in ,

வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 7) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4   பகுதி 5   பகுதி 6

காலேஜ் காம்பவுண்ட் தாண்டி இருக்கும் வயல்வெளியில் சரவணனும் பவானியும் கைக்கோர்த்தபடி நடந்தார்கள். நிழலாக இருந்த மரத்தினடியில் நிலத்தின் மடியில் அமர்ந்தார்கள்.

“இந்த வாரம் ஊருக்குப் போகப் போறியா?” என்று பேச்சை ஆரம்பித்தான் சரவணன்.

“இல்ல…கண்டிப்பா …இல்ல…” அழுத்தமாகச் சொன்னாள் பவானி.

“சரி…நாம இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னா….என்ன நடக்கும்…. உங்க நிலத்துல பாக்கற எங்க அப்பாரோட வேலைய பிடுங்கிருவாங்க…. எனக்கும் வேலை கிடையாது…. தேடணும்…அது வரைக்கும் சோத்துக்கு என்ன செய்யறது?” என்று கலக்கம் நிறைந்த குரலில் கேட்டான் சரவணன்.

“நாம….நாம…வேற ஊருக்குப் போயிறலாம்…” என்று வேகமாகச் சொன்னாள் பவானி.

“எங்கப்பனைக் கொன்றுவாங்க…..என்னை வரவழைக்க….” என்றான் சரவணன்.

“இப்படிப்பட்ட மனிதர்களா நம்ம கிராமத்துக்காரங்க?” அதிர்ச்சியுடன் கேட்டாள் பவானி.

“கிராமத்து மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு வெள்ளந்தி மனமுள்ளவர்களோ.. அவ்வளவுக்கவ்வளவு சாதி வெறிப்பிடித்தவர்கள். நட்புக்கு கூட சாதி பாக்கறவுங்க இணக்கத்துக்கு ஒத்துப்பாங்களா? அருவாளால  வெட்டிட்டுத்தான் மறு பேச்சே பேசுவாங்க….. நா எங்கப்பாட்ட பேசறேன்.அவரு எம் பேச்சை மதிப்பாரு…. உங்கப்பா சம்மதிச்சாலும் உங்க சாதிசனம் ஒத்துக்காது… உங்கப்பாவால அவங்கள எதிர்க்க முடியாது…..”

“அப்ப…என்ன தான் செய்யறது?” என்றாள் பவானி கலங்கிய கண்களுடன்.

“காத்திருக்கணும்…நமக்கான காலம் வரும் வரை .நம்பிக்கையுடன் காத்திருக்கணும். நான் முதல்ல ஒரு வேலை தேடணும். அப்புறம் சொந்தமா நிலம் வாங்கணும். என்னோட முதல் லட்சியம் அதுதான்.” சொன்னவன் சிரித்தான்.

“ஏன் சிரிக்கற?”

“இல்ல.. விவேகானந்தர் போல இலட்சிய வாழ்வு வாழணும்னு பத்தாவது படிச்சப்பலேர்ந்து மனசுல சொல்லிக்கிட்டே இருப்பேன்….இப்ப…பவானி… பவானி …னு..மனசு சொல்லிக்கிட்டே இருக்கு….”

அவளும் சிரித்தாள். “எனக்கு உன்னோட இந்த பேச்சு தான் பிடிச்சிருக்கு….”

“பவானி…. நீ…இன்னும் இரண்டு வருஷப் படிப்பை சின்சியராப்படி….உன்னால முடிஞ்ச அளவு நம்ம கிராமத்து விவசாயத்தை எப்படி முன்னேத்தலாம்னு யோசி ….உனக்கு மேற்படிப்பு படிக்க வசதி இருக்கு…எனக்கு ஆசை இருக்கு நிறைய படிக்க… ஆராய்ச்சிப்படிப்பு படிக்கணும்னு…அத விட ஏழையா பொறந்து கஷ்டத்தை அனுபவிச்சதனால என்னோட இலட்சியம் இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கு….என்னால  பிரச்சனைகளை தீர்க்க யோசிக்க முடியுது”

“ம்….” என்றவாறே அவனை ஆழமாகப் பார்த்து பெருமிதம் கொண்டாள்.

