2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அந்த திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சியில் எல்லோருமே சந்தோஷ முகத்துடன் கலகலப்பாக இருக்க, ஒருவர் முகம் மட்டும் இறுகிப் போய்க் கிடந்தது. அது வேறு யாருமில்லை, மேடையில் மாலையும் கழுத்துமாய் மணப்பெண்ணின் அருகில் கோட்-சூட்டுடன் நிற்கும் திவாகர்தான்.
அவன் அகத்தின் அழகை, அவனது முகபாவத்திலிருந்தே கண்டுபிடித்து விட்ட அவனது நண்பன் ராஜாஜி, மெல்ல மேடையேறி அவனருகே சென்று முகத்தை சிரித்த முகமாகவே வைத்துக் கொண்டு சீரியஸாகக் கேட்டான்.
“என்ன திவா? வாட்ஸ் ராங் வித் யூ? ஏன் உன் முகம் வாடிப் போயிருக்கு?”
பதிலேதும் சொல்லாமல் கீழுதட்டைக் கடித்த திவாகர், கை நீட்டியபடி தன்னை நோக்கி வந்த ஒரு நண்பருடன் செயற்கையாய்ச் சிரித்துக் கை குலுக்கினான்.
அந்த நண்பர் சில விநாடிகள் பேசி விட்டு நகர்ந்ததும், “ப்ச்!… திவா ப்ளீஸ்… சொல்லு! என்ன உன் பிரச்சினை?” ராஜாஜி விடாமல் கேட்க
தன் அருகிலிருந்த புதுமனைவி ஜோதியிடம், “ஒன் மினிட்” என்று சொல்லி விட்டு, அங்கிருந்து நகர்ந்து, “மணமகன்” அறைக்குள் நுழைந்தான் திவாகர்.
அவன் பின்னாடியே வந்த ராஜாஜி, “ம்… இப்பவாச்சும் சொல்லு… ஏன் உன் முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்குது?”
“டேய் ராஜாஜி… எனக்கென்னமோ என் செலக்ஷன் தப்போனு தோணுதுடா!” மேவாயைத் தடவியபடியே திவாகர் சொல்ல
“செலக்ஷன்னா… எதைச் சொல்றே?”
“ம்.. என்னோட வைஃப் செலக்ஷனைத்தான் சொல்றேன்!”
அப்போது யாரோ எதையோ எடுக்க அறைக்குள் வர, பேச்சை மாற்றும் விதமாய், “டேய் வேணும்னா டையைக் கழட்டிக்கலாம்… கொஞ்சம் வியர்க்கறது குறையும்!” என்றான் ராஜாஜி.
உள்ளே வந்த பெண்மணி, எதையோ எடுத்துக் கொண்டு இருவரையும் பார்த்து வசீகரமாய்ப் புன்னகைத்து விட்டு நகர, “ம்… சொல்லு… ஏன் அப்படிச் சொல்றே? அதுவும் இந்த நேரத்துல”
“டேய் அவளோட சுயரூபம்… இப்பவே கொஞ்சமா வெளிப்படத் துவங்கிடுச்சுடா. இவளோட குடும்பம் நடத்தறது கொஞ்சம்… கொஞ்சமென்ன நிறையவே சிரமம்டா!” என்றான் திவாகர் பரிதாபமாக
“என்னடா? என்ன பெரிய சுயரூபத்தைக் கண்டுபிடிச்சுட்டே?”
“டேய்!… நானும் கவனிச்சிட்டே இருக்கேன்… மேடைல அவளுக்கு வர்ற கிப்ட் பார்சல்கள்ல சின்னதா… சுமாரா இருக்கற பார்சல்களை மட்டும் அங்கியே தனக்குப் பக்கத்துல வெச்சுக்கறா. பெரிசா… கொஞ்சம் காஸ்ட்லியா தெரியற கிப்ட் பாக்ஸ்களை தன்னோட தம்பியை விட்டு உடனடியா அங்கிருந்து எடுத்திட்டுப் போய், தன்னோட ‘மணமகள்’ அறைல வைக்கச் சொல்லுறா!… இது… இது.. என்னடா புத்தி?… அவளுக்கு வந்ததை நாங்க எடுத்திட்டுப் போய் எங்க வீட்டிலா வெச்சுக்கப் போறோம்?”
“ப்ச்!… இவ்வளவுதானா?.. இது ஒரு பிரச்சினைய?… போடா லூசு!” ராஜாஜி சிரித்தபடியே நண்பனைக் கடிந்து கொள்ள
“டேய்!… இது சின்ன விஷயம்தான்… ஆனா ஊன்றிப் பார்த்தா இதன் மூலம் அவளோட கேரக்டரே புரிய வருது. அதாவது எதையும் ‘தான்… தனக்கு… தன்னுடைய’ அப்படிங்கற ஒரு சுயநல குணம்தான் அவளோட கேரக்டர் அதுதான் அவ ரத்தத்துல ஊறியிருக்குன்னு தெளிவாத் தெரியுது!”
“என்னங்க மாப்பிள்ளை இங்க வந்து நின்னுட்டிருக்கீங்க? அங்க கெஸ்ட்டுகெல்லாம் வெய்ட் பண்ணிட்டிருக்காங்க!” பொசுக்கென்று உள்ளே வந்து பெரிய குரலில் சொன்னார் ஒரு பெரியவர்.
“அது வந்து… ரொம்ப நேரம் நின்னுட்டே இருந்ததால மாப்பிள்ளை கொஞ்சம் டயர்டு ஆயிட்டார், அதான் ரிலாக்ஸ் பண்ணிட்டிருக்கார்!…இப்ப வந்துடுவார்!” என்று சொல்லி அந்தப் பெரியவரை அங்கிருந்து அனுப்பிய ராஜாஜி, திவாகர் பக்கம் திரும்பி,
“த பாரு திவா…இப்படி நுணுக்கமா…மைக்ரோ லெவல்ல ஒவ்வொண்ணையும் ஆராய்ச்சி பண்ணினா இந்த உலகத்துல யாருமே ஒரு விநாடி கூட சந்தோஷமா வாழ முடியாது. ஸோ..லீவ் இட்!…இதியே மனசுல வெச்சுக்கிட்டு அவகிட்ட ரீஆக்ட் பண்ணிடாதே…என்ன?”
“சரிடா!” என்றான் திவாகர் அசுவாரஸியமாய்.
இருவரும் அங்கிருந்து வெளியேற, மீண்டும் மேடைக்குச் சென்று நின்று கொண்டான் திவாகர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, தம்பதியர் இருவரும், ஒரு சேர அமர்ந்து, இருவருக்குமாய் வந்த கிப்ட் பார்சல்களை ஒன்றாகச் சேர்ந்து, உற்சாகமாய்ப் ப்ரித்துக் கொண்டிருந்த போது, நாசூக்காகக் கேட்டான் திவாகர், “இவ்வளவுதானா கிப்ட் பார்சல்கள்?…இன்னும் நிறைய இருந்த மாதிரி இருந்தது?”
“இருக்குங்க!…அதா அங்க தனியா வெச்சிருக்கேன்!” என்றாள் ஜோதி.
“ஏன் அதுகளை மட்டும் தனியா வெச்சிருக்கே?…இங்க கொண்டு வந்து இதுகளோடவே வெச்சிடலாமே?” கொக்கி போட்டான் திவாகர்.
“ஒ… தாராளமா வெச்சிடலாம்” என்று படுகேஷுவலாக ஜோதி சொல்ல, குழம்பினான் திவாகர்.
“ஏங்க! நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு சொல்லட்டா?” கொஞ்சலாய்க் கேட்டாள் ஜோதி.
அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத திவாகர், “ம்…சொல்லு!” என்றான் சாதாரணமாக.
“இன்னிக்கு எல்லா கிப்ட் பார்சல்களையும் ஒண்ணு சேர்த்து வெச்சுப் பிரிக்கறவ… அன்னிக்கு ஏன் அதுகளையெல்லாம் தனியா எடுத்திட்டுப் போயி தன்னோட ரூமுக்குள்ளார பதுக்கி வெச்சானுதானே யோசிக்கறீங்க?”
அதிர்ந்து போனான் திவாகர். ‘அடிப்பாவி, மனசுக்குள்ளார நெனைக்கறதையெல்லாம் அப்படியே சொல்லுறாளே, எப்படி?’
“எப்படின்னா…எனக்கு ஃபேஸ் ரீடிங்….அதாவது முக வாசிப்பு நல்லாவே தெரியும்!” என்று அதற்கும் அவள் பதில் சொல்ல, அசந்து விட்டான் திவாகர்.
மெல்ல முறுவலித்தவள், “அன்னிக்கு ரிசப்ஷன் ஃபங்ஷன் நடந்தப்ப உங்களுக்கு வந்த பரிசுப் பொருட்களையெல்லாம் உங்க ஆளுங்க உங்களுக்கு அந்தப்பக்கமும், அதே மாதிரி எனக்கு வந்ததையெல்லாம் எங்க ஆளுங்க எனக்கு இந்தப்பக்கமும் வெச்சுக்கிட்டே வந்தாங்க!”
“சரி?”
“ஒரு கட்டத்துல உங்க சைடுல பரிசுப் பொருட்கள் குறைவாகவும், என்னோட சைடுல அதிகமாகவும் இருக்கறதைப் பார்த்ததும் எனக்கு தர்ம சங்கடமாப் போச்சு!…ஏன்னா மேடைக்குக் கீழே உட்கார்ந்திட்டிருக்கற கூட்டம் என்ன நினைக்கும்? ‘பாருடா… பொண்ணுக்குத்தான் எக்கச்சக்கமா கிப்ட் பார்சல்க வந்திருக்கு!… மாப்பிள்ளைக்கு ரொம்பக் குறைவாகத்தான் வந்திருக்கு’னு நினைக்குமல்ல? அதனால்தான் தம்பிய விட்டு சில பெரிய பார்சல்களை எடுத்திட்டுப் போய் என் ரூம்ல வைக்கச் சொன்னேன்!..அது மட்டுமல்ல?…என் சைடுல எப்பவும் உங்க சைடை விடக் குறைவாகவே இருக்கற மாதிரி பார்த்துக்கிட்டேன்!…கவலைப்படாதீங்க…எந்த சூழ்நிலையிலும் உங்க கௌரவம் பாதிக்கப் பட நான் விட மாட்டேங்க!” விழிகளை விரித்தபடி ஜோதி சொல்லிக் கொண்டே போக
“போதும் நிறுத்து!…இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட நீ பேசக் கூடாது!” அதட்டி அவளை நிறுத்திய திவாகர், “ஏன்னா…நான் இச் குடுக்கும் போது நீ பேசக் கூடாதல்லவா”
புன்னகையுடன் அவளை இழுத்தணைத்து, “இச்!…இச்!…இச்!!”
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
உங்கள் சிறுகதைகள் மிகவும் அருமை ஐயா
அருமை.