in ,

சுகுணாக்கா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

வித்ராவுக்கு புரிந்துவிட்டது, ராஜா அவளைப் பார்த்து ஜொள் தான் விடுகிறானென்று. எழுந்து போய் ‘ஏன்டா, நீயெல்லாம்  முன்னே பின்ன லேடிஸை பார்த்ததே இல்லையா… இல்லை அக்கா தங்கயோடத்தான் பிறக்கலையா…’ என வெடுக்கென்று கேட்டு விடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனாலும், வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஒரு ஸ்டாஃபோடு சண்டை போட வேண்டாமே என்று பொறுமை காத்தாள்.

கம்ப்யூடர் ஸ்க்ரீனை பார்ப்பது போல பாவனை செய்தபடியே கண்களை மட்டும் உயர்த்தி மெல்ல அவனைப் பார்த்தாள். அவனும் பார்த்தான். சட்டென பார்வையை கீழே இறக்கிக் கொண்டாள்.

அன்றுதான் வேலைக்கு சேர்ந்திருந்தாள். காலையில் எல்லோருக்கும் அவளை அறிமுகப்படுத்தி வைத்த பொழுது, எதிர்சீட்டில் இருக்கும் அவனிடமும் பவித்ராவை அறிமுகப்படுத்தினார்கள். அப்போது அவனும் தனது பெயரை சொன்னான்,  ஆனாலும் இப்போது யோசித்து யோசித்துப் பார்த்தும், அவனுடைய பெயர் ஞாபகத்திற்கு வரவேயில்லை.

இரண்டு முறை செருமினான். நமக்குத்தான் சிக்னல் தருகிறானா என்று ஒருமுறை மட்டும் ஓரக்கண்ணால் பார்த்தாள். அவன் பார்க்கவில்லை. ஒரு முறை ஒரு ஃபைலை மேஜை மேல் சத்தமாக போட்டான்.

நம்முடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவேதான் அவன் அப்படியெல்லாம் செய்கிறான் என்று புரிந்து போனது பவித்ராவுக்கு. அதற்கப்புறம் பவித்ரா அவனை ஏறெடுத்துப் பார்க்கவே இல்லை.

மதியம் சாப்பாட்டு டைம் வந்தது. வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த டிஃபன் பாக்ஸை திறந்து அங்கேயே சாப்பிட்டாள். ஒருமுறை அவனைப் பார்த்தாள். அவன் சீட்டிலேயே இல்லை. ஒருவேளை சாப்பிட வெளியே போயிருப்பானோ என்று நினைத்துக் கொண்டாள்.

அந்தப் பக்கமாக வந்த ஒரு லேடி ஸ்டாஃப், ‘டைனிங் டேபிள் இருக்கே, அங்கே உட்கார்ந்து சாப்பிடலாமே‘ என்றுவிட்டு போனாள். ஆனாலும் கொஞ்சம் கூச்சம் இருந்ததால், போகவில்லை இவள்.

சாப்பாட்டிற்கப்புறம் மூன்று முறை நோட்டமிட்டுவிட்டாள், அவன் அவளை பார்க்கத் தவறவில்லை.

சாயங்காலம் எப்படியும் ஆபீஸ் விட்டு வெளியே போவான். ஓடிப்போய் பிடித்து நாலு வார்த்தை நறுக்கென்று கேட்காமல் விடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.

ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். அவனும் கிளம்புவது போல தெரிந்தது. பவித்ராவும் துரிதமாய் கிளம்பத் தயாரானாள்.

அவன் எழுந்துவிட்டான். இவளும் எழுந்து கொண்டாள். படிகளில் இறங்கிக் கொண்டே யாருடனோ போனில் பேசிக் கொண்டே வண்டி நிறுத்துமிடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். கொஞ்சம் வேகமாக அவனைப் பின் தொடர்ந்தாள். அப்போது அவன் யாருடனோ பேசுவதை கேட்கமுடிந்தது.

‘ஆமாம்மா… இன்னிக்குத்தான் சேர்ந்திருக்காங்க… பெயரா… ஏதோ சொன்னாங்க… மறந்திடுச்சு. பார்க்க நம்ம சுகுணாக்கா மாதிரியே இருக்காங்கம்மா… சுகுணாக்கா மட்டும் உயிரோட இருந்திருந்து இவங்களோட சேர்ந்து நின்னா அக்கா தங்கை மாதிரிதான் தெரிவாங்க…  என் சீட்டுக்கு எதிர்சீட்டுதான் அவங்களுக்கும். நம்ம  அக்காவே வந்து என் எதிர்ல உட்கார்ந்திருக்கற மாதிரி ஒரு ஃபீலிங். சரிம்மா… நான் வண்டி எடுக்கப் போறேன்… போனை வைக்கறேன் ‘

சட்டென நின்றவள், ‘ ச்சே தவறாக நினைத்து விட்டோமே ‘ என்று வருத்தம் அடைந்ததுடன் சந்தடியின்று திரும்பி நடந்தாள் பவித்ரா.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    அப்பாவின் மற்றொரு மனைவி (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு