அடிக்கும். நீ உனக்குப் புடிச்ச மாதிரின்னு யோசிக்கறதாலத்தான் கல்யாணமான ஒரு வருஷத்துலயே வாழ்க்கை போர் அடிக்குதுன்னு சொல்றே. எனக்கு உங்க அப்பாகூட வாழற வாழ்க்கை போர் அடிக்கல. எங்களுக்குள்ள புரிதலும், காதலும் கூடிட்டே போகுது.  அதுக்காக சண்டை வராம, வாக்குவாதம் இல்லாம இருக்காது. அது காதலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போற ஒரு துருப்புச் சீட்டு.

நீ மட்டும் உண்மையான காதலை மனசுல சுமந்துட்டு அந்தக் குடும்பத்தில் வாழ ஆரம்பிச்சுப் பாரு, உனக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கை தானாவே வந்து சேரும்.

காதலிச்சுப் பார், வாழ்க்கை அழகாகும்.”

காவ்யா பிரமித்துப் போய் தன் அம்மாவையே பார்த்தாள். காதல் என்ற வார்த்தையை அம்மா சொல்லிக் கேட்டதே இல்லை. காதலுக்கு இவ்வளவு அழகாக விளக்கம் சொல்லத் தெரியுமா அம்மாவுக்கு?

அன்று முழுவதும் அம்மா சொன்னதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். மறுநாள் காலை எழுந்ததுமே கணவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனதுக்குள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. ஆனால் அவர் வாரக் கடைசியில்தான் வந்து அழைத்துப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.

முதன்முறையாக, தன் கணவரின் வருகைக்காக ஏங்க ஆரம்பித்தாள்.

‘இதுதான் அம்மா சொன்ன காதலா? அப்படின்னா நானும் அவரைக் காதலிச்சுட்டுத்தான் இருக்கேனா? அவர் எந்த அளவுக்கு என் மேல காதலோட இருக்கார்னு தெரியலயே?’

தவிப்புடன் அந்த நாளைக் கடத்தினாள் காவ்யா. மகளிடம் ஏற்பட்ட மாற்றத்தை மௌனமாக ரசித்துக் கொண்டிருந்தார் அம்மா புவனா.

மாலை வாசலில் அழைப்பு மணி அழைக்கவே கதவைத் திறந்தார் புவனா. மாப்பிள்ளை நின்றிருக்கவே, உள்ளே வரச் சொல்லி, குசலம் விசாரித்துவிட்டு, சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

காவ்யா தன் கணவனைப் பார்த்ததும் காதலில் உருகிப் போனாள்.

‘என்னைவிட அவர் என் மேல அதிக காதலோட இருக்கார். நான் தான்…..’

காதலில் கரைய ஆரம்பித்த பிறகு வார்த்தைகளுக்கு என்ன வேலை.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 13) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 6) – ரேவதி பாலாஜி