எழுத்தாளர் மனோகர் மைசூரு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கோடை வெயில் சுட்டெரிக்கிறது. ஒரு முப்பது வருஷம் முன் இந்த மாதிரி இல்லை மைசூரு நகரம். நான் வேலை நிமித்தம் வந்தப்போது சொந்தங்கள் பயமுறுத்தினார்கள் ‘ரொம்பவும் குளிரும். ஸ்வெட்டர் எல்லாம் எடுத்திட்டு போ’ என்று அட்வைஸ். எல்நினோ என்று சொல்கிறார்களே அதன் தாக்கமாக இருக்கலாம் இந்த பட்டை கிளப்பும் வெய்யில். நான் வாங்கிய ஸ்வெட்டர் எல்லாம் அப்படியே பீரோவில் காத்திருக்கிறது.
மாலை நான்கு மணி. வீட்டை விட்டு வெளியே கிளம்பலாம் என்று தோன்றியது. மழையின் அறிகுறி கொஞ்சமும் இல்லை— நல்ல வெயிலாய் தெரிந்தது. கூகுளில் சரி பார்த்தேன்; மழை இரவில் தான் வருமாம். சரியென்று கிளம்பிவிட்டோம்.
ஓர் இரண்டு கிலோமீட்டர் கூட போயிருக்க மாட்டோம் —கரு மேகங்கள் நம்மை நோக்கி விரைந்து வந்தன. திரும்பி வீடு செல்ல முடிவெடுத்தோம். ஆனால் வாய்ப்பே கொடுக்கவில்லை. தட தட வென்று மழை கொட்ட ஆரம்பித்தது. புயல் மழை எனலாம். காற்று சுழல்களாய் அடிக்க ஆரம்பித்தது. ஆளை சாய்த்து விடும் போலிருக்கு.
அடடா — வீட்டில் எல்லா ஜன்னல்களும் திறந்திருக்கின்றனவே !. மழை காற்றுடன் உள்ளே வீசினால், சோபா, கட்டில் எல்லாம் நனைந்து நாசமாகிவிடுமே என்று மனம் பதறியது. ஒரு கடை முன் தங்கி, கூரையின் நிழலில் ஒண்டிக்கொண்டோம். கூரை கூட பயத்தில் படபடத்தது.
இப்படி ஒரு முறை வேறு வகையான பதட்ட சம்பவம் எனக்குநடந்தது. அன்று என் செல்போனின் பவர் பட்டன் கழன்று விழுந்து தொலைந்து விட்டது. பேட்டரி காலியாகி போன் தானாக அணைந்தது. யாரும் என்னை அழைக்க முடியாது. அவர்கள் கவலைப்படுவார்கள். எந்த வித நிதி பரிமாற்றமும் ஆகாது. மறுநாள் ஞாயிறு வேறு — போன் கம்பெனி ஆபீஸ் மூடியிருக்கும், அந்த பழைய மாடலுக்கு பட்டன் கிடைப்பதும் கஷ்டம். புதிய போன் வாங்குவது தான் தீர்வா?. கவலையின் ரேகைகள் முகத்தில் ஆழமாக பதிந்தன.
வீடு திரும்பியதும், மனைவி ஒரு சிறுகுச்சியை எடுத்து அந்த இடத்தில் ஆழமாக அழுத்த — போன் உயிர் பெற்றது. என் மூச்சும் திரும்பியது.
அன்று ஒரு முடிவெடுத்தேன்: சும்மா அலட்டிக்கொள்ள வேண்டாம். என்னத்தான் நடக்கட்டும் நடக்கட்டுமே !.
இப்போது, அந்த கூரையின் கீழ் நிற்கும்போது அதை நினைவு கூர்ந்தேன். மழை விடும் வரை காத்திருக்க வேண்டியது தான். நம்மால் இங்கிருந்து எதுவும் செய்ய முடியாது — அதை ஏற்றுக்கொண்டேன். மனம் ஒரு சின்ன அமைதி நிம்மதி கண்டு லேசானது.
ஒரு மணி நேரம் கழித்து வீடு சென்றோம். எங்கள் பகுதி சாலையில் சிறு மழை மட்டுமே. காற்று இல்லை. கோடை மழை எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது போலும்.. கூகுளை நம்பி மழை வருவதில்லை. நான் பயந்தது போல் எந்த சேதமும் இல்லை.
பல தடவை இப்படித்தான். நம் கற்பனைக்குள் கட்டி எழுப்பும் பேரழிவுகள், உண்மையில் வரவே வருவதில்லை. தேவையற்ற பயத்தை விட்டு, நிகழ்காலத்தில் நிம்மதியாக இருக்கக் கற்றுக்கொள்வதே வாழ்க்கை தரும் நல்ல பாடம்.
எழுத்தாளர் மனோகர் மைசூரு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings