in ,

சவுண்டம்மா… (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை                              வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்                                                         

சிவசாமி பள்ளியிலிருந்து வீட்டிற்கு அருகில் வரும்போதே அவன் அம்மா யாருடனோ சண்டையிட்டுக் கொண்டிருக்கும் குரல் காற்றில் மிதந்து வந்து கேட்டது. அவளின் குரல் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குக் கேட்கும் திறன் கொண்டது என்பதால் சிவசாமிக்கு அது பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை.

பின் சும்மாவா தன் அம்மாவுக்கு சவுண்டம்மா என்று ஊரார் பட்டப்பெயர் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான் சிவசாமி.

வீட்டின் வெளிப்புறத்து கேட்டின் மூங்கில் கதவைத் திறந்து உள்ளே நுழையும் போதுதான் தெரிந்தது, அம்மாவின் சண்டை பக்கத்து வீட்டில் இருக்கும் சின்ன சித்தப்பாவுடன் என்று.

சின்ன சித்தப்பா வேலிக்கு அப்புறம் நின்று சன்னமான, பயந்த‌குரலில் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும் அம்மா செளந்தரம்மா என்ற பெயர் கொண்ட சவுண்டம்மா உரத்த குரலில் சித்தப்பாவுடன் கடுமையான வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருப்பதும் தெரிந்தது.

சண்டைக்குக் காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. சின்ன சித்தப்பாவின் கோழி தன் குஞ்சுடன் எல்லை தாண்டி செளண்டம்மாவின் தோட்டத்துக்குள் வந்து மேய்ந்ததுதான் காரணம்.

கடைசியில், அண்ணி சவுண்டம்மாவின் வெண்கலக் குரலுக்கு அஞ்சி, பின் வாங்கி தன் வீட்டிற்குள் புகுந்துகொண்டு விட்டார் சின்ன சித்தப்பா. பாவம்.. அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை போடுவதில் அவ்வளவு பயிற்சி இல்லை என்பதும், சவுண்டம்மாவுக்கு எதிராக வாய்ப்போர் தொடுத்து அந்த ஊரில் இதுவரை யாரும் ஜெயித்தது இல்லை என்பதுமே அவர் சண்டையில் பின் வாங்கியதன் காரணம்.

சிவசாமியின் நினைவில், அவனின் அப்பா கந்தசாமி உயிரோடு இருந்த வரை அம்மா இப்போது உள்ள அம்மா போல் சண்டைக்காரியாக எப்போதும் இருந்தது இல்லை. மற்ற பெண்களைப் போல, கணவனுக்கு அடங்கி, உறவுகளுடன் நட்பை வளர்த்து, இருந்த இடம் தெரியாமல் இருந்தவள்தான் இந்த செளந்தர‌ம்மா.

தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அப்பா ஒரு நாள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்ததும், ஆஸ்பத்திரிக்குப் கொண்டு போகும் வழியில் அவர் உயிர் பிரிந்ததும் ஒரு கனவு போல் இருந்தது சிவசாமிக்கு.

குடும்பத்தில் மூத்தவர் கந்தசாமி இறந்ததும், அதுவரை கூட்டாக விவசாயம் பார்த்து வந்த தம்பிகள் இருவரும் பாகப் பிரிவினை செய்து கொள்ள ஊர்ப் பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டனர். சில, பல சச்சரவுகளுக்கிடையில் பாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டது, மங்கிய நினைவுகளாகவே பத்து வயது சிவசாமிக்கு மனதில் பதிந்திருந்தது.

எழுபது ஆண்டுகள் ஓயாது உழைத்த அம்மா தன் கடைசி நாட்களில் இருப்பதை உணர்ந்து கொண்ட சிவசாமி, ஒரு மாதம் அலுவலகத்தில் விடுப்பெடுத்து தன் மனைவி மக்களுடன் அம்மாவின் கிராமத்திற்கு வந்திருந்தான்.

இடையில் அவன் கல்லூரி நாட்களில் அவனை ஊருக்கு அதிகம் வர விடாமல், ஹாஸ்டலிலே தங்கிப் படிக்க வைத்திருந்தாள் சவுண்டம்மா. படிப்பு முடிந்தவுடன் வெளியூரில் வேலை அமையவும், கிராமத்தில் அம்மாவுடன் நாட்களைக் கழிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை சிவசாமிக்கு.

ஆனால் அம்மா ஊரில் எல்லோருடனும் சண்டை இழுத்து, உறவுகளையும், நட்புக்களையும் அருகில் அண்ட விடாமல் செய்து கொண்டிருக்கிறாள் என்பது மாத்திரம் அரசல் புரசலாக நண்பன் மூலம் தகவல் தெரிந்து வைத்திருந்தான் சிவசாமி. அம்மாவின் இந்தச் செயல் அவனுக்கு அவமானமாகவும், அருவெறுப்பாகவும் இருந்ததால் அடிக்கடி ஊருக்கு செல்வதையும் தவிர்த்து வந்திருந்தான் அவன்.

அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வந்த மனைவி அவனிடம் கூறினாள்,

‘அத்தை உங்க கூட தனியா ஒரு பத்து நிமிசம் பேசணுமாம். ரூமுக்கு வரச் சொன்னாங்க…’. 

‘என்ன பேசப்போறாங்க? இந்த ஊரில் இன்னும் யார் யார் கூட சண்டை போடுவது பாக்கி இருக்கிறது என்று லிஸ்ட் கொடுக்கவா?’ என்றான் வெறுப்புடன்.

‘ஏங்க.. அவங்களே வாழ்க்கையின் கடைசி நாட்களில் இருக்கறாங்க… எல்லோரையும் போல நீங்களும் வெறுப்பா பேசலாமா? நம்ம மாத்திரந்தானே அவங்களுக்கு… போய் அவங்க உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து பொறுமையா பேசுங்க.. முக்கியமா அத்தை மனசு புண்படாம பார்த்துக்குங்க..’ என்றாள்.

அம்மாவின் அறை சுத்தமாகவே இருந்தது. வெள்ளைச் சேலையில் தன் நீண்ட கால்களை நீட்டிப் படுத்திருந்தாள் அம்மா. அவன் அறைக்குள் நுழைவதைப் பார்த்ததும் எழ முயற்சி செய்தவள் அது முடியாமல் அவன் பக்கம் முகத்தை மட்டும் திருப்பினாள்.

‘வா.. சிவா..உங்கிட்ட கொஞ்சம் பேசணும்…’ என்றாள். குரல் மாத்திரம் தன் வலிமையை இழக்காமல் கம்பீரமாகவே இருந்தது. ஆனால் உடல்நிலை மட்டும் டாக்டரின் கூற்றுப்படி இன்றோ நாளையோ என்றிருந்தது.

‘இன்னும் ஒரு மாதம் நான் உங்க கூடத்தான் இருப்பேன் அம்மா… இன்னைக்கு முடியலன்னா, நாளைக்குக் கூடப் பேசலாம்…’ என்றான் சிவசாமி.

என்னதான் அம்மாவின் மேல் லேசான கோபம் இருந்தாலும், அப்பாவின் காலத்திற்குப் பிறகு அவனை வளர்க்கவும், படிக்க வைக்கவும் அவள் பட்ட சிரமங்களை அவன் தெரிந்து கொள்ளாமல் இல்லை.

‘மறுபடி பேச எனக்கு வாய்ப்புக் கிடைக்குமான்னு தெரியாதப்பா… என் மனசில அடைபட்டுக் கிடக்கிறத இப்பவே கொட்டி விட்டா நல்லா தூங்குவேன்..’ என்றவள் அவன் முகத்தை உற்று நோக்கினாள்.

எத்தனை வேதனைகளை அவனுக்குத் தெரியாமல் தன்னுள் புதைத்து வைத்து குமைந்து போயிருக்கிறாள் கடந்த காலங்களில்?. தொண்டையை கனைத்துக் கொண்டு ஆரம்பித்தாள் சவுண்டம்மா,

‘உன் அப்பா இறந்த பிறகுதான் எனக்கு நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தது. எனக்கு வெள்ளைச் சேலை கொடுக்கும்போதே, நம் சொத்துக்களைப் பறித்துக் கொள்ளும் திட்டமும் நம் பங்காளிகளிடம் தொடங்கிவிட்டது. முக்கியமாக உன் பெரிய சித்தப்பாவும் அவன் மனைவியும் பெரும்முனைப்புடன் இருந்தனர்.

நீயோ பள்ளிக்கூடம் செல்லும் சிறு பையன். நானோ உலகம் அறியாத கைம்பெண். இந்த பலஹீனத்தைப் பயன்படுத்தி, நம் தோட்டத்திலும், வீட்டிலும் பல தொல்லைகளைக் கொடுக்கத் தலைப்பட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக வரப்பை வெட்டி நம் பங்கை அவர்கள் பங்கில் சேர்ப்பதும், தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சச் செல்லும்போது மோட்டாரின் பியூசை ஒளித்து வைத்துத் தொல்லை கொடுப்பதும் என்று எந்தெந்த வகையில் தொல்லை கொடுக்க முடியுமோ அந்தந்த வகையில் தொல்லை கொடுத்து வந்தனர்.

மூன்றாவது மனிதர்களின் தூது மூலம், நமது சொத்தை விற்று விடவும் ஆலோசனைகள் வழங்கினர். இந்த சூழ்ச்சிகளுக்கு நான் இரையாகததால், அவர்களின் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தனர். ஆம்…அந்த அஸ்திரம் எல்லாப் பெண்களையும் வீழ்த்தக் கூடியது. எனக்கும், நம் தோட்டத்துக்கு எப்போதும் வேலைக்கு வரும் பழனிச்சாமி பெரியப்பாவையும் இணைத்து, ஒரு புரளியை உருவாக்கி ஊருக்குள் உலா விட்டனர்.

அதுவரை பொறுமையாக இருந்த நான் பொறுமையை இழந்து புது அவதாரம் எடுக்க முயற்சி செய்தேன். எனது பலம் எனது சப்தம் என்பதை உணர்ந்து, சண்டைக்காரியாக மாறினேன். என்னை மாற்றிக் கொண்டேன் என்றும் சொல்லலாம். என்னிடம் அவர்கள் வம்புக்கு வருவதற்கு முன்பு, நானாக‌ வலியப் போய் அவர்களிடம் சண்டையை இழுத்தேன். இந்த ஊரில் என்னைக் கண்டாலே பயந்து ஓடும்படி சண்டையிட்டு, என்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வேலியை அமைத்துக் கொண்டேன்.

எனது சண்டையை நமது சொத்துக்கும், எனது கற்புக்கும் கவசமாகப் பயன்படுத்தினேன். என்னால் உனக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காகவே உன்னை ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வைத்தேன். சவுண்டம்மா என்ற பெயர் கூட ஒரு பெண் தெய்வத்தின் பெயர்தான் இல்லையா?…’ என்றவளுக்கு மூச்சு வாங்கியது. தொடர்ந்து பேசியதாலோ என்னவோ கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.  

அம்மாவின் மெலிந்த கையைப் பற்றினான் சிவசாமி. இந்த மெலிந்த உடம்புக்குள் இத்தனை துணிச்சலா? இத்தனை போராட்ட குணமா? தனக்காகத்தான் அவள் தனது இயல்பை மாற்றி, ஊருக்குள் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொண்டாளா?

எல்லா அம்மாக்களும் இப்படித்தானா? தனக்காக வாழாமல் தங்கள் சந்ததிகளுக்காகவே வாழ்ந்து மடிகிறார்களா இந்த அம்மாக்கள்? எண்ணற்ற கேள்விகள் அவனுள் பொங்கி எழ, வழியும் அவளின் கண்ணீரை மென்மையாகத் துடைத்துக் கொண்டே,

‘அம்மா…’ என்றான் கம்மிய குரலில். கடைசியாக, தன் மகன் தன்னைப் புரிந்து கொண்டான் என்ற திருப்தியுடன், அவன் கையை வருடினாள் சவுண்டம்மா.

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)                                                        

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவர்கள் சிரிக்கட்டும் (சிறுகதை) – ஜெயந்தி.M

    விலகத் தெரிந்த உயிரே! (சிறுகதை) – இரஜகை நிலவன்