“நீயும் யோசி… என்னென்னப் பிரச்சனை வரும்?…அதை எப்படியெல்லாம் சமாளிக்கலாம்? நல்லா யோசிச்சு முடிவு எடுக்கணும். நீ வெளியுலகம் தெரியாம, கஷ்டம் தெரியாம வளர்ந்துட்ட….நான் கஷ்டத்துலயே வளர்ந்தததால  கொஞ்சம் யோசிக்கறேன்….”

“சரி…நீ…இப்ப ஒண்ணும் பேசாத….இன்னும் ரெண்டு வருஷம் டைம் இருக்கு…அதுக்கப்புறம் தான உனக்கு பரிசம் போடுவாங்க… தைரியமா இரு….அப்ப உங்கப்பாட்ட பேசிப்பாரு…. நாளைக்கு நான் ஊருக்குப் போகப் போறேன்.  அப்பார….டவுன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகணும்” என்றான் சிறிது கவலையுடன்.

இருவரும் எழுந்தார்கள். சரவணன் பவானியிடம் கையைப்பற்றி விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.

“நாம் கண்டிப்பாக சேருவோம். நீ எனக்குத்தான்….நான் உனக்குத்தான்….இதை மாத்தர சக்தி யாருக்கும் கிடையாது….நாம் இணையும் காலம் கண்டிப்பாக வரும்… சேர்ந்து சாவது எளிதான செயல். சேர்ந்து வாழும் வழியைத் தேடணும்”

“ம்…”

“சரி….நேரமாயிருச்சு….வா போலாம்”

அவளை அவள் விடுதியில் விட்டு விட்டு தன் விடுதிக்குத் திரும்பினான். நினைவுகளில் மூழ்கியபடியே  நித்திரையில் ஆழ்ந்தாள்.

**********

“அப்பா….வாங்க முதல்ல ஆஸ்பத்திரிக்கு போலாம்” என்று குடிசைக்குள் நுழைந்தபடியே கூப்பிட்ட சரவணணைப் பார்த்து

“வா…ராசா….முதல்ல கஞ்சித் தண்ணியக்குடி….பொறவு போயிக்கலாம்” என்றாள் சரவணனின் தாய்.

ஆஸ்பத்திரியில் மாரியப்பனுக்கு காச நோய் ஆரம்பக்கட்ட நிலையில் இருப்பதாகவும், ஆறுமாதம் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார் மருத்துவர்.

வரும் வழியில் சரவணன், “பீடி குடிக்காதன்னு சொன்னா கேக்கறியா….இப்ப நோவு வந்துருச்சுப் பாரு… நீயும் அவஸ்தைப்பட்டுகிட்டு எங்களையும் கஷ்டப்படுத்தற” என்று திட்டினான்.

“இல்ல…ராசா…இப்ப எம்புட்டோ குறைச்சுட்டேன். ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி தா இழுக்கறே.ங்…உன்னப் போல படிக்கல… படிப்பு வரல….இளவட்ட வயசுல பசங்க கத்து குடுத்துட்டானுக….. வுட முடியல….உங்க ஆத்தா திட்டி திட்டி இப்ப நிறையக் கொறைச்சுட்டேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் மாரியப்பன்.

“என்னத்த..கொறச்சியோ….போ” என்றான் வெறுப்புடன் சரவணன்.

மாலை தினகரன் வாத்தியாரோடு பேசிக்கொண்டிருந்தான் சரவணன்.

“மொதல்ல ஒரு வேலைல சேர்ந்துக்க… அப்புறம் மேற்கொண்டு என்ன படிக்கலாம்னு பாக்கலாம்….உங்கப்பனால இனிமே உழைக்கறது சிரமம்.  நீ தான் பொறுப்பேத்துக்கணும். பக்கத்தூருல இருக்கற அரிசி மில்லுல சொல்லி வச்சுருக்கேன்….அதுவும் பண்ணையாரோட பங்காளி தான் வெச்சுருக்காங்க…”.

சரவணன் யோசனையுடன் வாத்தியாரைப் பார்த்தான். அவன் கண்களில் சிறிது பயம் தெரிந்தது.

“டே…ஏன்….பயப்படற? மாமனார் வீட்டுல வேலப் பாக்கப் போறோமேனு….தயக்கமா…. இருக்கா?…” சிரித்துக் கொண்டே கேட்டார்.

“இல்ல…நான்… தப்பு செய்யறேனோ…னு…பயமா இருக்கு…”

“அவ பணக்காரப் பொண்ணு…. அழகா இருக்கா…அவளை கல்யாணம் கட்டிக்கிட்டா வசதியா வாழலாம்…பண்ணையாருக்கான அந்தஸ்து கிடைக்கும்… அதனால தான அவளை லவ் பண்ற?”

அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே சுரீரெனக் கோபம் கொப்பளிக்க, “எனக்கு ஒண்ணும் அவ பணமோ… அந்தஸ்தோ….வசதியோ ஒண்ணும் தேவை இல்ல… என் மேல அவ அன்பா இருக்கா…அது போதும் எனக்கு….வாழ்க்கைக்குத் தேவையானது அன்பு தான். அது தான் நிரந்தரம். பணம், அந்தஸ்து எல்லாம் அழிஞ்சு போகக் கூடியது…..”

“டே….போதும்…போதும்…நிறுத்து,….விட்டா எனக்கே பாடம் நடத்துவ போல…” சிரித்தார்.

“அப்புறம் என்ன?….என்னைப்பத்தி முழுசாத் தெரிஞ்ச நீங்களே இப்படிப் பேசலாமா?” என்று கண்களை ஈரமாக்கிய நீரைத் துடைத்துக் கொண்டான்.

“சரிடா…சரிடா….சும்மா உன்ன சீண்டிப் பாத்தேன். ….இந்த கோவத்த நீ முன்னேறதுல காட்டணும். பணம் மட்டும் பெரிய அந்தஸ்து கிடையாது. படிப்பு தான்….கல்வி தான்….. அறிவு தான்…..எல்லாத்தையும்  விட ரொம்ப பெரிய அந்தஸ்து.  அந்த அந்தஸ்துக்கு நாடே தலை வணங்கும். அதுக்கு சாட்சி டாக்டர் அம்பேத்கர், கணித மேதை ராமானுஜன்…இன்னும் நிறைய பேர் இருக்காங்க….அவங்கெல்லாம் ரொம்ப ஏழையாயிருந்து உயர்ந்தவங்க…. மனசுல இலட்சியம் ஆணித்தரமா இருக்கணும்…. எதனாலயும் அத மாத்திட முடியாதபடி கவனமா இருக்கணும்…..வேகத்தை விட நிதானமா ஆழமா சிந்திக்கிற விவேகம் தான் ரொம்ப முக்கியம் ,..இலட்சியத்தை அடைய….”, அவன் தோளைத் தட்டிக் கொடுத்தபடியே, “உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு…. நீ கண்டிப்பா ஒரு நாள் ஜெயிச்சு பெரியாளா வருவ” என்று ஊக்க வார்த்தைகளை ஊட்டினார்.

“நான் யாரை ஜெயிக்கணும்? எந்த தேர்தல்லயும் நான் போட்டியிடலையே….” என்றான் சரவணன் புன்சிரிப்புடன்.

“குறும்புப்பய”  என்று செல்லமாக முதுகில் தட்டினார்.

“சரி….லாஸ்ட் செமஸ்டர்…. டிஸ்டிங்க்ஷன் வாங்கணும்….பரீட்சை முடியற வரை கொஞ்சம் சின்சியரா இருங்க…… நான் சொன்னது படிப்புல….மட்டும்”…. என்று சொல்லி அர்த்தத்துடன் சிரித்தார் தினகரன்.

“போங்க சார்…” என்று வெட்கப்பட்டுக் கொண்டே சென்றான் சரவணன்.

இரவு,… குடிசையின் வாசலில் கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி வானத்தைப் பார்த்தான் சரவணன். வானம் முழுவதும் கருமை படர்ந்திருக்க அதில் சிறிய பொட்டுப் பொட்டாய் நட்சத்திரங்கள் மின்ன நிலவு அதில் பெரிய பொட்டாய் தெரிந்தது. சிறிது நேரத்தில் கண்களை நிரப்பிய வானம் முழுவதும் பவானியின்  முகம் நிரம்பியது. நிலவு அவள் நெற்றிப் பொட்டாய் மின்னியது. நட்சத்திரங்களால் அவள் முகம் ஜொலித்தது.

ரசித்துக்கொண்டே மன நிம்மதியுடன் உறங்கிப் போனான், எதிர்கால துன்பத்தை அறியாமல்.!

(வானம் விரியும்… தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 4) – முகில் தினகரன்

    ஹோம் ஸ்வீட் ஹோம் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை