in , ,

திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 6) – பாலாஜி ராம்

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நான்கு திசைகளிலும் என் பார்வையை செலுத்தினேன் எங்கும்  சித்தர் தென்படவில்லை. ஆனால், காளி கோவிலுக்கு வடக்கு திசையில் கண்ட காட்சி என்னை அதன் அருகே செல்ல வைத்தது. பெரிய விருச்சமாய் பறந்து விரிந்த வேப்பமரம் இந்த சித்திரை மாத வெயிலில் ஒரு இலை கூட காய்ந்து போகாமல் இருந்தது என்னை ஆச்சரியமூட்டியது.

அதே சமயம் இந்த மரத்தடியில் ஒரு இலைகள் கூட உதிர்ந்து கிடப்பது போல் தெரியவில்லை. அந்த மரத்தை தவிர அதை சுற்றி உள்ள மற்ற மரங்களின் காய்ந்த இலைகள் மரத்தடியிலும், மரக்கிளைகளில் ஒரு சில இலைகள் பழுத்த நிலையிலும் இருந்தது. இது என்னை இன்னும் பிரம்மிப்பாக்கியது.

அந்த வேப்ப மரத்தின் அடியில் பெரிய அகன்ற பாறை ஒன்று இருந்தது. பாறையின் மீது இந்த இடத்திற்கு  சம்பந்தமே இல்லாத உள்ளங்கை அளவில் பெரிய கொய்யா பழம், அந்த பழத்தின் ஒரு பக்கத்தை கருநாகம் ஒன்றும் மறுபக்கத்தை கீரிப்பிள்ளை ஒன்றும் கொத்தி தின்றது. இந்த அதிசயத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் என் தாத்தா திடீரென என்னை வேகமாக பின்னோக்கி இழுத்தார். 

காரணம் அறிய அவர் முகத்தை நான் பார்த்தேன்,  அவர் கைகாட்டிய இடத்தில் பல்லி ஒன்று இருந்தது. பார்ப்பதற்கு சாதாரண வெள்ளை நிற பல்லி போல் தெரிந்தாலும் அதன் வெளிபுறத்தில் கூர்மையான முட்கள்  காணப்பட்டது.

என் தாத்தாவிடம் இது என்ன என்று கேட்டேன்,   இது இராட்சத பல்லி இந்த பல்லி  நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தன்மை கொண்டது. இதை யாராவது தெரியாமல் மிதித்தி விட்டால் அவர்களின் உள்பாதத்தை துளைத்து, உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி குடித்து வாழக்கூடிய ஒரு உயிரினம். 

இந்த கொல்லிமலையில்  இக்காலத்தில் இந்த பல்லியை பார்ப்பது ரொம்பவும் அரிது.

அந்த காலத்தில் பகைவர்களுடன் போர் செய்யும் போது, அவர்களை தோற்கடிக்க செய்யும் யுத்திகளில்  ஒன்று தான் இந்த இராட்சித பல்லி. இதற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு, என்று  கூறியவர் பல்லியின்  கதையை சொல்ல ஆரம்பித்தார். 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கொல்லிமலையையும், கொல்லிமலையில் சுற்றி இருக்கக்கூடிய நூறு கிராமங்களையும் அமணன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அமைதியாக சென்று கொண்டிருந்த இவர் ஆட்சியை குலைக்கும் வகையில் வடக்கிலிருந்து படை எடுத்து வந்தான் மன்னன் வளையாபதி.

பல்லாயிரக்கணக்கில் வந்து சேர்ந்த சேனைகள் கொல்லிமலையை சுற்றி வளைத்தது. எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென வந்த போர் முழுக்கத்தால்,  அச்சமுற்ற அமணன் தான் போரில் வெற்றி பெற வேண்டும் என்று இந்த காளியிடம் வந்து இரவு முழுவதும் மந்திரங்கள் ஜெபித்து தவத்தில் அமர்ந்தான்.

இவனது பிரார்த்தனைகளில் மகிழ்ந்த அன்னை ஆதிசக்தி விடியற்காலை நேரம் அவனுக்கு பிரசன்னமாகி ஒரு சிறிய பெட்டியை தந்தாள். அதனுள் இருந்த இராட்சத பல்லியின் சிறப்பையும் அதனை பயன்படுத்தி எதிரிகளை வெல்லக்கூடிய சூட்சுமத்தையும் சொல்லி மறைந்தாள். 

சூரியன் உதித்ததும் போர் தொடங்கிவிடும் என்பதால் சூரியன் வருவதற்கு முன்பே பகைவர்கள் முற்றுகையிட்ட கூடாரங்களில் சென்று இராட்சத பல்லிகளை ஒற்றர்கள் மூலமாக ஏவி விட்டான். காளி அந்த பெட்டியை தரும் போது அதில் மூன்று இராட்சத பல்லிகள் மட்டுமே இருந்தது.

ஒவ்வொரு பல்லியும் மண்ணில் ஊர்ந்து செல்லும் போது பல்லாயிரக்கணக்கில்  பெருகி பகைவர்களின் கூடாரத்துக்குள் சென்றது. போர் வீரர்கள் கால் வைக்கும் இடங்களிலெல்லாம் இராட்சத பல்லிகள்.

இவைகள் பகைவர்களின்  இரத்தத்தை குடித்து தங்கள் பசியை போக்கிக்கொண்ட பின் அமணன் மன்னனை நோக்கி குவியல் குவியலாக வந்தது. இதை கண்டு பயந்தவன்  காளி கோவிலுக்கு சென்று அன்னையை வேண்டிக் கொண்டான். 

இராட்சத பல்லிகள் முன் தோன்றினாள் காளி. தங்களுக்கு சுவையான இரத்தத்தை கொடுத்த காளிக்கு நன்றி செலுத்தும் விதமாக அனைத்து இராட்சத பல்லிகளும் காளி முன் சரணடைந்தது. பல்லாயிரக்கணக்கில் இருந்த பல்லிகளை மீண்டும் மூன்றாக மாற்றி  பெட்டிக்குள் அடைத்த காளி, ஆபத்து காலங்களில் இந்த பெட்டியை பயன்படுத்திக் கொள் என்று கூறினாள்.

கொல்லிமலையை இன்னும் சிறப்பாக ஆட்சி செய்யும்படி அமணன் மன்னனுக்கு ஆசீர்வாதம் செய்து மறைந்தாள். அதன் பிறகு கொல்லிமலையில் எந்த ஒரு படையெடுப்புகளும் வரவில்லை   என்று என் தாத்தா தேவராசர் கதையை சொல்லி முடித்தார். 

அந்த பெட்டி இப்போது இருக்கிறதா என்ற என்  அடுத்த கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார். அந்த பெட்டியை தன் வாரிசுகளுக்கு கொடுத்தால் பிற்காலத்தில் தன் நாட்டிற்கே கெடுதல் ஏற்படலாம் என்று எண்ணிய அமணன்  தன் கடைசி காலம் வரை தன்னிடமே பாதுகாப்பாக வைத்திருந்து அந்த பெட்டியை அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு இக்கோவிலுக்கு வந்து ஒரு இடத்தில்  மறைத்து வைத்தார்.

அவருக்கும் இந்த காளிக்கும் தவிர வேறு யாருக்கும் பெட்டி இருக்குமிடம் தெரியாது. அவருக்கு பிறகு வந்த பல மன்னர்கள் இக்கோவிலில் எவ்வளவோ சோதனை செய்தும் அந்த பெட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சில காலமாக ஒரு சிலரின் கண்களுக்கு இந்த இராட்சத பல்லி தென் படுவதாகவும் அது யாரையும் தொந்தரவு செய்வதில்லை எனவும் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் காளியை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் பெட்டிக்குள் செல்வதாகவும் கூறுவர். 

பெட்டி இருக்கும் இடத்தை கண்டறிய இராட்சத பல்லியை பின் தொடர்ந்தவர்களால்  கூட கண்டுபிடிக்க முடியவில்லை, பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென மறைவதும் மீண்டும் தோன்றுவதுமாய் இருக்கும் என்று சொல்லிவிட்டு பல்லி இருந்த இடத்தை பார்த்தார். நம் கண் முன் திரிந்த அந்த பல்லி இப்போது இங்கு இல்லை எப்படி தான் மறைந்தது  என்று தெரியவில்லை என்றார் தாத்தா.

அந்த பல்லி மறைந்த இடம் தாத்தா பார்க்காமல் இருந்திருக்கிருக்கலாம். ஆனால் நான் அதை கவனித்தேன். என் செவிகள் மட்டும்தான் என் தாத்தா சொன்ன கதையை கேட்டது. என் பார்வை முழுவதும் அந்த பல்லியின் மீது தான் இருந்தது. அந்த இராட்சதபல்லி சென்ற இடம் எனக்கு இன்று வரை நினைவிருகிறது என்றாள் தூமவதி. இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டே சங்கப்பதுமானும் சலந்தாரியும் நடந்தனர். 

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காணாமல் போனவன் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 18) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை